கம்பராமாயணம்/சுந்தர காண்டம்/பாசப் படலம்

விக்கிமூலம் இலிருந்து

இளவல் இறந்தது கேட்டு, இந்திரசித்து சினத்துடன் போருக்கு எழுதல்[தொகு]

அவ் வழி, அவ் உரை கேட்ட ஆண்தகை, வெவ் விழி எரி உக, வெகுளி வீங்கினான் - எவ் வழி உலகமும் குலைய, இந்திரத் தெவ் அழிதர உயர் விசயச் சீர்த்தியான். 1

அரம் சுடர் வேல் தனது அனுசன் இற்ற சொல் உரம் சுட, எரி உயிர்த்து, ஒருவன் ஓங்கினான் - புரம் சுட வரி சிலைப் பொருப்பு வாங்கிய பரஞ்சுடர் ஒருவனைப் பொருவும் பான்மையான். 2

ஏறினன், விசும்பினுக்கு எல்லை காட்டுவ ஆறு-இருநூறு பேய் பூண்ட ஆழித் தேர்; கூறின கூறின சொற்கள் கோத்தலால், பீறின நெடுந் திசை; பிளந்தது அண்டமே. 3

ஆர்த்தன, கழலும் தாரும் பேரியும், அசனி அஞ்ச; வேர்த்து, உயிர் குலைய, மேனி வெதும்பினன், அமரர் வேந்தன்; 'சீர்த்தது போரும்' என்னா, தேவர்க்கும் தேவர் ஆய மூர்த்திகள்தாமும், தம்தம் யோகத்தின் முயற்சி விட்டார். 4

தம்பியை உன்னும்தோறும், தாரை நீர் ததும்பும் கண்ணான், வம்பு இயல் சிலையை நோக்கி, வாய் மடித்து உருத்து நக்கான்; 'கொம்பு இயல் மாய வாழ்க்கைக் குரங்கினால், குரங்கா ஆற்றல் எம்பியோ தேய்ந்தான்? எந்தை புகழ் அன்றோ தேய்ந்தது?' என்றான். 5

இந்திரசித்தை வந்து சூழ்ந்த படையின் பெருக்கம்

வேல் திரண்டனவும், வில்லு மிடைந்தவும், வெற்பு என்றாலும் கூறு இரண்டு ஆக்கும் வாள் கைக் குழுவையும் குணிக்கல் ஆற்றேம்; சேறு இரண்டு அருகு செய்யும் செறி மதச் சிறு கண் யானை, ஆறு-இரண்டு அஞ்சுநூற்றின் இரட்டி; தேர்த் தொகையும் அஃதே. 6

இராவணன் மாளிகை சென்று, இந்திரசித்து அவனுடன் பேசுதல்

ஆய மாத் தானைதான் வந்து அண்மியது; அண்ம, ஆண்மைத் தீய வாள் நிருதர் வேந்தர் சேர்ந்தவர் சேர, தேரின் 'ஏ' எனும் அளவில் வந்தான்; இராவணன் இருந்த, யாணர் வாயில் தோய் கோயில் புக்கான்;-அருவி சோர் வயிரக் கண்ணான். 7

தாள் இணை வீழ்ந்தான், தம்பிக்கு இரங்குவான்; தறுகணானும் தோள் இணை பற்றி ஏந்தித் தழுவினன், அழுது சோர்ந்தான்; வாள் இணை நெடுங் கண் மாதர் வயிறு அலைத்து அலறி மாழ்க, மீளிபோல் மொய்ம்பினானும் விலக்கினன்; விளம்பலுற்றான்: 8

'ஒன்று நீ உறுதி ஓராய்; உற்றிருந்து உளையகிற்றி, வன் திறல் குரங்கின் ஆற்றல் மரபுளி உணர்ந்தும், அன்னோ! "சென்று நீர் பொருதிர்" என்று, திறத் திறம் செலுத்தி, தேயக் கொன்றனை நீயே அன்றோ, அரக்கர்தம் குழுவை எல்லாம்? 9

'கிங்கரர், சம்புமாலி, கேடு இலா ஐவர், என்றுஇப் பைங் கழல் அரக்கரோடும் உடன் சென்ற பகுதிச் சேனை, இங்கு ஒருபேரும் மீண்டார் இல்லையேல், குரங்கு அது, எந்தாய்! சங்கரன், அயன், மால், என்பார்தாம் எனும் தகையது ஆமே! 10

