திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசேக்கியேல்/அதிகாரங்கள் 47 முதல் 48 வரை

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
"பலவகையான பழமரங்கள் ஆற்றின் இருமருங்கிலும் வளரும்; அவற்றின் இலைகள் உதிரா; அவற்றில் கனிகள் குறையா. ஒவ்வொரு மாதமும் அவை கனி கொடுக்கும்; ஏனெனில் தூயகத்திலிருந்து தண்ணீர் அவற்றிற்குப் பாய்கின்றது. அவற்றின் கனிகள் உணவாகவும் இலைகள் மருந்தாகவும் பயன்படும்." - எசேக்கியேல் 47:12

எசேக்கியேல் (The Book of Ezekiel)[தொகு]

அதிகாரங்கள் 47 முதல் 48 வரை

அதிகாரம் 47[தொகு]

கோவிலினின்று புறப்படும் ஓடை[தொகு]


1 அம்மனிதர் என்னைக் கோவிலின் நுழைவாயிலுக்கு
மீண்டும் அழைத்து வந்தார்.
அங்கு நான் கோவிலின் வாயிற்படியின் கீழிருந்து
கிழக்கு நோக்கித் தண்ணீர் வருவதைக் கண்டேன்.
ஏனெனில், கோவில் கிழக்கு நோக்கி இருந்தது.
தண்ணீர், கோவில் மற்றும் பீடத்தின் தெற்குப் பக்கத்திலிருந்து வந்தது. [1]
2 அவர் என்னை வடக்கு வாயில் வழியாய் அழைத்து வந்து
கிழக்கு நோக்கிய வெளிவாயிலின் வெளிப்பகுதிக்கு இட்டுச் சென்றார்.
இதோ! தண்ணீர் தெற்குப் பகுதியிலிருந்து பாய்ந்து கொண்டிருந்தது.
3 அம்மனிதர் கையில் ஓர் அளவு நூலைப் பிடித்துக்கொண்டு
கிழக்கு நோக்கிச் சென்று, ஆயிர முழம் அளந்தார்.
பின்னர் கணுக்காலளவு ஆழமுள்ள அத்தண்ணீர் வழியாய் என்னை அழைத்துச் சென்றார்.


4 அவர் மேலும் ஆயிர முழம் அளந்து
என்னை முழங்காலளவு ஆழமுள்ள தண்ணீரில் அழைத்துச் சென்றார்.
மேலும் ஆயிர முழம் அளந்து இடுப்பளவு தண்ணீரில் என்னை நடத்திச் சென்றார்.
5 அவர் மேலும் ஆயிர முழம் அளந்தார்.
ஆனால் இப்போது அது ஆறாக ஓடியது.
எனவே என்னால் அதைக் கடக்க இயலவில்லை.
ஏனெனில் தண்ணீர் உயர்ந்து நீந்திப் போகுமளவுக்கு ஆழமுடையதாய்,
யாராலும் நடந்து கடக்க முடியாத ஆறாய் ஓடியது.
6 அவர் என்னிடம் 'மானிடா! இதைப் பார்த்தாயா?' என்றார்.
பின்னர் அவர் என்னை ஆற்றின் கரைக்கு அழைத்துச் சென்றார்.
7 நான் அங்கே சென்றபோது
ஆற்றின் இரு கரைகளிலும் எண்ணற்ற மரங்கள் நிற்கக் கண்டேன்.
8 அவர் என்னிடம் உரைத்தது:
'இத் தண்ணீர் கிழக்குப் பகுதியை நோக்கிப் பாய்ந்து அராபாவில் சேர்கிறது.
அங்கு அது கடலோடு கலக்கிறது.
அது கடலோடு கலக்கையில் அத்தண்ணீர் அங்கு நல்ல தண்ணீராக மாறும்.
9 இந்த ஆறு பாயுமிடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும்.
அங்கு ஏராளமான மீன்கள் இருக்கும்.
ஏனெனில் இத்தண்ணீர் பாய்ந்து அங்குள்ள நீரை நல்ல நீராய் மாற்றும்.
எனவே அது பாயுமிடமெல்லாம் யாவும் உயிர் வாழும்.
10 மீனவர் கடலோரமெங்கும் நிற்பர்.
ஏன்கேதியிலிருந்து எனக்லயிம்வரை வலைகளை விரிக்க இடமிருக்கும்.
மீன்களோ பெருங்கடலின் மீன்கள் போலப் பல வகைப்பட்டவையாய் இருக்கும்.
11 ஆயினும் உவர் மற்றும் சதுப்பு நிலங்கள் வளமை பெறா;
அவை உப்பளங்களுக்காய் விடப்படும்.
12 பலவகையான பழமரங்கள் ஆற்றின் இருமருங்கிலும் வளரும்;
அவற்றின் இலைகள் உதிரா;
அவற்றில் கனிகள் குறையா.
ஒவ்வொரு மாதமும் அவை கனி கொடுக்கும்;
ஏனெனில் தூயகத்திலிருந்து தண்ணீர் அவற்றிற்குப் பாய்கின்றது.
அவற்றின் கனிகள் உணவாகவும் இலைகள் மருந்தாகவும் பயன்படும். [2]

