திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/தானியேல்/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

விக்கிமூலம் இலிருந்து
"ஆகவே, அரசனுடைய கட்டளைப்படி தானியேல் கொண்டுவரப்பட்டுச் சிங்கக் குகையில் தள்ளப்பட்டார். அப்பொழுது அரசன் தானியேலை நோக்கி, 'நீ இடைவிடாமல் வழிபடும் உன் கடவுள் உன்னை விடுவிப்பாராக!' என்றான்." - தானியேல் 6:16

தானியேல் (The Book of Daniel)[தொகு]

அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

அதிகாரம் 5[தொகு]

பெல்சாட்சரின் விருந்து[தொகு]


1 பெல்சாட்சர் என்ற அரசன் உயர்குடி மக்கள் ஆயிரம் பேருக்குப்
பெரியதொரு விருந்து வைத்தான்;
அந்த ஆயிரம் பேருடன் அவனும் திராட்சை மது குடித்தான்.
2 அவ்வாறு குடித்துக்கொண்டிருந்தபொழுது,
அரசன் தானும் தன் மனைவியரும் வைப்பாட்டிகளும் குடிப்பதற்கென்று,
தன் தந்தையாகிய நெபுகத்னேசர் எருசலேம் திருக்கோவிலிருந்து கொண்டு வந்திருந்த
பொன், வெள்ளிக் கிண்ணங்களைக் கொண்டுவரச் சொன்னான்.
3 அதன்படி, எருசலேமிலிருந்த கடவுளின் கோவிலிருந்து கொண்டுவந்த
பொன் கிண்ணங்களை எடுத்து வந்தார்கள்;
அரசனும் அவனுடைய உயர்குடி மக்களும்,
அவனுடைய மனைவியரும், வைப்பாட்டியரும்
அந்தக் கிண்ணங்களிலிருந்து குடித்தார்கள்.
4 அவர்கள் திராட்சை மது குடித்துக்கொண்டே
பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, மரம், கல்
ஆகியவற்றாலான தங்கள் தெய்வங்களைப் புகழ்ந்தார்கள்.


5 திடீரென்று ஒரு மனிதனுடைய கைவிரல்கள் தோன்றி
அரசனது அரண்மனை உட்சுவரில் விளக்குத் தூணுக்கு எதிரே எழுதத் தொடங்கின.
அவ்வாறு எழுதும்போது அரசன் அந்த உள்ளங்கையைப் பார்த்தான்.
6 அதைக் கண்டு அரசன் முகம் கறுத்து, நெஞ்சம் கலங்கி,
குலைநடுங்கி, தொடை நடுக்கமுற்றான்.
7 உடனே அரசன் மாய வித்தைக்காரரையும் கல்தேயரையும்
சோதிடரையும் கூட்டிவரும்வடி உரக்கக் கத்தினான்.
அரசன் பாபிலோனிய ஞானிகளை நோக்கி,
"இந்தச் சொற்களைப் படித்து, இவற்றின் உட்பொருளை
எனக்கு வெளிப்படுத்துகிறவன் எவனோ
அவனுக்கு அரச உடை உடுத்தி கழுத்தில் மாலை அணிவித்து
என் அரசின் மூன்றாம் நிலையில் அமர்த்துவேன்" என்றான்.
8 பிறகு அரசனின் ஞானிகள் எல்லாரும் உள்ளே சென்றனர்;
ஆனால் அந்த சொற்களைப் படிக்கவோ
அவற்றின் உட்பொருளை அரசனுக்கு விளக்கவோ அவர்களால் இயலவில்லை.
9 அதைக் கண்ட பெல்சாட்சர் அரசன் மிகவும் மனக்கலக்க முற்றான்;
அவனது முகம் வெளிறியது. அவனுடைய உயர்குடி மக்களும் திகைத்து நின்றனர்.
10 அரசனும் உயர்குடி மக்களும் எழுப்பிய கூச்சலைக் கேட்டு,
அரசி விருந்துக்கூடத்திற்குள் விரைந்து வந்து,
"அரசரே! நீர் நீடூழி வாழ்க! நீர் வீணாக அச்சமுற்று, முகம் வெளிறவேண்டாம்.
11 புனிதமிகு கடவுள் ஆவி நிறைந்த மனிதன் ஒருவன்
உமது அரசில் இருக்கிறான்.
உம் தந்தையின் ஆட்சிக் காலத்தில் அறிவொளியும் நுண்ணறிவும்
தெய்வங்களுக்கொத்த ஞானமும் அவனிடம் திகழ்ந்தது தெரிய வந்தது.
எனவே உம் தந்தையாகிய நெபுகத்னேசர் அரசர்
அவனை மந்திரவாதிகளுக்கும் மாயவித்தைக்காரருக்கும்
கல்தேயருக்கும் சோதிடருக்கும் தலைவனாக்கினார்.
12 அந்தத் தானியேல் வியத்தகு விவேகமும் அறிவும் உடையவன்;
கனவுகளுக்கு விளக்கம் கூறும் அறிவாற்றல் படைத்தவன்;
விடுகதைகளுக்கு விடைகூறும் ஆற்றல் உடையவன்;
சிக்கல்களைத் தீர்க்கும் திறமை வாய்ந்தவன்;
அவனுக்கு அரசர் 'பெல்தெசாச்சார்' என்று பெயரிட்டுள்ளார்.
அவன் உடனே இங்கு அழைக்கப்படட்டும்; அவன் விளக்கம் கூறுவான்" என்றாள்.


