நீதிக் களஞ்சியம்/உலக நீதி

விக்கிமூலம் இலிருந்து


உலக நீதி
(உலகநாத பண்டிதர்)

கடவுள் வாழ்த்து

உலகநீதி புராணத்தை உரைக்கவே,
கலைகளாய் வரும் கரிமுகன் காப்பு.

நூல்

ஓதாமல் ஒரு நாளும் இருக்கவேண்டாம்:
      ஒருவரையும் பொல்லாங்கு சொல்லவேண்டாம்;
மாதாவை ஒரு நாளும் மறக்கவேண்டாம்;
      வஞ்சனைகள் செய்வாரோடு இணங்கவேண்டாம்.
போகாத இடம் தனிலே போகவேண்டாம்;
       போகவிட்டு, புறஞ்சோல்லித் திரியவேண்டாம்;—
வாகு ஆரும் குறவருடை வள்ளி பங்கன்
       மயில் ஏறும் பெருமாளை வாழ்த்தாய், நெஞ்சே!


நெஞ்சு ஆரப் பொய்தன்னைச் ரொல்லவேண்டாம்;
      நிலை இல்லாக் காரியத்தை நிறுத்தவேண்டாம்;
நஞ்சுடனே ஒரு நாளும் பழகவேண்டாம்;
      நல் இணக்கம் இல்லாரோடு இணங்கவேண்டாம்;
அஞ்சாமல் தனி வழியே போகவேண்டாம்;
      அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்கவேண்டாம்:—
மஞ்சு ஆரும் குறவருடை வள்ளி பங்கன்
      மயில் ஏறும் பெருமாளை வாழ்த்தாய், நெஞ்சே!

மனம் போன போக்கு எல்லாம் போசுவேண்டாம்;
      மாற்றானை உறவு என்று நம்பவேண்டாம்;
தனம் தேட உண்ணாமல் புதைக்கவேண்டாம்;
      தருமத்தை ஒரு நாளும் மறக்கவேண்டாம்;
சினம் தேடி, அல்லலையும் தேடவேண்டாம்;
      சினந்திருந்தார் வாசல் வழிச் சேறல்வேண்டாம்;—
வனம் தேடும் குறவருடை வள்ளி பங்கன்
      மயில் ஏறும் பெருமாளை வாழ்த்தாய், நெஞ்சே!3

குற்றம் ஒன்றும் பாராட்டித் திரியவேண்டாம்;
      கொலை களவு செய்வாரோடு இணங்கவேண்டாம்;
கற்றவரை ஒரு நாளும் பழிக்கவேண்டாம்;
      கற்புடைய மங்கையரைக் கருதவேண்டாம்;
கொற்றவனோடு எதிர்மாறு பேசவேண்டாம்;
      கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம்;-
மற்று நிகர் இல்லாத வள்ளி பங்கன்
      மயில் ஏறும் பெருமாளை வாழ்த்தாய், நெஞ்சே!3

வாழாமல் பெண்ணை வைத்துத் திரியவேண்டாம்;
      மனையாளைக் குற்றம் ஒன்றும் சொல்லவேண்டாம்;
வீழாத படு குழியில் வீழவேண்டாம்;
      வெஞ்சமரில் புறங்கொடுத்து மீளவேண்டாம்;
தாழ்வான குலத்துடனே சேரவேண்டாம்;
      தாழ்ந்தவரைப் பொல்லாங்கு சொல்லவேண்டாம்;—
வாழ்வு ஆரும் குறவருடை வள்ளி பங்கன்
      மயில் ஏறும் பெருமாளை வாழ்த்தாய், நெஞ்சே!3

வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரியவேண்டாம்;
      மதியா தார் தலைவாசல் மிதிக்கவேண்டாம்:
மூத்தோர் சொல் வார்த்தைதனை மறக்கவேண்டாம்;
      முன்கோபக்காரரோடு இணங்கவேண்டாம்;
வாத்தியார் கூலியை வைத்திருக்கவேண்டாம்;
      வழி பறித்துத் திரிவாரோடு இணங்கவேண்டாம்:—
சேர்த்த புகழாளன் ஒரு வள்ளி பங்கன்
     திருக்கை வேலாயுதனைச் செப்பாய், நெஞ்சே!3

