கொங்கண நாயனார்

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

கொங்கண நாயனார் பாடல்கள்

வாலைக் கும்மி

  • பக்கம் 238 - 251

1 காப்பு[தொகு]

கல்விநிறை வாலைப்பெண் காதலியென் றோதுகின்ற
செல்வியின் மேற் கும்மிதனைச் செப்புதற்கே - நல்லிசைய
நாதனின்சொல் வேதனஞ்சு போதன்மிஞ்சி மானகஞ்ச
பாதம்வஞ்ச நெஞ்சில்வைப் போம்

2 கும்மி[தொகு]

சத்தி சடாதரி வாலைப்பெண் ணாமந்ந

உத்தமி மேற் கும்மிப் பாட்டுரைக்க

வித்தைக் குதவிய வொற்றைக்கொம் பாம் வாலை

சித்தி விநாயகன் காப்பாமே

3 சரஸ்வதி துதி[தொகு]

சித்தர்கள் போற்றிய வாலைப் பெண் ணாமந்த

சத்தியின் மேற்கும்மிப் பாட்டுரைக்கத்

தத்தமி தோமென ஆடுஞ் சரஸ்வதி

பத்தினி பொற்பதங் காப்பாயே

4 சிவபெருமான் துதி[தொகு]

எங்கும் நிறைந்தவள் வாலைப்பெண் ணாம்மாலின்

தங்கையின் மேற்கும்மி பாடுதற்குக்

கங்கை யணிசிவ சம்புவாஞ் சற்குரு

பங்கயப் பொற்பாதங் காப்பாமே

5 சுப்பிரமணியர் துதி[தொகு]

ஞானப்பெண் ணாமருள் சோதிப்பெண் ணாமாதி

வாலைப்பெண் மேற்கும்மி பாடுதற்கு

மானை பெண்ணாக்கிய வள்ளிக் கிசைந்திடும்

மால்முரு கேசனுங் காப்பாமே

6 விஷ்னு துதி[தொகு]

ஆண்டிப்பெண் ணாம்ராச பாண்டிப்பெண் ணாம் வாலை

அம்பிகை மேற்கும்மி பாடுதற்குக்

காண்டீப னால் பணி பூண்டவன் வைகுந்தம்

ஆண்டவன் பொற்பதங் காப்பாமே

7 நந்தீசர் துதி[தொகு]

அந்தரி சுந்தரி வாலைப் பெண் ணாமந்த

அம்பிகை மேற்கும்மி பாடுதற்குச்

சிந்தையில் முந்திநல் விந்தையாய் வந்திடும்

நந்தீசர் பொற்பதங் காப்பாமே

8 நூல்[தொகு]

தில்லையில் முல்லையி லெல்லையு ளாடிய

வல்லவள் வாலைப் பெண்மீ தினிலே

சல்லாபக் கும்மித் தமிழ்பா டவரும்

தொல்லை வினை போக்கும் வாலைப் பெண்ணே

9[தொகு]

மாதா பிதாகூட இல்லாம லே வெளி

மண்ணும் விண்ணுமுண்டு பண்ணவென்று

பேதைப்பெண் ணாமுதல் வாலைப் பெண் ணாளென்று

புகுந்தா ளிந்தப் புவியடக்கம்

10[தொகு]

வேதமும் பூதமுண் டானது வும்வழி

விஞ்ஞான சாத்திர மான துவும்

நாதமுங் கீதமுண் டானது வும்வழி

நான் சொல்லக் கேளடி வாலைப்பெண்ணே

11[தொகு]

முந்தச் செகங்களுண் டானது வும்முதல்

தெய்வமுந் தேவருண் டானதுவும்

விந்தையாய் வாலையுண் டானது வும் ஞான

விளக்கம் பாரடி வாலைப்பெண்ணே

12[தொகு]

அரிக்கு முந்தின தவ்வெழுத்தாம் பின்னும்

அரிக்குள் நின்றதும் அஞ்செழுத்தாம்

தரிக்கும் முந்தின தஞ்செழுத்தாம் வாசி

பரிக்குள் நின்றது மஞ்செழுத்தாம்

13[தொகு]