13 அவ்வாறே அரசன் முன்னிலைக்குத் தானியேல் அழைத்து வரப்பட்டார்.
அரசன் அவரைப்பார்த்து, "என் தந்தையாகிய அரசன்
யூதாவிலிருந்து சிறைப் பிடித்துவந்தவர்களுள் ஒருவனாகிய தானியேல் என்பவன் நீதானே?
14 உன்னிடத்தில் புனிதமிகு கடவுளின் ஆவியும் அறிவொளியும்
நுண்ணறிவும் சிறந்த ஞானமும் உண்டென உன்னைப் பற்றிக் கேள்விப் பட்டுள்ளேன்.
15 இப்பொழுது இந்தச் சொற்களைப் படித்து
இவற்றின் உட்பொருளை எனக்கு விளக்கிக் கூறுமாறு,
இந்த ஞானிகளும் மாயவித்தைக்காரரும் என்முன் அழைத்து வரப்பட்டனர்.
ஆனால், அவர்களால் இந்தச் சொற்களின் உட்பொருளை விளக்கிக்கூற முடியவில்லை.
16 விளக்கங்கள் கூறவும் சிக்கல்களைத் தீர்க்கவும்
உன்னால் முடியும் எனக் கேள்விப்படுகிறேன்.
இப்பொழுது நீ இந்தச் சொற்களைப் படித்து இவற்றின் உட்பொருளை விளக்கினால்,
உனக்கு அரச உடைஉடுத்தி, கழுத்தில் பொன்மாலை அணிவித்து,
என் அரசில் மூன்றாம் நிலையில் உன்னை அமர்த்துவேன்" என்றான்.


