நாலடியார் - செய்யுளும் செய்திகளும்/28. ஈயாமை

விக்கிமூலம் இலிருந்து

28. ஈயாத உலோபிகள்
(ஈயாமை)

நண்பனோ அந்நியனோ பசி அனைவருக்கும் உடைமை; அங்கே நட்பு பகை என்று பார்க்காதே; பசித்தவன் அவன் பசியைப் போக்குவதற்குப் பின் வாங்காதே; அவன் வாழ்த்தட்டும்; வையட்டும்; அஃது அவன்போக்கு. கதவு திறப்பது காற்று வருவதற்கு; பசித்தவர் தடையின்றி நுழைவதற்கு ஒரு சிலர் கதவு அடைத்துக் கொண்டு தாம் மட்டும் உண்டு மகிழ்வர்; அவர்கள் உள்ளம் மிகவும் குறுகியது. சுவர்க்கக் கதவுகள் அவர்களுக்குத் திறக்காது; ஒளி அவர்கள் வாழ்வில் காணமாட்டார்கள். அந்த வீடு இருண்ட வீடு என்றுதான் கூற முடியும்.

உதவுதல் என்பது உபரிப் பணம் உடையவரால் தான் முடியும் என்று கூறுதல் பொருந்தாது; கூலிக்கு வேலை செய்பவன்கூட ‘டீக் கடைக்குச் செல்கிறான்; அவன் தோழன் அவனோடு செல்லும்போது, “நீ நில்; நான் ‘டீ’ குடித்து விட்டு வருகிறேன்” என்று நிறுத்தி வைக்கமாட்டான். உடன் அழைத்துச் செல்வான்; இதுதான் பண்பாடு. பெரிய வீடு; கூர்க்கா காவல்; மேல்நாட்டு நாய். மனிதர்களுள் சாதி ஒழிந்தாலும் நாயினத்தில் ஒழியவில்லை. இவ்வளவும் மீறி உள்ளே செல்ல முடியுமா? சென்றால் இன்முகம் காட்டி நல் விருந்தா தரப்போகிறார்கள்? சலசலத்த புடவையுடன், கலகலத்த பேச்சில், மலமலத்து இருக்கப் போகிறார்கள்; நீ வெலவெலத்து வெளியேற வேண்டியது தான். உள்ளம் உவந்து தருபவரே கள்ளம் தவிர்ந்தவர் ஆவர்.

பொருளை வைத்துக் கொண்டு அவன் என்ன செய்கிறான்? பொம்மலாட்டம் ஆடுகிறான்; தானும் மனம் வந்து உண்ணான். வயிறுக்கு வாய்தா போடுவான்! துறவிகள் பாவம் உறவு யாரும் இல்லாதவர். சோறு ஒன்றுதான் அவர்கள் உலகத்துப் பற்று. பசி ஒன்றுதான் அவர்களை வசிக்கச் செய்கிறது. அவர்கள் மதுவோ மங்கையோ வேட்டு மகிழ விரும்புவதில்லை. சோறு கைப்பிடிச் சோறு; அதற்கும் கெடுபிடி, அவன் நாலு வீடு நடந்தால்தான் அவன் அட்சய பாத்திரம் நிச்சய பாத்திரம் ஆகிறது. அவர்கள் இல்வாழ்க்கை நடத்தும் நல்லோரை நம்பித்தான் வாழ்கின்றனர். அவர்களையும் கவனிக்காமல் சேர்த்து வைத்துச் செத்துப் போனால் பின் அந்தச் செல்வமே அவனைப் பார்த்துச் சிரிக்கும். இந்த உலகம் அவனை எள்ளி நகையாடும்; அதனால் செல்வர் பலருக்கும் பயன்பட வாழ்ந்து அதில் மகிழ்வு காண்க.

இடுக்கண் தீர்க்காது ஒடுக்கி வைத்த செல்வம் அவனா அனுபவிக்கப் போகிறான்? அஃது மகனுக்கு அவன் போற்றி வளர்க்கும் மகளுக்கு ஆகிறது. மகள் வளர்க்கத் தக்கவள்; கன்னிப் பருவம் வந்ததும் அந்நியன் அவளை இழுத்துச் சென்று கழுத்தை நீட்டு என்று தாலி கட்டி வேலி இடுவான். அனுபவிக்கத் தெரியாதவர்; அதற்கு என்று ஒருவன் வந்து அள்ளிக் கொண்டு போகப் போகிறான்; இவர் வாயைப் பிளந்து கொண்டு வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்.

கடற்கரையில் காற்று வாங்கச் செல்கிறான், ஊற்று நீர்தான் அவன் தாகத்தைத் தீர்க்கிறதே தவிரப் பரந்த கடல் பயன்படுவது இல்லை. அஃது உவர்ப்பு: செல்வம் படைத்தவன் கண்ணுக்குத் தெரியலாம்; அவனிடம் சென்று கைநீட்ட இயலாது. இவனைப் போன்ற மாத வருவாயக்காரன்தான் உதவி செய்ய முன்வருவான்.