ஆதியிலைந்தெழுத் தாயினாள் வாலைப்பெண்

ஐந்தெழுத்து மென்று பேரானாள்

நாதியி னூமை யெழுத்திவள் தானல்ல

ஞான வகையிவள் தானானாள்

14[தொகு]

ஊமையெழுத்தே யுடலாச்சு மற்றும்

ஓமென் றெழுத்தே யுயிராச்சு

ஆமிந் தெழுத்தை யறிந்து கொண்டு விளை

யாடிக் கும்மி யடியுங்கடி

15[தொகு]

செகம் படைத்ததும் அஞ்செழுத்தாம் பின்னும்

சீவன் படைத்ததும் அஞ்செழுத்தாம்

உக முடிந்தது மஞ்செழுத்தாம் பின்னும்

உற்பன மானது மஞ்செழுத்தாம்

16[தொகு]

சாத்திரம் பார்த்தாலு தானுமென்ன வேதந்

தானுமே பார்த்திருந் தாலுமென்ன

சூத்திரம் பார்த்தல்லோ ஆளவேணு மஞ்சு

சொல்லை யறிந்தல்லோ காண வேணும்

17[தொகு]

காணாது கிட்டாதே எட்டாதே அஞ்சில்

காரிய மில்லையென்றே நினைத்தால்

காணாதுங் காணலா மஞ்செழுத் தாலதில்

காரியமுண்டு தியானஞ் செய்தால்

18[தொகு]

ஆயனு மைந்தா யெழுத்துக்குள் ளேயறி

வாயனு மைந்தா மெழுத்துக்குள்ளே

வாயனு மைந்தா மெழுத்துக்குள் ளேயிந்த

வாலையு மைந்தா மெழுத்துக்குள்ளே

19[தொகு]

அஞ்செழுத்தான தும் எட்டெழுத் தாம்பின்னும்

ஐம்பத்தோர் அட்சரந் தானாச்சு

நெஞ்செழுத் தாலே நினையா மலந்த

நிசந்தெ ரியுமோ வாலைப்பெண்ணே

20[தொகு]

ஏய்க்கு தேய்க்கு தஞ்செழுத் துவதை

எட்டிப் பிடித்துக் கொளிரண்டெழுத்தை

நோக்கிக்கொள் வாசியை மேலாக வாசி

நிலையைப் பாரடி வாலைப்பெண்ணே

21[தொகு]

சிதம்பர சக்கரந் தான்றி வாரிந்தச்

சீமையிலுள்ள பெரியோர்கள்

சிதம்பர சக்கரமென்றால் அதற்குள்ளே

தெய்வத்தை யல்லோ அறியவேணும்

22[தொகு]

மனமு மதியு மில்லாவி டில்வழி

மாறுதல் சொல்லியே யென்ன செய்வாள்

மனமு றுதியும் வைக்கவே ணும் பின்னும்

வாலை கிருபையுண் டாகவேணும்

23[தொகு]

இனிவெ ளியினிற் சொல்லா தேயெழில்

தீமட்டு திந்த வரி விழிக்கே

கனிமொ ழிச்சியீர் வாருங்கடி கொஞ்சங்

கருவைச் சொல்லுவேன் கேளுங்கடி

24[தொகு]

ஊத்தைச் சடலமென் றெண்ணா தேயிதை

உப்பிட்ட பாண்டமென் றெண்ணாதே

பார்த்த பேருக்கே ஊத்தையில் லையிதைப்

பார்த்துக்கொள் உன்ற னுடலுக்குள்ளே

25[தொகு]

உச்சிக்கு நேராயுண் ணாவுக்கு மேல் நிதம்

வைத்த விளக்கும் எரியுதடி

அச்சுள்ள விளக்கு வாலைய டிஅவி

யாம லெரியுது வாலைப்பெண்ணே

26[தொகு]

எரியுதே அறு வீட்டினி லேயதில்

எண்ணெயில் லையமிழ் தண்ணீரில்லை

தெரியுது போக வழியுமில் லைபாதை

சிக்குது சிக்குது வாலைப்பெண்ணே

27[தொகு]