'திக்கய வலியும், மேல்நாள் திரிபுரம் தீயச் செற்ற முக்கணன் கைலையோடும் உலகு ஒரு மூன்றும் வென்றாய்; "அக்கனைக் கொன்று நின்ற குரங்கினை, ஆற்றல் காட்டி, புக்கு இனி வென்றும்" என்றால், புலம்பு அன்றி, புலமைத்து ஆமோ? 11

இராவணனிடம் விடைபெற்று, இந்திரசித்து போர்க்குச் செல்லுதல்

'ஆயினும், ஐய! நொய்தின், ஆண் தொழில் குரங்கை, யானே, "ஏ" எனும் அளவில் பற்றித் தருகுவென்; இடர் என்று ஒன்றும் நீ இனி உழக்கற்பாலை அல்லை; நீடு இருத்தி' என்னா, போயினன் -அமரர் கோவைப் புகழொடு கொண்டு போந்தான். 12

ஆழிஅம் தேரும், மாவும், அரக்கரும், உருக்கும் செங் கண் குழி வெங் கோப மாவும், துவன்றிய நிருதர் சேனை, ஊழி வெங் கடலின் சுற்ற, ஒரு தனி நடுவண் நின்ற பாழி மா மேரு ஒத்தான்-வீரத்தின் பன்மை தீர்ப்பான். 13

சென்றனன் என்ப மன்னோ; திசைகளோடு உலகம் எல்லாம் வென்றவன் இவன் என்றாலும், வீரத்தே நின்ற வீரன், அன்று அது கண்ட ஆழி அனுமனை, 'அமரின் ஆற்றல் நன்று' என உவகை கொண்டான்; யாவரும் நடுக்கம் உற்றார். 14

போர்க் களம் நோக்கிய இந்திரசித்தின் மன நிலை

இலை குலாம் பூணினானும், 'இரும் பிணக் குருதி ஈரத்து, அலகு இல் வெம் படைகள் தெற்றி, அளவிடற்கு அரிய ஆகி, மலைகளும், கடலும், யாறும், கானமும் பெற்று, மற்று ஓர் உலகமே ஒத்தது, அம்மா! போர்ப் பெருங் களம்' என்று உன்னா, 15

வெப்பு அடைகில்லா நெஞ்சில், சிறியது ஓர் விம்மல் கொண்டான்; 'அப்பு அடை வேலை அன்ன பெருமையார், ஆற்றலோடும் ஒப்பு அடைகில்லார், எல்லாம் உலந்தனர்; குரங்கும் ஒன்றே! எப் படை கொண்டு வெல்வது, இராமன் வந்து எதிர்க்கின்?' என்றான். 16

கண் அனார், உயிரே ஒப்பார், கைப் படைக்கலத்தின் காப்பார், எண்ணல் ஆம் தகைமை இல்லார், இறந்து எதிர் கிடந்தார் தம்மை மண்ணுளே நோக்கி நின்று, வாய் மடித்து, உருத்து, மாயாப் புண்ணுளே கோல் இட்டன்ன மானத்தால், புழுங்குகின்றான். 17

கானிடை அத்தைக்கு உற்ற குற்றமும், கரனார் பாடும், யானுடை எம்பி வீந்த இடுக்கணும், பிறவும் எல்லாம், மானிடர் இருவராலும், வானரம் ஒன்றினாலும், ஆனதே! உள என் வீரம் அழிகிற்றே அம்ம!' என்றான். 18

இறந்த தம்பியின் உடலைக் கண்டு, சோகமும் கோபமும் கொள்ளுதல்

நீப்புண்ட உதிர வாரி நெடுந் திரைப் புணரி தோன்ற, ஈர்ப்புண்டற்கு அரிய ஆய பிணக் குவடு இடறிச் செல்வான்; தேய்ப்புண்ட தம்பி யாக்கை, சிவப்புண்ட கண்கள் தீயில் காய்ப்புண்ட செம்பின் தோன்ற, கறுப்புண்ட மனத்தன், கண்டான். 19

தாருகன் குருதி அன்ன குருதியில், தனி மாச் சீயம் கூர் உகிர் கிளைத்த கொற்றக் கனகன் மெய்க் குழம்பின் தோன்ற, தேர் உக, கையின் வீரச் சிலை உக, வயிரச் செங்கண் நீர் உக, குருதி சிந்த, நெருப்பு உக உயிர்த்து நின்றான். 20

