144
அகநானூறு -நித்திலக் கோவை
(தன் காதல் மனைவியைப் பிரிந்து. பொருள் வேட்கையுற்ற நெஞ்சமானது தூண்டிச் செலுத்த, சுரம்பல கடந்து பொருள் தேடி வருதலின் பொருட்டாகச் சென்று கொண்டிருக்கின்றான் தலைவன் ஒருவன். இடையே, அவளுடைய நினைவு தலை தூக்குகின்றது. அவன் உள்ளத்தே அந்த நினைவும் அவளைப் பிரிந்த வருத்தமும் ஆகிய இரண்டும் நிறைந்து விடுகின்றன. அப்போது அவன், தன் நெஞ்சிற்குச் சொல்லியது இது.)
தூமலர்த் தாமரைப் பூவின் அங்கண்
மாஇதழ்க் குவளை மலர்பினைத் தன்ன
திருமுகத்து அலமரும் பெருமதர் மழைக்கண்
அணிவளை முன்கை ஆயிதழ் மடந்தை
கவவுப்புலந்து உரையும் கழிபெருங் காமத்து
இன்புறு நுகர்ச்சியிற் சிறந்ததொன்று இல்லென
அன்பால் மொழிந்த என்மொழி கொள்ளாய்
பொருள்புரி வுண்ட மருளி நெஞ்சே!
அழலெழு தித்தியம் மடுத்த யாமை
நிழலுடை நெடுங்கயம் புகல்வேட் டாஅங்கு
உள்ளுதல் ஓம்புமதி இனிநீ முள்ளெயிற்றுச்
சின்மொழி அரிவை தோளே - பன்மலை
எவ்வம் கூர இறந்தனம் யாமே!
தூய மலராகிய தாமரைப் பூவின் இடத்தே, கரிய இதழ்களைக்கொண்ட குவளை மலர்கள் இரண்டினைப் பிணைத்து வைத்தாற்போலத், தன் அழகிய முகத்திடத்தே, சுழலும் பெரிதான மதர்த்த குளிர்ந்த கண்களை உடையவள் நம் காதலி. அழகான வளையல்கள் அவளுடைய முன் கையி னிடத்தே விளங்கும். அழகான இதழ்களை உடைய மடந்தை அவள். 'அவளுடைய வாரணிந்த முலைமுற்றத்தே கொள்ளும் அணைப்பிலே, ஒரு நூலிடை வெளியேற்படினும், ஊடல் கொண்டு ஒதுங்கும் மிகப்பெரிய காமத்தினோடுங்கூடிய இன்பந் துய்க்கும் நுகர்ச்சியினுங் காட்டில் சிறந்தது பிறிதொன்றும் இல்லை!' என்று, அன்புடனே யான் அன்று கூறிய என்னுடைய சொல்லினை ஏற்றுக் கொள்ளாயாயினை! பொருளினை விரும்பி இங்ஙனம் வந்த மயக்கத்தினையுடைய நெஞ்சமே!
பல மலைகளையும் வெம்மையான பாறைகளையும் கொண்ட அகன்ற சுரத்தினைத் துன்பம்கொண்டு கடந்தும் யாம் வந்துள்ளனம். இப்போது