கபோதிபுரக்காதல்/பக்கம் 14-24

விக்கிமூலம் இலிருந்து


“என்னடா பரந்தாமா ரொம்ப குஷியாக இருக்கிறாய். சம்பாத்தியம் ரொம்ப ஜாஸ்தியா?” என்று மற்ற வண்டிக்காரர்கள் பரந்தாமனைக் கேட்டனர்.

“நான் அழகாபுரிக்குப் போகப்போகிறேன். அங்கே ஒரு கலியாணம். டேய், யாரும் சிரிக்கக்கூடாது. எங்க தாத்தவுக்குக் கலியாணம். கார்டு வந்தது வரச்சொல்லி” என்றான் பரந்தாமன்.

“பலே! பேஷ்! சரியான பேச்சு பேசினானப்பா பரந்தாமன், தாத்தாவுக்குக் கலியாணமாம், பேரன் போகிறானாம்!” என்று சொல்லிச் சிரித்து கேலி செய்தார்கள்.

பரந்தாமனும், கூடவே சிரித்தான். அவனுக்கு உள்ளபடி மாரியப்பபிள்ளைக்கு அறுபதாம் கலியாணம் நடக்கவேண்டி இருக்க, நிஜமான கலியாணமே செய்துகொள்ளப் போவதாகவும், அதற்கு வரும்படியும், காரியஸ்தன் கருப்பையா கார்டு போட்டதைக் கண்டதிலிருந்து சிரிப்புதான்! அழகாபுரியிலேதானே அந்தச் ராதா இருக்கிறாள்; கலியாண சாக்கிலே. அவளைக் காணலாமே என்று எண்ணித்தான், தன் தாத்தா கலியாணத்துக்குப் போக முடிவு செய்தான்.

விஷயத்தைச் சொன்னாலே, எல்லோரும் சிரிக்கிறார்கள். எவ்வளவோ சொன்னான். விழுந்துவிழுந்து சிரித்தார்களே தவிர, ஒருவர்கூட நம்பவில்லை.

கடைசியில், மடியில் வைத்திருந்த கார்டை எடுத்து வேறு ஆளிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னான். பிறகுதான், பரந்தாமன் சொல்வது உண்மை எனத் தெரிந்தது. உடனே சிரிப்பு போய்விட்டது. ஒவ்வொருவரும், கண்டபடி பேசலாயினர். ‘என்னா கிறாக்குடா கிழவனுக்கு? கல்லு புள்ளையார் போல பேரன் இருக்கச்சே மூணாம் தாரம் செய்கிறானாமே” என்று ஒருவனும், “இதாண்டாப்பா கலிகாலம்” என்று மற்றொருவனும், “சே! என்னா இருந்தாலும் இந்த மாதிரி அநியாயம் கூடாது” என்று பிறிதொருவனும் கூறி, எல்லோருமாக, “நீ போகாதேடா அந்தக் கலியாணத்துக்கு” என்று சொன்னார்கள். “நான் போறது அந்தக் காலியாணத்துக்காக மாத்திரமில்லை. வேறு சொந்த வேலை கொஞ்சம் இருக்கிறது” என்று பரந்தாமன் சொன்னான்.