'வெவ் இலை அயில் வேல் உந்தை வெம்மையைக் கருதி, ஆவி வவ்வுதல் கூற்றும் ஆற்றான்; மாறு மாறு உலகின் வாழ்வார், அவ் உலகத்து உளாரும், அஞ்சுவர் ஒளிக்க; ஐயா! எவ் உலகத்தை உற்றாய், எம்மை நீத்து, எளிதின்? எந்தாய்!' 21

ஆற்றலன் ஆகி, அன்பால் அறிவு அழிந்து அயரும் வேலை, சீற்றம் என்று ஒன்றுதானே மேல் நிமிர் செலவிற்று ஆகி, தோற்றிய துன்ப நோயை உள்ளுறத் துரந்தது அம்மா!- ஏற்றம் சால் ஆணிக்கு ஆணி எதிர் செலக் கடாயது என்ன. 22

இந்திரசித்தை நோக்கிய அனுமனின் சிந்தனை

ஈண்டு இவை நிகழ்வுழி, இரவி தேர் எனத் தூண்டுறு தேரின்மேல் தோன்றும் தோன்றலை, மூண்டு முப்புரம் சுட முடுகும் ஈசனின், ஆண் தகை வனை கழல் அனுமன், நோக்கினான். 23

'வென்றேன், இதன் முன், சில வீரரை என்னும் மெய்ம்மை அன்றே முடுகிக் கடிது எய்த அழைத்தது அம்மா! ஒன்றே, இனி வெல்லுதல் தோற்றல்; அடுப்பது உள்ளது இன்றே சமையும்; இவன் இந்திரசித்து!' என்பான். 24

'கட்டு ஏறு, நறுங் கமழ் கண்ணி, இக் காளை என் கைப் பட்டால், அதுவே அவ் இராவணன் பாடும் ஆகும்; "கெட்டேம்" என எண்ணி, இக் கேடு அருங் கற்பினாளை விட்டு ஏகும்; அது அன்றி, அரக்கரும் வெம்மை தீர்வார். 25

'ஒன்றோ இதனால் வரும் ஊதியம்? ஒண்மையானைக் கொன்றேன் எனின், இந்திரனும் துயர்க் கோளிம் நீங்கும்; இன்றே, கடி கெட்டது, அரக்கர் இலங்கை; யானே வென்றேன், அவ் இராவணன் தன்னையும், வேரொடு' என்றான். 26

அரக்கர் படையுடன் அனுமன் பொருதல்

அக் காலை, அரக்கரும், யானையும், தேரும், மாவும், முக் கால் உலகம் ஒரு மூன்றையும் வென்று முற்றிப் புக்கானின் முன் புக்கு, உயர் பூசல் பெருக்கும் வேலை. மிக்கானும், வெகுண்டு, ஓர் மராமரம் கொண்டு மிக்கான். 27

உதையுண்டன யானை; உருண்டன யானை; ஒன்றோ? மிதியுண்டன யானை; விழுந்தன யானை; மேல் மேல், புதையுண்டன யானை; புரண்டன யானை; போரால் வதையுண்டன யானை; மறிந்தன யானை, மண்மேல். 28

முடிந்த தேர்க் குலம்; முறிந்தன தேர்க் குலம்; முரண் இற்று இடிந்த தேர்க் குலம்; இற்றன தேர்க் குலம்; அச்சு இற்று ஒடிந்த தேர்க் குலம்; உக்கன தேர்க் குலம்; நெக்குப் படிந்த தேர்க் குலம்; பறிந்தன தேர்க் குலம், படியில். 29

சிரன் நெரிந்தவும், கண் மணி சிதைந்தவும், செறி தாள் தரன் நெரிந்தவும், முதுகு இறச் சாய்ந்தவும், தார் பூண் உரன் நெரிந்தவும், உதிரங்கள் உமிழ்ந்தவும், ஒளிர் பொற் குரன் நெரிந்தவும், கொடுங் கழுத்து ஒடிந்தவும் - குதிரை. 30

பிடியுண்டார்களும், பிளத்தலுண்டார்களும், பெருந் தோள் ஒடியுண்டார்களும், தலை உடைந்தார்களும், உருவக் கடியுண்டார்களும், கழுத்து இழந்தார்களும், கரத்தால் அடியுண்டார்களும், அச்சமுண்டார்களும்-அரக்கர். 31

வட்ட வெஞ் சிலை ஒட்டிய வாளியும், வயவர் விட்ட விட்ட வெம் படைகளும், வீரன்மேல் வீழ்ந்த, சுட்ட வல் இரும்பு அடைகலைச் சுடுகலாதது போல், பட்ட பட்டன திசையொடும் பொறியொடும் பரந்த. 32

