திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எரேமியா/அதிகாரங்கள் 43 முதல் 44 வரை

விக்கிமூலம் இலிருந்து
"மக்கள் அனைவரும் எரேமியாவுக்கு மறுமொழியாகக் கூறியது:...'நாங்கள் விண்ணக அரசிக்குத் தூபம் காட்டுவோம். நீர்மப்படையல்களைப் படைப்போம்...'" - எரேமியா 44:15,17

எரேமியா (The Book of Jeremiah)[தொகு]

அதிகாரங்கள் 43 முதல் 44 வரை

அதிகாரம் 43[தொகு]

எகிப்துக்குத் தப்பியோடுதல்[தொகு]


1 அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர்
எரேமியா வழியாகச் சொல்லி அனுப்பிய
எல்லாச் சொற்களையும்
மக்கள் அனைவருக்கும் அவர் அறிவித்து முடித்தார்.
2 பின்னர் ஓசயாவின் மகன் அசரியாவும்,
காரயாகின் மகன் யோகனானும்,
இறுமாப்புக் கொண்ட எல்லா ஆள்களும்
எரேமியாவை நோக்கி,
"நீ பொய் சொல்கிறாய்.
நீங்கள் எகிப்துக்குப் போய்
அங்கே தங்கியிருக்க வேண்டாம் என்று சொல்வதற்காக
நம் கடவுளாகிய ஆண்டவர் உன்னை அனுப்பவில்லை.
3 ஆனால் கல்தேயர் கையில் எங்களை ஒப்புவிக்கவும்,
எங்களைச் சாவுக்கு உள்ளாக்கவும்,
எங்களைப் பாபிலோனுக்கு நாடுகடத்தவுமே
நேரியாவின் மகன் பாரூக்கு
எங்களுக்கு எதிராக உன்னைத் தூண்டிவிட்டுள்ளான்" என்றனர்.
4 எனவே காரயாகின் மகன் யோகனானும்,
எல்லாப் படைத்தலைவர்களும்,
மக்கள் அனைவரும்
ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுக்கவில்லை;
அதாவது யூதாவிலேயே தங்கவில்லை.
5 காரயாகின் மகன் யோகனானும்
படைத்தலைவர்கள் அனைவரும்
யூதா நாட்டில் வாழும் பொருட்டு,
தாங்கள் விரட்டியடிக்கப்பட்டிருந்த
அனைத்து நாடுகளினின்றும் திரும்பி வந்திருந்த
யூதாவில் எஞ்சினோர் அனைவரையும்
6 அதாவது, ஆண், பெண், சிறுவர்,
அரசனின் புதல்வியர் ஆகியோரையும்,
சாப்பானின் பேரனும் அகிக்காமின் மகனுமான
கெதலியாவின் பொறுப்பில்
மெய்க்காப்பாளரின் தலைவர் நெபுசரதான்
விட்டுவைத்திருந்த எல்லாரையும்,
இறைவாக்கினர் எரேமியாவையும்
நேரியாவின் மகன் பாரூக்கையும் கூட்டிக்கொண்டு,
7 எகிப்து நாட்டுக்குப் போய்த்
தகபனகேசை அடைந்தனர்;
ஏனெனில் அவர்கள் ஆண்டவரின் குரலுக்குச்
செவி கொடுக்கவில்லை. [1]

நெபுகத்னேசர் படையெடுத்தலின் முன்னறிவிப்பு[தொகு]