தூக்கம் தெளியாத நேரம்! முகூர்த்தம் அந்த வேளையில்தான் வைக்கப்பட்டிருந்தது! கோழி கூவிற்று. கூடவே வாத்தியம் முழங்கிற்று! சாரதா கண்களிலே வந்த நீரை அடக்கிக் கொண்டு “கலியாண சேடிகளிடம் தலையைக் கொடுத்தாள்! அவர்கள் தைலம் பூசினார்கள்! சீவி முடித்தார்கள்! ரோஜாவும் மல்லியும் சூட்டினார்கள்! புத்தாடை தந்தார்கள்! பொன் ஆபரணம் பூட்டினார்கள்! முகத்தை அலம்பச் செய்தார்கள். பொட்டு இட்டார்கள்! புறப்படு என்றார்கள்! மாரியப்பபிள்ளைக்கு மாப்பிள்ளை வேடத்தைக் காரியஸ்தர் கருப்பையா செய்து முடித்தார்! மேளம் கொட்டினார்கள், மணப்பந்தலுக்கு சாரதா வந்தாள். பரந்தாமன் அங்கொரு பக்கம் உட்கார்ந்திருப்பதைக் கண்டாள் அவள் கால்கள் பின்னிக்கொண்டன. கண் மங்கிவிட்டது. எல்லோரும் என்ன? என்ன? என்று கேட்டுக்கொண்டு ஓடினார்கள் சாரதா அருகில். பரந்தாமன் உட்கார்ந்தவன் உட்கார்ந்தவன்தான் அவனால் அசையக்கூட முடியவில்லை. அவ்வளவு திகைப்பு! என் சாரதா மணப்பெண்! என் காதலியா, இந்தக் கிழவனுக்கு! பாட்டியாகிறாளே என் பாவை! இந்தக் கோலத்தையா நான் காணவேண்டும் என்று எண்ணினான். அவனால் ஏதும் செய்ய முடியாது தவித்தான். யாரிடம் பேசுவான்! என்ன பேசுவது; யார் இவன் பேச்சைக் கேட்பார்கள்! எப்படி இவனால் தடுக்க முடியும்; மெல்ல எழுந்து சாரதா படுத்திருந்த பக்கமாகச் சென்றான். வேதவல்லி கண்களை பிசைந்துகொண்டே, “தம்பி, போய் ஒரு விசிறி கொண்டுவா!” என்றாள், விசிறி எடுத்துக் கொண்டுவந்தான். “வீசு” என்றாள் வேதவல்லி. வீசினான். சில நிமிடங்களில் சாரதா கண்களைத் திறந்தாள். வீசுவதை நிறுத்திவிட்டான். இருவர் கண்களும் சந்தித்தன. பேசவேண்டியவை யாவும் தீர்ந்துவிட்டன! மெல்ல எழுந்தாள் மங்கை. தூர நின்றான் பரந்தாமன். வாத்தியங்கள் மறுபடி கோஷித்தன. புரோகிதர், கதறலானார்; கருப்பையா வந்தவர்களை உபசரித்தபடி இருந்தார். “பலபலமாக மேளம்” என்றனர். பக்கத்தில் அமர்ந்திருந்த பதுமை போன்ற சாரதாவுக்கு, பரந்தாமனின் பாட்டன், அவன் கண் முன்பாகவே, தாலி கட்டினான். எல்லோரும் ‘அட்சதை’ மணமக்கள்மீது போட்டனர்! பரந்தாமனும் போட்டான். போடும்போது பார்த்தான் சாரதாவை! அவள் கண்களில் நீர் ததும்பியபடி இருந்தது. “புரோகிதர் போட்ட ‘புகை’ கண்களைக் கலக்கிவிட்டது” என்றாள் வேதவல்லி. “அல்ல! அல்ல! பாழும் சமூகக் கொடுமை, அந்தக் கோமளத்தின் கண்களைக் கலக்கிவிட்டது” என்று எண்ணினான் பரந்தாமன்.

ஆம்! சாரதாவை அவன் காதலித்தான். அவளும் விரும்பினாள். அவளே, அவன் பாட்டியுமானாள். என் செய்வான், ஏங்கும் இளைஞன்?

சாரதாவின் சோகம், பரந்தாமனின் நெஞ்சம் பதறியது. வேதவல்லியின் வாட்டம், இவற்றைப்பற்றி மாரியப்பபிள்ளைக்குக் கவலை ஏன் இருக்கப் போகிறது.

வீட்டிலுள்ள கஷ்டத்தினால் கழுத்தில் அணியும் நகையை விற்றுவிட்டால், வாங்குகிறவர்கள், விற்றவர்களின் வாட்டத்தை எதற்காகக் கவனிக்கப் போகிறார்கள். அந்த நகையைத் தாங்கள் அணிந்துகொண்டால் அழகாக இருக்கும் என்ற எண்ணம் மட்டுந்தானோ இருக்கும். அதைப்போலவே மங்கை மனமாவட்டம்கொண்டாலும் தனக்கு மனைவியானாளல்லவா அதுதான் மாரியப்பபிள்ளைக்கு வந்த எண்ணம். தன் இரண்டாம் மனைவி இறந்தபோது காரியஸ்தன் கருப்பையா தேறுதல் கூறும்போது, “எல்லாம் நல்லதுக்குத்தான் வருத்தப்படாதீர்கள்” என்று கூறினான்.