சிகை எழும் சுடர் வாளிகள், இராக்கதர் சேனை, மிகை எழும் சினத்து அனுமன்மேல் விட்டன, வெந்து, புகை எழுந்தன, எரிந்தன, கரிந்தன போத,- நகை எழுந்தன, குளிர்ந்தன, வான் உளோர் நாட்டம். 33

இந்திரசித்துக்கும் அனுமனுக்கும் பெரும் போர் நிகழ்தல்

தேரும், யானையும், புரவியும், அரக்கரும், சிந்திப் பாரின் வீழ்தலும், தான் ஒரு தனி நின்ற பணைத் தோள் வீரர் வீரனும், முறுவலும் வெகுளியும் வீங்க, 'வாரும், வாரும்' என்று அழைக்கின்ற அனுமன்மேல் வந்தான். 34

புரந்தரன் தலை பொதிர் எறிந்திட, புயல் வானில் பரந்த பல் உரும்ஏற்றுஇனம் வெறித்து உயிர் பதைப்ப, நிரந்தரம் புவி முழுவதும் சுமந்த நீடு உரகன் சிரம் துளங்கிட, அரக்கன் வெஞ் சிலையை நாண் தெறித்தான். 35

ஆண்ட நாயகன் தூதனும், அயனுடை அண்டம் கீண்டதாம் என, கிரி உக, நெடுநிலம் கிழிய, நீண்ட மாதிரம் வெடிபட, அவன் நெடுஞ் சிலையில் பூண்ட நாண் இற, தன் நெடுந் தோள் புடைத்து ஆர்த்தான். 36

'நல்லை! நல்லை! இஞ் ஞாலத்துள், நின் ஒக்க நல்லார் இல்லை! இல்லையால்! எறுழ் வலிக்கு யாரொடும் இகல வல்லை! வல்லை! இன்று ஆகும், நீ படைத்துள வாழ்நாட்கு எல்லை! எல்லை!' என்று, இந்திரசித்துவும் இசைந்தான். 37

'நாளுக்கு எல்லையும், நிருதராய் உலகத்தை நலியும் கோளுக்கு எல்லையும், கொடுந் தொழிற்கு எல்லையும், கொடியீர்! வாளுக்கு எல்லையும் வந்தன; வகை கொண்டு வந்தேன் தோளுக்கு எல்லை ஒன்று இல்லை' என்று அனுமனும் சொன்னான். 38

'இச் சிரத்தையைத் தொலைப்பென்' என்று, இந்திரன் பகைஞன், பச்சிரத்தம் வந்து ஒழுகிட, வானவர் பதைப்ப, வச்சிரத்தினும் வலியன, வயிர வான் கணைகள், அச் சிரத்தினும் மார்பினும் அழுத்தலும்-அனுமன். 39

குறிது வான் என்று குறைந்திலன், நெடுஞ் சினம் கொண்டான், மறியும் வெண் திரை மா கடல் உலகு எலாம் வழங்கி, சிறிய தாய் சொன்ன திருமொழி சென்னியில் சூடி, நெறியில் நின்ற தன் நாயகன் புகழ் என, நிமிர்ந்தான். 40

பாகம் அல்லது கண்டிலன்; அனுமனனப் பார்த்தான்; மாக வன் திசை பத்தொடும் வரம்பு இலா உலகிற்கு ஏக நாதனை எறுழ் வலித் தோள் பிணித்து ஈர்த்த மேக நாதனும், மயங்கினனாம் என வியந்தான். 41

நீண்ட வீரனும், நெடுந் தடக் கைகளை நீட்டி, ஈண்டு வெஞ் சரம் எய்தன எய்திடாவண்ணம், மீண்டு போய் விழ வீசி, ஆங்கு அவன் மிடல் தடந் தேர் பூண்ட பேயொடு, சாரதி தரைப்பட, புடைத்தான். 42

ஊழிக் காற்று அன்ன ஒரு பரித் தேர் அவண் உதவ, பாழித் தோளவன், அத் தடந் தேர்மிசைப் பாய்ந்தான்; ஆழிப் பல் படை அனையன, அளப்ப அருஞ் சரத்தால், வாழிப் போர் வலி மாருதி மேனியை மறைத்தான். 43

