பக்கம்:அஞ்சலி.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172 வா. ச. ராமாமிருதம்

“அம்மா! அம்மா!”

***

வயற்புறத்தில் ஒரமாய் ஒரு மரத்தடியில், அம்மாவின் சாம்பல் குவியல் எதிரே நின்று கொண்டிருந்தேன். அழுத கண்ணின் சிவப்புடன் அந்திவானம் கவிந்தது. நான் அழவேயில்லை.

நான் இன்னமும் அழவில்லை. அம்மாவை எரிக்கையில் நானும் என்னுள் எரிந்துபோனேன்

காற்று வாக்கில் சிதையில் என் புறமாய்ச் சாய்ந்த அனல் நாக்குகள் என்னையும் சேர்த்து நக்கிவிட்டன.

நானும் சேர்ந்து சுட்டெரிந்து நீறாய்ப்போன சாம்பலையே வெகுநேரம் முறைத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.

இன்று காலைதான் அம்மாவின் அஸ்தியை பானையில் ஊருக்கு அருகே ஒடும் வாய்க்காவின் நடுமணலில் முறைப்படி புதைத்துவிட்டேன். ஆனால் இன்று மாலையே, அவளைச் சுட்டெரித்த இடம் இழுத்தது. மரத்தடியில், அவள் தன் அந்திப் படுக்கையில் கிடந்த இடத்தை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த நிலைமையில் எவ்வளவு நேரம் கழிந்ததென அறியேன்.

குன்றி வரும் வெளிச்சத்தில், சாம்பலில் ஏதோ “பளிச் பளிச்” சென்றது. குனிந்து அந்த இடத்தைச் சாம்பலோடு அள்ளினேன்.

திடீரென ஒரு காற்று, சுழலாய்க் கிளம்பி என்மேல் மோதி, என் கைச் சாம்பலை ஊதித் தன் வழியோடு இறைத்துக்கொண்டு போயிற்று. அத்தோடு அம்மாவும் போகிறாள். பச்சைப்பட்டுப் புதுப் புடவையின் சலசலப்பு இனிப்புடன் ஒலித்தது. கை நிறைய அடுக்கிய வளையல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/182&oldid=1026007" இலிருந்து மீள்விக்கப்பட்டது