அன்றலர்ந்த ரோஜாவின் அழகு பொருந்திய சாரதாவை அடையத்தான் போலும், அந்த விபத்து நேரிட்டது என்று கூட எண்ணினார் மாரியப்பபிள்ளை. கலியாணம் முடிந்து, விருந்து முடிந்து, மாலையில் நடக்க வேண்டிய காரியங்கள் முடிந்து ஒருநாள் ‘இன்பம்’ பூர்த்தியாயிற்று. அன்றிரவு வேதவல்லி, விம்மிவிம்மி அழும் சாரதாவுக்கு, என்ன சொல்லி அடக்குவது என்று தெரியாது விழித்தாள். பரந்தாமன் பதைபதைத்த உள்ளத்தினானனாய் படுத்துப் புரண்டான்.

மறுதினம், ராதாவுக்கு, காய்ச்சல் வந்துவிட்டது. இரவு முழுதும் அழுது அழுது கண்கள் சிவந்துவிட்டன. இருமலும் சளியும் குளிரும் காய்ச்சலுமாக வந்துவிட்டது. மறுநாள் நடக்கவேண்டிய சடங்குகள் முடிந்து, உறவினர்கள் ஒவ்வொருவராக விடைபெற்றுக்கொண்டு போயினர். பரந்தாமனுக்கும் போக எண்ணந்தான். ஆனால், சாரதாவுக்குக் காய்ச்சல் விட்டபிறகு போகலாம். காய்ச்சலாக இருக்கும்போதே ஊருக்கு போய்விட்டால் எப்படி இருக்கிறதோ, என்ன ஆயிற்றோ என்று கவலைப்படத்தானே வேண்டும் என்று எண்ணியதால் அவன் அங்கேயே தங்கிவிட்டான்.

மாரியப்பபிள்ளை மகிழ்ச்சியின் மேலீட்டால் பரந்தாமனை, “டேய் பயலே. அங்குப் போய்த்தான் என்ன செய்யப்போகிறாய். இங்கேயே இருப்பதுதானே. பத்துப் பேரோடு பதினொன்றாக இரு. இங்கே கிடைக்கிற கூழோ, தண்ணியோ குடித்துவிட்டு காலத்தைத் தள்ளு. ஏதோ வயல் வேலையைப் பார்த்துக்கொள் வண்டி பூட்ட, ஓட்ட ஆள் வைத்திருக்கிறேன். அவனையும் ஒழுங்காக வேலை வாங்கு. இரு இங்கேயே” என்று கூறினார். காரியஸ்தன் கருப்பையாவும் இந்த யோசனையை ஆதரித்தான். வேதவல்லியும் இது நல்ல யோசனை என்றாள். பரந்தாமன், “சரி பார்ப்போம்” என்று கூறினான். அவனுக்கு தான் காதலித்த சாரதா, ஒரு கிழவனின் மனைவியாக இருப்பதைக் கண்ணாலே பார்த்துக்கொண்டிருக்க இஷ்டமில்லை. சாரதாவுக்கு உடம்பு சரியாகும் மட்டும் இருந்துவிட்டு, ஊர் போய்ச் சேருவது என்று முடிவு செய்தான்.

சாரதாவுக்கு ஒரு நாட்டு வைத்தியர் மருந்து கொடுத்து வந்தார். ஜூரம் குறையவில்லை.

இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் ஜூரம் விட்டது. ஆனால் களைப்பும் இருமலும் அதிகமாக இருந்தன. அன்று மருந்து வாங்கிக்கொண்டு வர பரந்தாமனையே அனுப்பினார்கள். வைத்தியர், வீட்டை விசாரித்துக்கொண்டு வந்து சேர்ந்தான். வைத்தியர், சற்று வெறியில் இருந்தார். அவர் கொஞ்சம் ‘தண்ணீர்’ சாப்பிடும் பேர்வழி. எனவே, அவர் கிண்டலாகப் பேசினார். இது பரந்தாமனுக்குப் பிடிக்கவில்லை.

