திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 95 முதல் 96 வரை

விக்கிமூலம் இலிருந்து
"நிலவுலகம் நிலை குலைந்தாலும் எங்களுக்கு அச்சமென்பதே இல்லை" (திருப்பாடல்கள் 46:2-3). மூலம்: "தெ பெர்ரி திருப்பாடல்கள் ஓவிய நூல்". 15ஆம் நூற்றாண்டு. பிரான்சு.

திருப்பாடல்கள்[தொகு]

நான்காம் பகுதி (90-106)
திருப்பாடல்கள் 95 முதல் 96 வரை

திருப்பாடல் 95[தொகு]

புகழ்ச்சிப் பாடல்[தொகு]


1 வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்;
நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.


2 நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்;
புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம்.


3 ஏனெனில், ஆண்டவர் மாண்புமிகு இறைவன்;
தெய்வங்கள் அனைத்திற்கும் மேலான பேரரசர்.


4 பூவுலகின் ஆழ்பகுதிகள் அவர்தம் கையில் உள்ளன;
மலைகளின் கொடுமுடிகளும் அவருக்கே உரியன.


5 கடலும் அவருடையதே; அவரே அதைப் படைத்தார்;
உலர்ந்த தரையையும் அவருடைய கைகளே உருவாக்கின.


6 வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்;
நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம்.


7 அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்;
நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள்.
இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்!


8 அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல்,
உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். [1]


9 அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்;
என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். [2]


10 நாற்பது ஆண்டளவாய் அந்தத் தலைமுறை
எனக்கு வெறுப்பூட்டியதால், நான் உரைத்தது:
'அவர்கள் உறுதியற்ற உள்ளம் கொண்ட மக்கள்;
என் வழிகளை அறியாதவர்கள்'.


11 எனவே, நான் சினமுற்று,
'நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள்
நுழையவே மாட்டார்கள்'
என்று ஆணையிட்டுக் கூறினேன். [3] [4]


குறிப்புகள்

[1] 95:7-8 = எபி 3:15; 4:7.
[2] 95:8-9 = விப 17:1-7; எண் 20:2-13.
[3] 95:7-11 = எபி 3:7-11.
[4] 95:11 = எண் 14:20-23; இச 1:34-36; 12:9-10; எபி 4:3-5.

திருப்பாடல் 96[தொகு]

அனைத்து உலகின் அரசர்[தொகு]

(1 குறி 16:23-33)


1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்;
உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;


2 ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;
அவர் பெயரை வாழ்த்துங்கள்;
அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்.


3 பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்;
அனைத்து மக்களினங்களுக்கும்
அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.


4 ஏனெனில், ஆண்டவர் மாட்சிமிக்கவர்;
பெரிதும் போற்றத் தக்கவர்;
தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர் அவரே.


5 மக்களினங்களின் தெய்வங்கள் அனைத்தும் வெறும் சிலைகளே;
ஆண்டவரோ விண்ணுலகைப் படைத்தவர்.


6 மாட்சியும் புகழ்ச்சியும் அவர் திருமுன் உள்ளன;
ஆற்றலும் எழிலும் அவரது திருத்தலத்தில் உள்ளன;


7 மக்களினங்களின் குடும்பங்களே,
ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.
மாட்சியையும் ஆற்றலையும்
ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.


8 ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை
அவருக்குச் சாற்றுங்கள்;
உணவுப்படையல் ஏந்தி
அவர்தம் கோவில் முற்றங்களுக்குள் செல்லுங்கள்.


9 தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள்;
உலகெங்கும் வாழ்வோரே,
அவர் திருமுன் நடுங்குங்கள். [*]


10 வேற்றினத்தாரிடையே கூறுங்கள்:
'ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்;
பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது;
அது அசைவுறாது;
அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார்.


11 விண்ணுலகம் மகிழ்வதாக;
மண்ணுலகம் களிகூர்வதாக;
கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும்.


12 வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்;
அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும்
அவர் திருமுன் களிப்புடன் பாடும்.


13 ஏனெனில் அவர் வருகின்றார்;
மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்;
நிலவுலகை நீதியுடனும்
மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார்.


குறிப்பு

[*] 96:7-9 = திபா 29:1-2.


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 97 முதல் 98 வரை