உற்ற வாளிகள் உரத்து அடங்கின உக உதறா, கொற்ற மாருதி, மற்றவன் தேர்மிசைக் குதித்து, பற்றி வன் கையால், பறித்து எழுந்து, உலகு எலாம் பல கால் முற்றி வென்ற போர் மூரி வெஞ் சிலையினை, முறித்தான். 44

முறிந்த வில்லின் வல் ஓசை போய் முடிவதன் முன்னர், மறிந்து போரிடை வழிக் கொள்வான், வயிர வாட் படையால் செறிந்த வான் பெரு மலைகளைச் சிறகு அறச் செயிரா எறிந்த இந்திரன் இட்ட, வான் சிலையினை எடுத்தான். 45

நூறு நூறு போர் வாளி, ஓர் தொடை கொடு, நொய்தின், மாறு இல் வெஞ் சினத்து இராவணன் மகன் சிலை வளைத்தான்; ஊறு, தன் நெடு மேனியில், பல பட, ஒல்கி, ஏறு சேவகன் தூதனும், சிறிது போது இருந்தான். 46

ஆர்த்த வானவர் ஆகுலம் கொண்டு, அறிவு அழிந்தார்; பார்த்த மாருதி, தாரு ஒன்று அங்கையில் பற்றி, தூர்த்த வாளிகள் துணிபட முறை முறை சுற்றி, போர்த்த பொன் நெடு மணி முடித் தலையிடைப் புடைத்தான். 47

பார மா மரம் முடியுடைத் தலையிடைப் படலும், தாரையின் நெடுங் கற்றைகள் சொரிவன தயங்க, ஆர மால் வரை அருவியின் அழி கொழுங் குருதி சோர நின்று, உடல் துளங்கினன் - அமரரைத் தொலைத்தான். 48

நின்று, போதம் வந்துறுத்தலும், நிறை பிறை எயிற்றைத் தின்று, தேவரும் முனிவரும் அவுணரும் திகைப்ப, குன்றுபோல் நெடு மாருதி ஆகமும் குலுங்க, ஒன்று போல்வன, ஆயிரம் பகழி கோத்து உய்த்தான். 49

உய்த்த வெஞ் சரம் உரத்தினும் கரத்தினும் ஒளிப்ப, கைத்த சிந்தையன் மாருதி, நனி தவக் கனன்றான்; வித்தகன் சிலை விடு கணை விசையினும் கடுகி, அத் தடம் பெருந் தேரொடும் எடுத்து, எறிந்து, ஆர்த்தான். 50

கண்ணின் மீச் சென்ற இமை இடை கலப்பதன்முன்னம், எண்ணின் மீச் சென்ற எறுழ் வலித் திறலுடை இகலோன், புண்ணின் மீச் சென்று பொழி புனல் பசும் புலால் பொடிப்ப, விண்ணின் மீச் சென்று, தேரொடும் பார்மிசை வீழ்ந்தான். 51

விழுந்து பார் அடையாமுனம், மின் எனும் எயிற்றான், எழுந்து, மா விசும்பு எய்தினன்; இடை, அவன் படையில், செழுந் திண் மா மணித் தேர்க் குலம் யாவையும் சிதைய உழுந்து பேர்வதன்முன், நெடு மாருதி உதைத்தான். 52

இந்திரசித்து வேறு வழியின்றி அயன் படையை விடுத்தல்

ஏறு தேர் இலன்; எதிர் நிற்கும் உரன் இலன்; எரியின், சீறு வெஞ் சினம் திருகினன், அந்தரம் திரிவான், வேறு செய்வது ஓர் வினை பிறிது இன்மையின், விரிஞ்சன் மாறு இலாப் பெரும் படைக்கலம் தொடுப்பதே மதித்தான். 53

பூவும், பூ நிற அயினியும், தீபமும், புகையும், தா இல் பாவனையால் கொடுத்து, அருச்சனை சமைத்தான்; தேவு யாவையும், உலகமும், திருத்திய தெய்வக் கோவில் நான்முகன் படைக்கலம் தடக் கையில் கொண்டான். 54

கொண்டு, கொற்ற வெஞ் சிலை நெடு நாணொடும் கூட்டி, சண்ட வேகத்த மாருதி தோளொடும் சாத்தி, மண் துளங்கிட, மாதிரம் துளங்கிட, மதி தோய் விண் துளங்கிட, மேருவும் துளங்கிட, விட்டான். 55

