திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எஸ்தர்/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

விக்கிமூலம் இலிருந்து
அகஸ்வேர் மன்னன் முன்னிலையில் எஸ்தர் அரசி. ஓவியர்: ஆர்த்தேமிசியா ஜெந்திலேஸ்கி. ஆண்டு: 1628.

எஸ்தர் (The Book of Esther[தொகு]

அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

அதிகாரம் 5[தொகு]

மன்னரையும் ஆமானையும் எஸ்தர் விருந்துக்கு அழைத்தல்[தொகு]


1 மூன்றாம் நாள் எஸ்தர், அரசியின் ஆடையணிந்து
அரச மாளிகைக்கு எதிரில் இருந்த உள்முற்றத்தில் நின்றார்.
அரண்மனை நுழைவாயிலின் எதிரில் இருந்த அரசவை மண்டபத்தில்,
அரியணை மீது மன்னர் வீற்றிருந்தார்.
2 உள்முற்றத்தில் நின்ற அரசி எஸ்தரைக் கண்டதும்
மன்னரின் கண்களில் அவருக்குத் தயவு கிடைத்தது.
மன்னர் தம் கைகளில் இருந்த பொற்செங்கோலை எஸ்தரிடம் நீட்ட,
எஸ்தர் அருகில் சென்று செங்கோலின் நுனியைத் தொட்டார்.
3 மன்னர் அவரை நோக்கி,
"எஸ்தர் அரசியே! உனக்கு என்ன வேண்டும்? உன் வேண்டுகோள் யாது?
உன் அரசின் பாதியேயாகிலும் அது உனக்களிக்கப்படும்" என்றார்.


4 அதற்கு எஸ்தர்,
"மன்னர் விரும்பினால், இன்று நான் வைத்திருக்கும் விருந்திற்குத்
தாங்களும் ஆமானும் வருகை தர வேண்டும்" என்று பதிலிறுத்தார்.
5 எஸ்தரின் அழைப்பிற்கிணங்கி மன்னர் ஆமானை விரைந்து வருமாறு பணித்தார்.
அவ்வாறே மன்னரும் ஆமானும் எஸ்தர் வைத்த விருந்திற்குச் சென்றனர்.
6 விருந்தில் திராட்சை மது அருந்துகையில்,
மன்னர் எஸ்தரை நோக்கி, "உன் வேண்டுகோள் எதுவோ அது உனக்குக் கொடுக்கப்படும்;
அது அரசின் பாதியே ஆனாலும் உனக்குக் கொடுக்கப்படும்" என்றார்.
7-8 அதற்கு எஸ்தர்,
"என் விண்ணப்பமும் வேண்டுகோளும் இதுவே:
மன்னரின் கண்களில் எனக்குத் தயவு கிடைத்தால்,
மன்னரின் பார்வையில் இது நலமெனத் தோன்றினால்,
மன்னரும் ஆமானும் நான் நாளைய தினமும்
உங்களுக்காய் ஆயத்தம் செய்யும் விருந்திற்கு வருகை தருமாறு வேண்டுகின்றேன்.
அவ்வமயம் மன்னரின் வார்த்தையின்படி என் விண்ணப்பத்தைத் தெரிவிப்பேன்" என்று பதிலிறுத்தாள்.

மொர்தக்காயைக் கொல்ல ஆமானின் திட்டம்[தொகு]