8 தகபனகேசில் ஆண்டவரின் வாக்கு
எரேமியாவுக்கு அருளப்பட்டது:
9 பெரும் கற்கள் சிலவற்றை உன் கையில் எடுத்துக்கொள்.
தகபனகேசில் பார்வோன் அரண்மனை வாயில்களத்தில் உள்ள
காரையில் யூதா மக்கள் முன்பாக அவற்றை மறைத்து வை.
10 பிறகு நீ அவர்களிடம் சொல்ல வேண்டியது:
இஸ்ரயேலின் கடவுளாகிய
படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
என் ஊழியனும் பாபிலோனிய மன்னனுமான
நெபுகத்னேசரை இங்கு வரவழைப்பேன்.
நான் மறைத்துவைத்துள்ள இந்தக் கற்கள்மீது அவன் [2]
தன் அரியணையை அமைத்துத்
தன் கொற்றக்குடையை விரித்துவைப்பான்.
11 அவன் வந்து, எகிப்து நாட்டைத் தாக்கி அழிப்பான்;
கொள்ளைநோய்க்குரியோர் கொள்ளைநோய்க்குள்ளாவர்;
நாடு கடத்தலுக்குரியோர் நாடுகடத்தப்படுவர்;
வாளுக்குரியோர் வாளால் மாள்வர்.
12 மேலும் அவன் எகிப்தியத் தெய்வங்களின்
கோவில்களைத் தீக்கிரையாக்குவான்;
அத்தெய்வச் சிலைகளை எரித்துத் தூக்கிச்செல்வான்.
இடையன் தன் ஆடையைத் துப்புரவு செய்வதுபோல்,
அவன் எகிப்தைத் துப்புரவு செய்வான்;
அங்கிருந்து நலமே திரும்பிச் செல்வான்.
13 எகிப்து நாட்டில் உள்ள பெத்சமேசின் தூண்களை
அவன் தகர்த்தெறிவான்;
எகிப்தியத் தெய்வங்களின் கோவில்களைத் தீக்கிரையாக்குவான்.


குறிப்புகள்

[1] 43:5-7 = 2 அர 25:26.
[2] 43:10 - 'நான்' என்பது எபிரேய பாடம்.


அதிகாரம் 44[தொகு]

எகிப்தில் இஸ்ரயேலுக்கு அருளப்பட்ட இறைவாக்கு[தொகு]