17 அப்பொழுது அரசனுக்குத் தானியேல் மறுமொழியாகக் கூறியது:
"உம்முடைய அன்பளிப்புகள் உம்மிடமே இருக்கட்டும்;
உம் பரிசுகளை வேறு யாருக்காவது கொடும்.
ஆயினும், இந்தச் சொற்களை அரசருக்குப் படித்துக் காட்டி
அவற்றின் உட்பொருளை விளக்கிக் கூறுவேன்.
18 அரசரே! உன்னதரான கடவுள் உம் தந்தையாகிய நெபுகத்னேசருக்குப்
பேரரசையும் சிறப்பையும் மேன்மையையும் மாண்பையும் அளித்தார்.
19 அவருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பின் காரணமாய்
எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவருக்கு அஞ்சி நடுங்கினர்.
அவர் தம் விருப்பப்படி யாரையும் கொன்றுவிடுவார்;
தம் விருப்பப்படி யாரையும் வாழவிடுவார்.
தம் விருப்பப்படியே யாரையும் உயர்த்துவார்;
தம் விருப்பப்படியே யாரையும் தாழ்த்துவார்.
20 ஆனால் அவருடைய உள்ளம் இறுமாப்புற்று,
அவருடைய மனம் செருக்கினால் கடினப்பட்டது.
உடனே அவர் அரசின் அரியணையிலிருந்து தள்ளப்பட்டார்;
அவரிடமிருந்து அவரது மேன்மை பறிக்கப்பட்டது.
21 மனித சமுதாயத்தினின்று அவர் விரட்டப்பட்டார்.
மேலும் அவரது உள்ளம் விலங்குகளின் மனமாக மாற்றப்படவே,
அவர் காட்டுக் கழுதைகளோடு வாழ்ந்துவந்தார்.
மனிதர்களின் அரசுகளை உன்னதரே ஆள்கின்றார் என்றும்,
தாம் விரும்பியவர்க்கே அவற்றை வழங்குகின்றார் என்றும் உணரும்வரை,
அவர் மாடுபோல் புல்லை மேய்ந்தார்;
அவரது உடல் வானத்துப் பனியில் நனைந்து கிடந்தது.
22 அவருடைய மகனாகிய பெல்சாட்சர்!
இவற்றை எல்லாம் நீர் அறிந்திருந்தும் உம் இதயத்தைத் தாழ்த்திக் கொள்ளவில்லை.
23 ஆனால் விண்ணுலக ஆண்டவருக்கு எதிராக உம்மையே உயர்த்தினீர்;
அவரது கோவிலின் கிண்ணங்களைக் கொண்டு வரச் செய்து,
நீரும் உம் உயர்குடி மக்களும், உம்முடைய மனைவியரும் வைப்பாட்டியரும்
அவற்றிலிருந்து திராட்சை மது குடித்தீர்கள்;
மேலும் காணவோ, கேட்கவோ, எதையும் உணரவோ இயலாத
வெள்ளி, பொன், வெண்கலம், இரும்பு, மரம், கல்
ஆகியவற்றாலான தெய்வங்களைப் புகழ்ந்தீர்கள்.
ஆனால் உமது உயிரையும் உம் வழிகளையும்
தம் கைக்குள் வைத்திருக்கும் கடவுளை நீர் பெருமைப் படுத்தவில்லை.


24 ஆகையால் அவர் இந்தக் கையைத் தம் திருமுன்னிருந்து அனுப்பி,
இந்த எழுத்துகளைப் பொறிக்கச் செய்தார்.


25 பொறிக்கப்பட்ட சொற்களாவன:


"மேனே மேனே, தேகேல், பார்சின்"


26 இவற்றின் உட்பொருள்:


மேனே: கடவுள் உமது அரசின் நாள்களை எண்ணி வரையறுத்து அதனை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டார்.


27 தேகேல்: நீர் தராசில் நிறுக்கப்பட்டீர்; எடையில் மிகவும் குறைந்துள்ளீர்.


28 பார்சின்: உமது அரசு பிரிக்கப்பட்டு மேதியருக்கும் பாரசீகருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது".


29 உடனே, பெல்சாட்சரின் ஆணைப்படி, தானியேலுக்கு அரச உடை உடுத்தி,
கழுத்தில் பொன்மாலை அணிவித்தனர். [*]
மேலும், அரசில் மூன்றாம் நிலையில் தானியேல் அமர்த்தப்படுவார் என்றும் முரசறைந்தனர்.
30 அன்றிரவே கல்தேய அரசனாகிய பெல்சாட்சர் கொலை செய்யப்பட்டான்.