9 அன்று ஆமான் மகிழ்வுடனும் உவகையுடனும் வெளியே சென்றான்.
ஆயினும் அரச வாயிலருகில் பணிபுரிந்த மொர்தக்காய் எழுந்து நிற்காததையும்
தன்னைக் கண்டு ஒதுங்கி நில்லாததையும் பார்த்தபொழுது
அவருக்கெதிராய் ஆமானின் நெஞ்சம் வெஞ்சினத்தால் நிறைந்தது.
10 எனினும், ஆமான் தன்னைக் கட்டுப்படுத்தியவாறே வீட்டிற்கு வந்து,
தன் நண்பர்களையும் மனைவி செரேசையும் வரும்படி அழைத்தான்.
11 ஆமான் அவர்களிடம் தன் செல்வச் சிறப்பைப் பற்றியும்,
தன் மைந்தர்களின் எண்ணிக்கையைப் பற்றியும்,
மன்னர் தன்னை எவ்வாறு அனைத்துத் தலைவர்களுக்கும்
அரச அலுவலர்களுக்கும் மேலாய் உயர்த்தியுள்ளார் என்பதைப் பற்றியும் விரித்துரைத்தான்.
12 மேலும் அவன்,
"அரசி எஸ்தர் ஆயத்தம் செய்த விருந்திற்குத்
தன்னையன்றி வேறெவரையும் மன்னருடன் வரும்படி அனுமதியாமல்,
நாளையும் விருந்திற்கு என்னை மன்னருடன் வருமாறு அழைத்திருக்கிறாள்.
13 எனினும், அரசவாயிலருகில் அமர்ந்திருக்கும் யூதனாகிய
மொர்தக்காயைக் காண்கையில் இவையனைத்தும் எனக்கு ஒன்றும் இல்லை" எனவும் கூறினான்.


14 இதைக் கேட்ட அவன் மனைவி செரேசும், நண்பர்களும் அவனை நோக்கி,
"ஐம்பது முழ உயரத் தூக்கு மரம் செய்து,
நாளை மன்னரிடம் கூறி மொர்தக்காயை அதில், தூக்கிலிட்டுப்
பின்னர் அரசருடன் விருந்துண்டு மகிழச் செல்லும்" என்றனர்.
இவ்வார்த்தை ஆமானுக்கு நலமெனப்பட்டதால் அவன் தூக்குமரம் ஒன்று செய்வித்தான்.


அதிகாரம் 6[தொகு]

மொர்தக்காய்க்கு மன்னர் உயர்வு அளித்தல்[தொகு]


1 அன்றிரவு மன்னருக்குத் தூக்கம் வரவில்லை.
எனவே அவர் தம் ஆட்சியின் குறிப்புகள் அடங்கிய ஏட்டைத்
தம்மிடம் கொண்டுவந்து வாசிக்குமாறு பணித்தார்.
2 அரண்மனை வாயிற் காவலர்களான
அலுவலர் பிக்தானாவும், செரேசும்,
மன்னர் அகஸ்வேரை கொல்ல வகை தேடினதை
மொர்தக்காய் அறிவித்ததாக அதில் எழுதப்பட்டிருந்தது. [*]
3 அச்சமயம் மன்னர்,
"இதற்காக மொர்தக்காய்க்கு என்ன மரியாதையும் சிறப்பும் செய்யப்பட்டடன?" என்று வினவ
மன்னரின் பணியாளர் "அவருக்கு யாதென்றும் செய்யப்படவில்லை" என்றனர்.
4 "முற்றத்தில் இருப்பது யார்?" என்று மன்னர் வினவினார்.
தான் நாட்டிய தூக்குமரத்தில் மொர்தக்காயைத் தூக்கிலிட வேண்டும் என்று
மன்னரிடம் வேண்டுவதற்காய் ஆமான் அவ்வமயம் அரசமாளிகையின் வெளிமுற்றத்தில் வந்து நின்றான்.
5 மன்னரின் பணியாளர் மன்னரை நோக்கி,
"இதோ ஆமான் முற்றத்தில் நின்று கொண்டிருக்கிறார்" என்றனர்.
உடனே மன்னர் அவனை உள்ளே வரச் சொன்னார்.
6 ஆமானிடம், "மன்னர் தாம் மரியாதை செய்ய விரும்பும் மனிதருக்கு என்ன செய்ய வேண்டும்?"
என்று மன்னர் வினவினார்.
"என்னைவிட வேறு எவருக்கு மன்னர் மரியாதை செய்ய விரும்புவார்?" என்று
ஆமான் தன் உள்ளத்தில் நினைத்துக் கொண்டான்.


