தொல்காப்பியர்
௭௯
காலத்தினராகிய வேதவியாசர் காலம் கி.மு. 1000, பாணினி காலம் கி.மு. 5ஆம் நூற்றாண்டு.
தொல்காப்பியர் இடைக்கழகத்திற்கும் கடைக்கழகத்திற்கும் இடைப்பட்டவர். அகத்தியற்கு மிகப் பிற்பட்டவர். அவரை அகத்தியர் மாணவர் என்பது காலவழுவாகும். அகத்தியர் பாரதத்திற்கு முந்தியவர்; தொல்காப்பியர் பிந்தியவர்; இருவரும் இடைக்கழகத்திற்குப் பிற்பட்டவரே.
தொல்காப்பியர்க்குக் கழகத் தொடர்பின்மையினாலேயே அவர் நூல் அதங்கோட்டாசான் தலைமையில் அரங்கேற்றப் பெற்றது.
கடைக்கழகக் காலம் கி.மு. 5ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 4ஆம் நூற்றாண்டுவரை என்பது, பண்டைத் தமிழ் நாட்டு வரலாற்றாராய்ச்சியாளர் பேரா. இராமச்சந்திர தீட்சிதர் முடிபு.
“விண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு” (தொல். 1336)
என்று தொல்காப்பியர் தம் காலத் தமிழகத்தை வண்ணித் திருப்பதால், எள்ளளவும் எதிர்ப்பின்றி மூவேந்தரே முடியு டையோராய் முத்தமிழ் நாட்டையும் தம் முன்னோர்போல் அறம் பிழையாது ஆட்சி செய்துவந்த நற்காலம் தொல்காப்பியரென்பது என்பது அறியப்படும்.
மூவேந்தரும் தம்முள்ளும் தம் குறுநில மன்னரொடும் அடிக்கடி நிகழ்த்திய போரால் அமைதியின்மை தமிழகத்தில் நிலவியிருந்தமையே, கடைக்கழக இலக்கியம் அளிக்கும் காட்சியாகும். ஆதலால் தொல்காப்பியர் அத்தகைய காலத் திற்கு மிக முற்பட்டவர் என்பது தெளிவு.
“ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்
ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும்
வழக்கி னாகிய உயர்சொற் கிளவி
இலக்கண மருங்கிற் சொல்லா றல்ல”
(தொல். 510)
என்ற இலக்கண வரம்பு திருக்குறளிலும் கடைக்கழகச் செய்யுளிலும் மீறப்படுவதால், தொல்காப்பியர் காலம் கடைக் கழகத்திற்கு மிக முற்பட்டதாதல் வேண்டும்.
இனி, மேற்குறித்த 1336ஆம் நூற்பாவில் தொல்காப்பியர் “நாற்பெயரெல்லையகம்” என்றொரு தொடர் மொழி-