“வாய்யா, வா! என்ன மருந்துக்கு வந்தாயா! யாருக்கு? சாரதாபாய்க்குத்தானே” என்று ஆரம்பத்திலேயே கிண்டலாகப் பேசினான்.

“ஆமாம் வைத்தியரே, பாவம் கலியாணமானதும் காய்ச்சல் இப்படி வந்துவிட்டது சாரதாவுக்கு” என்றான் பரந்தாமன்.

“ஏனப்பா வராது. ஏன் வராது சொல்லு? பெண்ணோ பதுமைபோல ஜிலுஜிலுன்னு இருக்கிறாள். பருவமோ ஜோரான பருவம். புருஷனாக வந்த ஆளோ ஒரு கிழம். இதைக்கண்ட பெண்ணுக்கு வருத்தம் இருக்காதா?” என்றான் வைத்தியன். “இதெல்லாம் நமக்கேன் வைத்தியரே. எல்லாம் ஆண்டவன் எழுதி வைத்தபடிதானே நடக்கும்” என்றான் பரந்தாமன். “ஆண்டவனை ஏனப்பா இந்த வேலைக்கு அழைக்கிறே. அவர் தன் வரைக்கும் சரியாகத்தான் செய்து வைத்துக்கொண்டார். பார்வதி பரமசிவன் ஜோடிக்கு என்ன குறை! லட்சுமி – விஷ்ணு இந்த ஜோடிதான் என்ன இலேசானதா, சாமிகளெல்லாம் பலே ஆசாமிகளப்பா, அவர்கள் பேரைச் சொல்லிக்கொண்டு நாம்தான் இப்படி இருக்கிறோம்” என்று வைத்தியன் சொன்னான்.

பரந்தாமனுக்கு இந்த வேடிக்கைப் பேச்சு சிரிப்பை உண்டாக்கியது. பரந்தாமன் சிரித்ததும், வைத்தியருக்கும் மேலே பேச்சு பொங்கிற்று. உள்ளேயும் “அது“ பொங்கிற்று!

“கேளப்பா கேளு இந்த மாதிரி “ஜோடி“ சேர்ந்தால் காரியம் ஒழுங்காக நடக்காது. என்னமோ, மாரியப்பபிள்ளைக்குப் பணம் இருக்கிறதே என்று ஆசைப்பட்டு, அந்த வேதவல்லி இந்த மாதிரி முடிச்சு போட்டுவிட்டாள். பணமா பெரிசு! நல்ல ஒய்யாரமான குட்டி ராதா. அவளை ஓர் ஒடிந்து விழுந்து போகிற கிழவனுக்குப் பெண்டாக்கினால் அந்தக் குடும்பம் எப்படியாவது? உனக்குத் தெரியாது விஷயம். மாரியப்பபிள்ளை, ஆள் ரொம்ப முடுக்காகத்தான் இருப்பாரு. ஆனால், இந்த “பொம்பளை“ விஷயமென்றால் நாக்கிலே தண்ணி சொட்டும் அந்த ஆளுக்கு. ரொம்ப சபலம், ரொம்ப சபலம். எப்படியோ பார்த்து போட்டுட்டான் சரியான பெண்ணை, தன் வலையிலே” என்றான் வைத்தியன்.

பரந்தாமன் பார்த்தான் மேலே பேச்சு வளர ஆரம்பிக்கிறது. வைத்தியர் ரொம்ப வாயாடி என்பது தெரிந்துவிட்டது. நேரமாயிற்று மருந்துகொடு வைத்தியரே, போகிறேன் என்று கேட்டான். வைத்தியர், “மருந்து கொடுக்கிறேன். ஆனால் மருந்து மட்டும் வேலை செய்தா போதாது. அந்தப் பெண்ணுக்கு மனோவியாகூலம் இருக்கக்கூடாதே. அதுக்காக என்ன மருந்து தரமுடியும். நான் ஜூரம் தீர மருந்து தருவேன். குளிர்போக குளிகை கொடுப்பேன். காய்ச்சல் போக கஷாயம் தருவேன். ஆனால், சாரதாவின் மன வியாதியைப் போக்க நான் எந்த மருந்தைக் கொடுப்பது. தம்பீ, சரியான ஜோடி நீதான். சாரதாவுக்கு மருந்தும் நீயே” என்றான் வைத்தியன்.

