திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/மக்கபேயர் - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

விக்கிமூலம் இலிருந்து


"எலியதோர் தன் காவலர்களோடு கருவூலத்தை அடைந்தபோது, அதிகாரம் தாங்கும் ஆவிகளுக்கும் பேரரசர் மாபெரும் காட்சி ஒன்று தோன்றச்செய்ய, அவனைப் பின்பற்றத் துணிந்த அத்தனை பேரும் ஆண்டவருடைய ஆற்றலைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அச்சத்தால் மயங்கி விழுந்தனர்;ஏனெனில் அணிமணி பூட்டிய ஒரு குதிரையையும் அதன்மேல் அச்சுறுத்தும் தோற்றமுடைய ஒரு குதிரைவீரரையும் கண்டார்கள்." - 2 மக்கபேயர் 3:24-25


2 மக்கபேயர் (The Second Book of Maccabees)[தொகு]

அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

அதிகாரம் 3[தொகு]

3. கோவிலைத் தீட்டுப்படுத்த எலியதோரின் முயற்சி[தொகு]

எலியதோரின் எருசலேம் வருகை[தொகு]


1 தலைமைக் குருவான ஓனியாவின் இறைப்பற்றையும்
தீமைமீது அவர் கொண்டிருந்த வெறுப்பையும் முன்னிட்டுத்
திருநகரில் முழு அமைதி நிலவியது;
சட்டங்கள் கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டன.
2 மன்னர்களே அந்த இடத்தை மதித்தார்கள்;
சிறப்பான நன்கொடைகள் அனுப்பிக் கோவிலை மாட்சிப்படுத்தினார்கள்.
3 ஆசியாவின் மன்னரான செலூக்கு கூட,
பலி ஒப்புக்கொடுக்கும் திருப்பணிக்குத் தேவையான
எல்லாச் செலவுகளையும் தம் சொந்த வருமானத்தினின்று கொடுத்துவந்தார்.


4 ஆனால் பென்யமின் குலத்தைச் சேர்ந்தவனும்
கோவில் நிர்வாகியாக அமர்த்தப் பெற்றிருந்தவனுமாகிய சீமோன்,
நகரின் சந்தையை நடத்தும் முறைபற்றித்
தலைமைக் குருவோடு மாறுபட்ட கருத்துக் கொண்டிருந்தான்.
5 அவன் ஓனியாவை எதிர்த்து வெற்றி கொள்ள முடியாததால்,
தர்சு என்பவரின் மகனும் அந்நாளில் கூலேசீரியா,
பெனிசியா ஆகிய நாடுகளின் ஆளுநனுமான அப்பொல்லோனிடம் சென்றான்.
6 எருசலேம் கோவிலில் உள்ள கருவூலம்
இதுவரை கேள்விப்பட்டிராத செல்வத்தால் நிறைந்துள்ளது;
அதில் கணக்கிட முடியாத அளவுக்குப் பணம் இருக்கிறது;
அது பலிகளின் கணக்கில் சேராதது;
அதை மன்னனின் கட்டுப்பாட்டுக்குள் கொணர முடியும் என்றெல்லாம் அவனிடம் கூறினான்.


7 மன்னனை அப்பொல்லோன் சந்தித்தபோது பணத்தைப்பற்றித்
தான் கேள்விப்பட்டதை அவனிடம் எடுத்துரைத்தான்.
மன்னனும் தன் கண்காணிப்பாளான எலியதோரைத் தேர்ந்தெடுத்து,
மேலே குறிப்பிட்ட பணத்தை எடுத்துவரும்படி ஆணை பிறப்பித்து அனுப்பினான்.
8 உடனே எலியதோர் புறப்பட்டுக் கூலேசீரியா,
பெனிசியா ஆகிய நாடுகளின் நகரங்களைப்
பார்வையிடும் பாவனையில்
மன்னனின் திட்டத்தை நிறைவேற்றப் பயணமானான்.
9 அவன் எருசலேமுக்கு வந்தபோது
அந்நகரின் தலைமைக் குரு அவனைக் கனிவுடன் வரவேற்றார்.
அவன் அங்கு வந்ததன் நோக்கத்தை விளக்கினான்;
தனக்குக் கிடைத்த செய்திபற்றிக் குருவிடம் எடுத்துரைத்து
அதெல்லாம் உண்மைதானா என்று வினவினான்.
10 கைம்பெண்களுக்கும் ஆதரவற்றோருக்கும் உரிய சிறு நிதி
கோவிலில் இருப்பதாகத் தலைமைக் குரு அவனுக்கு விளக்கினார்;
11 மற்றுமொரு தொகை மிக உயர்நிலையில் இருந்த
தோபியாவின் மகனான இர்க்கானுடையது என்றும்,
மொத்தம் பதினாறு டன் [1] வெள்ளியும்
எட்டு டன் [2] பொன்னும் மட்டுமே உள்ளன என்றும் சொன்னார்.
ஆனால் நெறிகெட்ட சீமோன் உண்மைக்குப் புறம்பானவற்றைக் கூறியிருந்தான்.
12 மேலும், அவ்விடத்தின் தூய்மையிலும்
அனைத்துலகப் புகழ்ப்பெற்ற அக்கோவிலின் புனிதத்திலும்
மங்கா மாட்சியிலும் நம்பிக்கை கொண்டுள்ள மக்களுக்குத் தீங்கிழைப்பது
முற்றிலும் முடியாத செயலாகும் என்றும் தலைமைக் குரு கூறினார்.

