திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/லூக்கா நற்செய்தி/அதிகாரங்கள் 11 முதல் 12 வரை

விக்கிமூலம் இலிருந்து


"இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: 'ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், உயிர்வாழ எதை உண்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ கவலை கொள்ளாதீர். உணவைவிட உயிரும், உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா? காகங்களைக் கவனியுங்கள்; அவை விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை; அவற்றுக்குச் சேமிப்பறையுமில்லை, களஞ்சியமுமில்லை. கடவுள் அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். நீங்கள் பறவைகளைவிட மேலானவர்கள் அல்லவா?" - லூக்கா 12:22-24

லூக்கா நற்செய்தி (Luke)[தொகு]

அதிகாரங்கள் 11 முதல் 12 வரை

அதிகாரம் 11[தொகு]

இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்தல்[தொகு]

(மத் 6:9-15; 7:7-11)


1 இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்.
அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி,
"ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக்
கற்றுக் கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும்" என்றார்.
2 அவர் அவர்களிடம்,
"நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்:


தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக!


உமது ஆட்சி வருக!
3 எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும்.
4 எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால்
எங்கள் பாவங்களையும் மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்.


[தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்"] [1]


என்று கற்பித்தார்.


5 மேலும் அவர் அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார்:
"உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று,
'நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு.
6 என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார்.
அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை'
என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம்.
7 உள்ளே இருப்பவர், 'எனக்குத் தொல்லை கொடுக்காதே;
ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று;
என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள்.
நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது' என்பார்.
8 எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக் கொண்டேயிருந்தால்
அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும்,
அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து
அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.


9 "மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்:
கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்;
தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்;
தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்.
10 ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர்;
தேடுவோர் கண்டடைகின்றனர்;
தட்டுவோருக்குத் திறக்கப்படும்.
11 பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது
மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா?
12 முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா?
13 தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு
நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள்.
அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத்
தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!"

இயேசுவும் பெயல்செபூலும்[தொகு]

(மத் 12:22-30; மாற் 3:20-27)


14 ஒரு நாள் இயேசு பேச்சிழந்த ஒருவரிடமிருந்து பேயை ஓட்டினார்.
பேய் வெளியேறவே, பேச்சற்ற அவர் பேசினார்.
கூட்டத்தினர் வியந்து நின்றனர்.
15 அவர்களுள் சிலர்,
"பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே
இவன் பேய்களை ஓட்டுகிறான்" என்றனர். [2]
16 வேறு சிலர் அவரைச் சோதிக்கும் நோக்குடன்,
வானத்திலிருந்து ஏதேனும் ஓர் அடையாளம் காட்டுமாறு அவரிடம் கேட்டனர். [3]


17 இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, அவர்களிடம் கூறியது:
"தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும்.
அவ்வாறே பிளவுபடும் வீடும் விழுந்துவிடும்.
18 சாத்தானும் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டுப் போனால்
அவனது அரசு எப்படி நிலைத்து நிற்கும்?
பெயல்செபூலைக் கொண்டு நான் பேய்களை ஓட்டுகிறேன் என்கிறீர்களே.
19 நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்றால்
உங்களைச் சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய் ஓட்டுகிறார்கள்?
ஆகவே அவர்களே உங்கள் கூற்று தவறு என்பதற்குச் சாட்சிகள்.
20 நான் கடவுளின் ஆற்றலால் பேய்களை ஓட்டுகிறேன் என்றால்
இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா!
21 வலியவர் ஆயதம் தாங்கித் தம் அரண்மனையைக் காக்கிறபோது
அவருடைய உடைமைகள் பாதுகாப்பாக இருக்கும்.
22 அவரைவிட மிகுந்த வலிமையுடையவர் ஒருவர் வந்து அவரை வென்றால்
அவர் நம்பியிருந்த எல்லாப் படைக் கலங்களையும் பறித்துக் கொண்டு,
கொள்ளைப் பொருளையும் பங்கிடுவார்.


