திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/சாமுவேல் - முதல் நூல்/அதிகாரங்கள் 15 முதல் 16 வரை

விக்கிமூலம் இலிருந்து
தாவீது அரசராக முடிசூட்டப்படுகிறார் (1 சாமு 16:1-13). விவிலிய ஓவியம் படைக்கப்பட்ட காலம்: 10ஆம் நூற்றாண்டு. நூல்: பாரிசு திருப்பாடல்கள் தொகுப்பு. காப்பிடம்: பாரிசு, பிரான்சு

1 சாமுவேல் (The First Book of Samuel)[தொகு]

அதிகாரங்கள் 15 முதல் 16 வரை

அதிகாரம் 15[தொகு]

அமலேக்கியருக்கு எதிராய்ப் போர்[தொகு]


1 சாமுவேல் சவுலை நோக்கி, கூறியது: "ஆண்டவர் தம் மக்களாகிய இஸ்ரயேலின் அரசராக உம்மைத் திருப்பொழிவு செய்ய என்னை அனுப்பினார். ஆகவே இப்பொது ஆண்டவரின் வார்த்தைகளைக் கேளும். [1]
2 படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இஸ்ரயேலர் எகிப்தினின்று வெளிவந்தபோது அமலேக்கியர் அவர்களை வழி மறித்ததற்காக அவர்களை நான் தண்டிக்கப் போகிறேன். [2]
3 ஆகவே சென்று அமலேக்கியரைத் தாக்கி, அவர்கள் உடைமைகளை அனைத்தையும் அழித்தொழியும். அவர்கள்மீது இரக்கம் காட்டாமல் ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும், பாலகர்களையும், மாடுகள், ஆடுகள், ஒட்டகங்கள், கழுதைகள் அனைத்தையும் கொன்று விடும்".
4 சவுல் வீரர்களைத் திரட்டி அவர்களை தெலாயிமில் கணக்கெடுத்தார். இரண்டு இலட்சம் காலாள் படையினரும், பத்தாயிரம் யூதாவினரும் இருந்தனர்.
5 சவுல் அமலேக்கியரின் நகரை வந்தடைந்து ஒரு பள்ளத்தாக்கில் பதுங்கியிருந்தார்.
6 சவுல் கேனியரை நோக்கி, "இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் அவர்கள் எகிப்தினின்று வெளிவந்த போது நீங்கள் இரக்கம் காட்டீனீர்கள். ஆகவே நீங்கள் அமலேக்கியரிடமிருந்து விலகிச் சென்று விடுங்கள். ஏனெனில் அவர்களோடு நான் உங்களையும் நான் அழிக்க வேண்டியிருக்கும்" என்றார். எனவே கேனியர் அமலேக்கியரிடமிருந்து விலகிச் சென்றனர்.


7 பின்னர் சவுல் அவிலா தொடங்கி எகிப்துக்குக் கிழக்கே இருக்கம் சூருக்குச் செல்லும் வரை இருந்த அமலேக்கியரைத் தாக்கினார்.
8 அமலேக்கியரின் மன்னன் ஆகாகை அவர் உயிரோடு பிடித்தார். ஆனால் மக்கள் அனைவரையும் வாளுக்கு இரையாக்கினர்.
9 சவுலும் வீரர்களும் ஆகாகைக் கொல்லாமல் விட்டனர். மேலும் ஆடு மாடுகளில் முதல் தரமானவைகளையும் இரண்டாம் தரமானவைகளையும் ஆட்டுக் குட்டிகளையும், நல்லவை அனைத்தையும் அழிக்கவில்லை. அற்பமானவைகளையும் பயனற்றவைகளையும் முற்றிலும் அழித்துப் போட்டனர்.

அரசர் சவுல் புறக்கணிக்கப்படல்[தொகு]


10 அப்போது ஆண்டவரின் வார்த்தை சாமுவேலுக்கு அருளப்பட்டது. அவர் கூறியது:
11 "சவுலை அரசனாக்கியதற்காக நான் வருந்துகிறேன். ஏனெனில் அவன் என்னைப் பின்பற்றாமல் விலகிவிட்டான். என் வார்த்தைகளின்படி நடக்கவில்லை". சாமுவேல் மனம் வருந்தி இரவெல்லாம் ஆண்டவரிடம் மன்றாடினார்.


