குணங்குடியார் நான்மணிமாலை

விக்கிமூலம் இலிருந்து

குணங்குடி மஸ்தான் சாகிபு[தொகு]

அவர்கள் பேரில்
மகாவித்துவான் திருத்தணிகை

சரவணப்பெருமாளையர் அவர்கள் பாடிய

குணங்குடியார் நான்மணிமாலை[தொகு]

காப்பு

(நேரிசை வெண்பா)

எண்சீர்க் குணங்குடியான் என்னும் குருமணிமேல்
உண்சீர்த் தமிழ்நான் மணிமாலை - பண்சீர்கொள்
கற்பனைசே ர்பொற்பினவல் கைக்குள் பலவகையாங்
கற்பனைதீர் சிற்பரன்றாள் காப்பு.

நூல்[தொகு]

(நேரிசை வெண்பா)

பாடல்:1 (பொன்னாதியாம்)[தொகு]

பொன்னாதி யாம்பொய்ப் பொருளினுறு புன்சுகத்தை
மின்னாமென்(று) எள்ளா விரகிலிகே- னின்னே ?
குணங்குடியா னஞ்செய்த குறிவாளி நல்க
குணங்குடியா னஞ்செய் வழுத்து. (1)
(கட்டளைக் கலித்துறை)

பாடல்:2 (விழுத்துந்)[தொகு]

விழுத்துந் தொழும்படை யன்பமைந் தோர்தமை மாநிலருள
பழுத்தும் குணங்குடியான் கரைகாண் டகுபண் புடைத்தாய்
முழுத்தும் பவக்கட லைக்கடப் பித்திசை முற்றுறவே
அழுத்தும் கரைபெற லில்லாத வானந்த மாங்கடலே (2)
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

பாடல்:3 (கடல்சூழ்)[தொகு]

கடல்சூழ் புவியி லுளைத்திருளைக் கருணை யொளியி னாற்களைந்து
விடல்சூழ் பவரிற் குணங்குடியான் மிக்கோ னெனற்கோர் தடையுளதோ
மிடல்சூழ் புறத்தின் விழிமறைத்து மேவு மிருளை விரிகதிரா
லடல்சூழ் பொருள்கள் பலவுறினு மலரி லுயர் வாய்த் தோன்றுறுமே. (3)
(நேரிசை யாசிரியப்பா)

பாடல்:4 (தோன்றுபல்)[தொகு]

தோன்றுபல் பாதகத் தொகுதியா மைந்தரை
ஈன்று வளர்க்குமா வென்னுமிக் கலிதனிற்
காட்சியிற் புலப்படாக் கடவுளுண் டெனது
மாட்சியி னவனையா மருவுலுண் டெனது
முடலமீ தன்றிவே றுயுருள தெனலுந்
துயிலுண வொழித்துத் தொடர்புல னடக்கிப்
பயிலு மனோலயம் பண்ணலுண் டெனலுங்
கண்டவர் யாரிவை கட்டுரை யாமெனக்
கொண்டரு நூலையுங் குருவையும் பழித்துத்
தவத்தொழில் சிறிதுந் தழுவாது கைவிட்(டு)
அவத்தொழில் முழுவது மஞ்சாது புரியுங்
கொடியவர் கெட்டுளங் குலைத்துடல் விதிர்ப்ப
ஒடிவரு பத்தியி னுற்றவர் தமக்கெலாங்
கடவுளை யவனடி காண்டகு றத்தினைச்
சடமுறு முயிரவன் தன்னின்வே றன்மையை
வியத்தகும் ஐம்புலன் என்றுமன் னடக்குறு
நயத்தகு மியோகமெஞ் ஞானநல் லியல்பினை
ஐயந் திரிபற வருளினா லுள்ளக்
கையுறு நெல்லிக் கனியென வுணர்த்தும்
இணங்கு மெய்ப்புகழொடு மிசைந்தான்
குணங்குடி யானெனக் குலவு மாதவனே (4)

[தொகு]

பாடல்:5 (மாதவஞ்சேர்)[தொகு]