தன் சாரதாவைப் பற்றி இவ்வளவு கிண்டலாக ஒரு வைத்தியன் பேசுவதா – அதிலும் தன் எதிரிலே பேசுவதா என்று கோபம் வந்துவிட்டது பரந்தாமனுக்கு. ஓங்கி அறைந்தான் வைத்தியனை.

“படவா மருந்து கேட்க வந்தால் வம்புதும்புமா பேசுகிறாய். யார் என்று என்னை நினைத்தாய்” என்று திட்டினான்.

வைத்தியன், வெறி தெளிந்து “அடே தம்பி நான் வேடிக்கை பேசினேன் கோபிக்காதே. இந்தா மருந்து” என்று சொல்லிவிட்டு மருந்து கொடுக்கச் சென்றான்.

வைத்தியனை, கோபத்திலே, பரந்தாமன் அடித்துவிட்டானே தவிர அவனுக்கு நன்றாகத் தெரியும் வைத்தியன் சொன்னதிலே துளிகூட தவறு இல்லை என்று. சாரதாவின் நோய் மன வியாதிதான் என்பதிலே சந்தேகமில்லை. அது அவனுக்குத் தெரிந்ததுதான். பிறர் சொல்லும்போதுதான் கோபம் வருகிறது. அதிலும் சாரதாவைக் கிண்டல் செய்வதுபோலக் காணப்படவேதான் கோபம் மிக அதிகமாகிவிட்டது ஆழ்ந்து யோசிக்கும்போது, அந்த வைத்தியர் மட்டுமல்ல, ஊரில் யாரும் அப்படித்தானே பேசுவார்கள். நேரில் பேச பயந்துகொண்டு இருந்துவிட்டாலும் மறைவில் பேசும்போது இதைப்பற்றிக் கேலியாகவும், கிண்டலாகவும்தானே பேசுவார்கள் என்று எண்ணிய பரந்தாமன், ஆஹா! இந்த அழகி சாரதாவுக்கு இப்படிப்பட்ட கதி வந்ததே, ஊர் முழுவதும் இனி இவளைப் பற்றித்தானே பேசுவார்கள். என்னிடம் வைத்தியன் கிண்டலாகப் பேசியதே எனக்குக் கஷ்டமாக இருந்ததே. சாரதாவின் காதில், இப்படிப்பட்ட கேலி வார்த்தைகள் விழுந்தால், மனம் என்ன பாடுபடுமோ. பாவம், எங்கெங்கு இதே வேளையில் கிழவனை மணந்தாள் என்று கேலி செய்யப்படுகிறதோ. எத்தனை கணவன்மார்கள், தமது மனைவியிடம், “நான் என்ன, மாரியப்பபிள்ளையா?” என்று கிண்டலாகப் பேசுகிறார்களோ! எத்தனை உணர்ச்சியுள்ள, பெண்கள், “நான் குளத்தில், குட்டையில் விழுந்தாலும் விழுவேன், இப்படிப்பட்ட கிழவனைக் கலியாணம் செய்துகொள்ள மாட்டேன்” என்று பேசுகின்றனரோ, சேச்சே! எவ்வளவு கேலி பிறக்கும், கிண்டல் நடக்கும். இவ்வளவையும் என் பஞ்சவர்ணக்கிளி எப்படிப் பொறுத்துக்கொள்ள முடியும். நான் அவள் கருத்தைப் போக்க என்ன செய்ய முடியும். எனக்கோ, அவள் பாட்டி! என்று எண்ணிப் பரந்தாமன் வாட்டத்துடன் வீடுவந்து, வேதவல்லியிடம் மருந்தைக் கொடுத்தான்.