12 சவுலைச் சந்திப்பதற்காகச் சாமுவேல் வைகறையில் துயிலெழுந்தார். அப்போது சவுல் கர்மேலுக்கு வந்ததாகவும் தமக்கென ஒரு நினைவுச் சின்னம் அமைத்ததாகவும், கில்காலுக்குக் கடந்து சென்றுவிட்டதாகவும் சாமுவேலுக்குத் தெரிவிக்கப்பட்டது.
13 சாமுவேல் சவுலிடம் வந்தார். சவுல் அவரை நோக்கி, "நீர் ஆண்டவரால் ஆசி பெற்றவர்! ஆண்டவரின் வார்த்தையை நான் நிறைவேற்றிவிட்டேன் "என்றார்.
14 அதற்கு சாமுவேல், "அப்படியானல் நான் கேட்கும் ஆடுகளின் ஒலியும் மாடுகளின் இரைச்சலும் என்ன?" என்று கேட்டார்.
15 சவுல் மறுமொழியாக, "அவை அமலேக்கியரிடமிருந்து கொண்டுவரப்பட்டவை. வீரர்கள் முதல் தரமான ஆடுகளையும் மாடுகளையும் கடவுளாகிய உம் ஆண்டவருக்குப் பலி செலுத்துவதற்காக விட்டுவைத்துள்ளனர். எஞ்சியவற்றை நாங்கள் முற்றிலும் அழித்து விட்டோம்" என்றார்.
16 அப்போது சாமுவேல் சவுலை நோக்கி, "நிறுத்தும், இன்றிரவு ஆண்டவர் எனக்குக் கூறியவற்றை உமக்குச் சொல்கிறேன்" என, சவுல், "சொல்லுங்கள்" என்றார்.


17 சாமுவேல் கூறியது: "நீர் உமது பார்வைக்கே சிறியவராய் இருந்தபோதல்லவா இஸ்ரயேல் குலங்களுக்குத் தலைவர் ஆனீர்? ஆண்டவரும் உம்மை இஸ்ரயேலின் அரசராகத் திருப்பொழிவு செய்தார்.
18 ஆண்டவர் உமக்கு வழிகாட்டி, 'நீ சென்று அந்தப் பாவிகளான அமலேக்கியரை அழித்து விட்டு வா. இறுதிவரை போரிட்டு அவர்களை ஒழித்துவிடு' என்று சொன்னார்.
19 அப்படியிருக்க, நீர் ஏன் ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடுக்கவில்லை? கொள்ளைப் பொருள்மீது பாய்ந்து ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்ததேன்?"
20 அதற்குச் சவுல், சாமுவேலை நோக்கி, "ஆண்டவரின் குரலுக்கு நான் செவி கொடுத்தேன், அவர் காட்டிய வழியிலும் சென்றேன். அமலேக்கியரின் மன்னன் ஆகாகைக் கொண்டு வந்தேன். ஆனால் அமலேக்கியரை அழித்துவிட்டேன்.
21 ஆனால் வீரர்கள் உம் கடவுளாகிய ஆண்டவருக்குக் கில்காலில் பலி செலுத்த, தடை செய்யப்பட்ட கொள்ளைப் பொருளினின்று சிறந்த ஆடுகளையும், மாடுகளையும் கொண்டு வந்தனர்" என்றார்.


22 அப்பொழுது சாமுவேல் கூறியது:

"ஆண்டவருக்கு மகிழ்ச்சி தருவது எரி பலிகள், பிற பலிகள் செலுத்துவதா? அவரது குரலுக்கு கீழ்ப்படிவதா? கீழ்ப்படிதல் பலியைவிடச் சிறந்தது, கீழ்ப்படிதல் ஆட்டுக் கிடாய்களின் கொழுப்பை விட மேலானது!
23 கலகம் சூனியத்திற்கு நிகரான பாவம்! முரட்டுத்தனம் சிலை வழிபாட்டுக்கு ஒப்பான குற்றம். நீர் ஆண்டவரின் வார்த்தையைப் புறக்கணித்தீர்! அவரும் உம்மை அரச பதவியினின்று நீக்கிவிட்டார்."


