திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 45 முதல் 46 வரை

விக்கிமூலம் இலிருந்து
"வானங்கள், பனிமழையென வெற்றியை அனுப்பட்டும்; மேகங்கள் மாரியென அதைப் பொழியட்டும்." - எசாயா 45:8.

எசாயா (The Book of Isaiah)[தொகு]

அதிகாரங்கள் 45 முதல் 46 வரை

அதிகாரம் 45[தொகு]

சைரசின் நியமனம்[தொகு]


1 சைரசுக்கு ஆண்டவர் திருப்பொழிவு செய்துள்ளார்;
பிற இனத்தாரை அவர்முன் அடிபணியச் செய்வார்.
அரசர்களை அவர்முன் ஆற்றல் இழக்கச் செய்வார்;
கோட்டை வாயில்களை அவர்முன்
பூட்டியிராது திறந்திருக்கச் செய்வார்;
அவரது வலக்கையை உறுதியாகப் பற்றிப் பிடித்துள்ளார்;
அவரிடம் ஆண்டவர் கூறுவது இதுவே:


2 நான் உனக்கு முன்னே சென்று
குன்றுகளைச் சமப்படுத்துவேன்;
செப்புக் கதவுகளை உடைத்து,
இரும்புத் தாழ்ப்பாள்களைத் தகர்ப்பேன்.


3 இருளில் மறைத்துவைத்த கருவூலங்களையும்
மறைவிடங்களில் ஒளித்துவைத்த புதையல்களையும்
உனக்கு நான் தருவேன்;
பெயர் சொல்லி உன்னை அழைத்த
இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் நானே
என்பதை நீ அறியும்படி இதைச் செய்வேன்.


4 என் ஊழியன் யாக்கோபை முன்னிட்டும்
நான் தேர்ந்துகொண்ட இஸ்ரயேல் பொருட்டும்
பெயர் சொல்லி உன்னை அழைத்தேன்;
நீ என்னை அறியாதிருந்தும் உனக்குப்
பெயரும் புகழும் வழங்கினேன்.


5 நானே ஆண்டவர்; வேறு எவருமில்லை;
என்னையன்றி வேறு கடவுள் இல்லை;
நீ என்னை அறியாதிருந்தும் உனக்கு வலிமை அளித்தேன்.


6 கதிரவன் உதிக்கும் திசை தொடங்கி மறையும் திசை வரை
என்னையன்றி வேறு எவரும் இல்லை என்று
மக்கள் அறியும்படி இதைச் செய்கிறேன்;
நானே ஆண்டவர்; வேறு எவரும் இல்லை.


7 நான் ஒளியை உண்டாக்குகிறேன்;
இருளைப் படைக்கிறேன்;
நல் வாழ்வை அமைப்பவன் நான்;
தீமையைப் படைப்பவனும் நானே;
இவை அனைத்தையும் செய்யும் ஆண்டவர் நானே.


8 வானங்கள், பனிமழையென வெற்றியை அனுப்பட்டும்;
மேகங்கள் மாரியென அதைப் பொழியட்டும்;
மண்ணுலகம் வாய்திறந்து விடுதலைக்கனி வழங்கட்டும்,
அதனுடன் நீதி துளிர்க்கச் செய்யட்டும்;
இவற்றைச் செய்பவர் ஆண்டவராகிய நானே.


9 தன்னை உருவாக்கியவரை எதிர்த்து
வழக்காடுபவனுக்கு ஐயோ கேடு!
பானை ஓடுகளில் அவனும் ஓர் ஓடே!
களிமண் குயவனிடம்,
'நீ என்னைக் கொண்டு என்ன செய்கிறாய்' என்றும்
அவன் வனைந்தது அவனிடம்,
'உனக்குக் கைத்திறனே இல்லை' என்றும் கூறுவதுண்டோ? [1]

படைப்பிற்கும் வரலாற்றிற்கும் ஆண்டவர்[தொகு]


10 தந்தையிடம்,
'நீர் ஏன் என்னை இப்படிப் பிறப்பித்தீர்' என்றும்,
தாயிடம்,
'நீ ஏன் என்னை இப்படிப் பெற்றெடுத்தாய்' என்றும்
வினவுபவனுக்கு ஐயோ கேடு!


11 இஸ்ரயேலின் தூயவரும்
அவனை உருவாக்கியவருமான ஆண்டவர் கூறுவது இதுவே:


"நிகழவிருப்பன குறித்தும் என் மக்களைப்பற்றியும்
என்னிடம் கேள்வி கேட்பீர்களா?
என் கைவினை பற்றி எனக்கே கட்டளையிடுவீர்களா?


12 நான் உலகை உருவாக்கி அதன்மேல் மனிதரைப் படைத்தேன்;
என் கைகளே வானத்தை விரித்தன;
அதன் படைத்திரளுக்கு ஆணையிட்டதும் நானே.


