இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கட்டாய இந்தியினை எதிர்த்துத் தானே
கடுவேக அரசியலில் நுழைந்தார் அண்ணா?
வெட்டாத கத்தியினை வீசி, நம்மை
வீழ்த்துதற்கு மய்யஆட்சி பலகால் ஏங்கிப்
பட்டாளங் கூட்டிவந்து, வாலை நீட்டிப்
பண்டிதரின் உறுதிமொழி பறக்கும் வண்ணம்
எட்டாத கொம்புத்தேன் எடுக்க எண்ண...
எழுந்ததுபார் தமிழகந்தான் சிலிர்த்துப் பொங்கி!
ஓய்வின்றி அறுபத்து மூன்றாம் ஆண்டில்
உணர்ச்சியினை எழுப்பியதும் இந்திப் போர்தான்!
மாய்கின்றேன் போர்க்களத்தில்! தலைவன் கண்ணீர்
வாழ்த்தும் என் கல்லறையில்! எனமு ழங்கும்
சாய்வில்லா மறத்தமிழன் கலைஞ ரைத்தான்
தளபதியாய் நியமித்தார். அண்ணா மீண்டும்!
பாய்கின்ற அரசியல்சட் டத்தொகுப்பின்
பதினேழாம் பிரிவினுக்குத் தீயை வைப்போம்!