(நேரிசை வெண்பா)
மாதவஞ்சேர் மேலோர் வழுத்துங் குணங்குடியான்
தீதவஞ்சேர் நம்மவித்தை தீர்க்குமெனக்- காதல்
விரைந்து புகழ்ந்தோ ரிகழ்ந்தோர் மேவுவர்மெய்ப் போதம்
வரைந்து பிழைக்கும் வழி (5)

பாடல்:6 (வழிசேர்)[தொகு]

(கட்டளைக்கலித்துறை)
வழிசேர் குணங்குடியானெனு மாரியன் மல்கருள்கூர்
விழிசேர் திருமுகத் திங்கள்கண் டார்க்கன்றி மேவலுண்டோ
பழிசேர் மனவிந்து காந்த முறுகுபும் பண்பினோடு
மொழிசே ரஞ்ஞான மெனுமிருள் நீங்கு முறைமையுமே (6)

பாடல்:7 (முறைமுறை)[தொகு]

(எண்சீ்ர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்)
முறைமுறைவந் தரசரெல்லாம் வணங்கச் சீர்சான் முடிபுனைந்து புடலி?முழு தாளும் பேறு
மறைதருமோர் வீட்டினுக்கே யவாவுன் மேவி யரைக்கருங்கோ சிகமொழித்துக் கந்தை சூழ்ந்து
பொறையுறுநின் திருவருள்பேற் றைய மேற்றுண் புண்ணியரா லொருபொருளென் றெண்ணற் காமோ
குறைவறுநற் புகழ்பரம யோகி யெனனுங் குணங்குடியா னேவிளங்கக் கூறுவா யே. (7)

பாடல்: 8 (வாயினாற்)[தொகு]

(நேரிசை ஆசிரியப்பா)
வாயினாற் பலநூல் வகைதெரிந் துரைத்துங்
காயமேல் வெண்பொடி கவினுலம் பூசியுஞ்
செய்யகல் லாடையைத் திகழ்ந்திட உடுததுஞ்
துய்ய சடைமுடி துதைதர முடித்துத்
தண்டுக மண்டலஞ் சால்புறத் தாங்கியு
மண்டல மிசைவிரி மான்றோலி னிருந்தும்
பலர்புலச் சூறையிற் படுசிறு துரும்பென
விடர்கெழு மனத்தரா யிரு்க்கின் றனர்பலர்
நெளிதிரைக் கடல்சூழ் நெடு்ம்பெரும் புவிமிசை
அளிவளர் குணங்குடி யானெனு மமல
சாற்று மச்சாதனந் தானொன் றிலாமலும்
போற்று முனதருள் பொருந்திய ஒருசிலர்
ஒருதன தியல்புணர் திருவினை யகற்றி
மூவா சைத்திற மேவாது விடுத்து
நாற்கதி நணுகுறா மேற்கதி விரும்பி
ஐம்பொறிக் கெதிர்வற வெம்புல னடக்கி
அறுசம யங்களி னெறிநிலை தேறி
எழுபிறப் பிகந்ததென் விழுமிய செருக்கிற்
பத்தியாற் படரெலா மொருவி
நித்தியா நந்த நிலையரா யினரே (8)

[தொகு]

பாடல்: 9 (ஆயுங்கால்)[தொகு]

(நேரிசை வெண்பா)
ஆயுங்கால் அன்பின் அழியாத் துணையாகுங்
காயுங்கால் அன்படர்ந்து காதவுடன்?- மாயுங்கால்
நீதிக்கும் போயதனை நேராங் குணங்குடியான்
போதிக்கும் போதப் பொருள். (9)

பாடல்: 10 (பொருட்செல்வம்)[தொகு]

(கட்டளைக் கலித்துறை)
பொருட்செல்வம் புல்லிய தென்றே விடுத்துஇந்தப் பூதலத்தின்
அருட்செல்வம் எய்தும் குணங்குடி யான்அரு ளாதரித்தோர்
தெருட்செல்வம் நன்கெய்தி ஐம்புலன் மாளச் செகுத்தினியாம்
இருட்செல்வம் அல்ல லெனவே மகிழ்வுற் றிருப்பர்களே. (10)