நிலத்தின் எல்லைகள்[தொகு]


13 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
நீங்கள் இஸ்ரயேலின் பன்னிரு குலங்களுக்கும்
யோசேப்பின் இரு பாகங்களுக்கும் ஏற்ப இந்த நாட்டைப் பிரித்து
உரிமையாக்கிக் கொள்வதற்கான எல்லைகள் இவையே:
14 நீங்கள் அதனை ஒவ்வொரு சகோதரனுக்கும் சமமாகப் பங்கிட வேண்டும்.
ஏனெனில், நான் இதனை உங்கள் மூதாதையருக்குத் தருவதாய்க்
கையுயர்த்தி வாக்களித்துள்ளேன்.
இந்த நாடு உங்கள் உரிமைச் சொத்தாகும்.
15 நாட்டின் எல்லை இதுவே:
வடக்குப் பக்கம் இது பெருங் கடலிலிருந்து
ஏத்லோன் சாலை வழியாய்ச் செதாது வரை;
16 பெரோத்தா, தமஸ்கு எல்லை முதல்
ஆமாத்து எல்லையிலுள்ள சிப்ரயிம் வரை;
அவ்ரான் எல்லையில் இருக்கும் ஆட்சேர் அத்திக்கோன் வரை;
17 இவ்வெல்லை கடலிலிருந்து அட்சர் ஏனோன் வரை நீண்டு,
தமஸ்குவின் வடக்கு எல்லை வழியாய்
வடக்கில் ஆமாத்து எல்லை வரை போகும்.
இது வடக்கு எல்லையாகும்.
18 கிழக்குப் பக்க எல்லை அவ்ரானுக்கும் தமஸ்குவுக்கும் இடையே,
யோர்தான் வழியாய், கிலயாதுக்கும் இஸ்ரயேல் நாட்டிற்கும் இடையில் போய்,
கிழக்குக் கடல் வரை போகும்.
இது கிழக்கு எல்லையாகும்.
19 தெற்குப் பக்கத்தில் இது தாமாரிலிருந்து மெரிபா காதேசு நீர்நிலை வரை போய்
எகிப்தின் எல்லை ஓரமாய்ப் பெருங்கடல் வரை போகும்.
இது தெற்கு எல்லையாகும்.
20 மேற்குப் பகுதியில் பெருங்கடலிலிருந்து
ஆமாத்து நுழைவின் எதிர்ப்பக்கம் வரை எல்லையாக இருக்கும்.
இது மேற்கு எல்லையாகும்.
21 நீங்கள் இந்த நாட்டை இஸ்ரயேலின் குலங்களுக்கு ஏற்பப் பங்கிட வேண்டும்.
22 நீங்கள் இதை உங்களுக்கு உரிமைச் சொத்தாகவும்,
உங்கள் நடுவில் வந்து குடியேறி உங்கள் நடுவில் பிள்ளைகள் பெற்றெடுத்த
அன்னியரின் உரிமைச் சொத்தாகவும் பங்கிட வேண்டும்.
அவர்களும் உங்கள் நாட்டில் பிறந்த இஸ்ரயேலராகவே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
உங்களோடு சேர்ந்த இஸ்ரயேலின் குலங்கள் நடுவே
அவர்களுக்கும் உரிமைச் சொத்து வழங்கப்பட வேண்டும்.
23 அன்னியன் எந்தக் குலத்தோடு சேர்ந்து குடியேறினாலும்,
அங்கே அவனுக்கு உரிமைச் சொத்து வழங்கப்பட வேண்டும்,
என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.


