பக்கம்:அணியும் மணியும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

2. நிறைவும் குறைவும்


உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில்

உள்ள நிறைவாமோ?

என்று, கவிபாரதி தம் கவிதையில் ஒரு கேள்வியை எழுப்பி விடுகின்றார். உள்ளத் தூய்மை என்பதும், உயர்ந்த கொள்கைகளில் உறுதிப்பாடு என்பதும் தக்க சூழ்நிலை வரும் பொழுதுதான் வெளிப்படும். அதுவரையிலும் மனத்தின் நிறைவாகக் கருதப்படும் உயர்ந்த பண்புகளெல்லாம் நிலையானவை என்று கூறிவிட முடியாது. இந்த மனிதவியல்பை எடுத்துக் காட்டுவதற்கென்றே கம்பனின் படைப்பில் கையேயி தோன்றினாள் என்று கூறலாம்.

சிறந்த புலவன், தான் இயற்றும் காவியத்தில், மக்களின் பல்வேறு பண்பியல்புகளையும், மனமாறுபாடுகளையும் காட்டுவதற்கென்றே மாந்தர்களைப் படைத்துக் காட்டுகிறான். அவன் படைக்கும் மாந்தர்களின் இயல்பு உலகத்து மக்களின் மனவியல்போடு ஒத்து விளங்குவதால்தான் அவை என்றும் நின்று நிலைபெறுகின்றன. அதனால், புலவன் படைக்கும் மாந்தர்கள் எல்லாம் வெறுங்கற்பனை என்று கூறிவிட முடியாது. வாழ்க்கையோடு தொடர்புடைய கற்பனைதான் நிலைத்த வாழ்வைப் பெறும். அத்தகைய வாழ்வோடு தொடர்புடைய மனவியல்பைக் காட்டும் கற்பனைப் படைப்பே கைகேயி என்று கூறலாம்.