13 வெற்றிபெறுமாறு நான் சைரசை எழுப்பினேன்;
அவன் செல்லும் அனைத்து வழிகளையும் சீர்படுத்தினேன்;
அவன் என் நகரைக் கட்டியெழுப்புவான்;
நாடு கடத்தப்பட்ட என் மக்களை
ஈட்டுப்பொருளோ அன்பளிப்போ பெறாது திருப்பி அனுப்புவான்"
என்கிறார் படைகளின் ஆண்டவர்.


14 ஆண்டவர் கூறுவது இதுவே:


"எகிப்தியர் தம் செல்வத்தோடும்,
எத்தியோப்பியர் தம் வணிகப் பொருளோடும்
நெடிது வளர்ந்த செபாவியரும் உனக்கு உடைமையாவர்.
அவர்கள் விலங்கிடப்பட்டு, உனக்குப் பின்வந்து உன்னைப் பணிவர்;
உன்னிடம் தம் மன்றாட்டைச் சமர்ப்பித்து,
'இறைவன் உம்மிடம்தான் இருக்கிறார்;
வேறெங்கும் இல்லை;
வேறு கடவுளும் இல்லை' என்பார்கள்.


15 மீட்பரான இஸ்ரயேலின் கடவுளே,
உண்மையிலேயே நீர் 'தம்மை மறைத்துக்கொள்ளும் இறைவன்'.


16 சிலைகளைச் செய்வோர் அனைவரும் ஒருங்கே வெட்கி நாணினர்;
அவர்கள் குழம்பித் தவித்தனர்.


17 ஆண்டவர் என்றுமுள மீட்பை அளித்து
இஸ்ரயேலை விடுவித்தருளினார்;
என்றென்றும் நீங்கள் வெட்கக்கேடு அடையமாட்டீர்கள்;
அவமதிப்புக்கும் உள்ளாக மாட்டீர்கள்.


18 ஏனெனில் விண்ணுலகைப் படைத்த
ஆண்டவர் கூறுவது இதுவே:


அவரே கடவுள்; மண்ணுலகைப் படைத்து
உருவாக்கியவர் அவரே;
அதை நிலைநிறுத்துபவரும் அவரே;
வெறுமையாய் இருக்குமாறு படைக்காது,
மக்கள் வாழுமாறு அதை உருவாக்கினார்.
நானே ஆண்டவர், என்னையன்றி வேறு எவரும் இல்லை.


19 நான் மறைவிலும் மண்ணுலகின்
இருண்ட பகுதியிலும் பேசியதில்லை;
'வெற்றிடத்தில் என்னைத் தேடுங்கள்'
என்று நான் யாக்கோபின் வழிமரபிடம் சொல்லவில்லை;
ஆண்டவராகிய நான் உண்மையே பேசுகிறேன்;
நேர்மையானவற்றை அறிவிக்கிறேன்;

உலகத்திற்கும் பாபிலோனின் சிலைகளுக்கும் ஆண்டவர்[தொகு]


20 மக்களினங்களுள் தப்பிப் பிழைத்தோரே!
ஒன்று திரண்டு வாருங்கள்;
ஒருங்கே கூடுங்கள்;
மரத்தால் செய்த தங்கள் சிலையைச் சுமந்து செல்வோருக்கும்,
விடுதலை வழங்காத தெய்வத்திடம்
தொடர்ந்து மன்றாடுவோருக்கும் அறிவே இல்லை.


21 அறிவியுங்கள்; உங்கள் வழக்கை எடுத்துரையுங்கள்;
ஒன்றாகச் சிந்தித்து முடிவெடுங்கள்;
தொடக்கத்திலிருந்து இதை வெளிப்படுத்தியவர் யார்?
முதன் முதலில் இதை அறிவித்தவர் யார்?
ஆண்டவராகிய நான் அல்லவா?
என்னையன்றிக் கடவுள் வேறு எவரும் இல்லை;
நீதியுள்ளவரும் மீட்பு அளிப்பவருமான இறைவன்
என்னையன்றி வேறு எவரும் இல்லை.


22 மண்ணுலகின் அனைத்து எல்லை நாட்டோரே!
என்னிடம் திரும்பி வாருங்கள்;
விடுதலை பெறுங்கள்;
ஏனெனில் நானே இறைவன்;
என்னையன்றி வேறு எவருமில்லை.


23 நான் என்மேல் ஆணையிட்டுள்ளேன்;
என் வாயினின்று நீதிநிறை வாக்கு புறப்பட்டுச் சென்றது;
அது வீணாகத் திரும்பி வராது;
முழங்கால் அனைத்தும் எனக்குமுன் மண்டியிடும்;
நா அனைத்தும் என்மேல் ஆணையிடும். [2]


24 'ஆண்டவரில் மட்டும் எனக்கு நீதியும் ஆற்றலும் உண்டு' என்று
ஒவ்வொருவனும் சொல்லி அவரிடம் வருவான்;
அவருக்கு எதிராகச் சீறி எழுந்தவர் அனைவரும் வெட்கக்கேடு அடைவர்.