“தம்பி! நீயே, இந்த வேளை, உன் கையாலேயே மருந்தைக் கொடு. நீ கொடுக்கிற வேளையாவது அவளுக்கு உடம்பு குணமாகட்டும்” என்று கூற, மருந்து கொடுக்க பரந்தாமன், சாரதா படுத்துக்கொண்டிருந்த அறைக்குச் சென்றான்.

நல்ல அழகான பட்டுமெத்தை! அதன்மீது சாரதா ஒரு புறமாகச் சாய்ந்துகொண்டு படுத்திருந்தாள். அவள் படுத்துக்கொண்டிருந்த பக்கமாக. தலையணை, சிறிதளவு நனைந்து கிடந்தது, கண்ணீரால்! “சாரதா! கண்ணே இதோ இப்படித் திரும்பு. இதோ பார், பரந்தாமன், மருந்து எடுத்து வந்திருக்கிறார்” என்று வேதவல்லி கூறிக்கொண்டே, சாரதாவை எழுப்பினாள்.

சாரதா, தாயின் குரலைக்கேட்டு திரும்பினாள். கண்களைத் திறந்தாள். பரந்தாமன் மருந்துடன் எதிரில் நிற்பதைக் கண்டாள். அந்த ஒரு விநாடிப் பார்வை சாரதாவின் உள்ளத்தில் புரண்டுகொண்டிருந்த கருத்துக்கள் அத்தனையையும் காட்டிவிட்டது. கைநடுக்கத்துடன் மருந்துக் கோப்பையைப் பிடித்துக்கொண்டு பரந்தாமன் நின்றான். “வேதம்! வேதம்” என்று வெளியே வேதவல்லியின் புருஷர் கூப்பிடும் சத்தம் கேட்டது. வேதவல்லி, “இதே வந்தேன்” என்று கூறிக்கொண்டே வெளியே போனாள். காதல் நோயால் கட்டில்மீது படுத்துள்ள மங்கையும் அவளைக் காதலித்துக் கிடைக்கப் பெறாது வாடிய பரந்தாமன், கையில் மருந்துடனும் இருவருமே அங்கு இருந்தனர்.

அந்த அறை ஒரு தனி உலகம்!

அங்கு இன்பத்திற்குத் தடை இல்லை! கட்டு இல்லை! காவல் இல்லை! பெண்டுகொண்டேன் என அதிகாரம் செலுத்த மாரியப்பபிள்ளை இல்லை. மகளே, என்னை வேலை செய்கிறாய் என்று மிரட்ட வேதவல்லி இல்லை. கனைத்து மிரட்ட ராதாவின் தகப்பன் இல்லை.

காவலற்ற, கட்டற்ற உலகம்! காதலர் இருவர் மட்டுமே இருந்த உலகம்.

“மருந்தைக் குடி, சாரதா!”என்றான் பரந்தாமன். சாரதா வாயைக் கொஞ்சமாகத் திறந்தாள். மருந்து நெடியினால் முகத்தைச் சுளித்தாள். கட்டில் ஓரத்தில் உட்கார்ந்தான் பரந்தாமன். சாரதா, திறவாயை. இதோ மருந்து, குடித்துவிடு” என்று மருந்தை ஊற்றிவிட்டு, வாயைத் துடைத்தான். அந்தத் “தீண்டுதல் ராதா அதுவரை கண்டறியாத இன்பத்தை அவளுக்குத் தந்தது. முகத்திலே ஒருவித ஜொலிப்பு. கண்டுகொண்டான் பரந்தாமன். குனிந்து அவளுடைய கொஞ்சும் உதடுகளில் ஒரு முத்தம் கொடுத்தான்.

“ஆஹா! என்ன வேலை செய்தாயடி கள்ளி! என்ன வேலையடா செய்தாய் மடையா” என்று கர்ஜித்தார் மாரியப்பபிள்ளை வாயிற்படியில் நின்றுகொண்டு.

