திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/ஒசேயா/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

விக்கிமூலம் இலிருந்து
"கட்டுக்கடங்காத இளம் பசுவைப் போல இஸ்ரயேல் மக்கள் பிடிவாதமாயிருக்கின்றார்கள்; ஆண்டவர் அவர்களைப் பரந்த புல்வெளியில் ஆட்டுக் குட்டியைப் போல் மேய்க்க முடியுமா?" - ஒசேயா 4:16


ஒசேயா (The Book of Hosea)[தொகு]

அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

அதிகாரம் 3[தொகு]

ஒசேயாவும் உண்மையற்ற மனைவியும்[தொகு]


1 ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே:


"இஸ்ரயேல் மக்கள் வேற்று தெய்வங்கள்மேல் பற்றுக்கொண்டு,
உயர்ந்த திராட்சை அடைகளை [1] விரும்புகின்றனர்.
எனினும் அவர்கள்மேல் ஆண்டவர் அன்பு வைத்துள்ளார்.
இதற்கு அடையாளமாக நீ மறுபடியும் போய்,
வேறொருவனால் காதலிக்கப்பட்டவளும் விபசாரியுமான
ஒரு பெண்ணின் மேல் காதல் கொள்."


2 அவ்வாறே நான் அவளைப் பதினைந்து வெள்ளிக்காசுகளையும் [2]
ஒன்றரை கலம் [3] அளவுள்ள வாற் கோதுமையும் கொடுத்து
எனக்கென வாங்கிக் கொண்டேன்.


3 பின்பு நான் அவளை நோக்கி,
'நீ வேசித்தொழில் புரியாமலும்
வேறொருவனுக்கு உடைமையாகாமலும்,
நெடுநாள் எனக்கே உரியவளாய் வாழவேண்டும்.
நானும் அவ்வண்ணமே உனக்காக வாழ்வேன்' என்றேன்.


4 இஸ்ரயேல் மக்கள் பல நாள்கள் அரசனின்றி, தலைவனின்றி,
பலியின்றி, பலி பீடமின்றி, குருத்துவ உடையின்றி,
குல தெய்வச் சிலைகளுமின்றி இருப்பார்கள்.


5 அதற்குப் பிறகு, இஸ்ரயேல் மக்கள்
தங்கள் கடவுளாகிய ஆண்டவரையும்
தங்கள் அரசனாகிய தாவீதையும் தேடி வருவார்கள்;
இறுதி நாள்களில் ஆண்டவரையும்
அவர்தம் நன்மைகளையும் நாடி நடுக்கத்தோடு வருவார்கள்.


குறிப்புகள்

[1] 3:1 - இவை பாகால் வழிபாட்டில் படைக்கப்பட்டவை.
[2] 3:2 - "பதினைந்து செக்கேல் நிறையுள்ள வெள்ளி" என்பது எபிரேய பாடம்.
[3] 3:2 - "ஒன்றரை கோமர்" என்பது எபிரேய பாடம்.


அதிகாரம் 4[தொகு]

இஸ்ரயேலுக்கு எதிரான குற்றச்சாட்டு[தொகு]


1 இஸ்ரயேல் மக்களே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்;
நாட்டில் குடியிருப்பவர்களோடு ஆண்டவருக்கு வழக்கு ஒன்று உண்டு;
நாட்டில் உண்மையும் இல்லை, இரக்கமும் இல்லை;
கடவுளை அறியும் அறிவும் இல்லை.


2 பொய்யாணை, பொய்யுரை, கொலை, களவு,
விபசாரம் ஆகியன பெருகிவிட்டன.
எல்லாக் கட்டுப்பாடுகளையும் தகர்த்தெறிகின்றனர்;
இரத்தப் பழிமேல் இரத்தப்பழி குவிகின்றது.


3 ஆதலால் நாடு புலம்புகின்றது;
அதில் குடியிருப்பன எல்லாம் நலிந்து போகின்றன;
காட்டு விலங்குகளும், வானத்துப் பறவைகளும்,
கடல்வாழ் மீன்களும்கூட அழிந்து போகின்றன.


4 ஆயினும் எவனும் வழக்காட வேண்டாம்;
எவனும் குற்றம் சாட்ட வேண்டாம்;
[*] உன் மக்கள் குருவோடு வழக்காடுகிறவர்களைப் போலிருக்கிறார்கள்.


5 பகலிலே நீ இடறி விழுவாய்;
இரவிலே இறைவாக்கினனும் உன்னோடு இடறி விழுவான்;
உன் தாயை நான் அழித்துவிடுவேன்.


6 அறிவின்மையால் என் மக்கள் அழிகின்றார்கள்;
நீ அறிவைப் புறக்கணித்தாய்;
நானும் நீ எனக்குக் குருவாய் இராதபடி உன்னை புறக்கணிப்பேன்.
நீ உன் கடவுளின் திருச்சட்டத்தை மறந்துவிட்டாய்;
நானும் உன் மக்களை மறந்து விடுவேன்.