1 எகிப்து நாட்டின் மிக்தோல், தகபனகேசு,
தப்னீஸ், மெம்பிசு, ஆகிய நகர்களிலும்
பத்ரோசு நாட்டிலும் வாழ்ந்த வந்த
யூதர் எல்லாரையும் குறித்து
எரேமியாவுக்கு அருளப்பட்ட வாக்கு:
2 இஸ்ரயேலின் கடவுளாகிய
படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
எருசலேம் மீதும் யூதாவின் எல்லா நகர்கள் மீதும்
நான் வருவித்துள்ள தண்டனையை
நீங்கள் பார்த்திருக்கிறீர்கள.
இதோ, இன்று அவை பாழடைந்து
குடியிருப்பாரற்றுக் கிடக்கின்றன.
3 ஏனெனில், அவர்களோ நீங்களோ
உங்கள் மூதாதையரோ அறிந்திராத
வேற்றுத் தெய்வங்களை அவர்கள் நாடிச்சென்று,
தூபம் காட்டி,
அவற்றைத் தொழுததன் மூலம் தீச்செயல் புரிந்து
எனக்குச் சினமூட்டினார்கள்.
4 இருப்பினும்,
நான் என் ஊழியரான இறைவாக்கினர் அனைவரையும்
திரும்பத் திரும்ப உங்களிடம் அனுப்பி வைத்து,
நான் வெறுக்கின்ற இந்த அருவருப்பான செயலைச்
செய்யாதீர்கள் என்று சொல்லச் செய்திருந்தேன்.
5 அவர்களோ அதைக் கேட்கவில்லை;
காதில் வாங்கிக்கொள்ளவுமில்லை.
தங்கள் தீச்செயலை விட்டுத் திரும்பவில்லை;
வேற்றுத் தெய்வங்களுக்குத் தூபம் காட்டுவதை நிறுத்தவுமில்லை.
6 எனவே என் சீற்றமும் சினமும்
யூதாவின் நகர்கள்மேலும்
எருசலேமின் தெருக்கள்மேலும் மூண்டெழுந்து
அவற்றைத் தீக்கிரையாக்கின.
இன்று காண்பதுபோல், அவை பாழடைந்து,
ஆளரவமற்றுப் போயின.
7 இப்போது இஸ்ரயேலின் கடவுளாகிய
படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
உங்களுள் ஒருவன் கூட எஞ்சியிராதபடி,
ஆண், பெண், சிறுவர், குழந்தை ஆகிய அனைவரையும்
யூதாவினின்று அழித்து விடுவதன்மூலம்
நீங்கள் உங்களுக்கே பெரும் தீங்கை
விளைவித்துக்கொள்ளப் பார்க்கிறீர்களே, அது ஏன்?
8 நீங்கள் தங்கியிருக்க வந்துள்ள எகிப்து நாட்டில்
வேற்றுத் தெய்வங்களுக்குத் தூபம் காட்டுதல் போன்ற
உங்கள் செயல்களால் ஏன் எனக்குச் சினமூட்டுகிறீர்கள்?
நான் உங்களை அழிக்க,
உலகின் எல்லா மக்களினத்தார் மத்தியிலும்
நீங்கள் பழிப்புக்கும் கண்டனத்துக்கும்
உள்ளவதற்கா இவ்வாறு செய்கிறீர்கள்?
9 உங்கள் மூதாதையரின் தீச்செயல்களையும்,
யூதா அரசர்களின் தீச்செயல்களையும்,
அவர்களுடைய மனைவியரின் தீச்செயல்களையும்,
உங்களுடைய சொந்தத் தீச்செயல்களையும்
யூதா நாட்டிலும் எருசலேமின் தெருக்களிலும்
உங்கள் மனைவியர் செய்த தீச்செயல்களையும்
நீங்கள் மறந்துபோய் விட்டீர்களா?
10 இந்நாள் வரை அவர்கள் எனக்குப் பணிந்துபோகவில்லை;
அஞ்சி நடக்கவில்லை;
உங்களுக்கும் உங்கள் மூதாதையர்க்கும்
நான் கொடுத்திருந்த திருச்சட்டத்தின்படியும்
நியமங்களின்படியும் ஒழுகவுமில்லை.


11 எனவே இஸ்ரயேலின் கடவுளாகிய
படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
உங்களுக்குத் தண்டனை அளிக்கவும்,
யூதா முழுவதையும் அழிக்கவும்
நான் முடிவுசெய்துள்ளேன்.
12 எகிப்து நாட்டிற்கு வந்து
தங்கியிருக்க முடிவுசெய்துள்ள
யூதாவின் எஞ்சினோரை நான் தாக்க,
அவர்கள் எல்லாரும் அழிந்து போவார்கள்;
எகிப்து நாட்டில் அவர்கள் அனைவரும் வீழ்ச்சியுறுவார்கள்;
வாளுக்கும் பஞ்சத்துக்கும் அவர்கள் இரையாவார்கள்;
சிறியோர் முதல் பெரியோர் வரை
அவர்கள் எல்லாரும் வாளாலும் பஞ்சத்தாலும் மடிவார்கள்;
சாபம், பேரச்சம், பழிப்பு, கண்டனம்
ஆகியவற்றுக்கு ஆளாவார்கள்.
13 எருசலேமை வாள், பஞ்சம், கொள்ளை நோயால்
நான் தண்டித்துள்ளது போன்று
எகிப்து நாட்டில் வாழ்வோரையும் தண்டிப்பேன்.
14 எகிப்து நாட்டில் தங்கியிருக்கும்படி வந்துள்ள
யூதாவின் எஞ்சியோருள் எவருமே தப்பமாட்டார்;
உயிர் பிழைக்கவும் மாட்டார்.
யூதா நாட்டில் குடியிருக்கும் பொருட்டு
அங்குத் திரும்பிச் செல்ல ஆவலோடு ஏங்கியும்
அங்குத் திரும்பிச் செல்லமாட்டார்.
தப்பியோடுவோரைத் தவிர
வேறு எவருமே திரும்பிச் செல்லமாட்டார்.