கோவிலில் நுழைய எலியதோரின் முயற்சி[தொகு]


13 எலியதோர் தான் மன்னிடமிருந்து பெற்றிருந்த ஆணையின் பொருட்டு,
அந்தப் பணம் மன்னனின் கருவூலத்திற்காக
எப்படியாவது பறிமுதல் செய்யப்படவேண்டும் என்று கூறினான்;
14 ஆகவே தான் குறித்த ஒரு நாளில்
நிதி நிலைமையை ஆய்ந்தறியும்பொருட்டுக் கோவிலுக்குள் சென்றான்.
நகர் முழுவதும் பெரும் துயரில் ஆழ்ந்தது.
15 குருக்கள் தங்கள் குருத்துவ உடைகளோடு
பலிபீடத்தின்முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார்கள்;
நிதிபற்றி விதிமுறைகளைக் கொடுத்திருந்த விண்ணக இறைவனைத்
துணைக்கு அழைத்தார்கள்;
நிதியைச் சேமித்துவைத்திருந்தவர்கள் பொருட்டு
அதனைக் காப்பாற்றும்படி மன்றாடினார்கள்.
16 தலைமைக் குருவின் தோற்றத்தைப் பார்த்தபோது மனம் புண்பட்டது;
அவருடைய முகத் தோற்றமும் நிறமாற்றமும்
அவரது மனத்துயரை வெளிப்படுத்தின.
17 பேரச்சமும் நடுக்கமும் அவரை ஆட்கொள்ள,
அவரின் உள்ளத்தில் உறைந்திருந்த ஆழ்துயர் காண்போருக்குத் தெளிவாயிற்று.
18 தூயஇடம் தீட்டுப்படவிருந்ததை அறிந்த மக்கள்
பொதுவில் மன்றாடத் தங்கள் வீடுகளிலிருந்து கூட்டமாக ஓடிவந்தார்கள்.
19 பெண்கள் தங்களது மார்புக்குக் கீழே சாக்கு உடுத்தியவர்களாய்
தெருக்களில் திரளாகக் கூடினார்கள்;
வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாத கன்னிப்பெண்களுள் சிலர்
நகர வாயில்களுக்கும் சிலர் நகர மதில்களுக்கும் ஓடினார்கள்;
மற்றும் சிலர் பலகணி வழியாக எட்டிப் பார்த்தார்கள்.
20 அவர்கள் அனைவரும் விண்ணகத்தை நோக்கித்
தங்கள் கைகளை உயர்த்தியவாறு மன்றாடினார்கள்.
21 மக்கள் அனைவரும் குப்புற விழுந்து கிடந்ததையும்
பெரும் துன்பத்தில் இருந்த தலைமைக் குருவின் ஏக்கத்தையும் பார்க்க
இரங்கத்தக்கதாய் இருந்தது.
22 கோவலில் ஒப்புவிக்கப்பட்டவற்றை ஒப்புவித்தவர்கள் பொருட்டு
நன்கு பாதுகாக்கும்படி எல்லாம் வல்ல ஆண்டவரை அவர்கள் மன்றாடினார்கள்.
23 ஆனால் எலியதோர் தனக்குக் கொடுக்கப்பட்ட
கட்டளையைச் செயல்படுத்துவதில் முனைந்து நின்றான்.