7 எவ்வளவுக்கு அவர்கள் பலுகினார்களோ
அவ்வளவுக்கு அவர்கள் எனக்கு எதிராயப் பாவம் செய்தார்கள்;
அவர்கள் மேன்மையை இகழ்ச்சியாக மாற்றுவேன்.


8 என் மக்களின் பாவங்களால் இவர்கள் வயிறு வளர்க்கின்றார்கள்;
அவர்கள் தீச்செயல் செய்யும்படி இவர்கள் ஏங்குகின்றார்கள்.


9 குருவுக்கு நேரிடுவது மக்களுக்கும் நேரிடும்;
அவர்களுடைய தீய வழிகளுக்காகத் தண்டனை வழங்குவேன்;
அவர்களுடைய செயல்களுக்கேற்ற பதிலை அளிப்பேன்.


10 அவர்கள் உண்டாலும் நிறைவடைய மாட்டார்கள்;
வேசித்தனம் செய்தாலும் பலுகமாட்டார்கள்;
ஏனெனில் வேசித்தனத்தில் ஈடுபடுவதற்காக
ஆண்டவரைக் கைவிட்டார்கள்.

இஸ்ரயேலில் சிலைவழிபாடும் குடிவெறியும்[தொகு]


11 மதுவும், திராட்சை இரசமும் அறிவைக் கெடுக்கும்.


12 என் மக்கள் மரக்கட்டையிடம் குறி கேட்கின்றனர்;
அவர்களது கோல் மறைமொழிகள் கூறுகின்றது!
விபசாரப் புத்தி அவர்களை நெறிதவறச் செய்தது;
விபசாரம் செய்வதற்காக அவர்கள் தங்கள் கடவுளைவிட்டு அகன்றனர்.


13 மலையுச்சிகளில் அவர்கள் பலியிடுகின்றார்கள்;
குன்றுகள் மேலும், நல்ல நிழல் தரும் கருவாலி, புன்னை,
தேவதாரு ஆகிய மரங்களின் கீழும் நறுமணப் புகை எழுப்புகின்றார்கள்;
ஆதலால் உங்கள் புதல்வியர் வேசித்தனம் செய்கின்றார்கள்;
உங்கள் மருமக்கள் விபசாரம் புரிகின்றார்கள்.


14 உங்கள் புதல்வியர் விபசாரம் செய்தாலும்,
உங்கள் மருமக்கள் விபசாரம் புரிந்தாலும்,
நான் அவர்களைத் தண்டிக்கமாட்டேன்;
ஏனெனில், ஆண்கள் விலைமாதரோடு போகின்றார்கள்;
தேவதாசிகளோடு சேர்ந்து பலி செலுத்துகின்றார்கள்;
அறிவற்ற அம்மக்கள் அழிந்து போவார்கள்.

யூதாவுக்கு எச்சரிக்கை[தொகு]


15 இஸ்ரயேல், நீ வேசித்தனம் புரிந்தாலும்,
யூதா நாடாகிலும் குற்றமற்றதாய் இருக்கட்டும்;
கில்காலுக்குள் நுழையாதீர்கள்; பெத்தாவேனுக்குப் போகாதீர்கள்;
"ஆண்டவர்மேல் ஆணை" என்று ஆணையிடாதீர்கள்.


16 கட்டுக்கடங்காத இளம் பசுவைப் போல
இஸ்ரயேல் மக்கள் பிடிவாதமாயிருக்கின்றார்கள்;
ஆண்டவர் அவர்களைப் பரந்த புல்வெளியில்
ஆட்டுக் குட்டியைப் போல் மேய்க்க முடியுமா?


17 எப்ராயிம் சிலைகளோடு சேர்ந்து கொண்டான்.
அவனை விட்டுவிடு.


18 குடிவெறியர் கூட்டமாகிய அவர்கள்
வேசித்தனத்தில் ஆழ்ந்திருக்கின்றார்கள்;
தங்களது மேன்மையைக் காட்டிலும் இகழ்ச்சியையே
அவர்கள் மிகுதியாய் விரும்புகின்றார்கள்.


19 காற்று அவர்களைத் தன் இறக்கைகளில் பற்றிக் கொள்ளும்;
அவர்கள் தங்கள் பலிகளால் நாணமடைவார்கள்.


குறிப்பு

[*] 4:4 - "உன் மக்கள் குருவோடு வழக்காடுகிறவர்களைப் போலிருக்கிறார்கள்" என்பது
"குருவே, உன்னோடுதான் என் வழக்கு" எனவும் பொருள்படும்.


(தொடர்ச்சி): ஒசேயா:அதிகாரங்கள் 5 முதல் 6 வரை