பாடல்: 11 (கள்ளுண்டும்)[தொகு]

(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
கள்ளுண்டும் கொலைபுரிந்தும் கபடம் செய்தும் கணிகையர்தம் புணர்ப்பினுறு காம நோயால்
எள்ளுண்டும் திரிகொடும்பா தகத்தோர் தாமும் இணையில்குணங் குடியானே இறைவா உன்றன்
வி்ள்ளுண்ட கமலவடி படுந்தூள் ஒன்று மேற்படப்பெற் றிடினவர்வெவ் வினைக ளெல்லாம்
தள்ளுண்டு சிறுசிலையொன் றெடுத்து வீசத் தருநிறைபுட் குழாமெனவே பறந்து போமே. (11)

பாடல்: 12 (மேதருநிலையினை)[தொகு]

(நேரிசை ஆசிரியப்பா)
மேதரு நிலையினை மேவிவாழ் வித்தக
ஓதக விருள்தனை ஒழிக்கு மாமணியே
அன்பினர் மகிழ்கொள அருள்பொழி முகிலே
இன்பநன் குதவுறு மணியதெள் ளமுதே
துகளற வோங்கிய துறவினர்க் கரசே
திகழறந் தாங்குபு சேர்குணங் குடியாய்
நின்னை வணங்கினோர் நெஞ்சா லயந்தொறு
முன்னை யிருத்திவே றுறைகின் றனையால்
ஒருவனோ பலரோ ஒருநீ
தெரிதரப் புகல்நின் திருவுள மகிழ்ந்தே. (12)

[தொகு]

(நேரிசை வெண்பா)
தேவருக்கும் எய்தரிய சிற்சுகத்தைத் தற்புகழ்ந்தோர்
யாவருக்கும் பாரினொழி யாதெளிதின்- ஈவனயந்து
ஒப்பில் பெருந்தவத்தின் ஓங்கு குணங்குடியான்
செப்பும் வினையகத்துந் தீர்த்து. (13)
(கட்டளைக் கலித்துறை)
துதியும் பழியும் அமுதமும் பற்கையுந் துப்புமப்பி
நிதியுஞ் சிலையுங் கலவையுஞ் சேறு நிகருறவே
வதியுந் திறத்திற் குணங்குடி யானருள் வாய்த்தவன்பாற்
பதியுங் கருத்துடை யார்கள் கருத்துடைப்பார்க் கண்மெய்யே (14)
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்)
மெய்யுறுசீர்க் குணங்குடியா னெனும்பவனோ பாரினில் விரிநீர் வைப்பின்
அரியுறுபித் தொடுவாத மல்கிஐய மேலிடினும் நாடி நோக்கி
உய்யுறுநன் னிலைபெறவோர் மாத்திரைதன் னுளமிரங்கி யுரைத்தல் செய்யும்
பொய்யுறுமிப் பவநோயை யொழித்திணையி லாதசுகம் பொறுத்து மாறே. (15)
(நேரிசை ஆசிரியப்பா)
மாறுகொண் டென்மன மாகிய பரியை
வீறுகொண் டவாவெனும் வீரனிங் கொருவன்
அழுக்கா றெனுங்கல் கணைமிசை யார்த்தாங்கு
இழுக்கா றுடைசின மெனுங்கலி னஞ்சேர்த்து
அளியறு செருக்குமிக் காகிமே லிவர்ந்து
வளியெனும் வாதுவன் வாய்ந்துடன் தொடர்தரப்
பொற்பெனுங் கொடுவழி புகுந்திடச் செய்தலும்
நெறிபிறழ்ந் தப்பரி நீள்புலக் கான்புகுந்து
அரிவையர் மயக்கெனும் குளத்தினுள் வீழ்ந்துந்
தெரிபொன் னெனும்வனத் தீமிதித் தழுங்கியும்
பகர்மண் ணெனுங்கொடும் பாறைதாக் குற்று
மிகுபெருந் துன்பொடு மெலிந்துழல் கின்றதால்
இன்குணங் குடியான் எனுந்தவர்க் கரசே
நன்குமற் றதனைநீ நல்வழி திருப்பியே
அருளெனும் வாளினவ் வீரனைத் துமித்துக்
கருதமக் கல்லனை யாதிகள் களைந்தொழித்து
என்வசம் ஆக்குவை யெனின்யான்
நின்வச மாக்குவன் நினதியல் புகழ்ந்தே. (16)