அயன் படைக்கு அடங்கிச் சாய்ந்த அனுமனின் அருகில் இந்திரசித்து வருதல்

தணிப்ப அரும் பெரும் படைக்கலம், தழல் உமிழ் தறுகண் பணிக் குலங்களுக்கு அரசினது உருவினைப் பற்றி, துணிக்க உற்று, உயர் கலுழனும் துணுக்குற, சுற்றிப் பிணித்தது, அப் பெரு மாருதி தோள்களைப் பிறங்க. 56

திண்ணென் யாக்கையைத் திசைமுகன் படை சென்று திருக, அண்ணல் மாருதி, அன்று, தன் பின் சென்ற அறத்தின் கண்ணின் நீரொடும், கனக தோரணத்தொடும், கடை நாள், தண்ணென் மா மதி கோளொடும் சாய்ந்தென, சாய்ந்தான். 57

சாய்ந்த மாருதி, சதுமுகன் படை எனும் தன்மை ஆய்ந்து, 'மற்று இதன் ஆணையை அவமதித்து அகறல் ஏய்ந்தது அன்று' என எண்ணினன், கண் முகிழ்த்து இருந்தான்; 'ஓய்ந்தது ஆம் இவன் வலி' என, அரக்கன் வந்துற்றான். 58

அரக்கர் படை ஆரவாரித்தல்

உற்ற காலையின், உயிர்கொடி திசைதொறும் ஒதுங்கி அற்றம் நோக்கினர் நிற்கின்ற வாள் எயிற்று அரக்கர்- சுற்றும் வந்து, உடல் சுற்றிய தொளை எயிற்று அரவைப் பற்றி ஈர்த்தனர்; ஆர்த்தனர்; தெழித்தனர்-பலரால். 59

'குரக்கு நல் வலம் குறைந்தது' என்று, ஆவலம் கொட்டி இரைக்கும் மா நகர் எறி கடல் ஒத்தது; எம் மருங்கும் திரைக்கும் மாசுணம் வாசுகி ஒத்தது; தேவர், அரக்கர் ஒத்தனர்; மந்தரம் ஒத்தனன், அனுமன். 60

கறுத்த மாசுணம், கனக மா மேனியைக் கட்ட, அறத்துக்கு ஆங்கு ஒரு தனித் துணை என நின்ற அனுமன், மறத்து, மாருதம் பொருத நாள், வாள் அரா அரசு புறத்துச் சுற்றிய மேரு மால் வரையையும் போன்றான். 61

இலங்கை மக்களின் மகிழ்ச்சி

வந்து இரைந்தனர், மைந்தரும், மகளிரும்; மழைபோல், அந்தரத்தினும், விசும்பினும், திசைதொறும் ஆர்ப்பார்; முந்தி உற்ற பேர் உவகைக்கு ஓர் கரை இலை; மொழியின், இந்திரன் பிணிப்புண்ட நாள் ஒத்தது, அவ் இலங்கை. 62

மிகைப் பாடல்கள்

பத்தியில் தேர்கள் செல்ல, பவளக் கால் குடைகள் சுற்ற, முத்தினின் சிவிகைதன்னை முகில் எனத் தேர்கள் சுற்ற, மத்த வெங் கரிகள் எல்லாம் மழை என இருண்டு தோன்ற, தத்திய பரிகள் தன்னின் சாமரை பதைப்ப,-வந்தான். 12-1

சங்குகள் முழங்க, பேரி சகடைகள் இடியின் வீழ, வெங் குரல் திமிலையோடு கடுவையின் மரங்கள் வீங்கி, தொங்கலின் குழாமும் தூளி வெள்ளமும் விசும்பைத் தூர்க்க, திங்களின் குடைகள் பூப்ப, திசைக் களிறு இரிய, - வந்தான். 12-2

தீயினில் செவ்வே வைத்த சின்னங்கள் வேறு வேறு வாயினில் ஊது வீரர் வழியிடம் பெறாது செல்ல, தாயவன் சொல் மாறாது தவம் புரிந்து அறத்தில் நின்ற நாயகன் தூதன் தானும், நோக்கினன்; நகையும் கொண்டான். 12-3

செம் பொனின் தேரின் பாங்கர்ச் செங்குடைத் தொங்கற் காடும், உம்பரின் கொம்பர் ஒத்த, ஒரு பிடி நுசுப்பின், செவ்வாய், வம்பு அவிழ் குழலினார்கள் சாமரை புதைத்து வீச, கொம்பொடும் கோடு தாரை குடர் பறித்து ஊத வந்தான். 12-4