எலியதோர் பெற்ற தண்டனை[தொகு]


24 எலியதோர் தன் காவலர்களோடு கருவூலத்தை அடைந்தபோது,
அதிகாரம் தாங்கும் ஆவிகளுக்கும் பேரரசர்
மாபெரும் காட்சி ஒன்று தோன்றச்செய்ய,
அவனைப் பின்பற்றத் துணிந்த அத்தனை பேரும்
ஆண்டவருடைய ஆற்றலைக் கண்டு அதிர்ச்சி அடைந்து
அச்சத்தால் மயங்கி விழுந்தனர்;
25 ஏனெனில் அணிமணி பூட்டிய ஒரு குதிரையையும்
அதன்மேல் அச்சுறுத்தும் தோற்றமுடைய ஒரு குதிரைவீரரையும் கண்டார்கள்.
அக்குதிரை எலியதோரை நோக்கிச் சீற்றத்துடன் பாய்ந்து
தன் முன்னங்குளம்புகளால் அவனைத் தாக்கியது.
குதிரைமேல் இருந்தவர் பொன் படைக்கலங்களை அணிந்தவராகத் தோன்றினார்.
26 மேலும் இரண்டு இளைஞர்கள் அவன்முன் தோன்றினார்கள்.
அவர்கள் மிக்க வலிமை வாய்ந்தவர்கள்,
அழகுமிக்கவர்கள், பகட்டான உடை அணிந்தவர்கள்.
அவர்கள் அவனுக்கு இரு பக்கத்திலும் நின்றுகொண்டு
தொடர்ந்து சாட்டையால் அவனை அடித்துக் காயப்படுத்தினார்கள்.
27 காரிருள் சூழ, அவன் தரையில் விழுந்தபொழுது
அவனுடைய ஆள்கள் அவனைத் தூக்கி,
ஒரு தூக்குப்படுக்கையில் கிடத்தினார்கள்;
28 சிறிது நேரத்திற்குமுன் தன் படையோடும் காவலர்களோடும்
கருவூலத்திற்குள் நுழைந்தவன் தனக்குத்தானே
உதவி செய்து கொள்ள முடியாத நிலையில் இருந்தபோது
அவனைத் தூக்கிச் சென்றார்கள்.
இதனால் அவர்கள் கடவுளின் மாபெரும் ஆற்றலைத் தெரிந்து கொண்டார்கள்.
29 கடவுளின் இச்செயலால் அவன் பேச்சற்று,
மீண்டும் நலம் பெறும் நம்பிக்கையற்றவனாய்க் கிடந்தான்.
30 தம் சொந்த இடத்தை வியத்தகு முறையில்
மாட்சிமைப்படுத்திய ஆண்டவரை யூதர்கள் போற்றினார்கள்.
மேலும் சிறிது நேரத்திற்குமுன் அச்சத்தாலும்
குழப்பத்தாலும் நிறைந்திருந்த கோவிலில்
எல்லாம் வல்லவரான ஆண்டவர் தோன்றவே,
அது மகிழ்ச்சியாலும் உவகையாலும் நிறைந்து வழிந்தது.


31 உடனே, இறக்கும் தறுவாயில் இருந்த எலியதோருக்கு
உயிர்ப்பிச்சை அளிக்கும்படி உன்னத இறைவனிடம் மன்றாடுமாறு
அவனுடைய நண்பர்கள் சிலர் ஓனியாவைக் கெஞ்சினர்.
32 எலியதோருக்கு எதிராக யூதர்கள் யாதேனும் சூழ்ச்சி செய்திருப்பார்கள் என
மன்னன் எண்ணலாம் என்று அஞ்சி,
தலைமைக் குரு அவனுடைய உடல்நலனுக்காகப் பலி செலுத்தினார்.
33 தலைமைக் குரு பாவக்கழுவாய்ப் பலி
ஒப்புக்கொடுத்துக் கொண்டிருந்தபோது அவ்விளைஞர்கள்
அதே ஆடைகளை அணிந்தவர்களாய்
எலியதோருக்கு மீண்டும் தோன்றினார்கள்;
நின்றவாறு அவர்கள், "தலைமைக் குரு ஓனியாவிடம்
மிகுந்த நன்றியுடையவனாய் இரு;
ஏனெனில் அவரை முன்னிட்டே ஆண்டவர் உனக்கு உயிர்ப்பிச்சை அளித்துள்ளார்.
34 விண்ணக இறைவனால் தண்டிக்கப்பட்ட நீ
கடவுளின் மாபெரும் ஆற்றலை எல்லா மனிதருக்கும் எடுத்துக் கூறு" என்றார்கள்.
இதைச் சொன்னதும் அவர்கள் மறைந்துவிட்டார்கள்.