23 "என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்;
என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர்
அவர்களைச் சிதறச் செய்கிறார். [4]

தீய ஆவி திரும்பி வருதல்[தொகு]

(மத் 12:43-45)


24 "ஒருவரைவிட்டு வெளியேறுகின்ற தீய ஆவி
வறண்ட இடங்களில் அலைந்து திரிந்து இளைப்பாற இடம் தேடும்.
இடம் கண்டுபிடிக்க முடியாமல்,
'நான் விட்டுவந்த எனது வீட்டுக்குத் திரும்பிப் போவேன்' எனச் சொல்லும்.
25 திரும்பி வந்து அவ்வீடு கூட்டி அழகு படுத்தப்பட்டிருப்பதைக் காணும்.
26 மீண்டும் சென்று தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளை அழைத்து வந்து
அவருள் புகுந்து அங்கே குடியிருக்கும்.
அவருடைய பின்னைய நிலைமை முன்னைய நிலைமையை விடக் கேடுள்ளதாகும்."

உண்மையான பேறு[தொகு]


27 அவர் இவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தபோது,
கூட்டத்திலிருந்து பெண் ஒருவர்,
"உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்"
என்று குரலெழுப்பிக் கூறினார்.
28 அவரோ, "இறைவார்த்தையைக் கேட்டு
அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்" என்றார்.

யோனாவின் அடையாளம்[தொகு]

(மத் 12:38-42; மாற் 8:12)


29 மக்கள் வந்து கூடக்கூட இயேசு கூறியது:
"இந்தத் தீய தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர்.
இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத்தவிர
வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது. [5]
30 யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று
மானிட மகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார். [6]
31 தீர்ப்புநாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து
இவர்களைக் கண்டனம் செய்வார்.
ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க
உலகின் கடைக்கோடியிலிருந்து வந்தவர்.
ஆனால் இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா! [7]
32 தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து
இவர்களைக் கண்டனம் செய்வார்கள்.
ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள்.
ஆனால் இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா! [8]

உடலுக்கு விளக்கு[தொகு]

(மத் 5:16; 6:22-23)


33 "எவரும் விளக்கை ஏற்றி நிலவறையிலோ மரக்காலுக்குள்ளோ வைப்பதில்லை;
மாறாக அறையின் உள்ளே வருவோர்க்கு ஒளி கிடைக்கும்படி
அதை விளக்குத் தண்டின்மீது வைப்பர். [9]
34 உங்கள் கண்தான் உடலுக்கு விளக்கு.
உங்கள் கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும்;
அது கெட்டுப்போனால் உங்கள் உடல் இருளாய் இருக்கும்.
35 ஆகையால் உங்களுக்கு ஒளி தரவேண்டியது இருளாயிராதவாறு
பார்த்துக் கொள்ளுங்கள்.
36 உடலின் எப்பகுதியிலும் இருளின்றி உங்கள் உடல் முழுவதும் ஒளியாய் இருந்தால்,
விளக்குச் சுடர் முன் நீங்கள் ஒளிமயமாய் இருப்பதுபோல்
அனைத்தும் ஒளிமயமாய் இருக்கும்."

பரிசேயர், மறைநூல் அறிஞர் கண்டிக்கப்படல்[தொகு]

(மத் 23:1-36; மாற் 12:38-40; லூக் 20:45-47)


37 இயேசு பேசிக்கொண்டிருந்த போது
பரிசேயர் ஒருவர் தம்மோடு உணவு அருந்தும்படி அவரைக் கேட்டுக் கொண்டார்.
அவரும் போய்ப் பந்தியில் அமர்ந்தார்.
38 உணவு அருந்துமுன்பு அவர் கை கழுவாததைக் கண்டு பரிசேயர் வியப்படைந்தார்.
39 ஆண்டவர் அவரை நோக்கிக் கூறியது:
"பரிசேயரே, நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள்.
ஆனால் உங்களுக்கு உள்ளே கொள்ளையும் தீமையும் நிறைந்திருக்கின்றன.
40 அறிவிலிகளே,
வெளிப்புறத்தை உண்டாக்கியவரே உட்புறத்தையும் உண்டாக்கினார் அல்லவா!
41 உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள்.
அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாயிருக்கும்.