24 அப்போது சவுல் சாமுவேலை நோக்கி, "நான் பாவம் செய்து விட்டேன். வீரர்களுக்கு அஞ்சி அவர்களின் குரலுக்குச் செவி கொடுத்து, ஆண்டவரின் வாய்மொழியையும் உம் வார்த்தைகளையும் மீறிவிட்டேன்.
25 தயைகூர்ந்து இப்போது என் பாவத்தை மன்னியும். என்னோடு திரும்பி வாரும். நான் ஆண்டவரைப் பணிந்து தொழுவேன்" என்றார்.
26 அப்போது சாமுவேல் சவுலிடம், "நீர் ஆண்டவரின் வார்த்தையைப் புறங்கணித்துவிட்டதாலும், ஆண்டவர் இஸ்ரயேல் மீது அரசு செலுத்துவதினின்று உம்மை விலக்கிவிட்டதாலும், நான் உம்மோடு திரும்ப வர மாட்டேன்" என்றார்.
27 சாமுவேல் செல்லத் திரும்பியபோது, சவுல் அவரது ஆடையின் விளிம்பைப் பிடிக்க, அது கிழிந்தது.
28 அப்போது சாமுவேல், "ஆண்டவர் இன்று இஸ்ரயேல் அரசை உம்மிடமிருந்து கிழித்து, உம்மைவிடச் சிறந்த, உமக்கு நெருங்கியவன் ஒருவனுக்கு அதைத் தந்துவிட்டார். [3]
29 மேலும், 'இஸ்ரயேலின் மாட்சி' ஏமாற்ற மாட்டார், மனம் மாறவும் மாட்டார். மனம் மாறுவதற்கு அவர் என்ன மனிதரா?" என்று அவரிடம் கூறினார்.


30 மீண்டும் சவுல், "நான் தவறிவிட்டேன். என் மக்களின் பெரியோருக்கு முன்பாகவும், இஸ்ரயேலுக்கு முன்பாகவும் தயைகூர்ந்து என்னைப் பெருமைப்படுத்தும். உம் கடவுளாகிய ஆண்டவரைப் பணிந்து தொழுதிட என்னோடு திரும்பி வாரும்" என்றார்.
31 சாமுவேல் திரும்பி சவுலின் பின்னே செல்ல, சவுலும் ஆண்டவரைப் பணிந்து தொழுதார்.
32 பிறகு சாமுவேல், "அமலேக்கியரின் மன்னன் ஆகாகை என்னிடம் கொண்டு வாரும்" என்றார். ஆகாகு அவரிடம் வந்து மகிழ்ச்சியுடன் "உறுதியாகச் சாவின் கொடுமை அகன்றுவிட்டது" என்றான்.
33 அதற்குச் சாமுவேல், "பெண்கள் உனது வாளால் பிள்ளையற்றோர் ஆகியது போல, உன் தாயும் பெண்களுக்குள் பிள்ளையற்றவள் ஆகட்டும்" என்று கூறி, கில்காலில் ஆண்டவர் திருமுன் ஆகாகைத் துண்டு துண்டாக வெட்டினார்.


34 அதன் பின் சாமுவேல் இராமாவுக்குச் செல்ல, சவுலும் அவரது சொந்த ஊரான கிபயாவிலிருந்த தம் வீட்டுக்குச் சென்றார்.
35 சாமுவேல் தாம் இறக்கும் நாள் வரை சவுலை மீண்டும் பார்க்கவில்லை. ஆனால் அவர் சவுலுக்காகத் துக்கம் கொண்டாடினார். ஆண்டவரும் சவுலை இஸ்ரயேல்மீது அரசராக்கியதற்காக மனம் வருந்தினார்.

குறிப்புகள்

[1] 15:1 = 1 சாமு 10:1.
[2] 15:2 = விப 17:8-14; இச 25:17-19.
[3] 15:27-28 = 1 சாமு 28:17; 1 அர 11:30-31.