எலியதோரின் மனமாற்றம்[தொகு]


35 அப்போது எலியதோர் ஆண்டவருக்குப் பலி செலுத்தியதுமன்றித்
தன் உயிரைக் காத்தவருக்குப் பெரும் நேர்ச்சைகள் செய்தான்.
பின் ஓனியாவிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு
தன் படைகளோடு மன்னனிடம் திரும்பிச் சென்றான்;
36 மாபெரும் கடவுளின் செயல்களைத் தன் கண்ணால் கண்டு
மனிதர் அனைவர்முன்னும் அவற்றுக்குச் சான்று பகர்ந்தான்.
37 எருசலேமுக்கு மீண்டும் அனுப்புவதற்கு
எத்தகைய மனிதன் தகுதியானவன் என்று
மன்னன் எலியதோரை வினவினான்.
அதற்கு அவன்,
38 "உமக்குப் பகைவன் அல்லது உமது அரசுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்பவன்
எவனாயினும் இருந்தால் அவனை அங்கு அனுப்பும்;
அவன் உயிர் பிழைக்க நேரிட்டாலும்
நன்றாகக் கசையடிபட்டவனாகவே உம்மிடம் திரும்பி வருவான்.
ஏனெனில், அந்த இடத்தில் கடவுளின் ஆற்றல் உண்மையாகவே விளங்குகிறது.
39 விண்ணகத்தில் உறைகின்றவரே அந்த இடத்தைக் காத்துவருவதுமன்றி,
அதற்கு உதவியும் செய்கிறார்;
அதற்குத் தீங்கு இழைக்க வருபவர்களைத் தாக்கி அழிக்கிறார்" என்றான்.
40 இதுதான் எலியதோரின் கதை;
இவ்வாறே கருவூலம் காப்பாற்றப்பட்டது.


குறிப்புகள்

[1] 3:11 - "நானூறு தாலந்து" என்பது கிரேக்க பாடம்.
[2] 3:11 - "இருநூறு தாலந்து" என்பது கிரேக்க பாடம்.


அதிகாரம் 4[தொகு]

4. அந்தியோக்கு எப்பிபானும் யூதரின் துன்பமும்[தொகு]

சீமோன் செய்த தீமைகள்[தொகு]


1 தன் சொந்த நாட்டுக்கு எதிராக நிதியைப்பற்றி அறிவித்த சீமோன்,
ஓனியாவைப்பற்றிப் பழிதூற்றினான்;
ஓனியாவே எலியதோரைத் தூண்டிவிட்டவர் என்றும்,
இந்தக் கேட்டுக்கெல்லாம் அவரே காரணம் என்றும் கூறினான்.
2 நகரின் புரவலரும் தம் நாட்டு மக்களின் காவலரும்
திருச்சட்டத்தின்மீது பற்றார்வமிக்கவருமாய் விளங்கிய ஓனியாவை
அரசுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்பவர் என்று கூறத்துணிந்தான்.
3 சீமோனின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளர்களுள் ஒருவன்
கொலைகள் செய்யும் அளவிற்குச்
சீமோன் ஓனியாவிடம் கொண்டிருந்த பகைமை முற்றியது.
4 இத்தகைய எதிர்ப்பு பேரிடர் விளைவிப்பது என்றும்,
மெனஸ்தேயின் மகனும் கூலேசீரியா, பெனிசியா
ஆகியவற்றின் ஆளுநனுமான அப்பொல்லோன்,
சீமோனின் தீச்செயல்களை முடுக்கிவிடுகிறான் என்றும் ஓனியா உணர்ந்தார்.
5 ஆகவே அவர் மன்னனிடம் சென்றார்;
தம் நாட்டு மக்கள்மீது குற்றம் சாட்ட அல்ல,
அவர்கள் அனைவருடைய தனிப்பட்ட, பொது நலனையும் கருதியே சென்றார்.
6 ஏனெனில் மன்னன் தலையிட்டாலொழிய
பொது அலுவல்களில் அமைதியான தீர்வு காண முடியாது என்றும்,
சீமோன் தன்னுடைய மடமையைக் கைவிடமாட்டான் என்றும் கண்டார்.

