திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசேக்கியேல்/அதிகாரங்கள் 43 முதல் 44 வரை

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
"பின்னர் அம்மனிதர் கிழக்கு நோக்கிய வாயிலுக்கு என்னை அழைத்துச் சென்றார். இதோ, 'இஸ்ரயேலின் ஆண்டவரது மாட்சி' கிழக்குப் பகுதியிலிருந்து வருவதைக் கண்டேன்." - எசேக்கியேல் 44:1-2

எசேக்கியேல் (The Book of Ezekiel)[தொகு]

அதிகாரங்கள் 43 முதல் 44 வரை

அதிகாரம் 43[தொகு]

கோவிலுக்குள் ஆண்டவர் வருதல்[தொகு]


1 பின்னர் அம்மனிதர் கிழக்கு நோக்கிய வாயிலுக்கு என்னை அழைத்துச் சென்றார்.
2 இதோ, 'இஸ்ரயேலின் ஆண்டவரது மாட்சி'
கிழக்குப் பகுதியிலிருந்து வருவதைக் கண்டேன்.
அவரது குரல் பெருவெள்ளத்தின் இரைச்சல்போல் இருந்தது.
நிலமோ அவரின் மாட்சியால் ஒளி வீசிற்று.[1]
3 நான் கண்ட காட்சி, அவர் நகரை அழிக்க வந்தபோது நான் கண்டது போன்றும்,
கேபார் ஆற்றோரம் நான் கண்டது போன்றும் இருந்தது.
நான் முகங்குப்புற விழுந்தேன்.
4 ஆண்டவரின் மாட்சி கிழக்கு நோக்கிய வாயில் வழி கோவிலினுள் நுழைந்தது.
5 பின்னர் ஆவி என்னைத் தூக்கி உள்முற்றத்திற்கு அழைத்துச் சென்றது.
ஆண்டவரின் மாட்சி கோவிலை நிரப்பிற்று.
6 அம்மனிதர் என்னருகில் நிற்கையில்
கோவிலிருந்து வேறொருவர் என்னுடன் பேசுவதைக் கேட்டேன்.
7 அவர் உரைத்தது: "மானிடா! இது என் அரியணையின் இடம்;
என் கால்மணைக்கான இடம்.
இங்குதான் நான் இஸ்ரயேலருடன் என்றென்றும் வாழ்வேன்.
இஸ்ரயேல் வீட்டார் இனி ஒருபோதும் என் திருப்பெயரைத் தீட்டுப்படுத்த மாட்டார்.
அவர்களோ, அவர்கள் அரசர்களோ விபசாரத்தினாலோ,
அவர்களுடைய அரசர்களின் உயிரற்ற சிலைகளினாலோ,
தொழுகை மேடுகளில் தீட்டுப்படுத்த மாட்டார்!
8 அவர்களின் வாயிற்படியை என் வாயிற்படிக்கு அருகிலும்,
அவர்கள் கதவுகளை என் கதவு நிலைகளுக்கு எதிரிலும் வைத்து
எனக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு சுவரைமட்டும் வைத்து
என் திருப்பெயரை அவர்களின் அருவருப்பான செயல்கள் மூலம் தீட்டுப்படுத்தினர்.
எனவே அவர்களை நான் என் சினத்தில் அழித்தேன்.
9 இப்போது அவர்கள் தங்கள் விபசாரத்தையும்,
தங்கள் அரசர்களின் உயிரற்ற சிலைகளையும் என்னிடமிருந்து அகற்றி விடட்டும்.
அப்போது நான் அவர்களிடையே என்றென்றும் வாழ்வேன்.
10 நீயோ! இஸ்ரயேல் வீட்டாருக்குக் கோவிலைப் பற்றி விவரி.
அதன்மூலம் அவர்கள் தங்கள் பாவங்கள் குறித்து வெட்கமுறட்டும்.
கோவிலின் அளவு முறையை அவர்கள் ஆராயட்டும்.
11 அவர்கள் தாங்கள் செய்ததெல்லாம் குறித்து வெட்கமுற்றால்
அவர்களுக்கு கோவிலின் அளவுமுறையைக் காட்டு.
அதன் கட்டமைப்பையையும் வெளி வாயில்களையும்
நுழைவாயில்களையும் அதன் முழு அமைப்பையும்,
எல்லா முறைமைகளையும் முழுத்திட்டத்தையும் சட்டங்களையும் தெரிவி.
இவற்றை அவர்கள் கண்முன்னால் எழுதிவை.
அப்போது அவர்கள் அத்திட்டத்தின்படி நடந்து
அதன் எல்லா முறைமைகளையும் கடைப்பிடிப்பார்கள்.
12 கோவிலின் சட்டம் இதுவே.
மலையின் உச்சியிலுள்ள எல்லாச் சுற்றுப் பகுதிகளும் உன்னத இடங்களாகும்.
இதுவே கோவிலின் சட்டமாகும்.

