திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசேக்கியேல்/அதிகாரங்கள் 29 முதல் 30 வரை

விக்கிமூலம் இலிருந்து
"எகிப்து மன்னனாகிய பார்வோனே! நான் உனக்கு எதிராய் இருக்கின்றேன்; உன் ஆறுகளின் நடுவே வாழும் பெரிய முதலை நீ! 'நைல் என்னுடையது; நானே அதை உருவாக்கிக்கொண்டேன்' என்கிறாய் நீ! ஆனால், நான் உன் வாயில் தூண்டில்களை மாட்டி...உன் ஆறுகளினின்று வெளியே இழுத்துப் போடுவேன்." - எசேக்கியேல் 29:3-4

எசேக்கியேல் (The Book of Ezekiel)[தொகு]

அதிகாரங்கள் 29 முதல் 30 வரை

அதிகாரம் 29[தொகு]

எகிப்துக்கு எதிரான இறைவாக்கு[தொகு]


1 பத்தாம் ஆண்டின் பத்தாம் மாதத்தில் பன்னிரண்டாம் நாள்
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 மானிடா! உன் முகத்தை எகிப்திய மன்னன் பார்வோனுக்கு
நேராகத் திருப்பி அவனுக்கு எதிராகவும்
அனைத்து எகிப்துக்கு எதிராகவும் இறைவாக்குரை.
3 அவனிடம் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:


எகிப்து மன்னனாகிய பார்வோனே!
நான் உனக்கு எதிராய் இருக்கின்றேன்;
உன் ஆறுகளின் நடுவே வாழும் பெரிய முதலை நீ!
'நைல் என்னுடையது; நானே அதை உருவாக்கிக்கொண்டேன்' என்கிறாய் நீ!


4 ஆனால், நான் உன் வாயில் தூண்டில்களை மாட்டி
உன் ஆறுகளின் மீன்கள் யாவும் உன் செதில்களில் ஒட்டிக்கொள்ளச் செய்வேன்;
உன்னையும் உன் செதில்களில் ஒட்டியுள்ள மீன்களையும்
உன் ஆறுகளினின்று வெளியே இழுத்துப் போடுவேன்.


5 உன்னையும் உன் ஆறுகளின் மீன்களையும்
பாலை நிலத்தில் விட்டுவிடுவேன்;
உலர்ந்த தரையில் விழுந்து மடிவாய் நீ;
உன்னைச் சேகரிக்கவோ பொறுக்கி எடுக்கவோ எவரும் இரார்;
காட்டு விலங்குகளுக்கும் வானத்துப் பறவைகளுக்கும்
உன்னை இரையாய்த் தருவேன்.


6 அப்போது எகிப்தில் வாழும் யாவரும்
'நானே ஆண்டவர்' என அறிந்து கொள்வர். [1]


7 இஸ்ரயேல் வீட்டாருக்கு நாணற் கோலாய் இருந்தாய் நீ;
அவர்கள் உன்னைப் பற்றிப் பிடித்தபோது நீ முறிந்தாய்;
அவர்கள் தோள்களைக் கிழித்தாய்;
உன்மேல் அவர்கள் சாய்ந்தபோது நீ ஒடிந்தாய்;
அவர்கள் இடுப்பு நொறுங்கிற்று.