அதோ அவன்பொருள் சேர்த்துச் சேமித்து வைத்திருக்கிறான்; அவன் ‘எனது’ என்று சொல்லிப் பெருமைப் படுகிறான்; அவன் அதை அனுபவிப்பது இல்லை. நானும் அதை எனது என்று சொல்கிறேன்; நானும் எடுத்து அதனை அனுபவிக்கப் போவது இல்லை. அவனுக்கும் எனக்கும் வேறுபாடே இல்லை.

அடுக்கிய செல்வம் முடக்கி வைத்து அதனைக் காத்துப் பூதம் போல் விழித்துக் கிடக்கிறானே அவனை விட எந்தக் காசும் இல்லாமல், தூசு தட்டத்தேவை இல்லாமல் நிம்மதியாக இருக்கிறானே அவன் வாழ்க்கை நிம்மதி, அவன் யாருக்கும் கைக் கட்டிக் கொண்டு பதில் சொல்லத்தேவையில்லை. உழைப்பு இல்லை; அதனால் ஏற்படும் உளைச்சலும் இல்லை. செல்வனும் எதுவும் துய்க்கப் போவது இல்லை; இவனும் எதுவும் கொண்டு மகிழப் போவதில்லை. அவன் பணம் படைத்தவன்; இவன் குணம் படைத்தவன்.

சேர்த்து வைத்தது கோடி ஐந்து; என்றாலும் ஓடி எடுத்து விளையாட முடியாது; சொந்தம் என்று கூறிக் கொள்ளலாமே தவிர அதில் எந்த பந்தமும் காட்ட முடியாது. அசையாத சொத்து, ஐந்து பத்தாகிறது. அவன் செத்து மடிந்தான்; பாகத்தர் வந்து அதனை எடுத்துப் பாதுகாக்கின்றனர். அவர்களாவது எடுத்துச் செலவு செய்கிறார்களோ! பூர்வீக சொத்து என்று தார்மீகம் பேசு கிறார்கள். அவர்களுக்குப் பின்னால் பேரன் கொள்ளுப் பேரன் இப்படிப் பேர் கொண்டவர்களுக்கே உரிமை சேர்கிறது. அவனாவது துணிந்து எடுத்துத் தருகிறானா? பணிந்து பேசுகிறான்; “முன்னோர் பொருள்; அதைப் போற்றிக் காப்பது தன் சீரிய கடமை” என்கிறான். சென்றவர்கள் வந்து தட்டிக் கேட்கப் போவது இல்லை. இவன் யாருக்கு அஞ்சுகிறான்? சஞ்சலப் பயல்!

கன்றுக்குப் பசி என்றால் தாய்ப் பசு அதனை அணைத்துக் கொள்கிறது; மடி சுரக்கிறது; பால் அது குடிக்கிறது; கன்று சென்று அதனிடம் முறையிடுவது இல்லை. குறையுற்றுக் கெஞ்சுவது இல்லை; தாயே விரும்பிப் பால் தருகிறது. கன்று முந்துகிறதா, பசு முந்துகிறதா எது எப்படி என்று கூற முடியாது. இதுதான் ஈவோர்க்கும் இரப்போர்க்கும் உள்ள உறவு முறை. இரப்போர் தாழ்வு மனம் கொள்ளக் கூடாது. அது அவர்களுக்கு அமைந்த உரிமை; ஈவோர் தருவது அவர்களுக்குப் பெருமை; வற்புறுத்தி வாங்குவதும் அதற்கு அஞ்சி ஈவதும் அற்பர்கள் செயலாகும்.

மாடு மேய்த்துவிட்டுக் கோலை தூக்கிப் போட்டு விட்டுக் கால்மேல் கால் வைத்துக் காட்டு வழியும் மேட்டு வழியும் திரிகிறானே கண்ணனின் கதைக்கு வாரிசு கொண்டாடும் மேய்ச்சல் தொழிலன்; மாடு மேய்க்கும் கோன். அவனுக்கு எந்தக் கவலையும் இல்லை. இப்படிப் பலர் செய் தொழில் செய்துவிட்டு எய்தும் பொருளைக் கொண்டு கூட்டல் கழித்தல் சரி செய்து கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்கள். துண்டு விழும் பேரம்

9 அவர்களிடம் இருப்பது இல்லை; இதோ தேனி போலச் சுறுசுறுப்பாக வேலை செய்கிறானே அவன் நிலை என்ன? ‘ஒய்வு இல்லை; ஒழிச்சல் இல்லை’ என்கிறான். பொருள் ஈட்டுவதும் துன்பம்; ஈட்டியதைக் காத்து வைப்பதும் துன்பம். பணக்காரானாகப் பிறப்பது பாபமான தொழில். அரசர் குடியில் பிறந்தால் பெருஞ்சுமை என்கிறான் சேரன் செங்குட்டுவன்; “மழை வளம் கரந்தால் வான்பேர் அச்சம்; நாட்டு மக்கள் தவறுசெய்தால் அதைவிட அச்சம்” என்கிறான். பொருள் அதிகாரமே பொறுப்புடைய ஒன்று; அளவாக ஈட்டி அதைச் சேர்த்து வைத்து வளமாக வாழ்வதே அறிவுடைமை; முடிந்தால் பிறர் துன்பத்தையும் போக்குக. இதுவே அறன் எனப்படுவது ஆகும்.