அதிகாரம் 16[தொகு]

தாவீது அரசராய்த் திருப்பொழிவு செய்யப்படுதல்[தொகு]


1 ஆண்டவர் சாமுவேலை நோக்கி, "இஸ்ரயேலின் அரசராகச் சவுல் இல்லாதவாறு நான் அவனைப் புறக்கணித்ததை நீ அறிந்திருந்தும், நீ எவ்வளவு காலம் அவனுக்காகத் துக்கம் கொண்டாடுவாய்? உன்னிடமுள்ள கொம்பை எண்ணெயால் நிரப்பிக் கொண்டு போ. பெத்லகேமைச் சார்ந்த ஈசாயிடம் உன்னை அனுப்புகிறேன்; ஏனெனில் அவன் புதல்வருள் ஒருவனை அரசனாகத் தேர்ந்துள்ளேன்" என்றார்.
2 அதற்குச் சாமுவேல், "எப்படிப் போவேன்? சவுல் கேள்விப்பட்டால், என்னைக் கொன்றுவிடுவானே?" என்றார். மீண்டும் ஆண்டவர், "நீ ஒரு கன்றுக்குட்டியை எடுத்துச் செல்! 'ஆண்டவருக்கு பலியிட வந்துள்ளேன்' என்று சொல்;
3 ஈசாயைப் பலிக்கு அழைத்திடு. அப்போது நீ செய்யவேண்டியது என்னவென்று உனக்கு நான் தெரிவிப்பேன்; நான் உனக்குக் காட்டுகிறவனை நீ எனக்காகத் திருப்பொழிவு செய்" என்றார்.


4 ஆண்டவர் கட்டளையிட்டவாறு சாமுவேல் செய்தபின் பெத்லகேமுக்குச் சென்றார். அப்பொழுது அவ்வூரின் பெரியோர்கள் அஞ்சி நடுங்கி அவரை எதிர்கொண்டு வந்து, "உங்கள் வருகையின் நோக்கம் சமாதானம் தானே" என்று கேட்டனர்.
5 அதற்கு அவர், "ஆம் சமாதானம்தான்; ஆண்டவருக்குப் பலிசெலுத்த வந்துள்ளேன்; உங்களையே தூய்மையாக்கிக்கொண்டு என்னுடன் பலியிட வாருங்கள்" என்றார். மேலும் ஈசாயையும் அவர் புதல்வரையும் தூய்மைப்படுத்திப் பலியிட வருமாறு அழைத்தார்.


6 அவர்கள் வந்தபோது அவர் எலியாபுவைப் பார்த்தவுடனே, "ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவன் இவனாகத்தான் இருக்கும்" என்று எண்ணினார்.
7 ஆனால் ஆண்டவர் சாமுவேலிடம், "அவன் தோற்றத்தையும், உயரத்தையும் பார்க்காதே; ஏனெனில் நான் அவனைப் புறங்கணித்துவிட்டேன். மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பதில்லை; மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்" என்றார்.
8 அடுத்து, ஈசாய் அபினதாபை அழைத்து சாமுவேல் முன்பாகக் கடந்துபோகச் செய்தார். அவர், "இவனையும் ஆண்டவர் தேர்ந்து கொள்ளவில்லை" என்று கூறினார்.
9 பிறகு ஈசாய் சம்மாகுவைக் கடந்து போகச் செய்தார். "ஆண்டவர் இவனையும் தேர்ந்து கொள்ளவில்லை" என்றார் சாமுவேல்.
10 இவ்வாறு ஈசாய் தம் ஏழு புதல்வரைச் சாமுவேல் முன்பாகக் கடந்துபோகச் செய்தார். "இவர்களையும் ஆண்டவர் தேர்ந்து கொள்ளவிலை" என்றார் சாமுவேல்.
11 தொடர்ந்து சாமுவேல் ஈசாயைப் பார்த்து, "உன் பிள்ளைகள் இத்தனை பேர்தானா?" என்று கேட்க, "இன்னொரு சிறுவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறான்" என்று பதிலளித்தார் ஈசாய். அதற்குச் சாமுவேல் அவரிடம், "ஆளனுப்பி அவனை அழைத்து வா; ஏனெனில் அவன் வரும்வரை நான் உணவருந்த மாட்டேன்" என்றார்.
12 ஈசாய் ஆளனுப்பி அவனை அழைத்து வந்தார். அவன் சிவந்த மேனியும் ஒளிரும் கண்களும் கொண்டு அழகிய தோற்றமுடன் இருந்தான். ஆண்டவர் சாமுவேலிடம், "தேர்ந்துகொள்ளப்பட்டவன் இவனே! எழுந்து இவனைத் திருப்பொழிவு செய்!" என்றார்.
13 உடனே சாமுவேல் எண்ணெய் நிறைந்த கொம்பை எடுத்து அவன் சகோதரர் முன்னிலையில் அவனைத் திருப்பொழிவு செய்தார். அன்று முதல் ஆண்டவரின் ஆவி தாவீதின் மேல் நிறைவாக இருந்தது. சாமுவேல் இராமாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.