சிலம்பொ லியென்னக் கேட்கும டிகெத்த

சிக்குள்ள பாதை துடுக்கமடி

வலம்புரி யச் சங்கமூது மடிமேலே

வாசியைப் பாரடி வாலைப்பெண்ணே

28[தொகு]

வாசிப் பழக்கம் அறியவேணும் மற்றும்

மண்டல வீடுகள் கட்டவேணும்

நாசி வழிக் கொண்டு யோகமும் வாசியும்

நாட்டத்தைப் பாரடி வாலைப் பெண்ணே

29[தொகு]

முச்சுடரான விளக்கினுள்ளே மூல

மண்டல வாசி வழக்கத்திலே

எச்சுடராகி யந்தச் சுடர்வாலை

இவள் விட வேறில்லை வாலைப்பெண்ணே

30[தொகு]

சூடாமல் வாலையிருக்கிறதும் பரி

சித்த சிவனுக்குள் ளானதனால்

ஈடாமல் வாசிப் பழக்கத்தைப் பாருநாம்

மேல்வீடு காணலாம் வாலைப்பெண்ணே

31[தொகு]

மேல்வீடு கண்டவன் பாணியடி விண்ணில்

விளக்கில் நின்றவன் வாணியடி

தாய்வீடு கண்டவன் ஞானியடி பரி

தாண்டிக் கொண்டான் பட்டாணியடி

32[தொகு]

அத்தியி லேகரம் பத்தியிலே மனம்

புத்தியிலே நடு மத்தியிலே

நெற்றி சதாசிவம் என்று சொன்னேன் உன்றன்

நிலைமையைப் பாரடி வாலைப்பெண்ணே

33[தொகு]

அழுத்திலே சொல்லஞ் செழுத்திலே நானும்

வழுத்தி னேன் ஞானப் பழத்திலே

கழுத்திலே மயேஸ்வரனும் உண்டுகண்

கண்டு பாரடி வாலைப்பெண்ணே

34[தொகு]

aஞ்சிலே பிஞ்சிலே வஞ்சியரே நிதம்

கொஞ்சி விளையாடும் வஞ்சியரே

நெஞ்சிலே ருத்திரன் சூழிருப் பானவன்

நேருடனா மடி வாலைப்பெண்ணே

35[தொகு]

தொந்தியிலே நடுப் பந்தியிலே திடச்

சிந்தையிலே முந்தி யுன்றனுடன்

உந்தியில் விண்ணுவுந் தாமிருப் பாரிதை

உண்மையாய்ப் பாரடி வாலைப்பெண்ணே

36[தொகு]

ஆலத்திலே இந்த ஞாலத்திலே வருங்

காலத்திலே அனு கூலத்திலே

மூலத்திலே ப்ரமன் தானிருந்து வாசி

முடுக்கிறான் பிண்டம் பிடிக்கிறானே

37[தொகு]

தேருமுண்டு அஞ்நூறாம் ஆணியுண்டே அதில்

தேவரும் உண்டு சங்கீதம் உண்டே

ஆருண்டு பாரடி வாலைத் தெய்வம் அதில்

அடக்கந் தானடி வாலைப்பெண்ணே

38[தொகு]

ஒன்பது வாயில் கொள் கோட்டையுண்டே அதில்

உள்ளே நிலைக்காரர் அஞ்சு பேராம்

அன்புடனே பரிகாரர்கள் ஆறுபேர்

அடக்கந் தானடி வாலைப்பெண்ணே

39[தொகு]

இந்த விதத்திலே தேகத்திலே தெய்வம்

இருக்கையில் புத்திக்கு அறிக்கையினால்

சந்தோட வாலையைப் பாராமல் மனிதர்

சாகிற தேதடி வாலைப்பெண்ணே

40[தொகு]

நகார திட்டிப்பே ஆனதனால் வீடு

வான வகார நயமாச்சு

உகார மூச்சி சிரசாச்சே இதை

உற்றுப் பாரடி வாலைப்பெண்ணே

41[தொகு]

வகார மானதே ஓசையாச்சே அந்த

மகார மானது கர்ப்பமாச்சே

சிகார மானது மாய்கையாச்சே இதைத்

தெளிந்து பாரடி வாலைப்பெண்ணே

42[தொகு]