குறிப்பு

[*] 5:29 = தொநூ 41:42.


அதிகாரம் 6[தொகு]

சிங்கக் குகையில் தானியேல்[தொகு]


1 மேதியனாகிய தாரியு என்பவன்
தன் அறுபத்திரண்டாம் வயதில் அரசை ஏற்றுக் கொண்டான்.
தன் நாடு முழுவதும் வரி வசூலிப்பதற்கென்று
நூற்றிருபது தண்டல்காரரைத் தாரியு நியமித்தான்.
2 இத்தண்டல்காரரைக் கண்காணிப்பதற்கென்று
மூன்று மேற்பார்வையாளரை ஏற்படுத்தினான்.
அரசனுக்கு எவ்வித இழப்பும் நேரிடாவண்ணம்
இம்மூவரிடமும் அத்தண்டல்காரர்கள் கணக்குக் கொடுக்கவேண்டும்.
3 இம்மூவருள் தானியேலும் ஒருவர்.
இவர் மற்ற மேற்பார்வையாளரையும் தண்டல்காரரையும்விடச் சிறந்து விளங்கினார்;
ஏனெனில், வியத்தகு ஆவி அவரிடத்தில் இருந்தது.
தன் அரசின் முழுப் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைக்கலாம்
என அரசன் எண்ணிக் கொண்டிருந்தான்.
4 ஆனால் மற்ற மேற்பார்வையாளரும் தண்டல்காரரும்
அரசைக் கண்காணிப்பதில் தானியேலின்மீது குற்றம்சாட்ட வகை தேடினார்கள்.
அவரிடத்தில் குற்றம் சாட்டுவதற்குரிய எந்தத் தவற்றையும்
ஊழலையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஏனெனில் அவர் நேர்மையாய் நடந்து கொண்டார்.
அவரிடம் எவ்வித தவறும் ஊழலும் காணப்படவில்லை.
5 அப்பொழுது அவர்கள், "இந்தத் தானியேலுக்கு எதிராக
அவருடைய கடவுளின் சட்டத்தைப் பின்பற்றுவதில் தவிர
வேறெதிலும் அவர்மீது குற்றம் காணமுடியாது" என்றார்கள்.