42 "ஐயோ! பரிசேயரே உங்களுக்குக் கேடு!
நீங்கள் புதினா,கறியிலை, மற்றும் கீரைச் செடிவகைகள் எல்லாவற்றிலும்
பத்திலொரு பங்கைக் காணிக்கையாகப் படைக்கிறீர்கள்.
ஆனால் நீதியையும் கடவுளின் அன்பையும் பொருட்படுத்துவதில்லை.
இவற்றைத்தான் கடைப்பிடித்திருக்க வேண்டும்;
ஆனால் அவற்றையும் விட்டு விடலாகாது. [10]


43 "ஐயோ! பரிசேயரே, உங்களுக்குக் கேடு!
தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும்
சந்தை வெளிகளில் மக்கள் வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறீர்களே.


44 ஐயோ! உங்களுக்குக் கேடு!
ஏனெனில் நீங்கள் அடையாளம் தெரியாத கல்லறைகள்போல் இருக்கிறீர்கள்.
மக்களும் கல்லறைகள் எனத் தெரியாமல் அவற்றின் மீது நடந்து போகிறார்கள்."


45 திருச்சட்ட அறிஞருள் ஒருவர் அவரைப் பார்த்து,
"போதகரே, இவற்றைச் சொல்லி எங்களை இழிவுபடுத்துகிறீர்" என்றார்.
46 அதற்கு அவர், "ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்கும் கேடு!
ஏனென்றால் நீங்கள் தாங்க முடியாத சுமைகளை மக்கள் மேல் சுமத்துகிறீர்கள்;
நீங்களோ அந்தச் சுமைகளை ஒரு விரலால் கூடத் தொடமாட்டீர்கள்.


47 "ஐயோ! உங்களுக்குக் கேடு!
ஏனெனில் நீங்கள் இறைவாக்கினருக்கு நினைவுச் சின்னங்கள் எழுப்புகிறீர்கள்.
ஆனால் அவர்களைக் கொலை செய்தவர்கள் உங்கள் மூதாதையர்களே.
48 உங்கள் மூதாதையரின் செயல்களுக்கு நீங்கள் சாட்சிகளாய் இருக்கிறீர்கள்;
அவற்றுக்கு உடன்பட்டும் இருக்கிறீர்கள்.
அவர்கள் கொலை செய்தார்கள்; நீங்கள் நினைவுச் சின்னம் எழுப்புகிறீர்கள்.
49 இதை முன்னிட்டே கடவுளின் ஞானம் இவ்வாறு கூறுகிறது:
நான் அவர்களிடம் இறைவாக்கினரையும் திருத்தூதரையும் அனுப்புவேன்.
அவர்களுள் சிலரைக் கொலை செய்வார்கள்;
அவர்களுள் சிலரைத் துன்புறுத்துவார்கள்.
50 ஆபேலின் இரத்தம்முதல்
பலிபீடத்திற்கும் தூயகத்திற்கும் நடுவே கொலை செய்யப்பட்ட
இறைவாக்கினர் அனைவரின் இரத்தத்திற்காகவும்
இந்தத் தலைமுறையினரிடம் கணக்குக் கேட்கப்படும்.
51 ஆம், நான் உங்களுக்குச் சொல்கிறேன்,
இந்த தலைமுறையினரிடம் கணக்குக் கேட்கப்படும்.


52 "ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்குக் கேடு!
ஏனெனில் அறிவுக் களஞ்சியத்தின் திறவுகோலை நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள்.
நீங்களும் நுழைவதில்லை; நுழைவோரையும் தடுக்கிறீர்கள்" என்றார். [11]
53 இயேசு அங்கிருந்து புறப்பட்டபோது
மறைநூல் அறிஞரும் பரிசேயரும் பகைமையுணர்வு மிகுந்தவராய்
54 அவரது பேச்சில் அவரைச் சிக்கவைக்குமாறு பல கேள்விகளைக் கேட்டனர். [12]