யாசோன் கிரேக்கமயமாக்கலைப் புகுத்துதல்[தொகு]


7 செலூக்கு இறந்தபின் எப்பிபான் என்று அழைக்கப்பெற்ற அந்தியோக்கு
அரியணை ஏறினான்.
அப்போது ஓனியாவின் சகோதரனான யாசோன்
கையூட்டுக் கொடுத்துத் தலைமைக் குருபீடத்தைக் கைப்பற்றினான்.
8 ஏனெனில் மன்னனை அணுகி,
பதினாலாயிரத்து நானூறு கிலோ [1] வெள்ளியும்,
வேறொரு வருமானத்திலிருந்து மூவாயிரத்து இருநூற்று கிலோ வெள்ளியும் [2]
கொடுப்பதாக உறுதியளித்திருந்தான்.
9 மேலும் உடற்பயிற்சிக்கூடம் ஒன்றும்
அதற்காக இளைஞர் குழு ஒன்றும் அமைக்கவும்,
எருசலேமின் குடிகளை அந்தியோக்கி நகரின் குடிகளாகப் பதிவுசெய்யவும்
அவனுக்கு அதிகாரம் தர இசைந்தால்
ஆறாயிரம் கிலோ வெள்ளி [3] கூடுதலாகக் கொடுப்பதாகவும் உறுதி கூறியிருந்தான்.
10 மன்னன் அதற்கு இசையவே,
யாசோன் தலைமைக் குருபீடத்தைக் கைப்பற்றினான்;
உடனே தன் நாட்டார் கிரேக்க வாழ்க்கைமுறையை ஏற்றுக்கொள்ளுமாறு செய்தான். [4]
11 உரோமையர்களோடு நட்பும் ஒப்பந்தமும் செய்துகொள்ளப்
பின்னர் அனுப்பப்பெற்ற யூப்பொலேமின் தந்தையாகிய
யோவான் வழியாக யூதர்களுக்கு கிடைத்திருந்த
அரச சலுகைகளை யாசோன் புறக்கணித்தான்;
சட்டப்படி அமைந்த வாழ்க்கை முறைகளை அறிந்து
அவற்றுக்கு முரணான புதிய பழக்கவழக்கங்களைப் புகுத்தினான். [5]
12 மலைக்கோட்டைக்கு அடியிலேயே ஓர் உடற்பயிற்சிக் கூடத்தை
விரைவிலே நிறுவினான்;
மிகச் சிறந்த இளைஞர்கள் உடற்பயிற்சி விளையாட்டுகளில்
கலந்துகொள்ளவும் தூண்டினான். [6]
13 இறைப்பற்றில்லாதவனும்
உண்மையான குரு அல்லாதவனுமான யாசோனின் அளவு மீறிய தீச்செயலால்,
கிரேக்க வாழ்க்கைமுறை மீதும் வெளிநாட்டுப் பழக்கவழக்கங்கள்மீதும்
மக்கள் கொண்டிருந்த போரார்வம் உச்சக்கட்டத்தை அடைந்தது.
14 அதனால் குருக்கள் பலிபீடத்தில் பணி செய்வதில் ஆர்வம் காட்டவில்லை;
மாறாக, கோவிலை வெறுத்தார்கள்; பலிகளைப் புறக்கணித்தார்கள்;
அடையாள ஒலி கேட்டவுடன் சட்டத்துக்கு முரணான
பயிற்சிகளில் பங்குகொள்ள விளையாட்டரங்குக்கு ஓடினார்கள்;
15 தங்கள் மூதாதையர் பெருமைமிக்கவை என்று கருதியவற்றை
வெறுத்து ஒதுக்கினார்கள்;
கிரேக்கர்கள் உயர்வாகக் கருதியவற்றைப் பெரிதும் மதித்தார்கள்.
16 இதன் பொருட்டு பேரிடர்கள் அவர்களுக்கு நேர்ந்தன.
யூதர்கள் யாருடைய வாழ்க்கைமுறையை வியந்து பாராட்டி
முழுமையாகப் பின்பற்ற விரும்பினார்களோ,
அவர்களே யூதர்களுக்குப் பகைவர்களாக மாறித் துன்புறுத்தினார்கள்.
17 ஏனெனில் கடவுளின் கட்டளைகளை இழிவுபடுத்துவது சிறிய செயல் அன்று,
இதைப் பின்வரும் நிகழ்ச்சி தெளிவுபடுத்தும்.