“மடையா!“ என்ற சொல் காதில் விழுந்த உடனே, பரந்தாமன், காதல் உலகை விட்டுச் சரேலெனக் கிளம்பி, சாதாரண உலகுக்கு வந்தான். மணமான சாரதாவை, கணவன் காணும்படி, முத்தமிட்டதும் பேரன் செய்த செயலைப் பாட்டன் கண்டதும் அவள் நினைவிற்கு வந்தது. அவனோ, சாரதாவோ, மேற்கொண்டு எண்ணவோ, எழவோ நேரமில்லை! “மடையா!” என்று கர்ஜித்துக்கொண்டே மாரியப்பபிள்ளை, எருது கோபத்தில் பாய்வதுபோல, பரந்தாமனின் மீது பாய்ந்தார். அவன் கழுத்தைப் பிடித்தார். அவன் கண்கள் சிவந்தன. மீசை துடித்தது. கைகால்கள் வெடவெடத்தன. மாரியப்பபிள்ளையின் பிடியினால் பரந்தாமனின் கண்கள் பிதுங்கி வெளிவந்துவிடுவது போலாகிவிட்டது. பரபரவெனப் பரந்தாமனை இழுத்து எச்சரித்தார். மாரியப்பபிள்ளையின் கரத்துக்குப் பரந்தாமன் எம்மாத்திரம்! அடியறுத்த மரம்போல, சுருண்டு சுவரில் மோதிக்கொண்டான் பரந்தாமன், குபீரென மண்டையிலிருந்து இரத்தம் பெருகிற்று. “ஐயோ!” என்று ஈனக்குரலில் அலறினாள் சாரதா! “என்ன! என்ன!” என்று பரபரப்புடன் கேட்டுக்கொண்டே வேதவல்லியும் அவள் புருஷனும் கருப்பையாவும் வந்தனர்.

பரந்தாமன் இரத்தம் ஒழுக நிற்பதையும் சாரதா, கண்ணீர் பெருக நடுங்குவதையும் கோபத்தின் உருவமென மாரியப்பபிள்ளை உருமிக்கொண்டிருப்பதையும் கண்டவுடன் வந்தவர்களுக்கு விஷயம் ஒருவாறு விளங்கிற்று.

“நடடா! நட! உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் பாதகா! நட. இங்கு நிற்காதே” என்று மாரியப்பபிள்ளை கூறிக்கொண்டே பரந்தாமனின் தலைமயிரைப் பிடித்து இழுத்து அறையைவிட்டு வெளியேகொண்டு வந்தார்.

“எஜமானருக்குத்தான் சொல்கிறேன். இவ்வளவு உரக்கக் கூவாதீர்கள். அண்டை அயலார் காதில் கேட்கப் போகிறது” என்று கருப்பையா கூறினான்.

“கேட்பதென்ன, செய்வதென்ன, என் போறாத வேளை. ஒரு வெட்கங்கெட்ட சிறுக்கியைத் தேடிப்பிடித்துக் கட்டிக்கொண்டேன். என் சோறு தின்றுவிட்டு சோரம் செய்கிறாள் இந்தக் கள்ளி. இன்று இருவரும் கொலை! ஆமாம்! விடமாட்டேன்! எடுத்துவா, அரிவாளை இரண்டு துண்டாக இந்தப் பயலையும் துண்டுத் துண்டாக அந்தக் கள்ளியையும் வெட்டிப் போடுகிறேன். விடு, கருப்பையா கையைவிடு. டே கிழ ராஸ்கல்! நல்ல பெண்டுடா! என் தலைக்குத் தீம்பாகக்கொண்டு வந்தாய். நிற்காதே என் எதிரே யாரும் நிற்க வேண்டாம் யார் நின்றாலும் உதை, குத்து, வெட்டு, கொலை ஆமாம்! விடமாட்டேன்” என்று மாரியப்பபிள்ளை இடி முழக்கம் போலக் கத்தினார். அவர் ஆயுளில், அதைப்போல, அவர் கத்தியதில்லை.

காரியஸ்தன் கருப்பையா விடவில்லை அவர் கரங்களை. “எஜமான்! எஜமான் சற்று என் பேச்சைக் கேளுங்கள். ஊர், நாடு தெரிந்தால் நமக்குத்தானே இழிவு. டே, பரந்தாமா போய்விடுடா வெளியே. வேதம்மா நீங்களும் போங்கோ— என்று மிகச் சாமர்த்தியமாகக் கூறிக்கொண்டே துடித்துக்கொண்டு கொலைக்கும்