7 எனவே ஆமான் மன்னரை நோக்கி,
"மன்னர் தாம் மரியாதை செய்ய விரும்பும் ஒருவருக்கென
8 மன்னர் அணிகின்ற ஆடைகளும், அமர்கின்ற புரவியும்,
தலையில் சூடும் மகுடமும் கொண்டுவரப்பட வேண்டும்.
9 அந்த ஆடைகளும் புரவியும்
அரசரின் தலைமை அதிகாரிகளுள் சிறந்த உயர்குடிமகன் ஒருவரிடம் ஒப்படைக்கப்படவேண்டும்.
மன்னர் மரியாதை செய்ய விரும்பும் மனிதருக்கு அவர் அந்த ஆடைகளை அணிவித்து,
புரவியின்மீது அமர்த்தி, அவரை நகர் வீதிகளில் வலம் வரச் செய்து,
'இதுவே அரசர் தாம் மரியாதை செய்ய விரும்பும் மனிதருக்குச் செய்யும் சிறப்பாகும்!' என,
அவருக்கு முன்னால் அறிவிக்கவேண்டும்" என்று பதிலுறுத்தான்.
10 உடனே மன்னர் ஆமானை நோக்கி,
"ஆடைகளையும் புரவியையும் விரைவாய்க் கொணர்ந்து
நீ கூறியவாறே அரசவாயிலில் நிற்கும் யூதராகிய மொர்தக்காய்க்குச் செய்.
நீ கூறியவற்றில் எதையும் விட்டுவிடாதே" என்று கூறினார்.
11 அவ்வாறே ஆமான் ஆடைகளையும் புரவியையும் கொணர்ந்து,
மொர்தக்காய்க்கு அந்த ஆடைகளை உடுத்துவித்து,
புரவியின் மீது அமர்த்தி, நகர் வீதிகளில் வலம் வரச் செய்து,
"இதுவே அரசர் தாம் மரியாதை செய்ய விரும்பும் மனிதருக்குச் செய்யும் சிறப்பாகும்" என்று
அவருக்கு முன்பாய் அறிவிக்கப்படுமாறு செய்தான்.


12 இதற்குப்பின் மொர்தக்காய் அரச வாயிலுக்குச் சென்றார்.
ஆமானோ புலம்பிக்கொண்டு, தன் தலைக்கு முக்காடிட்டுத் தன் வீட்டிற்கு விரைந்தான்.
13 ஆமான் தன் மனைவி செரேசு, நண்பர்கள் அனைவரிடமும்
தனக்கு நேரிட்ட அனைத்தையும் கூறினான்.
உடனே அந்த ஆலோசகர்களும் அவன் மனைவி செரேசும் அவனை நோக்கி,
"யூத குலத்தனனாகிய மொர்த்க்காய்க்கு முன்பாக
நீ வீழ்ச்சியுறத் தொடங்கிவிட்டாய்.
நீ அவனை எதிர்த்து நிற்க மாட்டாய்;
அவனுக்கு முன்பாய் முற்றிலும் வீழ்வது திண்ணம்" என்றனர்.

ஆமான் கொல்லப்படல்[தொகு]


14 இவ்வாறு அவர்கள் அவனிடம் பேசிக்கொண்டிருக்கையில்,
மன்னரின் அலுவலர் அவ்விடம் வந்து,
எஸ்தர் ஏற்பாடுசெய்திருந்த விருந்திற்கு வருமாறு ஆமானை விரைவுபடுத்தினர்.


குறிப்பு

[*] 6:2 = எஸ் 2:21-22.


(தொடர்ச்சி): எஸ்தர்:அதிகாரங்கள் 7 முதல் 8 வரை