அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் இரண்டு/இராவணன் கொடுமை

விக்கிமூலம் இலிருந்து
முக்கோடிவரத்தை உச்சிகொண்டார்மாயவனார்
அக்கரைக்கோடி அரக்கன்வரங்கொண்டேகி
தேவரையும் மூவரையுந் தெய்வேந்திரன்வரையும்
நால்வரையும் வேலைகொண்டு நாடாண்டானம்மானை
வாசுவும் அரக்கன் மணிமேடை தூரட்டால்
வீசுவேன்வாளால் வெட்டுவேன் பாருவென்பான்
வருணனவன் மேடை வந்துதெளியாதிருந்தால்
மரணம்வரும்வரையும் வல்விலங்கில் வைப்பேனென்பான்
சந்திரருஞ் சூரியருஞ் சாய்ந்துமிகப் போகாட்டால்
சந்துசந்தாக சரத்தாலறுப்பேனென்பான்
தெய்வமடவார்கள் திருக்கவரிவீசாட்டால்
கைவரிந்துகட்டிக் கடுவிலங்கில் வைப்பேனென்பான்
நாலு மறையும் நல்லாறு சாஸ்திரமும்
பாலுக்குடஞ்சுமந்து பணிந்துமுன்னில்லாட்டால்
அஸ்திரத்தால்வாந்து அம்மிதனில் வைத்தரைத்து
நெற்றிதனில் கொட்டிடுவேன் நிச்சயமென்பானரக்கன்
வானவர்களெல்லாம் மலரெடுத்தென்காலில்
தானமதுபண்ணி தாழ்ந்துநில்லாதேயிருந்தால்
சாகும்வரைக்கும் தடியிரும்பிலிட்டவரை
வேகும்படிக்கு வேள்விதனிலிட்டிடுவேன்
மாமறலிமூவர் வன்தென்சொல்கேளாட்டால்
காமனையுமீசன் கண்ணாலெரித்ததுபோல்
என்னுடையகண்ணால் எமனையுங்காலனையும்
துன்னுடையவல்ல தூதனையும் நானெரிப்பேன்
இவ்வுலகத்திலுள்ள ராசாதிராசரெல்லாம்
முவ்வுகமுங்கர்ப்பமிங்கே முன்னாடித்தாராட்டால்
நெருப்பெடுத்திட்டிடுவேன் நேரேகொண்டுவாராட்டால்
எரிப்பேனோரம்பால் ராசாதிரசரையும்
இப்படியேபாவி இந்திரலோகம் வரையும்
அப்படியே அரக்கன் அடக்கியரசாண்டிருந்தான்
அப்படியே அரக்கன் ஆண்டிருக்குமன்னாளில்
முப்படியேவிட்டகுறை முடிவாகும் நாளையிலே.