15 அப்பொழுது, தங்கள் மனைவியர்
வேற்றுத் தெய்வங்களுக்குத் தூபம் காட்டியதை அறிந்திருந்த
எல்லா ஆண்களும்,
அங்குக் கூட்டமாய் நின்று கொண்டிருந்த எல்லாப் பெண்களும்,
எகிப்து நாட்டிலும் பத்ரோசிலும் வாழ்ந்துவந்த
மக்கள் அனைவரும்
எரேமியாவுக்கு மறுமொழியாகக் கூறியது:
16 "ஆண்டவர் பெயரால் எங்களுக்கு
நீர் அறிவித்துள்ள செய்தியைப் பொறுத்தமட்டில்
நாங்கள் உமக்குச் செவிகொடுக்கமாட்டோம்.
17 நாங்கள் செய்து கொண்ட எல்லா நேர்ச்சைகளையும்
திண்ணமாய் நிறைவேற்றுவோம்;
நாங்களும் எங்கள் மூதாதையரும்
அரசர்களும் தலைவர்களும்
யூதாவின் நகர்களிலும் எருசலேமின் தெருக்களிலும்
செய்துள்ளது போல,
நாங்கள் விண்ணக அரசிக்குத் தூபம் காட்டுவோம்.
நீர்மப்படையல்களைப் படைப்போம்.
ஏனெனில், அப்பொழுது எங்களுக்கு
ஏராளமான உணவு இருந்தது.
நாங்கள் வளமுடன் வாழ்ந்தோம்.
தீமை எதுவும் எங்களை அணுகியதில்லை.
18 ஆனால், நாங்கள் விண்ணக அரசிக்குத்
தூபம் காட்டுவதையும்
நீர்மப் படையல்களைப் படைப்பதையும்
நிறுத்திவிட்ட காலத்திலிருந்து,
எங்களுக்கு எல்லாமே குறைபாடாய் உள்ளது.
வாளாலும் பஞ்சத்தாலும் நாங்கள்
அழிந்து கொண்டிருக்கிறோம்."
19 அப்பொழுது பெண்கள்,
"விண்ணக அரசிக்குத் தூபம் காட்டி,
நீர்மப் படையல்களைப் படைத்தபொழுது,
எங்கள் கணவர்களின் ஒப்புதல் இல்லாமலா
நாங்கள் விண்ணக அரசியின்
உருவம் தாங்கிய மாவடை சுட்டு,
நீர்மப் படையல்கள் படைத்தோம்?" என்றார்கள்.


20 இந்த மறுமொழி கூறிய ஆண், பெண்
ஆகிய எல்லா மக்களிடமும் எரேமியா கூறியது:
21 "நீங்களும் உங்கள் மூதாதையர், அரசர்கள்,
தலைவர்கள், நாட்டுமக்கள் எல்லாரும்
யூதாவின் நகர்களிலும்
எருசலேமின் தெருக்களிலும் தூபம் காட்டினீர்களே,
அதை ஆண்டவர் மறந்து விட்டாரா?
அதை அவர் தம் நினைவில் கொள்ளவில்லையா?
22 நீங்கள் செய்துள்ள தீச்செயல்களையும்
அருவருப்பான செயல்களையும்
ஆண்டவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
அதனால் உங்கள் நாடு கண்டனத்திற்கும்
பேரச்சத்திற்கும் சாபத்திற்கும் உள்ளாகி,
இன்று காண்பதுபோல், குடியிருப்பாரற்றுக் கிடக்கிறது.
23 நீங்கள் தூபம் காட்டியதாலும்,
ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்ததாலும்,
அவரது குரலுக்குச் செவிகொடாது,
அவருடைய திருச்சட்டம், நியமங்கள்,
ஒழுங்குமுறைகள் ஆகியவற்றிற்கேற்ப ஒழுகாததாலுமே,
இன்றும் காண்பது போல்,
இத்தீங்கு உங்களுக்கு நேர்ந்துள்ளது."