பலிமேடை[தொகு]


13 முழு அளவுக்கேற்பப் பீடத்தின் அளவுகள் பின்வருமாறு:
ஒரு முழம் என்பது ஒருமுழமும் நான்கு விரற்கடையும் கொண்டது.
பீடத்தின் அடிப்பாகம் ஒரு முழ உயரமும் ஒரு முழ அகலமும் கொண்டது.
சுற்றுப்புறத்தில் அதன் ஓரத்தில் ஒரு சாண் விளிம்புகள் இருக்கும் பீடத்தின் உயரம் இதுவே:
14 நிலத்தில் அடிப்பாகத்திலிருந்து கீழ் விளிம்புவரை
இதன் உயரம் இரண்டு முழம், அகலம் ஒரு முழம்.
சிறிய விளிம்பு முதல் பெரிய விளிம்பு வரை உயரம் நான்கு முழம், அகலம் ஒரு முழம்.
15 பலிபீடச் சிகரம் நான்கு முழ உயரமானது.
நான்கு கொம்புகள் சிகரத்திலிருந்து மேல் நோக்கி இருந்தன.
16 பலிபீடச் சிகரம் பன்னிரண்டு முழ நீளமும்,
பன்னிரண்டு முழ அகலமும் கொண்ட சமசதுரமானது.
17 மேல் விளிம்பு பதினான்கு முழ நிளமும்
பதினான்கு முழ அகலமும் கொண்ட சமசதுரமானது.
அதன் கனம் சுற்றிலும் அரை முழமும்
அதன் அடிப்பாகம் சுற்றிலும் ஒரு முழமுமாய் இருந்தது.
பீடத்தின் படிகள் கிழக்கு நோக்கி இருந்தன. [2]

பலிமேடை அர்ப்பணம்[தொகு]


18 பின்னர் அம்மனிதர் என்னிடம் கூறியது:
மானிடா! தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
பீடத்தைக் கட்டியபின் பீடத்தில் எரிபலியிடுகையிலும்,
குருதித் தெளிப்புப் பலியிடுகையிலும்
கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகளாவன:
19 என்னை அணுகி வந்து என் முன்னிலையில்
திருப்பணிபுரியும் சாதோக்கின் வழிவந்த
லேவியராகிய குருக்களுக்கு
ஓர் இளங்காளையைப் பாவம் போக்கும் பலியாய்த் தர வேண்டும்.
இது தலைவராகிய ஆண்டவரின் அறிவிப்பு.
20 நீங்கள் அதன் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துப்
பீடத்தின் நான்கு கொம்புகளிலும்
மேல்விளிம்பின் நான்கு முனைகளிலும்
சுற்றுமுள்ள சதுரங்கள் முழுவதிலும் தடவ வேண்டும்.
இவ்வாறு பீடத்தையும் புனிதப்படுத்தி
அதற்குக் கறைநீக்கம் செய்ய வேண்டும்.
21 பாவம் போக்கும் பலிக்கான இளங்காளையைக்
கோவில் பகுதியில் தூயகத்துக்கு வெளியே
குறிப்பிட்ட பகுதியில் எரிக்க வேண்டும்.
22 இரண்டாம் நாள் ஒரு மாசு மறுவற்ற ஆட்டுக்கிடாயை எடுத்து
பாவம் போக்கும் பலியாய்ச் செலுத்த வேண்டும்.
இவ்வாறு இளங்காளையினால் புனிதப்படுத்துவது போல்
பீடத்தைப் புனிதப்படுத்த வேண்டும்.
23 அதைப் புனிதப்படுத்தி முடிந்தபின் நீங்கள் மந்தையிலிருந்து,
மாசு மறுவற்ற ஒர் இளங்காளையையும்
ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் பலியிட வேண்டும்.
24 அவற்றை ஆண்டவரின் முன்னிலையில் படைக்க வேண்டும்.
குருக்கள் அதன்மேல் உப்புத் தூவி
அவற்றை ஆண்டவருக்கு எரிபலியாய் அளிக்க வேண்டும்.
25 ஏழு நாள்களுக்குத் தினமும் பாவம் போக்கும் பலியாய்
நீங்கள் ஆட்டுக்கிடாயைக் கொடுக்க வேண்டும்.
மேலும் நீங்கள் மந்தையிலிருந்து மாசு மறுவற்ற ஓர் இளங்காளையையும்
ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும் கொடுக்க வேண்டும்.
26 ஏழு நாள்களுக்கு அவைகள் பீடத்திற்காய்ப்
பாவக்கழுவாய் செய்து அதைப் புனிதப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அதை அர்ப்பணிப்பார்கள்.
27 இந்நாள்கள் முடிந்தபின் எட்டாம் நாளிலிருந்து
குருக்கள் எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்த வேண்டும்.
நான் அவற்றை ஏற்றுக்கொள்வேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். [3]