[தொகு]

(நேரிசை ஆசிரியப்பா)
புகழ்ந்து குணங்குடியான் பொங்கிசையை நெஞ்சந்
திகழ்ந்துபுல வீர்பாடல் செய்யி- னிகழ்ந்து
மலத்திருக்கை மாற்றிநிலை மாறாவின் பெய்தி
நலத்திருக்கை நல்கு நயந்து. (17)
கட்டளைக் கலித்துறை
நயமேவு கஞ்ச முகமுங் கருணை நயனமுஞ்சீர்
பயமேவு செம்பொ னுறமேனி யும்மெழிற் பாதுகைசேர்
சயமேவு தாளுந் தலைவிரி கோலமுஞ் சார்ந்தன்பரி (சார்ந்து+அன்பர்+இதயம்+மேவும்)
தயமேவு மென்றுங் குணங்குடி யானெனும் சற்குருவே. (18)
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
குருவாய் அடுத்தோர்க் கருள்சுரக்குங் கோதில் குணஞ்சேர் குணங்குடியான்
உருவாய் அருவாய் உபயமுமாய் ஒன்றாய்ப் பலவாய் அறிஞர் விழை
திருவாய் விளங்கும் பரநிலையைத் தெரிக்கு மெனின்மற் றவன்பெருமை
ஒருவாய் உடையோ னும்புகழ்வேன் ஓரா யிரம்வா யுறினொருங்கே. (19)
நேரிசை ஆசிரியப்பா
ஒருங்கிய மனத்தொடும் ஒருகாசும் இலனாய்க்
கருங்கடற் புவிமிசைக் காதன் மீதூர
வழுத்தி யன்புடை வந்திறக் கின்றவன்
எழிற்குணங் குடியான் எனுமருட் செல்வன்
தன்னையும் இழப்ப தல்லால்
என்ன யவன்பெறல் இயம்பருள் சுரந்தே. (20)

[தொகு]

(நேரிசை வெண்பா)
சரக்குமணற் கேணியினீர் தோண்டுந் தொறுமைந்
தரக்குங் குணங்குடியா னன்பர்க்- கிரக்கமொடு
ஆனந்தத் தேறல் வரப்புகல்வ தால்தோறும்
ஆனந்தத் தேறல்சுரப் பாம். (21)
(கட்டளைக் கலித்துறை)
ஆந்துணை நாடிற் குணங்குடி யானென் றழிந்தவன்பாற்
போந்துணை யோடன்பு செய்தவர் செய்தவர் பூதலத்திற்
சாந்துணை யுங்கை வருடிச்செவ் வாச்சியர் தாட்கமலப்
பூந்துணை யூடல் ஒழித்தாங்கு புல்லினர் புல்லினரே. (22)
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்)
புல்லியும் அல்லி சேர்ந்து பொலிவுறு மணத்த தாகுந்
தொல்லியல் வழுவா வண்மை தொடர்குணங் குடியான் என்னும்
நல்லியல் ஞானமூர்த்தி நாமமுற் றிடுத லாலே
சொல்லிய வெனது சொல்லும் தோன்றுறுஞ் சிறப்பின் உற்றே. (23)
(நேரிசை ஆசிரியப்பா)
உற்றுளங் கெழுமிய நற்றிற வன்பொடுங்
குணங்குடி யான்அருட் கிணங்கினோர் யார்க்கும்
பகைமையுங் கேண்மையும் புகனிலை யெனலென்
நெடுங்கா லந்தமை நீங்காது பழகிய
கொடுங்கோன் மாயையைக் கொல்பெரும் பகைவராய்க்
கதுவிய கேண்மையிற் கலப்பர்
புதிதென வெய்திய போதந் தனக்கே. (24)

[தொகு]

