தாய்
445
'இன்னும் சின்னப் பிள்ளைகள்தான்’ என்று அவள் தனக்குத் தானே நினைத்துக்கொண்டாள்.
சுவரிலிருந்த விளக்கு ஒரு நெளிந்துபோன பழைய வாளியையும், மூலையிலே தரையில் கிடக்கும் தகரத் தொழிலாளியின் தகட்டுக் குப்பைகளையும் ஒளி செய்து காட்டிக்கொண்டிருந்தது. அந்த அறை முழுதும் நீரூற்று நாற்றமும் எண்ணெய்ச் சாய வாடையும் துரு நாற்றமும் நிறைந்து நின்றன.
இக்நாத் தொளதொளத்த துணியால் தைக்கப்பெற்ற கனத்த கோட்டு அணிந்திருந்தான்; அது அவனுக்கு மிகவும் பிடித்துப் போனதுபோல் தோன்றியது. அந்தக் கோட்டின் கையை ஆசையுடன் அவன் தடவிக் கொடுத்ததைத் தாய் பார்த்தாள். அவன் தன் கழுத்தைத் திருப்பித் தன்னைத் தானே நன்கு பார்த்துக்கொள்ளத் திரும்பினான்.
“குழந்தைகள்!” என்று நினைத்துக்கொண்டாள் அவள்.
“அருமைக் குழந்தைகள்......”
“ரொம்ப சரி” என்று கூறிக்கொண்டே எழுந்தான் இக்நாத். “முதலில் முரார்த்தலின் வீட்டுக்குச் சென்று, நாத்தாவைப் பற்றிக் கேட்க மறந்துவிடாதே.”
“மறக்கமாட்டேன்” என்று பதிலளித்தான் நிகலாய் வெஸோவ்ஷிகோவ்.
ஆனால் இக்நாத்துக்குப் பூரண திருப்தி ஏற்படவில்லை. தான் சொல்லிக்கொடுத்த சமிக்ஞைகளையும் சங்கேதங்களையும் திரும்பவும் ஒருமுறை சொல்லிவிட்டுத் தன் கரத்தை நீட்டிப் பேசினான்:
“அவர்களுக்கு என் நன்றியைச் சொல்லு. அவர்கள் எவ்வளவு நல்ல மனிதர்கள் என்பதை நீயே கண்டுகொள்வாய்” என்று சொன்னான் அவன்.
அவன் தனக்குத்தானே மகிழ்ச்சியோடு பார்த்துக்கொண்டு தன் கோட்டைத் தட்டிவிட்டுக்கொண்டான்.
“நான் போவதற்கு நேரமாகிவிட்டதா?” என்று அவன் தாயிடம் கேட்டான்.
“உனக்கு வழி தெரியுமா?”
“கண்டுபிடித்துப் போய்விடுவேன். போய்வருகிறேன். தோழர்களே!”
அவன் வெளியே சென்றான். நிமிர்ந்த மார்போடும், அகன்ற தோள்களோடும், ஒரு புறமாகச் சாய்த்து வைத்த தொப்பியோடும்,