உண்மை விளக்கம்-வெண்பா 11-20

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

வெண்பா 11 (ஞானேந்தி )[தொகு]

ஞானேந்திரியங்கள் நன்றா வுரைக்கக்கே () ஞான இந்திரியங்கள் நன்றா உரைக்கக் கேள்

ளூன மிகுபூத முற்றிடமா - வீனமாஞ் () ஊனம் மிகு பூதம் உற்று இடமா - ஈனம் ஆம்

சத்தாதி யையறியுந் தானஞ் செவிதோற்கண் () சத்தாதியை அறியும் தானம் செவி தோல் கண்

ணத்தாலு மூக்கென் றறி. () அத் தாலு மூக்கு என்று அறி.

வெண்பா 12 ( வானிடமா)[தொகு]

வானிடமா நின்றுசெவி மன்னு மொலியதனை () வான் இடமா நின்று செவி மன்னும் ஒலி அதனை

யீனமிகுந் தோற்கா லிடமாக- வூனப் () ஈனம் மிகும் தோல் கால் இடமாக- ஊனப்

பரிசந் தனையறியும் பார்வையிற்கண் ணங்கி () பரிசம் தனை அறியும் பார்வையின் கண் அங்கி

விரவியுரு வங்காணு மே. () விரவி உருவம் காணுமே.

வெண்பா 13 (நன்றாக )[தொகு]

நன்றாக நீரிடமா நாவிரதந் தானறியும் () நன்றாக நீர் இடமா நா இரதம் தான் அறியும்

பொன்றா மணமூக்குப் பூவிடமா - நின்றறியு () பொன்றா மணம் மூக்குப் பூ இடமா - நின்று அறியும்

மென்றோது மன்றே யிறையா கமமிதனை () என்று ஓதும் அன்றே இறை ஆகமம் இதனை

வென்றார்சென் றாரின்ப வீடு. () வென்றார் சென்றார் இன்ப வீடு.

வெண்பா 14 (கண்ணுதல் )[தொகு]

கண்ணுதனூ லோதியிடுங் கன்மேந் திரியங்க () கண்ணுதல் நூல் ஓதியிடும் கன்ம இந்திரியங்கள்

ளெண்ணுவச னாதிக் கிடமாக - நண்ணியிடும் () எண்ணு வசன ஆதிக்கு இடமாக - நண்ணி இடும்

வாக்குப்பா தம்பாணி மன்னு குதமுபத்த () வாக்குப் பாதம் பாணி மன்னு குதம் உபத்தமாக்

மாக்கருது நாளு மது. () கருதும் நாளும் அது.

வெண்பா 15 (வாக்காகா )[தொகு]

வாக்காகா கயமிடமா வந்துவச னிக்குங்காற் () வாக்கு ஆகாயம் இடமா வந்து வசனிக்கும் கால்

போக்காருங் காற்றிடமாப் புல்கியன - லேற்கு () போக்க ஆரும்காற்று இடமாப் புல்கி அனல் - ஏற்கும்

மிடுங்கை குதநீ ரிடமா மலாதி () இடும் கை குதம் நீர் இடமா மல ஆதி

விடும்பா ரிடமுபத்தம் விந்து. () விடும் பார் இடம் உபத்தம் விந்து.


வெண்பா 16 (அந்தக்கரண)[தொகு]

அந்தக் கரண மடைவே யுரைக்கக்கே () அந்தக்கரணம் அடைவே உரைக்கக் கேள்

ளந்தமனம் புத்தியுட னாங்காரஞ் - சிந்தையிவை () அந்த மனம் புத்தியுடன் ஆங்காரம்- சிந்தை இவை

பற்றியது நிச்சயித்துப் பலகா லெழுந்திருந்தங் () பற்றியது நிச்சயித்துப் பலகால் எழுந்திருந்து அங்கு

குற்றதுசிந் திக்கு முணர். () உற்றது சி்ந்திக்கும் உணர்.

வெண்பா 17 (ஓதியிடு )[தொகு]

ஓதியிடு நாலாறு முற்றான்ம தத்துவமென் () ஓதியிடும் நால் ஆறும் உற்று ஆன்ம தத்துவம் என்று

றாதி யருணூ லறையுங்காண்- தீதறவே () ஆதி அருள் நூல் அறையும் காண்- தீது அறவே

வித்தியா தத்துவங்க டம்மை விளம்பக்கே () வித்தியா தத்துவங்கள் தம்மை விளம்பக் கேள்

ளுத்தமனே நன்றாக வுனக்கு. () உத்தமனே நன்றாக உனக்கு.

வெண்பா 18 (காலநியதி )[தொகு]

கால நியதி கருதும் கலைவித்தை () காலம் நியதி கருதும் கலை வித்தை

யேலவிரா கம்புருட னேமாயை - மாலறவே () ஏல இராகம் புருடனே மாயை- மால் அறவே

சொன்னோ மடைவாகச் சொன்னவிவை தன்னுண்மை () சொன்னோம் அடைவாகச் சொன்ன இவை தன் உண்மை

யுன்னி யுரைக்குநா முற்று. () உன்னி உரைக்கும் நாம் உற்று.

வெண்பா 19(எல்லை )[தொகு]

எல்லை பலம்புதுமை யெப்போது நிச்சயித்த () எல்லை பலம் புதுமை எப்போதும் நிச்சயித்தல்

லல்லல் தருங்கிரியை யான்மாவுக் - கொல்லை () அல்லல் தரும் கிரியை ஆன்மாவுக்கு - ஒல்லை

யறிவாசை யைம்புலனு மாரவருங் காலங் () அறிவு ஆசை ஐம் புலனும் ஆரவரும் காலம்

குறியா மயக்கென்று கொள். () குறியா மயக்கு என்று கொள்.

வெண்பா 20 (வித்தியா )[தொகு]

வித்தியா தத்துவங்க ளேழும் விளம்பினோஞ் () வித்தியா தத்துவங்கள் ஏழும் விளம்பினோம்

சுத்தமாந் தத்துவங்கள் சொல்லக்கேள்- நித்தமாஞ் () சுத்தமாம் தத்துவங்கள் சொல்லக் கேள்- நித்தமாம்

சுத்தவித்தை யீசுரம்பின் சொல்லும் சதாசிவநற் () சுத்த வித்தை ஈசுரம் பின் சொல்லும் சதாசிவம் நல்

சத்திசிவங் காணவைக டாம். () சத்தி சிவம் காண் அவைகள் தாம்.


பார்க்க[தொகு]

[[]] உண்மை விளக்கம்-வெண்பா 01-10காப்பு உண்மை விளக்கம்-வெண்பா 21-30 உண்மை விளக்கம்-வெண்பா 31-40 உண்மை விளக்கம்-வெண்பா 41-53

"https://ta.wikisource.org/w/index.php?title=உண்மை_விளக்கம்-வெண்பா_11-20&oldid=28127" இலிருந்து மீள்விக்கப்பட்டது