8 எனவே தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
நான் உனக்கு எதிராய் ஒரு வாளைக் கொண்டுவந்து
உன் மாந்தரையும் விலங்குகளையும் கொல்வேன்.
9 எகிப்து நாடு, பாழடைந்த பாலைநிலமாகும்.
அப்போது 'நானே ஆண்டவர்' என்பதை அவர்கள் அறிந்து கொள்வர்.
ஏனெனில் 'நைல் என்னுடையது, நானே அதை உருவாக்கிக் கொண்டேன்'
என்று உரைத்தாய்.
10 எனவே, நான் உனக்கெதிராகவும்
உன் ஆறுகளுக்கு எதிராகவும் இருக்கிறேன்.
மிக்தோல் முதல் சீனிம் வரை - கூசு எல்லைப் பகுதிவரை -
எகிப்து நாட்டைப் பாழடைந்த பாலைநிலமாக மாற்றுவேன்.
11 ஆள் நடமாட்டமோ கால்நடை நடமாட்டமோ அதில் இராது;
நாற்பது ஆண்டுகள் யாரும் அங்கே குடியிரார்.
12 அழிந்த நாடுகளில் ஒன்றாக எகிப்து நாட்டை மாற்றுவேன்.
நாற்பது ஆண்டுகள் அதன் நகர்கள்,
அழிந்த நகர்களிடையே பாழடைந்து கிடக்கும்.
எகிப்தியரை மக்களினங்களிடையே சிதறடித்து,
நாடுகளிடையே கலந்தொழியச் செய்வேன்.
13 ஏனெனில், தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
நாற்பதாண்டுகள் முடிந்தபின் எகிப்தியரை
அவர்கள் சிதறுண்டிருக்கும் நாடுகளினின்று கூட்டிச் சேர்ப்பேன்.
14 எகிப்தின் செல்வங்களை அவர்களுக்குத் திருப்பிக் கொடுப்பேன்.
அவர்களை அவர்களின் முன்னோர் நாடாகிய பத்ரோசுக்குக் கொண்டு சேர்ப்பேன்.
15 அங்கே எல்லா அரசுகளையும் விடச் சிறிய அரசாய் அது இருக்கும்.
மற்ற நாடுகளைவிட ஒருபோதும் தன்னை உயர்த்திக் கொள்ளாது.
நாடுகளை ஒருபோதும் அது ஆட்சி செய்ய இயலாதவாறு
அதை மிகவும் வலுவிழக்கச் செய்வேன்.
16 இஸ்ரயேல் மக்களுக்கு எகிப்து ஒருபோதும்
நம்பிக்கையின் அடிப்படையாய் இராமல்,
அதனிடம் அவர்கள் உதவி கேட்ட பாவத்தின் நினைவாக மட்டுமே இருக்கும்.
அப்போது 'நானே தலைவராகிய ஆண்டவர்' என அறிந்து கொள்வர்.

மாமன்னன் நெபுகத்னேசர் எகிப்தைக் கைப்பற்றுதல்[தொகு]


17 இருபத்து ஏழாம் ஆண்டு, முதல் மாதம், முதல் நாள்,
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
18 'மானிடா! பாபிலோன் மன்னன் நெபுகத்னேசர்
தீர் நகரை முற்றுகையிடுகையில்
தன் படைகளுடன் வருந்தி முயன்றான்;
தலைகள் யாவும் மொட்டையடிக்கப்பட்டன;
தோள்கள் யாவும் புண்ணாய்ப் போயின.
ஆயினும் தீர் நகருக்கு எதிராக அவனும்
அவன் படைகளும் செய்த முற்றுகையில்
அவர்களுக்கு யாதொரு கைம்மாறும் கிட்டாமற் போயிற்று.
19 எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
நான் எகிப்தை பாபிலோனின் மன்னன் நெபுகத்னேசருக்குக்
கொடுக்கப் போகிறேன்.
அவன் அதன் செல்வத்தைக் கொள்ளையிட்டு வாரிக் கொண்டு போவான்.
அது அவன் படைகளுக்குக் கூலியாக அமையும்.
20 அவனுடைய முயற்சிகளுக்குக் கைம்மாறாய்
நான் எகிப்தை அவனுக்குக் கொடுப்பேன்.
ஏனெனில், அவனும் அவன் படைகளும் அதை எனக்காகவே செய்தனர்,
என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
21 அந்நாளில் இஸ்ரயேல் வீட்டாருக்காக
ஒரு கொம்பு முளைக்கச் செய்வேன்.
அவர்கள் நடுவில் உன்னைப் பேச வைப்பேன்.
அப்போது, 'நானே ஆண்டவர்' என அறிந்து கொள்வர். [2]


குறிப்புகள்

[1] 29:6 = எசா 36:6.
[2] 29:1-32 = எசா 19:1-25; எரே 46:2-26.