குறிப்புகள்

[1] 43:7 = எசே 10:3-4; 18-19; 11:22-23; திவெ 1:15.
[2] 43:13-17 = விப 27:1-2; 2 குறி 4:1.
[3] 43:27 = விப 29:35-37.

அதிகாரம் 44[தொகு]

கிழக்கு வாயிலின் சிறப்பு[தொகு]


1 பின்னர் அம்மனிதர் என்னைத் தூயகத்தின் வெளிவாயிலுக்குத்
திரும்பவும் கூட்டிவந்தார்.
அது கிழக்கு முகமாய் இருந்தது. அது மூடப்பட்டிருந்தது.
2 ஆண்டவர் என்னிடம் கூறியது:
இந்த வாயில் மூடியே இருக்க வேண்டும். அது திறக்கப்படக்கூடாது.
யாரும் இதன் வழியாய் நுழையக் கூடாது.
ஏனெனில் இஸ்ரயேலின் தலைவராகிய ஆண்டவர் இதன்வழி நுழைந்தார்;
இது மூடியே இருக்க வேண்டும்.
3 தலைவன் மட்டுமே வாயிலுக்கு உட்புறம்
ஆண்டவரின் முன்னிலையில் உண்பதற்காக அமரலாம்.
அவன் வாயிலின் புகுமுகமண்டபம் வழியாய் உள் நுழைந்து,
அதே வழியில் வெளிவர வேண்டும்.

கோவிலுக்குள் செல்வதற்கான நெறிமுறைகள்[தொகு]


4 பின்னர் அம்மனிதர் என்னை வடக்கு வாயிலின் வழி
கோவிலுக்கு முன்னால் அழைத்து வந்தார்.
அப்போது ஆண்டவரின் மாட்சி அவர்தம் கோவிலை
நிரப்பிக் கொண்டிருந்ததைப் பார்த்து, முகங்குப்புற விழுந்தேன்.
5 ஆண்டவர் என்னிடம் சொன்னது:
மானிடா! ஆண்டவரின் கோவிலைப் பற்றி
நான் சொல்லும் எல்லா நியமங்களையும் சட்டங்களையும்
கவனமாய்க் காதால் உற்றுக்கேட்டு இதயத்தில் பதித்துவை.
அவ்வில்லத்தின் எல்லா வாயில்களிலும் நுழைவது பற்றியும்
தூயகத்தின் வாயில்களினின்று வெளிச்செல்வது பற்றியும் கவனமாய்க் கேள்.
6 கலக வீட்டாராகிய இஸ்ரயேலுக்குச் சொல்:
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
இஸ்ரயேல் வீட்டாரே! உங்கள் அருவருப்பான செயல்களை விட்டுவிடுங்கள்.
7 நீங்கள் எனக்கு அப்பங்களும், கொழுப்பும்,
இரத்தமும் கொண்டுவரும்போதே
உடலிலும் உள்ளத்திலும் விருத்தசேதனம் செய்யாத அன்னியரை
என் தூயகத்திற்குக் கூட்டிவந்து என் இல்லத்தைத் தீட்டுப்படுத்தினீர்கள்.
உங்கள் எல்லா அருவருப்பான செயல்களாலும் உடன்படிக்கையை முறித்தீர்கள்.
8 நீங்கள் என் தூய பொருள்களைப் பாதுகாக்காமல்
உங்களுக்குப் பதிலாக அன்னியர்களிடம் அப்பொறுப்பை ஒப்படைத்தீர்கள்.
9 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
உடலிலும் உள்ளத்திலும் விருத்தசேதனம் செய்யாத
எந்த அன்னியரும் இஸ்ரயேலரிடையே வாழும் அன்னியரும்கூட
என் தூயகத்தில் நுழையக்கூடாது.

