இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மறுநாள் ராத்திரி,
தங்கராசு முத்துமாலைக்காகக் காத்திருந்தான். அவன் கோட்டைத் தெருவுக்கு வந்ததும் இவன், “முத்துமாலை, கொஞ்சம் நில்லு” என்று குரல் கொடுத்தான்.
முத்துமாலை நின்றான். திண்ணை அருகில் வந்தான். “என்ன வீட்டிலே எல்லோரும் வந்தாச்சா?” என்று விசாரித்தான்.
“இன்னும் வரலே.”
“கொடைக்குக்கூட வரலியா? நீ காயிதம் போடலையோ?”
“போட்டேன் போட்டேன். அவ புறப்பட்டு வரலே... மெதுவா வாறா! இங்கே வந்துதான் என்ன செய்யப் போறா? பொறந்த வீட்டிலே, கூட ரெண்டு வாரம் இருந்துட்டுத்தான் வரட்டுமே!”
“அது சரி...”
“கொடையிலே உன் ஆக்கினைகள்ளாம் ஏக தட புடலா இருந்துதே?” என்றான் தங்கராசு, சிரித்துக் கொண்டே.
முத்துமாலை சும்மா சிரித்தான்.
“நீ பெரிய ஆளுதான் முத்துமாலை”
“என்ன பெரிய ஆளு! ஒரு சின்னப் பொம்பிளை கூட புத்தி சொல்லும்படியா இருக்கு நம்ம நிலைமை!”