ஓமென்ற அட்சரந் தானுமுண்டு அதற்குள்

ஊமை யெழுத்தும் இருக்குதடி

நாமிந்தெழுத்தை யறிந்து கொண்டே நாம் வினை

நாடிப் பாரடி வாலைப்பெண்ணே

43[தொகு]

கட்டாத காளையைக் கட்டவேணும் ஆசை

வெட்ட வேணும்வாசி யொட்டவேணும்

எட்டாத கொம்பை வளைக்க வேணுங்காயம்

என்றைக்கு இருக்குமோ வாலைப்பெண்ணே

44[தொகு]

இருந்த மார்க்கமாய்த் தானிருந்து வாசி

ஏற்காமலே தான் அடக்கவேணும்

திரிந்தே ஓடி யலைந்து வெந்து தேகம்

இறந்து போச்சுதே வாலைப்பெண்ணே

45[தொகு]

பூத்த மலராலே பிஞ்சுமுண்டே அதில்

பூவில்லாப் பிஞ்சும் அனேகமுண்டு

மூத்த மகனாலே வாழ்வுமுண்டு மற்ற

மூன்று பேராலே அழிவுமுண்டு

46[தொகு]

கற்புள்ள மாதர் குலம் வாழ்க நின்ற

கற்பை யளித்தவரே வாழ்க

சிற்பரனைப் போற்றிக் கும்மியடி

தற்பரனைப் போற்றிக் கும்மியடி

47[தொகு]

அஞ்சி னில்ரெண்டழிந்ததில்லை யஞ்

சாறிலே யும்நாலொழிந்த தில்லை

பிஞ்சிலே பூவிலே துஞ்சுவதாம் அது

பேணிப் போடலாம் வாலைப்பெண்ணே

48[தொகு]

கையில்லாக் குட்டையன் கட்டிக்கிட்டான் இரு

காலில்லா நெட்டையன் முட்டிக் கிட்டான்

ஈயில்லாத் தேனெடுத்து உண்டுவிட்டான் அது

இனிக்கு தில்லையே வாலைப்பெண்ணே

49[தொகு]

மேலூரு கோட்டைக்கே ஆதரவாய் நன்றாய்

விளங்கு கன்னனூர்ப் பாதையிலே

காலூரு வம்பலம் விட்டதனாலது

கடு நடையடி வாலைப்பெண்ணே

50[தொகு]

தொண்டையுள் முக்கோணக் கோட்டையி லேயிதில்

தொத்திக் கொடிமரம் நாட்டையிலே

சண்டை செய்து வந்தே ஓடிப் போனாள் கோட்டை

வெந்து தணாலாச்சு வாலைப்பெண்ணே

51[தொகு]

ஆசை வலைக்குள் அகப்பட்டதும் வீடு

அப்போதே வெந்தே அழிந்திட்டதும்

பாச வலைவந்து மூடியதும் வாலை

பாதத்தைப் போற்றடி வாலைப்பெண்ணே

52[தொகு]

அன்னம் இருக்குது மண்டபத்தில் விளை

யாடித் திரிந்ததே ஆண்புலியும்

இன்னம் இருக்குமே யஞ்சு கிளியவை

எட்டிப் பிடிக்குமே மூன்று கிளி

53[தொகு]

தோப்பிலே மாங்குயில் கூப்பிடுதே புது

மாப்பிள்ளை தான் வந்து சாப்பிடவும்

ஏய்க்கும் இப்படி யஞ்சாறு ஆந்தை

இருந்து விழிப்பது பாருங்கடி

54[தொகு]

மீனிமிருக்குது தூரணியில் இதை

மேய்ந்து திரியுங் கலசாவல்

தேனுமிருக்குது போரையிலே யுண்ணத்

தெவிட்டு த்தில்லையே வாலைப்பெண்ணே

55[தொகு]

காகமிருக்குத் கொம்பிலே தான் கத

சாவல் இருக்குது தெம்பிலேதான்

பார்க்க வெகுதூரம் இல்லை யிதுஞானம்

பார்த்ததால் தெரியுமே வாலைப்பெண்ணே

56[தொகு]