குருத்துவப் பணியிலிருந்து லேவியர் நீக்கம்[தொகு]


10 இஸ்ரயேலர் என்னைவிட்டு விலகிச்சென்று
அவர்கள் தெய்வச் சிலைகளுக்குப் பின்னால் திரிந்தபோது,
அவர்களுடன் என்னைவிட்டு விலகிவிட்ட லேவியரும்கூடத்
தங்கள் குற்றப்பழியைச் சுமக்க வேண்டும்.
11 அவர்கள் கோவிலின் வாயில்களைக் காக்கும் பொறுப்பேற்று
என் தூயகத்தில் பணிபுரியலாம்;
எரிபலிகள் மற்றும் மக்கள் பலிகளுக்கான விலங்குகளை வெட்டலாம்;
மக்கள் முன்னிலையில் நின்று அவர்களுக்கெனத் திருப்பணி புரியலாம்.
12 அவர்கள் அவர்களின் தெய்வச் சிலைகளுக்கு முன்னால் பணிபுரிந்து
இஸ்ரயேல் வீட்டாரைப் பாவத்தில் விழ வைத்ததால்,
நான் என் கையை அவர்களுக்கு எதிராய் ஓங்கியுள்ளேன்.
அவர்கள் தங்கள் குற்றப்பழியைத் தாங்களே சுமப்பர்,
என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
13 அவர்கள் குருக்களைப்போல என் அருகில் வந்து திருப்பணிபுரியவோ,
என் தூய பொருள்கள் எதன் அருகிலாவது வரவோ கூடாது.
அவர்கள் தங்கள் வெட்கக்கேட்டையும்
தாங்கள் செய்த அருவருப்பான செயல்களின் விளைவையும் சுமப்பர்.
14 ஆயினும் நான் அவர்களுக்கு கோவிலைக் கண்காணிக்கும் பொறுப்பையும்
அதில் ஆற்றவேண்டிய அனைத்துப் பணிகளைச் செய்யும் பொறுப்பையும் கொடுப்பேன்.

குருக்கள்[தொகு]