குறிப்புகள்

[1] 11:4 - அடைப்புக்குறிக்குள் உள்ள சொற்றொடர்
பல முக்கிய கையெழுத்துப்படிகளில் காணப்படவில்லை.
[2] 11:15 = மத் 9:34; 10:25.
[3] 11:16 = மத் 12:38; 16:1; மாற் 8:11.
[4] 11:23 = மாற் 9:40.
[5] 11:29 = மத் 16:14; மாற் 8:12.
[6] 11:30 = யோனா 3:4.
[7] 11:31 = 1 அர 10:1-10; 2 குறி 9:1-12.
[8] 11:32 = யோனா 3:5.
[9] 11:33 = மத் 5:15; மாற் 4:21; லூக் 8:16.
[10] 11:42 = லேவி 27:30.
[11] 11:52 = மத் 23:13.
[12] 11:54 = மத் 19:3; 22:15.

அதிகாரம் 12[தொகு]

அஞ்சாதீர்கள்[தொகு]

(மத் 10:28-31)


1 ஒருவரையொருவர் மிதிக்கும் அளவுக்கு
ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தபோது
இயேசு முதலில் தம் சீடரோடு பேசத் தொடங்கினார்.
அவர் அவர்களிடம் கூறியது:
"பரிசேயருடைய வெளிவேடமாகிய புளிப்பு மாவைக் குறித்து
நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். [1]
2 வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை;
அறியப்படாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை. [2]
3 ஆகவே நீங்கள் இருளில் பேசியவை ஒளியில் கேட்கும்.
நீங்கள் உள்ளறைகளில் காதோடு காதாய்ப் பேசியவை
வீடுகளின் மேல்தளத்திலிருந்து அறிவிக்கப்படும்.
4 நண்பர்களாகிய உங்களுக்கு நான் சொல்கிறேன்:
உடலைக் கொல்வதையன்றி வேறு எதுவும் செய்ய
இயலாதவர்களுக்கு அஞ்ச வேண்டாம்.
5 நீங்கள் யாருக்கு அஞ்ச வேண்டுமென நான் உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன்.
கொன்றபின் நரகத்தில் தள்ள அதிகாரமுள்ளவருக்கே அஞ்சுங்கள்;
ஆம், அவருக்கே அஞ்சுங்கள் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
6 இரண்டு காசுக்கு ஐந்து சிட்டுக்குருவிகள் விற்பதில்லையா?
எனினும் அவற்றில் ஒன்றையும் கடவுள் மறப்பதில்லையே.
7 உங்கள் தலைமுடி எல்லாம் கூட எண்ணப்பட்டிருக்கின்றன.
அஞ்சாதீர்கள்; சிட்டுக்குருவிகள் பலவற்றை விட நீங்கள் மேலானவர்கள்.

மக்கள் முன்னிலையில் கிறிஸ்துவை ஏற்று அறிக்கையிடுதல்[தொகு]

(மத் 10:32-33; 12:32; 10:19-20)


8 "நான் உங்களுக்குச் சொல்கிறேன்:
மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக் கொள்பவரை
மானிடமகனும் கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக் கொள்வார்.
9 மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர்
கடவுளின் தூதர் முன்னிலையிலும் மறுதலிக்கப்படுவார்.
10 மானிடமகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டவரும் மன்னிக்கப்படுவார்.
ஆனால் தூய ஆவியாரைப் பழித்துரைப்பவர் மன்னிப்புப் பெறமாட்டார். [3]
11 தொழுகைக் கூடங்களுக்கும் ஆட்சியாளர், அதிகாரிகள் முன்னும்
உங்களைக் கூட்டிக்கொண்டு போகும்போது
எப்படிப் பதிலளிப்பது, என்ன பதில் அளிப்பது,
என்ன பேசுவது என நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
12 ஏனெனில் நீங்கள் பேசவேண்டியவற்றைத்
தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார். [4]

அறிவற்ற செல்வன் உவமை[தொகு]


13 கூட்டத்திலிருந்து ஒருவர் இயேசுவிடம்,
"போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக்கொள்ளுமாறு
என் சகோதரருக்குச் சொல்லும்" என்றார்.
14 அவர் அந்த ஆளை நோக்கி,
"என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ
அமர்த்தியவர் யார்?" என்று கேட்டார்.
15 பின்பு அவர் அவர்களை நோக்கி,
"எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள்.
மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால்
ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது" என்றார்.


