பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முடிவு

121

போய்விட்டானோ ? இனிமேல் பாடுபவர்களும்இல்லை; பாடுபவர்களுக்கு ஒன்றைக் கொடுப்பவர்களும் இல்லை. குளிர்ந்த நீர்த துறையில் படர்ந்திருக்கும் பகன்றைக் கொடியின் பெரிய பூ யாராலும் அணியப்படாமல் வீணே கழிவதைப்போல, பிறருக்கு ஒன்றும் கொடுக்காமல் வாழ்ந்து அழியும் உயிர்களே அதிகமாக உள்ளன[1] என்று பாடினார். அந்தப் பாட்டைக் கேட்டுப் பலர் கண்ணீர் உகுத்தனர்.

அதிகமானுடைய மைந்தன் வந்தான். உறவினர் வந்தனர். அவ்வள்ளலுக்குரிய ஈமக் கடனைச் செய்யத் தொடங்கினர். விறகுகளை அடுக்கி அதிகமானுடைய பொன் மேனியை அவ்வீமப் படுக்கையில் இட்டு அவன் மைந்தன் எரியூட்டினான். நெய் விட்டு மூட்டிய ஈம அழல் வானுற ஓங்கி எரிந்தது.

“ஐயோ, இந்த அருமையுடல் நீறாகின்றதே!” என்று ஒருவர் இரங்கினார்.

ஔவையார் தம் கண்ணைத் துடைத்துக் கொண்டார். “அவன் உடல் ஈம எரியிலே நீறானால் என்ன? வானுற நீண்டு வளர்ந்தால் என்ன? இனி அந்த உடம்பைப் பற்றிய கவலை நமக்கு வேண்டியதில்லை. திங்களைப்போன்ற வெண் குடையின் கீழ்க் கதிரவனைப் போல ஒளிவிட்டு வாழ்ந்த அவன் புகழுடம்பு என்றும் மாயாது; அதை யாராலும் அழிக்க முடியாது”[2] என்று பாடினார்.

பிறகு பழங்கால வழக்கப்படி அவனை எரித்த இடத்தில் அவன் பெயரும் பீடும் எழுதிய கல்லை நட்டார்கள். அதற்கு மயிற்பீலியைச் சூட்டினார்கள். வடிகட்டிய கள்ளைச் சிறிய கலத்தால் உகுத்து வழி பட்டார்கள். அதைப் பார்த்த ஔவையாருக்குக் கங்கு கரையில்லாத துயரம் பெருக்கெடுத்தது. “அதிகமானுக்கா இது? இதை அவன் பெற்றுக் கொள்கிறானா?


  1. 1. புறநானூறு, 235.
  2. 2. புறநானூறு, 231.