“கொஞ்சம் செயலாக இருந்த” சிவன் அணைந்த பெருமாள் பிள்ளை தன் மகள் வளர்மதிக்கு சீரும் சிறப்புமாகக் கல்யாணம் நடத்தி வைத்தார். சந்தோஷமாகத் தான் எல்லாம் செய்தார்.
அவருடைய வீடு ஒளி நிறைந்த இல்லம் என்று சிலர் கிண்டலாகக் குறிப்பிடுவது வழக்கம். காரணம் , அவர் தன் பெண்களுக்கு வளர்மதி, வெண்ணிலா, இளம் பிறை, பூர்ணிமா, சந்திரா என்று பெயர்வைத்திருந்தார். ஆறாவது பெண் பிறந்தால் அதுக்கு என்ன நிலவு என்று அவர் பெயர் சூட்டுவாரோ என்று அறிய சிலர் ஆவலாக இருந்தார்கள். ஆனால் சந்திராவுக்குப் பிறகு அவருக்குக் குழந்தை எதுவும் பிறக்கவில்லை.
அவருடைய பெயரை அணைந்த பெருமாள் என்று அழகாக உச்சரிப்பதற்குப் பதிலாக, அணஞ்ச பெருமாள் என்றே எல்லோரும் சொல்லி வந்தார்கள். “டிம் அடிச்ச பெருமாள்” என்று வம்பர்கள் குதர்க்கம் பண்ணுவதும் உண்டு. அந்த இருட்டைப் போக்கடிப்பதற்காகத்தான் அவர் தன் மகள்களை எல்லாம் நிலா ஆக்கியிருக்கிறார் என்று முத்துமாலை அடிக்கடி கூறுவான்.
அணஞ்ச பெருமாள் தன் மகள்களை அன்பாக, மிகுந்த பிரியத்தோடு, வளர்த்து வந்தார். எனவே, மூத்த மகளுக்கு தடபுடலாகத் திருமணம் செய்து வைத்ததில் அதிசயம் எதுவும் இல்லைதான்.
ஆனால், கல்யாணமாகிப் போன மறுமாதமே வளர்மதி பிறந்த விட்டுக்கு வந்து சேர்ந்ததுதான் ஊரா