கும்பிக் குளத்திலே யம்பலமாம் அந்தக்

குளக் கருவூரில் சேறு மெத்த

தெம்பிலிடைக் காட்டுப் பாதைகளாம் வந்து

சேர்ந்து ஆராய்ந்து பார் வாலைப்பெண்ணே

57[தொகு]

பண்டுமே ஆழக் கிணற்றுக்குள்ளே ரண்டு

கெண்டை யிருந்து பகட்டுதடி

கண்டிருந்தும் அந்தக் காக்கையுமேயஞ்சி

கழுகு கொன்றது பாருங்கடி

58[தொகு]

ஆற்றிலே \ஞ்சு முதலையடி யரும்

புற்றிலே ரண்டு கரடியடி

கூற்றனு மூன்று குருடான டி பாசங்

கொண்டு பிடிக்கிறான் வாலைப்பெண்ணே

59[தொகு]

முட்டை யிடுகுது ஒருபறவை முட்டை

மோசம் பண்ணுது ஒருபறவை

வட்டமிட்டாரூர் கண்ணியில் ரெண்டு

மானுந் தவிக்குது வாலைப்பெண்ணே

60[தொகு]

அட்டமாவின் வட்டம் பொட்டலி லேரண்டு

அம்புலி நிற்குது தேர்மேலே

திட்டமாய் வந்து அடிக்குதில்லை தேகம்

செந்தணல் ஆனதே வாலைப்பெண்ணே

61[தொகு]

முக்கோண வட்டக் கிணற்றுக்குள்ளே மூல

மண்டல வாசிப் பழக்கத்திலே

அக்கோண வட்டச் சக்கரத் தில்வாலை

அமர்ந்து இருக்கிறாள் வாலைப்பெண்ணே

62[தொகு]

இரண்டு காலாலொரு கோபுரமாம் நெடு

நாளா யிருந்தே அமிழ்ந்து போகும்

கண்டபோது கோபுரமிருக்கும் வாலை

காணவும் எட்டாள் நிலைக்க வொட்டாள்

63[தொகு]

அஞ்சு பூஊதத்தை யுண்டு பண்ணிக் கூட்டி

ஆரா தாரத்தை யுண்டு பண்ணிக்

கொஞ்சு பெண்ணாசை யுண்டு பண்ணி வாலை

கூட்டுகிறாள் காலனை மாட்டுகிறாள்

64[தொகு]

காலனைக் காலால் உதைத்தவளாம் வாலை

ஆலகால விடம் உண்டவளாம்

மாளாச் செகத்தைப் படைத்தவளாம் இந்த

மானுடன் கோட்டை இடித்தவளாம்

65[தொகு]

மாதாவாய் வந்தே அமுதம் தந்தாள் மனை

யாட்டியாய் வந்து சுகம் கொடுத்தாள்

ஆதரவாகிய தங்கையானாள் நமக்கு

ஆசைக் கொழுந்தியு மாமியானாள்

66[தொகு]

சிரித்து மெல்லப் புரம் எரித்தாள் வாலை

செங்காட்டுச் செட்டியைத் தானுரைத்தாள்

ஒருத்தியாகவே சூரர் தமை வென்றாள்

ஒற்றையாய்க் கஞ்சனைக் கொன்று விட்டாள்

67[தொகு]

இப்படியல்லோ இவள் தொழிலாம் இந்த

ஈனா மலடி கொடுஞ் சூலி

மைப்படுங் கண்ணியர் கேளுங்கடி அந்த

வயசு வாலை திரிசூலி

68[தொகு]

கத்தி பெரியதோ யுறை பெரிதோ இவள்

கண்ணு பெரிதோ முகம் பெரிதோ

சத்தி பெரிதோ சிவம் பெரிதோ நீதான்

சற்றே சொல்லடி வாலைப்பெண்ணே

69[தொகு]

அன்னப் பெரிதல்லால் தண்ணீர் பெரிதல்ல

அப்படி வாலை பெரிதானால்

பொன்னு பெரிதல்லால் வெள்ளி பெரிதல்ல

பொய்யாது சொல்கிறேன் கேளுங்கடி

70[தொகு]