18 ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை நிகழும் விளையாட்டு விழா
தீர் நகரில் நடைபெற்றபோது மன்னனும் அங்கு இருந்தான்.
19 அவ்வேளையில் கொடியவனான யாசோன்
எருசலேமில் இருந்த அந்தியோக்கி நகரக் குடிகளைப்
பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்து,
எர்க்குலசு தெய்வத்துக்குப் பலிசெலுத்த
தொள்ளாயிரம் கிராம் வெள்ளியைக் [7] கொடுத்தனுப்பினான்.
அப்பணத்தைக் கொண்டுசென்றவர்களோ
அதனைப் பலிக்குப் பயன்படுத்துவது முறைகேடானது என்றும்
வேறு நோக்கத்திற்காகச் செலவிடுவதே சிறந்தது என்றும் எண்ணினார்கள்.
20 எர்க்குலசுக்குப் பலிசெலுத்துவது இப்பணத்தை அனுப்பியவரின் நோக்கம்;
எனினும் அதைக் கொண்டு சென்றவர்கள்
போர்க்கப்பல் கட்டுவதற்குச் செலவிட முடிவு செய்தார்கள்.


21 பிலமேத்தோர் மன்னரின் முடிசூட்டு விழாவுக்கு
மெனஸ்தேயின் மகனான அப்பொல்லோன் எகிப்துக்கு அனுப்பப்பட்டபோது,
பிலமேத்தோர் தன் அரசுக்கு எதிரி என்று அந்தியோக்கு அறிந்து,
தன் பாதுகாப்புக்கான வழிவகைகளைத் தேடினான்.
ஆகவே யாப்பாவுக்குச் சென்று அங்கிருந்து எருசலேமுக்குப் புறப்பட்டான்.
22 யாசோனும் அந்நகர மக்களும் அவனைச் சிறப்பாக வரவேற்றார்கள்;
தீவட்டிகளோடும் முழக்கங்களோடும் உள்ளே அழைத்துச் சென்றார்கள்.
பின்பு அவன் பெனிசியாவுக்குத் தன் படையுடன் சென்றான்.

மெனலா தலைமைக் குருவாதல்[தொகு]


23 மூன்று ஆண்டுக்குப்பின் மன்னனுக்குப் பணம் கொண்டுசெல்லவும்,
உடனடியாகக் கவனிக்கவேண்டியவை பற்றி
மன்னனின் முடிவுகளை அறிந்து வரவும்
சீமோனின் சகோதரனான மெனலாவை யாசோன் அனுப்பி வைத்தான்.
24 மன்னன் முன்னிலையில் மெனலா வந்தபொழுது,
தன்னை அதிகாரமுள்ளவனாகக் காட்டிக்கொண்டு
அவனை அளவு மீறிப் புகழ்ந்தான்;
யாசோன் கொடுத்ததைவிட பன்னிரண்டு டன் வெள்ளி மிகுதியாகக் கொடுத்து,
தலைமைக் குருபீடத்தைத் தனக்கென்று கைப்பற்றிக் கொண்டான்.
25 மன்னனின் ஆணையைப் பெற்றுக்கொண்டு திரும்பிய அவனிடம்
தலைமைக் குருவுக்குரிய தகுதியே இல்லை.
கொடுங்கோலனுக்குரிய சினமும்
காட்டு விலங்குக்குரிய சீற்றமும் மட்டுமே இருந்தன.
26 இவ்வாறு, தன் சகோதரனை அகற்றிய யாசோனும்
வேறொருவனால் அகற்றப்பட்டு
அம்மோன் நாட்டுக்கு அகதியாகத் துரத்தப்பட்டான்.
27 மெனலா தொடர்ந்து தலைமைக் குருவாக இருந்தபோதிலும்,
தான் மன்னனுக்குக் கொடுப்பதாக உறுதியளித்திருந்த பணத்தைச் செலுத்தவில்லை.
28 மலைக்கோட்டைக்குத் தளபதியான சோசித்திராத்து
வரி தண்டும்பொறுப்பும் உடையவனானதால்,
மெனலாவிடமிருந்து பணத்தைக் கேட்டுக் கொண்டேயிருந்தான்.
இது தொடர்பாக மன்னன் அவ்விருவரையும் தன்னிடம் அழைத்தான்.
29 தலைமைக் குரு மெனலா தன் சகோதரனான லிசிமாக்கைத்
தன் பதிலாளாய் விட்டுச் சென்றான்;
சைப்பிரசு நாட்டுப் படைத்தலைவனான கிராத்துவைத்
தன் பதிலாளாய் சோசித்திராத்து ஏற்படுத்தினான்.