(நேரிசை வெண்பா)
தனக்குத்தா னேநிகராந் தத்வத் துவனா
மினக்குத்தா னன்றியெவர்க் குண்டு- நினைக்குங்காற்
கூறு மளிசேர் குணங்குடியா னேவிமலா
தேறுதவ யோகமுயல் சீர். (25)
கட்டளைக்கலித்துறை
சீரை விரும்பினர்க் கின்றாமு லோபமெய் சேருநசை
போரை விரும்பினர்க் கின்றா மனநிலை பூவையர்தம்
மோரை விரும்பினர்க் கின்றாங் குணங்குடியா னிடஞ்செய்
நாரை விரும்பினர்க் கின்றா முலகர் நவிலவரே. (26)
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
நவிலுமிள மையுமதனு றுமுடலு மதனையுள நயந்து காக்கக்
குவிபொருளும் புனற்குமிழி போலநிலை யல்லவெனுங் குணத்தை யோர்ந்து
புவிபுகழு மெஞ்ஞானக் குணங்குடியான் றிருவருளைப் பொருந்தற் கெண்ணார்
தவலறுசீ ரகண்டபரி பூரணமாஞ் சிற்பரன்றாள் சார்த லுண்டே (27)
(நேரிசை ஆசிரியப்பா)
உண்டும் உடுத்தும் உறுபொருள் ஈட்டியும்
எண்டகு வாழ்நாள் யாவையுங் கழித்தே
அணங்குசெய் வினைமுயல் அசடருக் கறிவருங்
குணங்குடி யானருட் குரிசி லிசையிசை
நாவாய் நாவா யாகு
மேவாப் பவக்கட லொழிந்து கரைபெறற்கே. (28)

[தொகு]

(நேரிசை வெண்பா)
பெறற்கரும்பே றொன்றுளதோ பேருலகில் யார்க்குந்
தெறற்கருமா யைக்கழிவுசெய்யும்- விறற்கிசைந்த
மன்னருளங் கொண்டு மதிக்குங் குணங்குடியான்
தன்னருளங் குற்றார் தமக்கு (29)
(கட்டளைக் கலித்துறை)
குவலைய மெங்கும் ஒருசாண் வயிற்றின் குழிநிறைப்பைக்
கவலை யடைந்திரைக் கேயுழல் வீர்பயன் கண்டதுண்டோ
நுவலைய நீக்குங் குணங்குடி யானரு ணோக்கிவிழித்
திவலைய றவன்பிற் ஞேரினுண் டாங்கடைதீர் சிறப்பே (30)
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
சிறக்கும் புகழு மடுத்தோங்குஞ் செறிதீ வினைகளெல்லாம் விடுத்தும்
பறக்கும் வித்தை யிருணீங்கும் பக்தி யுளத்தின் மேன்மேலும்
பிறக்கு மதிகப் பெருவாழ்வு பெருகும் உலகிற் பேதநிலை
துறக்கு முறவோன் குணங்குடியான் சொல்லும் நெறியைத் துன்னினர்க்கே (31)
(நேரிசை ஆசிரியப்பா)
துன்னுறு திரைக்கடல் சூழ்பெரும் புவிமிசை
பன்னுறு நிலைகெழு பலசம யங்களுள்
எச்சம யத்தவர் எவ்வாறு கருதினும்
அச்சம யத்தவர்க் கவ்வா றிருந்தருள்
பலவடி வங்களும் பலநா மங்களும்
நலமுற மருவிய நாயக னாகியும்
உருவும் பெயரும்ஒன் றுறாதுவே றாகிச்
செருவளர் சமயா தீதமுற் றொளிரும்
சிற்பரம் பொருளினத் தெரிக்கும்
நற்குணங் குடியா னெனு நாயகனே (32)

[தொகு]