சவுலின் அரசரவையில் தாவீது[தொகு]


14 ஆண்டவரின் ஆவி சவுலை விட்டு நீங்க, ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி அவரைக் கலக்கமுறச் செய்தது.
15 அப்பொழுது சவுலின் பணியாளர்கள் அவரிடம், "ஐயா, ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி உம்மைக் கலக்கமுறச் செய்கிறதே!
16 உம்முன் நிற்கும் உம் பணியாளர்களாகிய நாங்கள் யாழ் மீட்டுவதில் வல்லவன் ஒருவனை அழைத்து வர எங்களுக்குக் கட்டளையிடும்! ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி உம்மீது இறங்கும் பொழுது அவன் யாழ் மீட்டுவான்! நீரும் நலமடைவீர்!" என்றனர்.
17 எனவே, சவுல் தம் பணியாளரிடம், "யாழ் மீட்டுவதில் வல்லவன் ஒருவனைக் கண்டுபிடித்து என்னிடம் அழைத்து வாருங்கள்" என்றார்.
18 பணியாளர்களில் ஒருவன், "இதோ பெத்லகேமைச் சார்ந்த ஈசாயின் மகனைப் பார்த்தேன்; அவன் யாழ் மீட்டுவதில் வல்லவன்; வீரமுள்ளவன்; போர்த்திறன் பெற்றவன்; பேச்சுத் திறன் உடையவன்; அழகானவன்; மேலும் ஆண்டவர் அவனோடு இருக்கிறார்" என்றான்.


19 அதைக் கேட்ட சவுல் ஈசாயிடம் தம் தூதர்களை அனுப்பி, "ஆட்டு மந்தையை மேய்க்கும் உன் மகன் தாவீதை என்னிடம் அனுப்பும்" என்று தெரிவித்தார்.
20 அதைக் கேட்ட ஈசாய் கொஞ்சம் அப்பத்தையும் ஒரு தோற்பை நிறைய திராட்சை இரசத்தையும் ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும் கழுதை ஒன்றின் மேல் ஏற்றி, தம் மகன் தாவீது மூலம் சவுலுக்கு அனுப்பினார்.
21 தாவீது சவுலிடம் வந்தவுடன் அரசவைப் பணியில் சேர்ந்துவிட்டார். சவுல் அவர் மீது மிகவும் அன்பு கொண்டு அவரைத் தம் படைக்கலன் தாங்குவோனாக நியமித்தார்.
22 "தாவீது என் அவையிலேயே இருக்கட்டும்; ஏனெனில் என் கண்களில் அவனுக்குத் தயவு கிடைத்துள்ளது" என்று சவுல் ஈசாயிடம் சொல்லியனுப்பினார்.
23 அதன் பின், ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி, சவுலின் மீது இறங்கிய போதெல்லாம் தாவீது யாழ் எடுத்து மீட்டுவார்; தீய ஆவியும் அவரை விட்டு அகலும்; சவுலும் ஆறுதலடைந்து நலமடைவார்.


(தொடர்ச்சி): சாமுவேல் - முதல் நூல்:அதிகாரங்கள் 17 முதல் 18 வரை