குறிப்புகள்

[1] 47:1 = 1 செக் 14:8; யோவா 7:38; திவெ 22:1.
[2] 47:12 = திவெ 22:2.


அதிகாரம் 48[தொகு]

குலங்களுக்குரிய நிலப் பிரிவினை[தொகு]


1 குலங்களின் பெயர்கள் இவையே:
வடக்கு எல்லையில், ஏக்லோன், ஆமாத்து நுழைவு அட்சர்,
ஏனோன் சாலை வழியாய் தமஸ்கு எல்லைவழி,
வடக்கில் ஆமாத்து பக்கம் வரை
கிழக்கிலிருந்து மேற்குவரை, தாணுக்கு உரியது.
2 தாணின் எல்லையருகே கிழக்குப் பகுதியிலிருந்து
மேற்குப் பகுதிவரை ஆசேருக்கு உரியது.
3 ஆசேரின் எல்லையருகே கிழக்குப் பகுதியிலிருந்து
மேற்குப் பகுதிவரை நப்தலிக்கு உரியது.
4 நப்தலியின் எல்லையருகே கிழக்குப் பகுதியிலிருந்து
மேற்குப் பகுதிவரை மனாசேக்கு உரியது.
5 மனாசேயின் எல்லையருகே கிழக்குப் பகுதியிலிருந்து
மேற்குப் பகுதிவரை எப்ராயிமுக்கு உரியது.
6 எப்ராயிமின் எல்லையருகே கிழக்குப் பகுதியிலிருந்து
மேற்குப் பகுதிவரை ரூபனுக்கு உரியது.
7 ரூபனின் எல்லையருகே கிழக்குப் பகுதியிலிருந்து
மேற்குப் பகுதிவரை யூதாவுக்கு உரியது.

நிலத்தின் நடுவே அமைந்த சிறப்புப் பகுதி[தொகு]