மாமிசமானால் எலும்புமுண்டு சதை

வாங்கி ஓடு கழன்றுவிடும்

ஆமிசம் இப்படிச் சத்தியென்றே விளை

யாடிக் கும்மி அடியுங்கடி

71[தொகு]

பண்டு முளைப்பது அரிசியே யானாலும்

விண்டுமி போனால் விளையாதென்று

கண்டு கொண்டு முன்னே அவ்வை சொன்னாளது

உண்டோ இல்லையோ வாலைப்பெண்ணே

72[தொகு]

மண்ணு மில்லாமலே விண்ணுமில்லை கொஞ்சம்

வாசமில்லாமலே பூவுமில்லை

பெண்ணுல்லாமலே யானும் இல்லையிது

பேணிப் பாரடி வாலைப் பெண்ணே

73[தொகு]

நந்த வனத்திலே சோதியுண்டு நிலம்

ந்ததிய பேருக்கு நெல்லுமுண்டு

விந்தையாய் வாலையைப் பூசிக்க முன்னாளில்

விட்ட குறைவேணும் வாலைப் பெண்ணே

74[தொகு]

வாலையைப் பூசிக்கச் சித்தரானார் வாலைக்

கொத்தாசை யாய்ச்சிவ கர்த்தரானார்

வேலையைப் பார்த்தல்லோ கூலிவைத்தார் இந்த

விதந் தெரியுமோ வாலைப் பெண்ணே

75[தொகு]

வாலைக்கு மேலான தெய்வமில்லை மானங்

காப்பது சேலைக்கு மேலுமில்லை

பாலுக்கு மேலான பாக்கியமில்லை வாலைக்

கும்மிக்கு மேலான பாடலில்லை

76[தொகு]

நாட்டத்தைக் கண்டால் அறியலாகும் அந்த

நாலாறு வாசல் கடக்கலாகும்

பூட்டைக் கதவைத் திறக்கலாகும் இது

பொய்யல்ல மெய்யடி வாலைப் பெண்ணே

77[தொகு]

ஆணும் பெண்ணும் கூடியானதனாற் பிள்ளை

ஆச்சுதென்றே நீரும் பேசுகின்றீர்

ஆணும் பெண்ணுங் கூடி யானதல்லோ பேதம்

அற்றொரு வித்தாச்சு வாலைப் பெண்ணே

78[தொகு]

இன்றைக் கிருப்பதும் பொய்யல்ல வேவீடே

என் வாழ்க்கை யென்பதும் பொய்யல்லவே

அன்றைக் கெழுத்தின் படிமுடியும் வாலை

ஆத்தாளைப் போற்றடி வாலைப் பெண்ணே

79[தொகு]

வீணாசை கொண்டு திரியாதே இது

மெய்யல்ல பொய்வாழ்வு பொய்க்கூடு

காணாத வாலையைக் கண்டுகொண்டாற் காட்சி

காணலாம் ஆகாயம் ஆளலாமே

80[தொகு]

பெண்டாட்டி யாவதும் பொய்யல்லவோ பெற்ற

பிள்ளைகள் ஆவதும் பொய்யல்லவோ

கொண்டாட்டமான தகப்பன் பொய்யே முலை

கொடுத்த தாயும் நிசமா மோ

81[தொகு]

தாயும் பெண்டாட்டியந் தான்சரி யேதன்யம்

தாமே யிருவருந்தாங் கொடுத்தார்

காயும் பழமுஞ் சரியாமோ உன்றன்

கருத்தைப் பார்த்துக்கொள் வாலைப் பெண்ணே

82[தொகு]

பெண்டாட்டி மந்தைமட் டும் வருவாள் பெற்ற

பிள்ளை மசானக் கரையின் மட்டும்

தெண்டாட்டுத் தர்மம் நடுவினிலே வந்து

சேர்ந்து பரகதி தான் கொடுக்கும்

83[தொகு]

பாக்கியமும் மகள் போக்கியமும் ராச

போக்கியமும் வந்த தானாக்கால்

சீக்கிரந் தருமம் செய்ய வேண்டுங் கொஞ்சத்

திருப்ப ணிகள் முடிக்கவேண்டும்

84[தொகு]

