திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/யோபு/அதிகாரங்கள் 23 முதல் 24 வரை

விக்கிமூலம் இலிருந்து
யோபு தம் செல்வங்களை இழக்கிறார். சுவரோவியம். ஆண்டு: 1580. காப்பிடம்: பார்ஸ் கோட்டை, ஆஸ்திரியா.

யோபு (The Book of Job)[தொகு]

அதிகாரங்கள் 23 முதல் 24 வரை

அதிகாரம் 23[தொகு]


1 யோபு அதற்கு உரைத்த மறுமொழி:


2 இன்றுகூட என் முறைப்பாடு கசப்பாயுள்ளது;
நான் வேதனைக் குரல் எழுப்பியும்,
என் மேல் அவரது [*] கை பளுவாயுள்ளது.


3 அவரை எங்கே கண்டுபிடிக்கலாமென
நான் அறிய யாராவது உதவுவாரானால்,
நான் அவர் இருக்கையை அணுகுவேன்.


4 என் வழக்கை அவர்முன் எடுத்துரைப்பேன்;
என் வாயை வழக்குரைகளால் நிரப்புவேன்.


5 அவர் எனக்கு என்ன வார்த்தை கூறுவார்
என அறிந்து கொள்வேன்;
அவர் எனக்கு என்ன சொல்வார் என்பதையும்
நான் புரிந்து கொள்வேன்.


6 மாபெரும் வல்லமையுடன் அவர் என்னோடு வழக்காடுவாரா?
இல்லை; அவர் கண்டிப்பாக எனக்குச் செவி கொடுப்பார்.


7 அங்கே நேர்மையானவன் அவரோடு வழக்காடலாம்;
நானும் என் நடுவரால் முழுமையாக விடுவிக்கப்படுவேன்.


8 கிழக்கே நான் சென்றாலும் அவர் அங்கில்லை;
மேற்கேயும் நான் அவரைக் காண்கிலேன்.


9 இடப்புறம் தேடினும் செயல்படுகிற அவரைக் காணேன்;
வலப்புறம் திரும்பினும் நான் அவரைப் பார்த்தேனில்லை.


10 ஆயினும் நான் போகும் வழியை அவர் அறிவார்;
என்னை அவர் புடமிட்டால், நான் பொன்போல் துலங்கிடுவேன்.


11 அவர் அடிச்சுவடுகளை என் கால்கள் பின்பற்றின;
அவர் நெறியில் நடந்தேன்; பிறழவில்லை.


12 அவர் நா உரைத்த ஆணையினின்று நான் விலகவில்லை;
அவர்தம் வாய்மொழிகளை அரும்பொருளின் மேலாகப் போற்றினேன்.


13 ஆனால், அவர் ஒரு முடிவை எடுத்தால், யாரால் மாற்ற முடியும்?
ஏனெனில், எதை அவர் விரும்புகிறாரோ அதை அவர் செய்கிறார்.


14 ஏனெனில் எனக்கு அவர் குறித்துள்ளதை அவர் நிறைவேற்றுவார்;
இத்தகையன பல அவர் உள்ளத்தில் உள்ளன.


15 ஆகையால், அவர்முன் நடுங்குகின்றேன்;
அவரைப்பற்றி நினைக்கையில் திகிலடைகின்றேன்.


16 இறைவன் எனை உளம் குன்றச் செய்தார்;
எல்லாம் வல்லவர் என்னைக் கலங்கச் செய்தார்.


17 ஏனெனில் இருள் என்னை மறைக்கிறது;
காரிருள் என் முகத்தைக் கவ்வுகிறது.


குறிப்பு

[*] 23:2 'எனது' என்பது எபிரேய பாடம்.


அதிகாரம் 24[தொகு]


1 குறித்த காலத்தை எல்லாம் வல்லவர் ஏன் வெளிப்படுத்தவில்லை?
அவரை அறிந்தோரும் ஏன் அவர்தம் நாள்களைக் காணவில்லை?


2 தீயோர் எல்லைக்கல்லை எடுத்துப் போடுகின்றனர்.
மந்தையைக் கொள்ளையிட்டு மேய்க்கின்றனர்.


3 அனாதையின் கழுதையை ஓட்டிச் செல்கின்றனர்.
விதவையின் எருதை அடகாய்க் கொள்கின்றனர்.


4 ஏழையை வழியினின்று தள்ளுகின்றனர்.
நாட்டின் வறியோர் ஒன்றாக ஒளிந்து கொள்கின்றனர்.


5 ஏழைகள் உணவுதேடும் வேலையாய்க்
காட்டுக் கழுதையெனப் பாலைநிலத்தில் அலைகின்றனர்;
பாலைநிலத்தில் கிடைப்பதே அவர்கள் பிள்ளைகளுக்கு உணவாகும்.