8 யூதாவின் எல்லையருகே கிழக்குப் பகுதியிலிருந்து
மேற்குப் பகுதிவரை நீங்கள் அர்ப்பணிக்க வேண்டிய சிறப்புப்பகுதி:
அது இருபத்தையாயிர முழ அகலமும்
ஒரு குலத்துக்குரிய கிழக்கு முதல் மேற்குப் பகுதிக்கான நீளமும் உடையதாய் இருக்கும்.
அதன் நடுவில் தூயகம் இருக்கும்.
9 நீங்கள் ஆண்டவருக்கு அர்ப்பணிக்க வேண்டிய சிறப்புப்பகுதி
இருபத்தையாயிர முழ நீளமும் பத்தாயிர முழ அகலமும் உடையதாய் இருக்கும்.
10 அது குருக்களுக்குரிய புனிதப் பகுதியாய் இருக்கும்.
அது வடக்குப் பக்கம் இருபத்தையாயிர முழமும்
மேற்குப்பக்கம் பத்தாயிர முழமும்
கிழக்குப் பக்கம் பத்தாயிர முழமும்,
தெற்குப் பக்கம் இருபத்தையாயிர முழமும் உடையதாய் இருக்கும்.
அதன் நடுவில் ஆண்டவரின் தூயகம் இருக்கும்.
11 அந்த இடம் இஸ்ரயேலருடன் சேர்ந்து என்னைவிட்டு விலகிச் சென்ற
லேவியரைப் போல் அல்லாமல்
எனக்குப் பணிபுரிவதில் கருத்தாயிருந்த சாதோக்கியராகிய
புனிதப்படுத்தப்பட்ட குருக்களுக்கு உரியதாய் இருக்கும்.
12 லேவியரின் எல்லையருகே உள்ள
மிக உன்னத இடத்தின் ஒரு பகுதியாகிய அது
அவர்களுக்கான சிறப்பு அன்பளிப்பாகும்.
13 குருக்களுக்கான பகுதியின் எல்லையருகே
இருபத்தையாயிர முழ நீளமும் பத்தாயிர முழ அகலமும் கொண்ட பகுதி
லேவியருக்கு உரியதாய் இருக்கும்;
ஆம், மொத்த நீளம் இருபத்தையாயிர முழமும்
அகலம் பத்தாயிர முழமும் இருப்பதாக!
14 அவர்கள் அதிலிருந்து கொஞ்சமும் விற்கவோ,
உரிமை மாற்றம் செய்யவோ கூடாது.
சிறந்த நிலமாகிய அதை யாருக்கும் கொடுத்தலாகாது.
ஏனெனில் அது ஆண்டவரின் தூய நிலமாகும்.
15 ஐயாயிர முழ அகலமும் இருபத்தையாயிர முழ நீளமும் கொண்ட
எஞ்சிய பகுதி பொதுவானது.
இது நகருக்காகவும் வீடுகளுக்காகவும்
திறந்த வெளிக்காகவும் ஒதுக்கப்படும்.
நகர் அதன் நடுவில் இருக்கும்.
16 நகர்க்குரிய அளவுகள் பின்வருமாறு:
வடக்குப் பகுதியில் நாலாயிரத்து ஐந்நூறு கோல்;
தெற்குப் பகுதியில் நாலாயிரத்து ஐந்நூறு கோல்;
கிழக்குப் பகுதியில் நாலாயிரத்து ஐந்நூறு கோல்;
மேற்குப் பகுதியில் நாலாயிரத்து ஐந்நூறு கோல்.
17 நகரின் திறந்த நிலம் வடக்கில் இருநூற்று ஐம்பது கோலும்
தெற்கில் இருநூற்று ஐம்பது கோலும்
கிழக்கில் இருநூற்று ஐம்பது கோலும்
மேற்கில் இருநூற்று ஐம்பது கோலும் உடையதாய் இருக்கும்.
18 தூயகத்தை ஒட்டி எஞ்சியுள்ள நீண்ட பகுதி
கிழக்கில் பத்தாயிரம் கோலும்,
மேற்கில் பத்தாயிரம் கோலுமாய் இருக்கும்.
அதில் கிடைக்கும் விளைச்சல்
நகரின் பணியாளர்களுக்கு உணவளிக்கும்.
19 நகரில் பணிபுரிவோர் இஸ்ரயேலின் எல்லாக்
குலங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுவர்.
20 முழு நிலப்பகுதியும் இருபத்தையாயிரம் கோல் நீள அகலமுடைய
சதுர நிலமாய் இருக்கும்.
தூயகத்திற்கும் நகருக்குமான பகுதிகளை ஒதுக்கி வைப்பீர்களாக!
21 தூயகத்திற்கும் நகருக்கமான பகுதிகளின் இருபக்கங்களிலும்
எஞ்சியுள்ளவை தலைவனுக்கு உரியன.
அது தூயகத்திலிருந்து கிழக்கே இருபத்தையாயிரம் கோலும்
மேற்கே இருபத்தையாயிரம் கோலுமாய் இருக்கும்.
குலங்களுக்குச் சொந்தமான பகுதிகளை ஒட்டிய
இவ்விரு பகுதிகளும் தலைவனுக்கு உரியன.
கோவிலின் தூயகத்தை உள்ளடக்கிய புனிதப் பகுதி நடுவில் இருக்கும்.
22 லேவியரின் பகுதிக்கும், நகரின் பகுதிக்கும் இடையில்
தலைவனுக்குரிய பகுதி இருக்கும்.
அப்பகுதி யூதாவின் எல்லைக்கும்
பென்யமினின் எல்லைக்கும் நடுவில் இருக்கும்.

