98
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
இதனாலேயே கம்பர்,
குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிகட்கெல்லாம்
என்றார். கம்பரின் கருத்து, அவர் சிந்தனைச் செழுமையே தவிர அவர் காலத்து நடைமுறை அதுவன்று.
திருவள்ளுவர் அடுத்துக் கையாளும் சொல், குடி என்பது. இதுவும் பண்பின் வழிப்பட்ட சொல்லேயாம். ஒரு தலைமுறையைக் குறிக்கும் சொல்லைத்தான் குடி என்று குறிப்பிடுகின்றார். ஒருவனுடைய வழிவழித் தலைமுறை, குடி என்று குறிப்பிடப்பெறும். மூதாதை என்று திருவாசகம் குறிப்பிடும். ஆக திருவள்ளுவர், மனிதகுலத்தை வேற்றுமைப் படுத்தும் இன, சாதி, வகுப்பு வேறுபாடுகளை ஊக்கு விக்கவில்லை. பரந்த தேசிய உணர்ச்சியை வளர்ப்பதற்குரிய விழுமிய நூல் திருக்குறளேயாம்.
திருக்குறள் காட்டும் குலம், திருக்குறள் காட்டும் குடி, திருக்குறள் காட்டும் இனம் ஆகியன நாட்டு வழிப்பட்டதல்ல. பிறப்பின் வழிப்பட்டதல்ல; பண்பாட்டின் வழி, வட துருவத்தில் வாழும் மனிதன், தென் துருவத்தில் வாழும் மனிதன் ஒருவனை இனமாகக் கொள்ளலாம். கொள்ளவேண்டும். இதுவே திருக்குறட் கருத்து.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாடு, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து மனிதர் எங்குப் பிறந்தாலும், ஒத்த உரிமையுடையவர்கள் என்று முழங்கிய திருக்குறள்,
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.”
என்று கூறியது. இந்நெறி வையகத்தில் வளர்க! ஒருமைப் பாட்டுக்குரிய ஒரு தனி நூல் திருக்குறளேயாகும்.