கருதாமல் கருமங்கள் முடிக்கவேண்டாம்;
       கணக்கு அழிவை ஒரு நாளும் பேசவேண்டாம்;
பொருவார்தம் போர்க்களத்தில் போகவேண்டாம்;
       பொது நிலத்தில் ஒருநாளும் இருக்கவேண்டாம்;
இரு தாரம் ஒரு நாளும் தேட வேண்டாம்;
       எளியாரை எதிரிட்டுக் கொள்ளவேண்டாம்;—
குருகு ஆரும் புனம் காக்கும் ஏழை பங்கன்
       குமரவேள் பாதத்தைக் கூறாய்,நெஞ்சே!7

சேராத இடம்தனிலே சேரவேண்டாம்;
      செய்த நனறி ஒரு நாளும் மறக்கவேண்டாம்;
ஊரோடும் குண்டுணியாய்த் திரியவேண்டாம்;
      உற்றாரை உதாசினங்கள் சொல்லவேண்டாம்;
பேரான காரியத்தைத் தவிர்க்கவேண்டாம்;
      பிணைபட்டுத் துணை போகித் திரியவேண்டாம்;
வார் ஆரும் குறவருடை வள்ளி பங்கன்
      மயில் ஏறும் பெருமாளை வாழ்த்தாய், நெஞ்சே!8

மண் நின்று மண் ஓரம் சொல்லவேண்டாம்;
     மனம் சலித்துச் சிலுக்கிட்டுத் திரியவேண்டாம்;
கண் அழிவு செய்து துயர் காட்டவேண்டாம்;
     காணாத வார்த்தையைக் கட்டுரைக்கவேண்டாம்:
புண்படவே வார்த்தைதனைச் சொல்லவேண்டாம்;
     புறஞ்சொல்லித் திரிவாரோடு இணங்கவேண்டாம்;-
மண் அளந்தான் தங்கை உமை மைந்தன். எம் கோன்,
     மயில் ஏறும் பெருமாளை வாழ்த்தாய், நெஞ்சே!9

மறம் பேசித் திரிவாரோடு இணங்கவேண்டாம்;
     வாதாடி வழக்கு அழிவு சொல்லவேண்டாம்;
திறம் பேசிக் கலகமிட்டுத் திரியவேண்டாம்;
     தெய்வத்தை ஒரு நாளும் மறக்கவேண்டாம்;
இறந்தாலும் பொய்தன்னைச் சொல்லவேண்டாம்;
     ஏசலிட்ட உற்றாரை நத்தவேண்டாம்;—
குறம் பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்.
     குமரவேள் நாமத்தைக்கூறாய், நெஞ்சே!10

அஞ்சு பேர் கூலியைக் கைக்கொள்ளவேண்டாம்;
      அது ஏது இங்கு என்னின், நீ, சொல்ல, கேளாய்;
தஞ்சமுடன் வண்ணான், நாவிதன், தன் கூலி;
      சகல கலை ஓதுவித்த வாத்தியார் கூலி:
வஞ்சம் அற, நஞ்சு அறுத்த மருத்துவச்சி கூலி:
      மகா நோவுதவைத் தீர்த்த மருத்துவன்தன் கூலி;—
இன் சொலுடன் இவர் கூலி கொடாத பேரை
      ஏது ஏது செய்வானோ, ஏமன்தானே!11

கூறக்கி ஒருகுடியைக் கெடுக்கவேண்டாம்;
     கொண்டைமேல் பூத்தேடி முடிக்கவேண்டாம்;
தூறாக்கித் தலையிட்டுத் திரியவேண்டாடாம்;
     துர்ச்சனராய்த் திரிவாரோடு இணங்கவேண்டாம்;
வீறான தெய்வத்தை இகழவேண்டாம்;
     வெற்றி உள்ள பெரியோரை வெறுக்கவேண்டாம்;—
மாறான குறவருடை வள்ளி பங்கன்
     மயில் ஏறும் பெருமாளை வாழ்த்தாய், நெஞ்சே!12

ஆதரித்துப் பல வகையால் பொருளும் தேடி,
     அருந்தமிழால் அறுமுகனைப் பாடவேண்டி.
ஓதுவித்த வாசகத்தால் உலகநாதன்
     உண்மையாய்ப் பாடிவைத்த உலகநீதி;
காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்;
     கருத்துடனே நாள்தோறும் களிப்பினோடு
போதமுற்று, மிக வாழ்ந்து, புகழும் தேடி,
     பூலோகம் உள்ளளவும் வாழ்வர் தாமே.13