தொங்கலின் காடு நூறாயிரம் என்பர்; தோகைப் பிச்சம், பங்கம் இல் பணிலம் பத்துப் பத்து நூறு ஆகும் என்பர்; செங் குடை வெண்மை; நீலம், பச்சையோடு இனைய எல்லாம் பொங்கு ஒளி மன்னு கோடி புரந்த ஆதித்தர் சுற்ற. 12-5

தீ எழு பொன்னின் சின்னம் மேவி வீழ் அரக்கர் சேர வாய்களில் ஊத, மண்ணும் வானமும் மறுகிச் சோர, 'ஆயது முடிவு காலம்; கிளர்ந்தனர் அரக்கர்' என்று வாய்களின் பேசி வானோர் மண்டினர், மலைதல் நோக்கி. 12-6

அரம்தெறும் அயிலின் காடும், அழல் உமிழ் குந்தக் காடும், சரம் தரு சிலையின் காடும், தானவர் கடலும், இன்ன நிரந்தரம் சங்கு தாரை நில மகள் முதுகை ஆற்றாள்; 'புரந்தரசித்து வந்தான்' என்றன, பொன்னின் சின்னம். 12-7

புலித் தோலின் பலகை எல்லாம் பொரு கடல் புரவி என்னக் கலித்து ஓடி, உம்பரொடும் ஓடின, காலன் அஞ்ச; ஒலித்து ஆழி உலாவுற்றென்ன உம்பர் தோரணத்தை முட்ட, வலித்தார் திண் சிலைகள் எல்லாம்; மண்டின சரத்தின் மாரி. 12-8

தடுவையின் மரங்களோடு சகடைகள் திமிலை தாக்க, உடுஇனம் ஆனது எல்லாம் உதிர்ந்தன, பூ இது என்ன; அடு புலி அனைய வீரர் அமரினில் ஆர்ப்பும், ஆனை நெடு மணிமுழக்கும், ஓதை மண்ணகம் நிறைந்தது அன்றே. 12-9

எண்பனாதியிர கோடி இருஞ் சிலை புண் பயில் வெஞ் சரம் பூட்டினர், ஒன்றோ? விண் புகு தோரணம் மெல்ல மறைந்த; மண் புகழ் சீர்த்தியன் மாருதி வாழ்ந்தான். 12-10

பாறு எழு வாட் படை பத்திரு வெள்ளம்; ஆறு இரு கோடியின் வேலின் அமைந்தார்; கூறிடு வெள்ளம் மிடைந்தது குந்தம்;- வீறுடை மாருதிமேல் வரு சேனை, 12-11

பந்து என ஆடிய பாய் பரி எல்லாம்; சிந்தையின் முந்தின தேர்கள் செறிந்த; அந்தியின் மேனிய ஆனைகள் எல்லாம் வந்தன, மண்ணை அடித் துகள் மாய்ப்ப. 12-12

சங்கொடு தாரைகள், சச்சரி, சின்னம், எங்கும் இயம்பின; பேரி இடித்த; வெங் குரலின் பறை விண்ணில் நிறைந்த; பொங்கி அரக்கர் பொருக்கென வந்தார். 12-13

பார்த்தன பார்த்தன பாய் பரி எங்கும்; தேர்த் திரள் தேர்த் திரளே திசை எங்கும்; கார்த் திரள் மேனியின் இன் கயம் எங்கும்; ஆர்த்தனர் மண்டும் அரக்கர்கள் எங்கும். 12-14

நுகம் படு தேர் அவை நூற்று இரு கோடி; யுகம் பிறிது ஒன்று வந்து உற்றது என்ன, அகம் படு காவில் அரக்கர்கள், இன்னம் அகம்படி வீரர்கள் ஐ-இரு வெள்ளம். 12-15

வெள்ளம் ஓர் நூறுடை விற் படை என்பார்; துள்ளிய வாட் படை சொல்லிட ஒண்ணா; பொள்ளல் தரும் கரப் பூட்கையும் அஃதே;- கள்ள அரக்கனைச் சுற்றினர் காப்பார். 12-16

ஆய பெரும் படை செல்வது கண்டு மாயம் மிகும் திறல் வானர வீரன், நாயகனைத் திசை நோக்கி நயத்தால், மேயது ஒர் இன்பம் விளங்கிட நின்றான். 12-17

ஆழியின் ஆய அரக்கர் பெரும் படை ஏழ் உலகும் இடம் இல் என ஈண்டிச் சூழும் எழுந்தனர் தோன்றினர் தம்மைக் கோழியின் ஒக்குறக் கூவிடுகின்றான். 12-18