திருப்பணி களை முடித்தோ ருஞ்செத்துஞ்

சாகாத பேரில் ஒருவரென்றும்

அருட் பொலிந்திடும் வேதத்தி லேயவை

அறிந்து சொன்னாளே வாலைப் பெண்ணே

85[தொகு]

மெத்தை தனிலே படுத்திருந் துநாமும்

மெல்லிய ரோடு சிரிக்கும்போது

யுத்தகா லன் வந்து தான் பிடித் தால்நாமும்

செத்த சவமடி வாலைப் பெண்ணே

86[தொகு]

ஏழை பனாதிகள் இல்லையென் றாலவர்க்

கிருந்தா வன்னங் கொடுக்க வேண்டும்

நாளையென் றுசொல்ல லாகாதே யென்று

நான் மறை வேதம் முழங்குதடி

87[தொகு]

பஞ்சை பனாதியடியாதே யந்தப்

பாவந் தொலைய முடியாதே

தஞ்சமென் றோரைக் கெடுக்காதே யார்க்கும்

வஞ்சனை செய்ய நினையாதே

88[தொகு]

கண்டதுங் கேட்டதுஞ் சொல்லாதே கண்ணில்

காணாத வுத்தரம் விள்ளாதே

பெண்டாட்டிக் குற்றது சொல்லாதே பெற்ற

பிள்ளைக் கிளப்பங் கொடுக்காதே

89[தொகு]

சிவன்ற னடியாரை வேதியரைச் சில

சீர்புல ஞானப் பெரியோரை

மவுன மாகவும் வையாதேயவர்

மனத்தை நோகவும் செய்யாதே

90[தொகு]

வழக்க ழிவுகள் சொல்லாதே கற்பு

மங்கையர் மேல்மனம் வையாதே

பழக்க வாசியைப் பார்த்துக் கொண்டு வாலை

பாதத்தைப் போற்றடி வாலைப் பெண்ணே

91[தொகு]

கூடிய பொய்களைச் சொல்லாதே பொல்லாக்

கொலைக் களவுகள் செய்யாதே

ஆடிய பாம்பை யடியாதே இது

அறிவு தானடி வாலைப் பெண்ணே

92[தொகு]

காரியனாகினும் வீரியம் பேசவும்

காணா தென் றவ்வை சொன்னாளே

பாரினில் வம்புகள் செய்யா தேபுளிப்

பழம்போ லுதிர்ந்து விழுந்தானே

93[தொகு]

காசார் கள்பகை செய்யாதே நடுக்

காட்டுப் புலிமுன்னே நில்லாதே

தேசாந்திரங்களுஞ் செல்லாதே மாய்கைத்

தேவடி யாள்தனம் பண்ணாதே

94[தொகு]

தன் வீடிருக்க அசல்வீடு போகாதே

தாயார் தகப்பனை வையாதே

உன் வீட்டுக் குள்ளேயே யூகமிருக்கையில்

ஓடித் திரிகிறாய் வாலைப் பெண்ணே

95[தொகு]

சாதி பேதங்கள் சொல்லுகிறீர் தெய்வம்

தானென் றொருவுடல் பேதமுண்டோ

ஓதிய பாலதி லொன்றாகி யதிலே

உற்பத்தி நெய்தயிர் மோராச்சு

96[தொகு]

பாலோடு மூண்டிடு பூனையு முண்டது

மேலாக காணவுங் காண்பதில்லை

மேலந்த வாசையைத் தள்ளிவிட் டுள்ளத்தில்

வேண்டிப் பூசையைச் செய்திடுங்கள்

97[தொகு]

கோழிக் கறு காலுண் டென்றுசொன் னேன் கிழக்

கூனிக்கு மூன்றுகால் என்று சொன்னேன்

கூனிக்கிரண்டு எழுத்தென்று சொன்னேன் முழுப்

பானைக்கு வாயில்லை யென்று சொன்னேன்

98[தொகு]