ஓனியா கொலை செய்யப்படுதல்[தொகு]


30 நிலைமை இவ்வாறு இருக்க,
மன்னன் தன் காமக்கிழத்தியான அந்தியோக்கிக்குத்
தர்சு, மல்லோத்தா ஆகிய நகரங்களை அன்பளிப்பதாகக் கொடுத்திருந்ததால்
அந்நகரங்களின் மக்கள் கிளர்ச்சி செய்தார்கள்.
31 ஆகவே மன்னர் உயர் பதவி வகித்துவந்தோருள் ஒருவனான
அந்திரோனிக்கைத் தன் பதிலாளாய் விட்டுவிட்டு,
குழப்பத்தைத் தீர்க்க அந்நகரங்களுக்கு விரைந்து சென்றான்.
32 ஆனால் மெனலா இதுவே தக்க வாய்ப்பு என்று எண்ணியவனாய்,
கோவிலுக்குச் சொந்தமான பொற்கலன்கள் சிலவற்றைத் திருடி
அந்திரோனிக்குக்கு அன்பளிப்பாகக் கொடுத்தான்;
மற்றக் கலன்களைத் தீர் நகரிலும்
சுற்றியிருந்த நகரங்களிலும் ஏற்கெனவே விற்றுவிட்டான்.
33 இவை முற்றிலும் உண்மை என்று ஓனியா அறியவந்த பொழுது
அந்தியோக்கி நகருக்கு அருகில் தாப்னேயில் இருந்த
தூய இடத்தில் அடைக்கலம் புகுந்தபின்
மெனலாவைப் பொதுவில் கடிந்து கொண்டார்.
34 எனவே அந்திரோனிக்கை மெனலா தனியே சந்தித்து,
ஓனியாவைக் கொல்லும்படி வேண்டினான்.
அந்திரோனிக்கு ஓனியாவிடம் சென்று நண்பனைப் போல நடித்து
நயமாகப் பேசி ஆணையிட்டான்.
இதுபற்றி ஓனியாவுக்கு ஐயம் ஏற்றபட்டபோதிலும்
அந்திரோனிக்கு அவரைத் தூய இடத்திலிருந்து வெளியே வர இணங்கவைத்து,
நீதிக்கு அஞ்சாமல் உடனே அவரைக் கொலை செய்தான்.

அந்திரோனிக்கு பெற்ற தண்டனை[தொகு]


35 இதன்பொருட்டு யூதர்கள் மட்டுமல்ல,
மற்ற நாடுகளைச் சேர்ந்த பலரும்
இம்மனிதன் செய்த முறையற்ற கொலையினால் எரிச்சலுற்றுச்
சீற்றம் கொண்டார்கள்.
36 சிலிசியாப் பகுதியிலிருந்து மன்னன் திரும்பிவந்தபோது
அந்தியோக்கில் இருந்த யூதர்கள்
ஓனியாவின் காரணமற்ற கொலைபற்றி முறையிட்டார்கள்;
கிரேக்கர்களும் இக்குற்றத்தை வெறுத்தார்கள்.
37 ஆகவே அந்தியோக்கு மனம் வருந்தி இரக்கம் நிறைந்தவனாய்,
இறந்தவருடைய அறிவுத்திறனையும் நன்னடத்தையையும் நினைத்து அழுதான்.
38 மேலும் சினம் மூண்டவனாய்,
அந்திரோனிக்கிடமிருந்து அரச ஆடைகளை உடனே உரித்தெடுத்து,
அவனுடைய மற்ற ஆடைகளையும் கிழித்தெறிந்து,
நகர் முழுவதும் அவனை நடத்திச் சென்று,
ஓனியாவைக் கொன்ற அதே இடத்திற்குக் கொண்டு சென்று
அந்த இரத்தவெறியனை அங்கேயே கொன்றான்.
இவ்வாறு ஆண்டவர் அவனுக்குத் தகுந்த தண்டனை அளித்தார்.

லிசிமாக்கு கொலை செய்யப்படுதல்[தொகு]