25 இஸ்ரயேலின் வழி மரபினர் அனைவரும்
ஆண்டவரால் ஏற்புடையோராகப் பெற்று அவரைப் போற்றுவர்.


குறிப்புகள்

[1] 45:9 = உரோ 9:20.
[2] 45:23 = உரோ 14:11; பிலி 2:10-11.

அதிகாரம் 46[தொகு]


1 பேல் கூனிக் குறுகுகின்றது;
நெபோ குப்புற வீழ்கின்றது;
அவற்றின் சிலைகள் காட்டு விலங்குகள் மீதும்
கால்நடைகள் மீதும் சுமத்தப்படுகின்றன;
நீங்கள் பவனி எடுத்தவை பாரம் ஆயின;
களைத்துப்போன விலங்குகளுக்குச் சுமையாயின.


2 அவை ஒருங்கே குப்புற வீழ்கின்றன;
கூனிக் குறுகுகின்றன;
தங்களைச் சுமந்தவர்களை அவற்றால் விடுவிக்க இயலவில்லை;
அவையும் நாடுகடத்தலுக்கு உள்ளாயின.


3 யாக்கோபு வீட்டாரே,
இஸ்ரயேல் குடும்பத்தாருள் எஞ்சியிருக்கும் அனைத்து மக்களே,
செவிகொடுங்கள்;
உதரத்திலிருந்தே உங்களைத் தாங்குபவர் நான்,
கருவிலிருந்தே உங்களைச் சுமப்பவர் நான்.


4 உங்கள் முதுமைவரைக்கும் நான் அப்படியே இருப்பேன்;
நரை வயதுவரைக்கும் நான் உங்களைச் சுமப்பேன்;
உங்களை உருவாக்கிய நானே உங்களைத் தாங்குவேன்;
நானே உங்களைச் சுமப்பேன்;
நானே விடுவிப்பேன்.


5 யாருக்கு என்னை நிகராக்குவீர்கள்?
யாருக்கு என்னை இணையாக்குவீர்கள்?
யாருக்கு நிகராக என்னை ஒப்பிடுவீர்கள்?


6 மக்கள் தம் பையைத் திறந்து பொன்னைக் கொட்டுகிறார்கள்;
தராசில் வெள்ளியை நிறுத்துப் பார்க்கிறார்கள்;
பொற்கொல்லனைக் கூலிக்கு அமர்த்துகிறார்கள்;
அவன் அதைத் தெய்வமாகச் செய்கிறான்;
பின் அதன்முன் வீழ்ந்து வழிபடுகிறார்கள்.


7 அதைத் தூக்கித் தோள்மேல் சுமந்து போகின்றனர்;
அதற்குரிய இடத்தில் அதை நிலைநிறுத்தி வைக்கின்றனர்;
அது அங்கேயே நிற்கிறது;
தன் இடத்திலிருந்து அது பெயராது;
எவன் அதனிடம் கூக்குரல் எழுப்பினாலும் அது மறுமொழி தராது;
அவன் துயரத்திலிருந்து அவனை விடுவிப்பதுமில்லை.


8 கலகம் செய்வோரே, இதை நினைவில் கொள்ளுங்கள்;
கவனத்தில் வையுங்கள்.


9 தொன்றுதொட்டு நிகழ்ந்தவற்றை நினைத்துப் பாருங்கள்;
நானே இறைவன்; என்னையன்றி வேறு கடவுள் இல்லை;
என்னைப் போன்று வேறு எவரும் இல்லை.


10 பின் நிகழவிருப்பதைத் தொடக்கத்திலே நான் அறிவித்தேன்;
இனி நடப்பனவற்றை பண்டைக் காலத்திலேயே முன்னுரைத்தேன்;
"என் திட்டம் நிலைத்திருக்கும்;
என் விருப்பத்தை நிறைவேற்றுவேன்" என்றுரைத்தேன்.


11 இரைமேல் பாயும் பறவையைக் கிழக்கிலிருந்து அழைக்கிறேன்;
என் திட்டத்தைச் செயல்படுத்தும் ஒருவனைத்
தொலைநாட்டிலிருந்து வரவழைக்கிறேன்;
சொல்லியவன் நான்; நானே அதை நிறைவேற்றுவேன்;
திட்டமிட்டவன் நான்; நானே அதைச் செயல்படுத்துவேன்.


12 கடின மனத்தோரே,
வெற்றிக்கு வெகு தொலைவில் இருப்போரே, செவி கொடுங்கள்.


13 என் வெற்றியை அருகில் வரவழைத்துள்ளேன்;
அது தொலையில் இல்லை,
என் விடுதலை காலம் தாழ்த்தாது;
சீயோனுக்கு நான் விடுதலை வழங்குகின்றேன்;
இஸ்ரயேலில் என் மாட்சி நிலைக்கச் செய்வேன்.


(தொடர்ச்சி): எசாயா:அதிகாரங்கள் 47 முதல் 48 வரை