இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
128
தமிழகத்தார் வஞ்சிக்கப் படும்வி தத்தைத்
தயக்கமின்றிச் சட்டமன்றில் தொகுத்துக் கூறித்
தமிழகம்போல் மாநிலங்கள் யாவற் றுக்கும்
தனித்தனியே உள்ள குறை உணரச் செய்து;
தமிழகத்தார் தொழில்துறையில், வாணி பத்தில்
தழைத்தோங்க அதிகாரம் நிறைய வாங்கத்
தமிழகத்தை வழிகாட்டி யாகக் கொண்டு
தன்னாட்சி உரிமைபெற உழைத்தால் என்ன?"
இவ்விதமாய்ச் சிந்தனையை ஒட விட்டே...
ஈடற்ற முடிவெடுத்துக் கொண்டார் அண்ணா!
கவ்விவரும் போர்மேகக் காரி ருட்டில்
கண்ணியமாய் ஆதரவைத் தெரிவித் தாலும்...
எவ்விதந்தான் பெருந்தன்மை கொள்வார்; ஈரம்
ஏதுமற்ற ஆட்சியாளர்? தண்ட னைநாள்
செவ்விதாக முடிந்தபின்தான் விடுவித் தார்கள்;
சிறுமதியை உலகுக்குக் காட்டிக் கொண்டார்!