(நேரிசை வெண்பா)
நாயகனார் நல்வரவை நாடுங் குலமகள்போற்
றாயகமாந் தற்பரனைத் தாங்காண- நேயமுளங்
கொண்டோர்க் கலது குணங்குடியான் கண்ணருட்பே
றுண்டோவிப் பூதலத்தி னுள். (33)
(கட்டளைக்கலித்துறை)
உள்ளினுங் கண்முன் எழுதினும் காதின் ஒருவர்சொலக்
கொள்ளினு நாவினிற் கூறினும் இன்பங் கொளிக்குமுன்பேர்
கள்ளினு நெஞ்சை அழிக்கின்ற காமக் கரிசிலரைத்
தள்ளினுஞ் சூழும் குணங்குடி யானெனுந் தற்பரமே (34)
(கலிவிருத்தம்)
பரம யோகியைப் பற்றொன்றி லான்றன்னைக்
கரவி லாத கருணைக் கடலினைக்
குரவ னாகுங் குணங்குடி யான்றனைப்
பரவி னார்க்குப் பவப்பிணி யில்லையே (35)
(நிலைமண்டில ஆசிரியப்பா)
இல்லையோ உளதோ இடையென மருண்டும்
முல்லையின் அரும்பே முறுவலென் றுரைத்தும்
கொங்கையைச் செம்பொனிற் குடமென வியந்துஞ்
செங்கையைக் காந்தள் செழுமலர் என்றும்
விழியைக் கூர்நெடு வேற்படை யென்றும்
மொழியை நறுஞ்சுவை முதிரமிழ் தென்றும்
இதழினைக் கொவ்வையின் எழிற்கனி யென்றும்
நுதலினைப் பிள்ளைப் பிறையென நுவன்றும்
வனிதையர் மயக்கிடை மயங்கிவீழ்ந் தழுதும்
துணிவுறு வோர்மனச் சோர்வினை யொழித்திட
மறைபுகன் ஞான வளமினி தருளும்
குறைவரும் நற்குணங் குடிகொண் டிருத்தலால்
உன்பெயர்க் காரணத் துறுபொரு ளுணர்ந்தனம்
கொன்பெறு புகழ்வளர் குணங்குடி யானே. (36)

[தொகு]

பாடல்: 37 (யானெனதென்னுஞ்)[தொகு]

நேரிசை வெண்பா
யானென தென்னுஞ் செருக்கற் றியாவுமொரு
தானெனவே கொள்ளுந் தகையாகும்- நானிலத்திற்
கூறுங் கருணைக் குணங்குடியான் சந்நிதியில்
நேருங் கருத்தோர் நிலை. (37)

பாடல்: 38 (நிலையுறு)[தொகு]

கட்டளைக் கலித்துறை
நிலையுறு சத்துச்சித் தாநந்த மாக நிறைபொருளைக்
கலையுறு மாட்சியுற் றானுற்றி யாரையும் கட்டவல்லோன்
புலையுறு மியாக்கை வருந்துற நோக்கும் புனிதர்புகழ்
தலையுறு சீ்ர்கொள் குணங்குடி யானெனுஞ் சற்குணனே (38)

பாடல்: 39 (குணங்குடியானருள்)[தொகு]

(கலிவிருத்தம்)
குணங்குடி யானருள் கூடி னலத்தின்
இணங்கிய சிந்தையர் ஏதம் அகற்றி
அணங்கறும் இன்பின் அமர்ந்துல கத்தோர்
வணங்கி வழுத்தறு வாண்பொடு வாழ்வார் (39)

பாடல்: 40 (வார்தருங்)[தொகு]

(நிலைமண்டில ஆசிரியப்பா)
வார்தரும் கூந்தலார் வரிவிழிக் கண்ணையும்
ஏர்தரு மதனவேள் எறிமலர் கணையும்
ஊறு செயப்பொறா தொளிர் திருமேனியோய்
கூறுபல் புகழ்வளர் குணங்குடி யானே
இயலுறும் அன்புகொண் டெய்தினோ ரியார்க்கும்
யாவரு மதிநிலை யருள்செய நின்று
மண்ணுல கந்தனில் வழங்குகின் றனைநீ
விண்ணுல கந்தனில் விளங்குபொன் னெனவே (40)
குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் பேரில்
மகாவித்துவான் திருத்தணிகை சரவணப்பெருமாளையர் அவர்கள் பாடிய
'குணங்குடியார் நான்மணிமாலை' முற்றிற்று.