16 அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்:
"செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது.
17 அவன், 'நான் என்ன செய்வேன்?
என் விளை பொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே!' என்று எண்ணினான்.
18 'ஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை இடித்து
இன்னும் பெரிதாகக் கட்டுவேன்;
அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன்'.
19 பின்பு, "என் நெஞ்சமே,
உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பல வகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன;
நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு" எனச் சொல்வேன்' என்று
தனக்குள் கூறிக்கொண்டான்.
20 ஆனால் கடவுள் அவனிடம், 'அறிவிலியே,
இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும்.
அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?' என்று கேட்டார்.
21 கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த்
தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே."

கவலை வேண்டாம்[தொகு]

(மத் 6:25-34; 6:19-21)


22 இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது:
"ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்,
உயிர்வாழ எதை உண்பது என்றோ,
உடலுக்கு எதை உடுத்துவது என்றோ கவலை கொள்ளாதீர்.
23 உணவைவிட உயிரும்,
உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா?
24 காகங்களைக் கவனியுங்கள்;
அவை விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை;
அவற்றுக்குச் சேமிப்பறையுமில்லை, களஞ்சியமுமில்லை.
கடவுள் அவற்றுக்கும் உணவு அளிக்கிறார்.
நீங்கள் பறவைகளைவிட மேலானவர்கள் அல்லவா?
25 கவலைப்படுவதால் உங்களுள் எவர் தமது உயரத்தோடு
ஒரு முழம் கூட்ட முடியும்?
26 ஆதலால் மிகச் சிறிய ஒரு செயலைக் கூடச் செய்யமுடியாத நீங்கள்
மற்றவை பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள்?
27 காட்டுச் செடிகள் எப்படி வளர்கின்றன எனக் கூர்ந்து கவனியுங்கள்;
அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை;
ஆனால் சாலமோன்கூடத் தம் மேன்மையிலெல்லாம்
அவற்றில் ஒன்றைப்போல் அணிந்திருந்ததில்லை என
நான் உங்களுக்குச் சொல்கிறேன். [5]


28 "நம்பிக்கை குன்றியவர்களே,
இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறிப்படும் காட்டுப் புல்லுக்குக்
கடவுள் இவ்வாறு அணிசெய்கிறார் என்றால்
உங்களுக்கு இன்னும் மிகுதியாகச் செய்வார் அல்லவா!
29 ஆதலால் எதை உண்பது, எதைக் குடிப்பது என
நீங்கள் தேடிக்கொண்டிருக்க வேண்டாம்;
கவலை கொண்டிருக்கவும் வேண்டாம்.
30 ஏனெனில் உலகு சார்ந்த பிற இனத்தவரே இவற்றையெல்லாம் தேடுவர்.
உங்களுக்கு இவை தேவையென உங்கள் தந்தைக்குத் தெரியும்.
31 நீங்கள் அவருடைய ஆட்சியை நாடுங்கள்;
அப்பொழுது இவை உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.


32 "சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்;
உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார்.
33 உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்;
இற்றுப்போகாத பணப்பைகளையும்
விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்;
அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை.
34 உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.

விழிப்பாயிருக்கும் பணியாளர்கள்[தொகு]

(மத் 24:45-51)


35 "உங்கள் இடையை வரிந்துகட்டிக் கொள்ளுங்கள்.
விளக்குகளும் எரிந்து கொண்டிருக்கட்டும். [6]
36 திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது
உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள். [7]
37 தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறு பெற்றவர்கள்.
அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு
அவர்களைப் பந்தியில் அமரச் செய்து,
அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
38 தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும்
மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும்
அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறுபெற்றவர்கள்.
39 எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று
வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால்
அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள்.
40 நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்;
ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்." [8]