24 தொடர்ந்து எரேமியா
எல்லா மக்களையும் பெண்களையும் நோக்கிக் கூறியது:
"எகிப்து நாட்டில் உள்ள யூதாவின் மக்களே,
நீங்கள் அனைவரும் ஆண்டவரின் சொல்லுக்குச் செவிகொடுங்கள்.
25 இஸ்ரயேலின் கடவுளாகிய
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
நீங்களும் உங்கள் மனைவியரும்,
'விண்ணக அரசிக்குத் தூபம் காட்டி,
நீர்மப்படையல்களை அவளுக்குப் படைப்பதாக
நாங்கள் செய்துகொண்ட நேர்ச்சைகளை
நிறைவேற்றியே தீருவோம்' என்று
நீங்கள் சொல்லால் கூறியதைச்
செயலில் நிறைவேற்றிவிட்டீர்கள்.
நன்று! நன்று!
உங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றுங்கள்!
உங்கள் பொருத்தனைகளைச் செலுத்துங்கள்!
26 எனவே எகிப்து நாட்டில் குடியிருக்கும்
யூதாவின் மக்களே,
நீங்கள் அனைவரும் ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்:
ஆண்டவர் கூறுகிறார்:
'தலைவராகிய வாழும் ஆண்டவர் மேல் ஆணை!'
எனச் சொல்லி எகிப்து நாடு எங்கணும்
யூதாவின் எந்தக் குடிமகனும்
என் பெயரை வாயால் உச்சரிக்கமாட்டான் என்று
என் பெருமை வாய்ந்த பெயரால்
நான் ஆணையிட்டுக் கூறியுள்ளேன்.
27 நன்மை அன்று, தீமை விளைவிக்கவே
அவர்கள் மட்டில் நான் விழிப்பாய் இருக்கிறேன்;
எகிப்து நாட்டில் உள்ள யூதாவின் மக்கள் எல்லாரும்
முற்றிலும் அழியும்வரை
வாளாலும் பஞ்சத்தாலும் அவர்களை வதைப்பேன்.
28 வாளுக்குத் தப்பும் ஒரு சிலரே
எகிப்து நாட்டினின்று யூதா நாட்டுக்குத் திரும்பிச் செல்வர்.
அப்பொழுது எகிப்து நாட்டில் தங்கியிருக்கும்படி
வந்துள்ள யூதாவின் எஞ்சினோர் அனைவரும்,
நிலைநிற்பது என் சொல்லா,
அவர்கள் சொல்லா? என்பதை அறிந்துகொள்வர்.
29 நான் இந்த இடத்திலேயே உங்களைத் தண்டிப்பேன்.
இதுவே உங்களுக்கு அடையாளம்,
என்கிறார் ஆண்டவர்.
இதனால் உங்கள் தண்டனை பற்றி
உங்களுக்கு எதிராக நான் கூறிய சொற்கள்
உறுதியாய் நிலைநிற்கும் என்பதை
நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
30 ஆண்டவர் கூறுவது இதுவே:
இதோ, யூதாவின் அரசனான செதேக்கியாவை,
அவன் பகைவனும் அவன் உயிரைப் பறிக்கத் தேடியவனுமான
பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரிடம்
நான் கையளித்தது போல,
எகிப்திய மன்னன் பார்வோன் ஒப்ராவை
அவன் பகைவர் கையிலும்
அவன் உயிரைப் பறிக்கத் தேடுவோர் கையிலும் ஒப்புவிப்பேன்." [*]


குறிப்பு

[*] 44:30 = 2 அர 25:1-7.



(தொடர்ச்சி): எரேமியா:அதிகாரங்கள் 45 முதல் 46 வரை