அதிகாரம் 30[தொகு]

'எகிப்தை ஆண்டவர் தண்டிப்பார்'[தொகு]


1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 'மானிடா! இறைவாக்காகச் சொல்.
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:


'ஐயோ! துன்பத்தின் நாள் வருகின்றது' என்று அலறுங்கள்;


3 ஏனெனில் அருகில் உள்ளது அந்த நாள்;
ஆண்டவருக்குரிய அந்நாள் அண்மையில் உள்ளது;
அது மேகத்தின் நாள்; வேற்றினத்தாருக்கு அழிவின் நாள்.


4 எகிப்திற்கு எதிராய் ஒருவாள் வரும்;
கூசு பகுதியில் திகைப்பு மேலோங்கும்;
எகிப்தில் கொல்லப்பட்டோர் வீழ்கையில்
அதன் செல்வங்கள் வாரிக்கொண்டு செல்லப்படும்;
அதன் அடித்தளங்கள் அழிந்துபோகும்.


5 எகிப்துடன் கூசு, பூத்து, லூது,
அனைத்து அரேபியா, லிபியா மற்றும்
நான் உடன்படிக்கை செய்து கொண்ட நாட்டின்
மக்கள் யாவரும் வாளால் வீழ்வர்.


6 ஆண்டவர் கூறுவது இதுவே:
எகிப்தின் கூட்டு நாடுகள் வீழும்;
அதன் பெருமைக்குரிய வலிமை தோல்வியுறும்;
மிக்தோல் முதல் சீனிம் வரையிலுள்ள பகுதிக்குள்
எல்லாரும் வாளால் வீழ்வர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.


7 அவர்கள் பாழாக்கப்பட்ட நாடுகளுக்குள் பாழாகிக் கிடப்பர்;
அவர்களின் நகரங்கள், அழிந்த நகரங்கள் நடுவே அழிந்து கிடக்கும்.


8 நான் எகிப்துக்குத் தீ வைத்து
அதற்குத் துணையாயிருந்தோரை நொறுக்கும்போது
'நானே ஆண்டவர்' என்பதை அறிந்து கொள்வர்.


9 அந்நாளில் கூசு மக்களின் மனவுறுதியைக் குலைத்த நான்
கப்பலில் தூதரை அனுப்புவேன்;
எகிப்தின் அழிவு நாளில் திகில் அவர்களை ஆட்கொள்ளும்;
ஏனெனில் அந்நாள் உண்மையிலேயே வரப்போகின்றது.


10 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
பாபிலோனின் மன்னன் நெபுகத்னேசரின் கையால்
எகிப்தின் செல்வத்தை அழிக்கப்போகின்றேன்.


11 மக்களினங்களில் மிகவும் வலிமை வாய்ந்த அவன் படைகளும்
நாட்டை அழிக்கக் கொண்டு வரப்படும்;
எகிப்திற்கு எதிராய் அவர்கள் வாளை உருவி,
கொலையுண்டோரால் நாட்டை நிரப்புவர்.


12 ஆறுகளின் தண்ணீரை வற்றச் செய்து
தீயோருக்கு நாட்டை விற்றுவிடுவேன்.
அன்னியர் துணையால் நாட்டையும் அதிலுள்ள
யாவற்றையும் வெறுமையாக்குவேன்.
ஆண்டவராகிய நானே இதை உரைத்தேன்.


13 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
நான் சிலைகளை அழிப்பேன்;
நோபில் இருக்கும் உருவங்களுக்கு முடிவுகட்டுவேன்;
எகிப்தில் இனி மன்னன் இரான்;
நாடு முழுவதும் அச்சத்தைப் பரப்புவேன்.