41 அப்பொழுது பேதுரு,
"ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா?
அல்லது எல்லாருக்குமா?" என்று கேட்டார்.
42 அதற்கு ஆண்டவர் கூறியது:
"தம் ஊழியருக்கு வேளா வேளை படியளக்கத்
தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும்
அறிவாளியுமான வீட்டுப்பொறுப்பாளர் யார்?
43 தலைவர் வந்து பார்க்கும் போது
தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர்.
அவர் பேறுபெற்றவர்.
44 அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என
உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன்.
45 ஆனால் அதே பணியாள் தன் தலைவர் வரக்காலந் தாழ்த்துவார் எனத்
தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டு
ஆண், பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும்
மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் தொடங்கினான் எனில்
46 அப்பணியாள் எதிர்பாராத நாளில்,
அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வந்து
அவனைக் கடுமையாகத் தண்டித்து
நம்பிக்கைத் துரோகிகளுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார்.
47 தன் தலைவரின் விருப்பத்தை அறிந்திருந்தும்
ஆயத்தமின்றியும் அவர் விருப்பப்படி செயல்படாமலும் இருக்கும் பணியாள்
நன்றாய் அடிபடுவான்.
48 ஆனால் அவர் விருப்பத்தை அறியாமல்
அடிவாங்கவேண்டிய முறையில் செயல்படுபவன்
அவரது விருப்பத்தை அறியாமல் செயல்படுவதால் சிறிதே அடிபடுவான்.
மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும்.
மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.

பிளவு ஏற்படுதல்[தொகு]

(மத் 10:34-36)


49 "மண்ணுலகில் தீமூட்ட வந்தேன்.
அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
50 ஆயினும் நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு.
அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன். [9]
51 மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்?
இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்.
52 இது முதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள்
இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு எதிராக இருவரும் பிரிந்திருப்பர்.
53 தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும்,
தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும்,
மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்." [10]

காலத்தைக் கண்டுணர்தல்[தொகு]

(மத் 16:2-3)


54 இயேசு மக்கள் கூட்டத்தைப் பார்த்து,
"மேற்கிலிருந்து மேகம் எழும்புவதை நீங்கள் பார்த்ததும் மழைவரும் என்கிறீர்கள்;
அது அப்படியே நடக்கிறது.
55 தெற்கிலிருந்து காற்று அடிக்கும்பொழுது மிகுந்த வெப்பம் உண்டாகும் என்கிறீர்கள்;
அதுவும் நடக்கிறது.
56 வெளிவேடக்காரரே,
நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும்
ஆய்ந்து பார்க்க அறிந்திருக்கும்போது,
இக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி?

எதிரியோடு உடன்பாடு செய்துகொள்தல்[தொகு]

(மத் 5:25-26)


57 "நேர்மையானது எதுவென நீங்கள் தீர்மானிக்காமல் இருப்பதேன்?
58 நீங்கள் உங்கள் எதிரியோடு ஆட்சியாளரிடம் போகும்போது,
வழியிலேயே உங்கள் வழக்கைத் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
இல்லையேல் அவர் உங்களை நடுவரிடம் இழுத்துக்கொண்டு போக,
நடுவர் உங்களை நீதிமன்ற அலுவலரிடம் ஒப்புவிப்பார்;
நீதிமன்ற அலுவலர் உங்களைச் சிறையிலடைப்பார்.
59 கடைசிக் காசுவரை நீங்கள் திருப்பிச் செலுத்தாமல்
அங்கிருந்து வெளியேறமாட்டீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்.


குறிப்புகள்

[1] 12:1 = மத் 16:6; மாற் 8:15.
[2] 12:2 = மத் 4:22; லூக் 8:17.
[3] 12:10 = மத் 12:32; மாற் 3:29.
[4] 12:11,12 = மத் 10:19,20; மாற் 13:11; லூக் 21:14,15.
[5] 12:27 = 1 அர 10:4-7; 2 குறி 9:3-6.
[6] 12:35 = மத் 25:1-13.
[7] 12:36 = மாற் 13:24-36; 1 பேது 1:13.
[8] 12:39,40 = மத் 24:43,44.
[9] 12:50 = மாற் 10:38.
[10] 12:53 = மீக் 7:6


(தொடர்ச்சி): லூக்கா நற்செய்தி: அதிகாரங்கள் 13 முதல் 14 வரை