அணியறுபது
13
உடலுறும் உயிர்கட் கினிதருள் அமுதம்
உருட்டுக சிறுதேரே
உமையொரு பாகற்கு அருமைக் குமரன்
உருட்டுக சிறுதேரே.
பாகம் ஒருபெண் குடியிருக்கும்
பரமன் அணியிற் பரித்தமணி
நாகம் நுழைவுற்று உடல்சுருண்டு
கிடந்து நகுவெண் தலைப்புழையில்
போக மெல்லத் தலை நீட்டிப்
பார்த்து வாங்கப் போகும்ஒரு
தோகை மயில்வா கனப்பெருமாள்
துணைத்தாட் கமலம் தொழுதிடுவாம்.
மயிலின் அதிசய ஆற்றல்களை இவை துதி செய்துள்ளன. கவிகளில் கனிந்துள்ள சுவைகளைக் கருதி யுணர்பவர் உள்ளம் உருகி மகிழ்வர்.
நூறு கோடி சூரியர்கள் ஏக காலத்தில் நீலக் கடல் மேல் உதயம் ஆயது போல் கோல மயில் மேல் முருகக் கடவுள் எழுந்தருளி விளங்குகிறார். அந்த அற்புதக் காட்சியை அருணகிரிநாதர் யோகக் காட்சியில் கண்டு களித்திருக்கிறார். அவ்வுண்மையை ஈண்டு உறுதியா உணர்ந்து கொள்கிறோம்.
சதகோடி சூரியர்கள் உதயம் என மயிலின் மிசை ஒரு சோதி வீசுவது எனப் பரவசமாய்ப் பாடி யிருப்பது நாடியறிய வுரியது. கடவுளின் காட்சி கதியருளும் மாட்சியாய்த் துதி கொண்டுள்ளது.