ஆட்டுக் கிரண்டுகா லென்று சொன்னேனம்

மானைக்குப் பானைக்கு நிற்குமேல் சூல்

மாட்டுக்குக் காலில்லை யென்று சொன்னேன் கதை

வகையைச் சொல்லடி வாலைப்பெண்ணே

99[தொகு]

கோயிலு மாடும் பறித்தவ னுங்கன்றிக்

கூற்று மேகற் றிருந்தவனும்

வாயில்லாக் குதிரை கண்டவனு மாட்டு

வகை தெரியுமோ வாலைப் பெண்ணே

100[தொகு]

இத்தனை சாத்திரந் தாம்படித் தோர்செத்தார்

என்றா லுகத்தோர் தாம்சிரிப்பார்

செத்துப் போய்க் கூடக் கலக்கவேண் டுமவன்

தேவர்களுடனே சேர வேண்டும்

101[தொகு]

உற்றது சொன்னக்கா லற்றது பொருந்தும்

உண்டோ உலகத்தி லவ்வை சொன்னாள்

அற்றது பொருந்தும் உற்றது சொன்னவன்

அவனே குருவடி வாலைப் பெண்ணே

102[தொகு]

பூரண நிற்கும் நிலையறி யான் வெகு

பொய் சொல்வான் கோடி மந்திரஞ் சொல்வான்

காரண குரு அவனுமல்ல இவன்

காரிய குருபொருள் பறிப்பான்

103[தொகு]

எல்லா மறிந்தவ ரென்று சொல்லி யிந்தப்

பூமியிலே முழு ஞானியென்றே

உல்லாச மாக வயிறு பிழைக்கவே

ஓடித் திரிகிறார் வாலைப் பெண்ணே

104[தொகு]

ஆதிவா லைபெரி தானாலும்மவள்

அக்காள் பெரிதோ சிவன் பெரிதோ

நாதிவா லைபெரி தானா லும் அவள்

நாயக னல்ல சிவம்பெரிது

105[தொகு]

ஆயுசு கொடுப்பாள் நீரிழிவு முதல்

அண்டாது மற்ற வியாதியெல்லாம்

பேயும் பறந்திடும் பில்லி வினாடியில்

பத்தினி வாலைப்பெண் பேரைச் சொன்னால்

106[தொகு]

நித்திரை தன்னிலும் வீற்றிருப் பாளெந்த

நேரத்தி லும்வாலை முன்னிருப்பாள்

சத்துரு வந்தாலும் தள்ளிவைப் பாள்வாலை

உற்றகா லனையுந் தானுதைப்பாள்

107[தொகு]

பல்லாயிர ங்கொடி யண்டமு தல்பதி

னான்கு புவனமும் மூர்த்திமுதல்

எல்லாந் தானாய்ப் படைத்தவ ளாம்வாலை

எள்ளுக்குள் எண்ணெய்போல நின்றவளாம்

108[தொகு]

தேசம் புகழ்ந்திடும் வாலைக் கும்மித் தமிழ்

செய்ய எனக்குப தேசஞ் செய்தாள்

நேசவான் வீரப் பெருமாள் குருசாமி

நீள் பதம் போற்றிக் கொண்டாடுங்கடி

109[தொகு]

ஆறு படைப்புகள் வீடு கடைசூத்ர

அஞ்செழுத்துக்கும் வகையறிந்து

கூறுமுயர்வல வேந்த்ரன் துரைவள்ளல்

கொற்றவன் வாழக் கொண்டாடுங்கடி

110[தொகு]

ஆடுங்கள் பெண்டுக ளெல்லோரும் அந்த

அன்பான கொங்கணர் சொன்ன தமிழ்

பாடுங்கள் சித்தர்கள் எல்லோரும் வாலை

பரத்தைப் போற்றிக் கொண்டாடுங்கடி

111[தொகு]

சித்தர்கள் வாழி சிவன்வா ழிமுனி

தேவர்கள் வாழி ரிடி வாழி

பத்தர்கள் வாழி பதம்வாழி குரு

பாரதி வாலைப் பெண் வாழியவே

முற்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=கொங்கண_நாயனார்&oldid=493278" இலிருந்து மீள்விக்கப்பட்டது