மாருதி கூவ மகிழ்ந்தனன் ஆகி, கூரிய புந்தியின் கோவன் குறிக்கொடு, கார் அன மேனி அரக்கர்கள் காணா, வாரிகளூடு மடுத்தன வாளி. 12-19

தூளி மிடைந்து, உருத் தோன்றல ஆகி, யாளி அனானை அறிந்திலன் ஆகி, சூழுற நோக்கினன், சோதனை பெற்றான்; கோள் அமைந்து அன்னவை கூறுதலுற்றான். 12-20

இந்திரன் முன்பும் இடும் திரள் சோதிச் சந்திர வெண்குடை தான் எதிர் கண்டான்; அந்தம்இல் கேள்வியன் ஆனைகள் காணா, சிந்தை உவந்து, சிரித்து உடன் நின்றான். 12-21

சிந்தை உவந்தவன் ஆகி அரக்கன் முந்தி எழுந்து முனிந்தமை நோக்கி, 'வெந் திறலாய்! விரைவின் வருக!' என்றான்; 'இந்திரசித்து இவன்' என்பது இசைத்தான். 12-22

என்று அவன் மாற்றம் இயம்புதல் கேட்டு, குன்றம் எனும் புய வானர வீரன், 'நன்று இது! நன்று இது!' என்ன நயந்தான்; சென்று அணைவுற்றது அரக்கன சேனை; 12-23

ஊழி எழுந்து உலகத்தை ஒடுக்க, ஆழ் இயல் தானை அரக்கர் அடங்க, ஏழ் உலகும் இடம் இல்லை எனும்படி ஆழி கிளர்ந்தன என்ன அழைத்தான். 12-24

'சந்திரன் அருக்கனொடு தாரகை இனங்கள் சிந்திட எழுந்து, திசை ஈண்ட, எதிர் செவ்வே வந்த இவ் அரக்கர் குழு வன்மை இது என்றால், இந்திரனை அன்றி உலகு ஏழும் வெலும்' என்றான். 12-25

உடைந்த வல்இருள் நோற்று, பல் உருக்கொடு, அக் கதிர்க் குழாங்கள் மிடைந்தன மிலைச்சியாங்கு, மெய் அணி பலவும் மின்ன, குடைந்து வெம் பகைவர் ஊன் தோய் கொற்றப் போர் வாள் வில் வீச, அடைந்த, கார் அரக்கர் தானை, அகலிடம் இடம் இன்று என்ன, 12-26

என்றே, 'இவன் இப்பொழுது என் கையினால் மடிந்தால், நன்றே மலர்மேல் உறை நான்முகன் ஆதி தேவர், "பொன்றோம் இனி என்றும்; இருந்து உயிர் போற்றுதற்கு நின்றே துயர் தீர நிறுத்தினன்" என்ப மன்னோ.' 24-1

எழுந்தான்; எழுந்த பொழுது, அங்கு அரக்கரும் எண் இல் கோடி பொழிந்தார் படைகள்; அவை யாவையும் பொடிந்து சிந்திக் கழிந்து ஓடிட, தன் கை மராமரம் கொண்டு வீசி, செழுந் தார்ப் புயத்து அண்ணல் செறுத்து, உடன் மோதலுற்றான். 27-1

செறுத்து எழுந்திடும் அரக்கர்கள் திசை திசை நெருக்கி, மறித்து வெஞ் சமர் மலைதலும், மாருதிக் கடவுள் கறுத்து வஞ்சகர் சிரத்தொடு கரம் புயம் சிதறிப் பொறித் தெறித்திடப் புடைத்தனன், பொரு பணை மரத்தால். 33-1

புகைந்து அரக்கர்கள் விடும் கொடும் படைகளைப் பொறியின் தகைந்து, மற்று அவர் உடல்களைத் தலைகளைச் சிதறி, மிகும் திறல் கரி, பரி, மணித் தேர், இவை விளிய, புகுந்து அடித்தனன், மாருதி; அனைவரும் புரண்டார். 33-2

எடுத்து நாண் ஒலி எழுப்பினன்; எண் திசைக் கரியும் படித் தலங்களும் வெடி பட, பகிரண்டம் உடைய, தொடுத்த வானவர் சிரதலம் துளங்கிட, சினம் கொண்டு அடுத்து, அம் மாருதி அயர்ந்திட, அடு சரம் துரந்தான். 45-1