6-7 எனவே, இந்த மேற்பார்வையாளரும் தண்டல்காரரும் தங்களுக்குள் கூடிப்பேசி
அரசனிடம் வந்து அவனிடம்,
"தாரியு அரசரே! நீர் நீடூழி வாழ்க!
அதிகாரிகள், தண்டல்காரர்கள், அமைச்சர், ஆளுநர்
ஆகிய நாங்கள் அனைவரும் கலந்தாலோசித்துக் கூறுவது:
முப்பது நாள் வரையில் அரசராகிய தங்களிடமன்றி
வேறெந்தத் தெய்வத்திடமோ மனிதனிடமோ
யாதொரு விண்ணப்பமும் செய்கின்ற எந்த மனிதனும்
சிங்கக் குகைக்குள் தள்ளப்படுவான் என்று நீர் சட்டம் இயற்றித்
தடையுத்தரவு போடவேண்டும்.
8 ஆகையால், அரசரே! இப்பொழுதே அச்சட்டத்தை இயற்றித்
தடையுத்தரவில் கையெழுத்திடும்;
அப்பொழுதுதான் மேதியர், பாரசீகரின் சட்டங்கள் மாறாதிருப்பது போல,
இச்சட்டமும் மாறாதிருக்கும்" என்றார்கள்.
9 அவ்வாறே தாரியு அரசன் சட்டத்தில் கையொப்பமிட்டுத்
தடையுத்தரவு பிறப்பித்தான்.
10 தானியேல் இந்தச் சட்டம் கையொப்பமிடப்பட்டதை அறிந்தபின்,
தம் வீட்டுக்குச் சென்றார்.
அவர் வீட்டு மேலறையின் பலகணிகள் எருசலேமை நோக்கித் திறந்திருந்தன.
தமது வழக்கப்படி நாள்தோறும் மூன்று வேளையும்
தம் கடவுளுக்கு முன்பாக முழந்தாளிலிருந்து மன்றாடி
அவருக்கு நன்றி செலுத்துவார்.
11 முன்னரே கூடிப் பேசிக்கொண்டபடி,
அந்த மனிதர்கள் உள்ளே நுழைந்து தானியேல் தம் கடவுளிடம் வேண்டுவதையும்
மன்றாடுவதையும் கண்டார்கள்.
12 உடனே அவர்கள் அரசனை அணுகி,
அவனது தடையுத்தரவைப் பற்றிக் குறிப்பிட்டு,
"அரசரே! முப்பது நாள்வரையில் அரசராகிய உம்மிடமன்றி
வேறெந்தத் தெய்வத்திடமோ மனிதனிடமோ யாதொரு விண்ணப்பமும் செய்கின்ற
எந்த மனிதனும் சிங்கக் குகையில் தள்ளப்படுவான் என்ற
தடையுத்தரவில் கையொப்பமிட்டுள்ளீர் அல்லவா?" என்றார்கள்.
அதற்கு அரசன், "ஆம், மேதியர், பாரசீகரின் சட்டங்கள் மாறாதிருப்பது போல்,
இதுவும் மாறாததே" என்றான்.
13 உடனே அவர்கள் அரசனை நோக்கி,
"யூதாவிலிருந்து சிறைப்பிடித்துக் கொண்டு வரப்பட்டவர்களுள் ஒருவனாகிய
தானியேல் உம்மை மதியாமல்,
நீர் கையொப்பமிட்டுள்ள தடையுத்தரவை மீறி
நாள்தோறும் மூன்று வேளையும் வேண்டுதல் செய்கிறான்" என்றார்கள்.


14 ஆனால், அரசன் இந்தச் சொற்களைக் கேட்டு மிகவும் மனம் வருந்தினான்;
தானியேலைக் காப்பாற்றத் தனக்குள் உறுதி பூண்டவனாய்,
அன்று கதிரவன் மறையும் வரையில் அவரைக் காப்பாற்ற வழி தேடினான்.
15 ஆனால் அந்த மனிதர்கள் முன்னரே கூடிப் பேசிக்கொண்டபடி,
அரசனிடம் வந்து, அவனை நோக்கி,
"அரசரே! மேதியர், பாரசீகரின் சட்டப்படி,
அரசன் விடுத்த தடையுத்தரவோ சட்டமோ
மாற்றத்திற்கு அப்பாற்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ளும்" என்றனர்.


16 ஆகவே, அரசனுடைய கட்டளைப்படி தானியேல் கொண்டுவரப்பட்டுச்
சிங்கக் குகையில் தள்ளப்பட்டார்.
அப்பொழுது அரசன் தானியேலை நோக்கி,
"நீ இடைவிடாமல் வழிபடும் உன் கடவுள் உன்னை விடுவிப்பாராக!" என்றான்.
17 அவர்கள் ஒரு பெரிய கல்லைப் புரட்டிக் கொண்டுவந்து
குகையின் வாயிலை அடைத்தார்கள்;
தானியேலுக்குச் செய்யப்பட்டதில் யாதொன்றும் மாற்றப்படாதிருக்கும்படி
அரசன் தன் மோதிரத்தாலும் தம் உயர்குடி மக்களின்
மோதிரங்களாலும் அதற்கு முத்தரையிட்டான்.
18 பின்னர் அரசன் அரண்மனைக்குத் திரும்பிச்சென்று,
அன்றிரவு முழுவதும் உணவு கொள்ளவில்லை;
வேறு எந்தக் களியாட்டத்திலும் ஈடுபடவில்லை.
உறக்கமும் அவனை விட்டகன்றது.