குலங்களுக்குரிய நிலப் பிரிவினை[தொகு]


23 மற்றக் குலங்களைப் பொறுத்த வரை
கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிவரை பென்யமினுக்கு உரியது.
24 பென்யமினின் எல்லையருகே
கிழக்குப் பகுதி முதல் மேற்குப் பகுதிவரை சிமியோனுக்கு உரியது.
25 சிமியோனின் எல்லையருகே
கிழக்குப் பகுதி முதல் மேற்குப் பகுதிவரை இசக்காருக்கு உரியது.
26 இசக்காரின் எல்லையருகே
கிழக்குப் பகுதி முதல் மேற்குப் பகுதி வரை செபுலோனுக்கு உரியது.
27 செபுனோனின் எல்லையருகே
கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிவரை காத்துக்கு உரியது.
28 காத்தின் எல்லையருகே
தெற்குப் பகுதி தாமார் எல்லையிலிருந்து மெரிபா, காதேசு நீர்நிலை வரையும்
எகிப்திய எல்லையோரம் பெருங்கடல் வரையும் போகும்.
29 நீங்கள் இஸ்ரயேல் குலங்களுக்கு உரிமைச் சொத்தாய்ப்
பங்கிட வேண்டிய நாடு இதுவே;
அவர்களின் பங்குகள் இவையே, என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

எருசலேமின் வாயில்கள்[தொகு]


30 நகரைவிட்டு வெளிச்செல்லும் வாயில்கள் இவையே:
வடக்குப் புறத்தில் நாலாயிரத்து ஐந்நூறு கோல் அளவுப் பகுதியில் இருக்கும்.
31 நகர் வாயில்கள் இஸ்ரயேலின் குலங்களின் பெயரால் அழைக்கப்படும்;
வடக்குப் புறத்தில் உள்ள மூன்று வாயில்களில் ஒன்று 'ரூபனின் வாயில்',
ஒன்று 'யூதாவின் வாயில்', ஒன்று 'லேவியின் வாயில்'.
32 கிழக்குப் புறத்தில் நாலாயிரத்து ஐந்நூறு கோல் அளவுப் பகுதியில் உள்ள
மூன்று வாயில்களில் ஒன்று 'யோசேப்பின் வாயில்,
ஒன்று 'பென்யமின் வாயில்', ஒன்று 'தாணின் வாயில்'.
33 தெற்குப் புறத்தில் நாலாயிரத்து ஐந்நூறு கோல் அளவுப் பகுதியில் உள்ள
மூன்று வாயில்களில் ஒன்று 'சிமியோனின் வாயில்',
ஒன்று 'இசக்காரின் வாயில்', ஒன்று 'செபுலோனின் வாயில்'.
34 மேற்குப் புறத்தில் நாலாயிரத்து ஐந்நூறு கோல் அளவுப் பகுதியில் உள்ள
மூன்று வாயில்களில் ஒன்று 'காத்தின் வாயில்',
ஒன்று 'ஆசேரின் வாயில்', ஒன்று 'நப்தலியின் வாயில்'. [*]
35 அந்நகரின் சுற்றளவு பதினெட்டாயிரம் கோல்.
அந்நாளிலிருந்து நகர்
'ஆண்டவர் இங்கு இருக்கிறார்' என்னும் பெயர் பெறும்.


குறிப்பு

[*] 48:30-34 = திவெ 21:12-13.


(எசேக்கியேல் நூல் நிறைவுற்றது)


(தொடர்ச்சி): தானியேல்:அதிகாரங்கள் 1 முதல் 2 வரை