14 பத்ரோசு நாட்டை நான் பாழாக்குவேன்;
சோவான் நகருக்கு நெருப்பு வைப்பேன்;
நோ நகரின்மீது தண்டனை வரச் செய்வேன்.


15 எகிப்தின் அரணாய் இலங்கும் சீன்மீது
என் சினத்தைக் கொட்டுவேன்;
நோ நகரின் எண்ணற்ற மக்களை வெட்டி வீழ்த்துவேன்.


16 எகிப்துக்கு நெருப்பிடுவேன்;
சீன் நகரம் துன்பத்தால் புலம்பும்;
புயலினால் நோ அலைக்கழிக்கப்படும்;
தீராத நெருக்கடியில் நோபு தவிக்கும்.


17 ஆவேன் மற்றும் பீபசேத்து நகர இளைஞர் வாளால் வீழ்வர்;
அந்நகர்கள் அடிமைத்தனத்தில் உழலும்.


18 எகிப்தின் கொழுவை நான் முறிக்கையில்,
தெகபனகேசு நகரின் பகல் இரவாகும்;
இறுமாப்புக்குரிய அதன் வலிமை
அங்கே முடிவுக்குக் கொண்டு வரப்படும்;
மேகங்களால் அது மூடப்படும்;
சிறையிருப்புக்கு அதன் சிற்றூர்கள் செல்லும்.


19 இவ்வாறு நான் எகிப்தின் மீது தண்டனை வரச்செய்வேன்.
அப்போது 'நானே ஆண்டவர்' என்பதை அறிந்து கொள்வர்.

'எகிப்திய மன்னனின் வலிமை முறிந்தது'[தொகு]


20 பதினொன்றாம் ஆண்டு, முதல் மாதத்தின் ஏழாம் நாள்,
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
21 'மானிடா! எகிப்தின் மன்னன் பார்வோனின் கையை
நான் முறித்து விட்டேன். ஆயினும்,
அது குணமாகும்படி கட்டுப்போடப்படவில்லை;
வாளேந்தும் அளவுக்கு வலிமை பெறும்படி
துணிகளால் சுற்றப்படவுமில்லை.
22 எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
நான் எகிப்தின் மன்னன் பார்வோனுக்கு எதிராய் இருக்கிறேன்.
அவனுடைய இரு கைகளையும் -
நலமான கையையும் ஏற்கெனவே ஒடிந்த கையையும் - முறித்து,
அவன் கையினின்று வாளை விழச் செய்வேன்.
23 மக்களினங்களிடையேயும் நாடுகளிடையேயும்
எகிப்தியரைச் சிதறுண்டு போகச் செய்வேன்.
24 பாபிலோன் மன்னனின் கைகளை வலுப்படுத்தி,
என் வாளை அவன் கையில் கொடுப்பேன்.
ஆனால், பார்வோனின் கைகளையோ முறிப்பேன்.
அவன் பாபிலோன் மன்னனின் முன்னிலையில்
படுகாயமுற்ற மனிதனாய்ப் புலம்புவான்.
25 நான் பாபிலோன் மன்னனின் கையில் வாளைக் கொடுத்து
அதை அவன் எகிப்துக்கு எதிராய்ச் சுழற்றச் செய்வேன்.
அப்போது 'நானே ஆண்டவர்' என்பதை அவர்கள் அறிந்து கொள்வர்.
26 எகிப்தியரைப் பல்வேறு மக்களிடையேயும்,
நாடுகளிடையேயும் சிதறடிப்பேன்.
அப்போது 'நானே ஆண்டவர்' என்பதை அவர்கள் அறிந்து கொள்வர்.


(தொடர்ச்சி): எசேக்கியேல்:அதிகாரங்கள் 31 முதல் 32 வரை