39 மெனலாவின் மறைமுக ஆதரவுடன் லிசிமாக்கு
எருசலேம் கோவில் பொருள்களைத் திருடி
அதைத் தீட்டுப்படுத்தும் பல செயல்களைச் செய்தான்.
திரளான பொற்கலன்கள் ஏற்கெனவே களவு செய்யப்பட்டுவிட்டன
என்னும் செய்தி எங்கும் பரவியபொழுது
மக்கள் லிசிமாக்கை எதிர்த்து எழுந்தார்கள்.
40 மக்கள் கூட்டம் சீற்றமுற்று லிசிமாக்கை எதிர்த்தெழ,
அவன் போர்க்கோலம் பூண்ட ஆள்கள் ஏறத்தாழ மூவாயிரம் பேரைத் திரட்டி,
வயதில் முதிர்ந்தவனும் மடமையில் ஊறியவனுமான
அவுரானின் தலைமையில் முறைகேடாக அவர்களைத் தாக்கினான்.
41 இத்தாக்குதலுக்கு லிசிமாக்கே காரணம் என்று யூதர்கள் அறிந்தபொழுது,
சிலர் கற்களை எடுத்தனர்; சிலர் தடிகளைத் தூக்கினர்;
சிலர் அங்குக் கிடந்த சாம்பலைக் கை நிறைய அள்ளினர்;
பெருங் குழப்பத்திற்கிடையில் லிசிமாக்கின்மீதும்
அவனுடைய ஆள்கள்மீதும் அவற்றை எறிந்தனர்.
42 அதன் விளைவாக அவர்களுள் பலரைக் காயப்படுத்தினர்;
சிலரைக் கொலை செய்தனர்; மற்ற அனைவரையும் ஓட வைத்தனர்.
மேலும், அந்தக் கோவில் திருடனைக் கருவூலத்தின் அருகிலேயே கொன்றனர்.

மெனலாமீது வழக்கு[தொகு]


43 இந்நிகழ்ச்சி தொடர்பாக மெனலாவுக்கு எதிராகக்
குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன.
44 மன்னன் தீர் நகருக்கு வந்தபோது
ஆட்சிக் குழுவினால் அனுப்பப்பெற்ற மூவர்
அவன்முன் இவ்வழக்குபற்றி எடுத்துக் கூறினர்.
45 ஏற்கெனவே தோல்வியுற்ற நிலையில் இருந்த மெனலா,
தொரிமேனின் மகனான தாலமிக்கு
ஒரு பெருந் தொகை கொடுப்பதாக உறுதி கூறினான்;
மெனலாவின் கருத்துக்கு மன்னனைத்
தாலமி இணங்க வைக்குமாறு கேட்டுக்கொண்டான்.
46 ஆகவே தாலமி காற்று வாங்கப் போவதுபோல
மன்னனைத் திறந்த வெளிஅரங்குப் பக்கம் தனியாக அழைத்துச் சென்று
அவனுடைய மனத்தை மாற்றிக்கொள்ளுமாறு தூண்டினான்.
47 அதனால் எல்லாத் தீமைகளுக்கும் காரணமான மெனலாவுக்கு எதிராகச்
சாட்டப்பட்ட குற்றங்களினின்று மன்னன் அவனை விடுவித்தான்;
இரங்குதற்குரிய அம்மூவருக்கும் சாவுத் தண்டனை அளித்தான்.
இவர்கள் சித்தியர்களிடமே [8] முறையிட்டிருந்தாலும்
குற்றம் அற்றவர்கள் என்று தீர்ப்புப் பெற்றிருப்பர்!
48 இவ்வாறு நகரத்திற்காகவும் மக்களுக்காகவும்
கோவிலின் கலன்களுக்காகவும் குரல் எழுப்பியவர்கள்
உடனடியாக முறையற்ற தண்டனைக்கு உள்ளானார்கள்.
49 இதன்பொருட்டுத் தீர் நகரத்தார்கூட
இக்குற்றத்தினை வெறுத்து
அவர்களுடைய அடக்கத்திற்குத் தாராளமாக உதவினர்.
50 ஆனால் அதிகாரம் செலுத்தியவர்களின் பேராசையால்
மெனலா பதவியில் தொடர்ந்தான்;
தீமை செய்வதில் ஊறிப்போய்,
தன் சொந்த மக்களுக்கு எதிராகவே கொடிய சூழ்ச்சி செய்துவந்தான்.


குறிப்புகள்

[1] 4:8 - "முந்நூற்று அறுபது தாலந்து" என்பது கிரேக்க பாடம்.
[2] 4:8 - "எண்பது தாலந்து" என்பது கிரேக்க பாடம்.
[3] 4:9 - "நூற்றைம்பது தாலந்து" என்பது கிரேக்க பாடம்.
[4] 4:10 = 1 மக் 1:13.
[5] 4:11 = 1 மக் 8:17.
[6] 4:12 = 1 மக் 1:14.
[7] 4:19 - "முந்நூறு திராக்மா" என்பது கிரேக்க பாடம்.
[8] 4:47 - "சித்தியர்கள்" கொடியவர்களாக,
காட்டு மிராண்டிகளாகக் கருதப்பட்டார்கள்.


(தொடர்ச்சி): மக்கபேயர் - இரண்டாம் நூல்: அதிகாரங்கள் 5 முதல் 6 வரை