6 கயவரின் கழனியில் அவர்கள் சேகரிக்கின்றனர்;
பொல்லாரின் திராட்சைத் தோட்டத்தில் அவர்கள் பொறுக்குகின்றனர்.


7 ஆடையின்றி இரவில் வெற்று உடலாய்க் கிடக்கின்றனர்;
வாடையில் போர்த்திக் கொள்ளப் போர்வையின்றி இருக்கின்றனர்;


8 மலையில் பொழியும் மழையால் நனைகின்றனர்;
உறைவிடமின்றிப் பாறையில் ஒண்டுகின்றனர்;


9 தந்தையிலாக் குழந்தையைத் தாயினின்று பறிக்கின்றனர்;
ஏழையின் குழந்தையை அடகு வைக்கின்றனர்.


10 ஆடையின்றி வெற்றுடலாய் அலைகின்றனர்;
ஆறாப்பசியுடன் அரிக்கட்டைத் தூக்குகின்றனர்.


11 ஒலிவத் தோட்டத்தில் எண்ணெய் ஆட்டுகின்றனர்;
திராட்சை பிழிந்தும் தாகத்தோடு இருக்கின்றனர்.


12 நகரில் இறப்போர் முனகல் கேட்கின்றது;
காயமடைந்தோர் உள்ளம் உதவிக்குக் கதறுகின்றது;
கடவுளோ அவர்கள் மன்றாட்டைக் கேட்கவில்லை.


13 இன்னும் உள்ளனர் ஒளியை எதிர்ப்போர்;
இவர்கள் அதன் வழியை அறியார்;
இவர்கள் அதன் நெறியில் நில்லார்.


14 எழுவான் கொலைஞன் புலரும் முன்பே,
ஏழை எளியோரைக் கொன்று குவிக்க;
இரவில் திரிவான் திருடன் போல.


15 காமுகனின் கண் கருக்கலுக்காய்க் காத்திருக்கும்,
கண்ணெதுவும் என்னைக் காணாது என்றெண்ணி;
முகத்தை அவனோ மூடிக் கொள்வான்!


16 இருட்டில் வீடுகளில் கன்னம் இடுவர்;
பகலில் இவர்கள் பதுங்கிக் கிடப்பர்;
ஒளியினை இவர்கள் அறியாதவரே!


17 ஏனென்றால் இவர்களுக்கு நிழல் காலைபோன்றது;
சாவின் திகில் இவர்களுக்குப் பழக்கமானதே!


18 வெள்ளத்தில் விரைந்தோடும் வைக்கோல் அவர்கள்;
பார்மேல் அவர்கள் பங்கு சபிக்கப்பட்டது;
அவர்தம் திராட்சைத் தோட்டத்தை எவரும் அணுகார்.


19 வறட்சியும் வெம்மையும் பனிநீரைத் தீய்க்கும்;
தீமை செய்வோரைப் பாதாளம் விழுங்கும்.


20 தாங்கிய கருப்பையே அவர்களை மறக்கும்;
புழு அவர்களைச் சுவைத்துத் தின்னும்.
அவர்கள் கொடுமை மரம்போல் முறிந்துபோம்.


21 ஏனெனில், மகவிலா மலடியை இழிவாய் நடத்தினர்;
கைம்பெண்ணுக்கு நன்மையைக் கருதினாரில்லை.


22 இருப்பினும், கடவுள் தம் வலிமையால்
வலியோரின் வாழ்வை நீட்டிக்கிறார்;
அவர்கள் தம் வாழ்வில் நம்பிக்கையோடு இருந்தாலும்
நிலைக்கமாட்டார்கள்.


23 அவர் அவர்களைப் பாதுகாப்புடன் வாழவிடுகிறார்;
அவர்களும் அதில் ஊன்றி நிற்கிறார்கள்;
இருப்பினும் அவரது கண் அவர்கள் நடத்தைமேல் உள்ளது.


24 அவர்கள் உயர்த்தப்பட்டனர்; அது ஒரு நொடிப்பொழுதே;
அதன்பின் இல்லாமற் போயினர்;
எல்லோரையும் போல் தாழ்த்தப்பட்டனர்;
கதிர் நுனிபோல் கிள்ளி எறியப்பட்டனர்.


25 இப்படி இல்லையெனில், என்னைப் பொய்யன் என்றோ,
என் மொழி தவறு என்றோ, எண்பிப்பவன் எவன்?


(தொடர்ச்சி): யோபு:அதிகாரங்கள் 25 முதல் 26 வரை