15 ஆனால், லேவியர்களில் சாதோக்கின் வழியினரான குருக்கள்,
இஸ்ரயேல் என்னைவிட்டு வழிதவறிப்போனபோது
என் தூயகத்தைக் கண்காணித்து வந்தனர்.
எனவே அவர்கள் என் அருகில் வந்து திருப்பணிபுரியவேண்டும்.
அவர்கள் கொழுப்பு, மற்றும் இரத்தப் பலிகளை எனக்குச் செலுத்த
என் முன்னிலையில் நிற்க வேண்டும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
16 அவர்கள் மட்டுமே என் தூயகத்தினுள் நுழையலாம்.
அவர்கள் மட்டுமே என் மேசையருகில் வந்து
என் முன்னிலையில் திருப்பணி புரிந்து சடங்குகளை நிறைவேற்றலாம்.
17 அவர்கள் உள்முற்றத்தின் வாயில் வழி நுழைகையில்
நார்ப்பட்டு ஆடை அணிய வேண்டும்.
அவர்கள் உள் முற்றத்தின் வாயிலிலோ கோவிலிலோ
திருப்பணி புரிகையில் கம்பளி ஆடைகளை அணியலாகாது.
18 அவர்கள் தலையில் நார்ப்பட்டுத் தலைப்பாகையும்,
இடையில் நார்ப்பட்டு உள்ளாடைகளும் அணிய வேண்டும்.
வியர்வை வருவிக்கும் எதையும் அணியலாகாது. [1]
19 அவர்கள் வெளிமுற்றத்தில் மக்களிடம் செல்கையில்
திருப்பணி புரிகையில் அணிந்த ஆடைகளைக் கழற்றி,
அவற்றைத் தூயக அறைகளில் வைத்து விட்டு
வேறு ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.
அவர்களின் ஆடைகள் வழியாகத் தூய்மை
மக்களுக்குச் செல்வதைத் தவிர்க்க இவ்வாறு செய்யவேண்டும். [2]
20 அவர்கள் தலையை மழிக்கவோ நீள்முடி வளர்க்கவோ வேண்டாம்.
தலைமுடியைக் கத்தரித்துக் கொள்ளட்டும். [3]
21 உள்முற்றத்தில் நுழைகையில் எக்குருவும் திராட்சை மது அருந்தலாகாது. [4]
22 எந்தக் குருவும் கைம்பெண்ணையோ
மணமுறிவு பெற்ற மங்கையையோ மணமுடித்தலாகாது.
ஆனால் இஸ்ரயேல் இனத்துக் கன்னிப்பெண்ணையோ
குருவின் கைம்பெண்ணையோ மட்டுமே மணமுடிக்கலாம். [5]
23 தூய்மையானவற்றையும் பொதுவானவற்றையும் பிரித்தறியவும்,
தீட்டானதையும் தீட்டற்றதையும் பகுத்தறியவும்
அவர்கள் என் மக்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். [6]
24 வழக்குகளில் குருக்களே நடுவராய் இருந்து
என் நீதித்தீர்ப்புகளுக்கேற்பத் தீர்ப்பளிக்க வேண்டும்.
அவர்கள் என் சட்டங்களையும் நியமங்களையும்
என் எல்லாக் குறிப்பிட்ட திருநாள்களிலும் கடைப்பிடிக்க வேண்டும்.
என் ஓய்வு நாள்களைத் தூய்மையாய்க் கொள்ள வேண்டும்.
25 இறந்த உடலின் அருகில் குரு சென்று
தன்னைத் தீட்டுப்படுத்திக் கொள்ளலாகாது.
ஆயினும் இறந்தவர் தம் தந்தையாகவோ, தாயாகவோ,
மகனாகவோ, மகளாகவோ, சகோதரனாகவோ,
திருமணமாகாத சகோதரியாகவோ இருந்தால் மட்டும் அவர் அவ்வாறு செய்யலாம். [7]
26 அதன்பின் தம்மைத் தூய்மைப்படுத்திக்கொண்டு
அவர் ஏழு நாள்கள் காத்திருக்க வேண்டும்.
27 அவர் தூயகத்தில் பணியாற்ற அதன் உள்முற்றத்தில் நுழையும் நாளில்
பாவம் போக்கும் பலியைத் தமக்காக ஒப்புக்கொடுக்க வேண்டும்,
என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
28 குருக்களுக்கு நானே உரிமைச் சொத்து:
அவர்களுக்கு இஸ்ரயேலில் யாதொரு சொத்தும் தரவேண்டாம்.
நானே அவர்களின் உடைமை. [8]
29 அவர்கள் தானியப் படையல், பாவம் போக்கும் பலி இறைச்சி,
குற்ற நீக்கப்பலி இறைச்சி ஆகியவற்றை உண்பர்.
இஸ்ரயேலில் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட
அனைத்துப் பொருள்களும் குருக்களுக்குச் சொந்தமாகும்.
30 உங்கள் முதற்கனிகளில் சிறந்தவையும்
உங்கள் சிறப்புக் காணிக்கைகளில் உன்னதமானவை யாவும்
குருக்களுக்கே சொந்தம்.
நீங்கள் உங்கள் வீட்டு உணவில் முதல் பாகத்தைக்
குருக்களுக்குக் கொடுக்க வேண்டும்.
அதன் மூலம் உங்கள் வீட்டில் இறையாசி தங்கும். [9]
31 குருக்கள், பறவைகளிலோ, விலங்குகளிலோ,
தானாய் இறந்தவற்றையும் காட்டு விலங்குகளால் பீறப்பட்டவற்றையும் உண்ணலாகாது. [10]


குறிப்புகள்

[1] 44:17-18 = விப 28:39-43; லேவி 16:4.
[2] 44:19 = லேவி 16:23.
[3] 44:20 = லேவி 21:5.
[4] 44:21 = லேவி 10:9.
[5] 44:22 = லேவி 21:7,13-14.
[6] 44:23 = லேவி 10:10.
[7] 44:25 = லேவி 21:1-4.
[8] 44:28 = எண் 18:20.
[9] 44:29-30 = எண் 18:8-19.
[10] 44:31 = லேவி 22:8.


(தொடர்ச்சி): எசேக்கியேல்:அதிகாரங்கள் 45 முதல் 46 வரை