19 பொழுது புலர்ந்தவுடன், அவன் எழுந்து சிங்கக் குகைக்கு விரைந்து சென்றான்.
20 தானியேல் இருந்த குகையருகில் வந்தவுடன்
துயரக்குரலில் அவன் தானியேலை நோக்கி,
"தானியேல்! என்றுமுள கடவுளின் ஊழியனே!
நீ இடைவிடாமல் வழிபடும் உன் கடவுளால்
உன்னைச் சிங்கங்களினின்று விடுவிக்க முடிந்ததா? என்று உரக்கக் கேட்டான்.
21 அதற்குத் தானியேல் அரசனிடம், "அரசரே! நீர் நீடூழி வாழ்க!
22 என் கடவுள் தம் தூதரை அனுப்பிச் சிங்கங்களின் வாய்களைக் கட்டிப்போட்டார்.
அவை எனக்குத் தீங்கு எதுவும் செய்யவில்லை;
ஏனெனில் அவர் திருமுன் நான் மாசற்றவன்.
மேலும் அரசரே! உம் முன்னிலையிலும் நான் குற்றமற்றவனே!
என்று மறுமொழி கொடுத்தார்.
23 எனவே, அரசன் மிகவும் மனம் மகிழ்ந்து,
உடனே தானியேலைக் குகையிலிருந்து விடுவிக்குமாறு கட்டளையிட்டான்.
அவ்வாறே தானியேலைக் குகையிலிருந்து வெளியே தூக்கினார்கள்.
அவருக்கு யாதொரு தீங்கும் நேரிடவில்லை;
ஏனெனில் அவர் தம் கடவுளை உறுதியாக நம்பினார்.
24 பிறகு அரசனது கட்டளைக் கிணங்க,
தானியேலைக் குற்றம் சாட்டியவர்கள் இழுத்துக் கொண்டுவரப்பட்டனர்.
அவர்களும் அவர்களுடைய மனைவி, மக்களும் சிங்கக் குகையினுள் தள்ளப்பட்டார்கள்.
அவர்கள் குகையின் அடித்தளத்தை அடையும் முன்னே
சிங்கங்கள் அவர்களைக் கவ்விப் பிடித்து,
அவர்களுடைய எலும்புகளை எல்லாம் நொறுக்கிவிட்டன.


25 அப்பொழுது தாரியு அரசன் நாடெங்கும் வாழ்ந்துவந்த
எல்லா இனத்தவர்களும் நாட்டினர்க்கும் மொழியினர்க்கும் ஓர் அறிக்கை விடுத்தான்.
26 "உங்களுக்கு மிகுந்த சமாதானம் உண்டாவதாக!
என் ஆட்சிக்குட்பட்ட நாடு முழுவதும் உள்ள மக்கள்
தானியேலின் கடவுளுக்கு அஞ்சி நடுங்க வேண்டும்.
இது என் ஆணை.


ஏனெனில், அவரே வாழும் கடவுள்;
அவர் என்றென்றும் நிலைத்திருக்கின்றார்;
அவரது ஆட்சி என்றும் அழிவற்றது;
அவரது அரசுரிமைக்கு முடிவே இராது.
27 தானியேலைச் சிங்கங்களின் பிடியினின்று காப்பாற்றியவர் அவரே;
அவரே மீட்பவர்! விடுதலை அளிப்பவரும் அவரே!
விண்ணிலும் மண்ணிலும் அரிய செயல்களையும்
விந்தைகளையும் ஆற்றுபவர் அவரே!"


28 இவ்வாறு, தானியேல் தாரியுவின் ஆட்சிக் காலத்திலும்,
பாரசீகனான சைரசு மன்னனின் ஆட்சிக் காலத்திலும்
சீரும் சிறப்புமாய் இருந்தார்.


(தொடர்ச்சி): தானியேல்:அதிகாரங்கள் 7 முதல் 8 வரை