இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
102
ஜம்பு : (தனக்குள்) பேய் பிடித்திருக்கிறதா உம். கிழவனை ஏமாற்ற இதுவும் ஒரு வழியோ? பார்க்கலாம்.
(போகிறான்)
இடம் : திவான்பகதூர் மாளிகை
காலம் : காலை
- [முனியாண்டி மெழுகிக் கோலமிடப்பட்ட ஒரு இடத்தில் வாழை இலைகளைப்பரப்பி பூசைக்குரிய சாமான்களை முறைப்படி வைத்துக்கொண்டிருக்கிறான். பக்கத்தில் திவான்பகதூர் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து இவைகளை யெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கிறார்.]
பொன் : ஏம்பா முனியாண்டி! இந்த ஒரு முறையோடு இந்தப் பிசாசு தலைகாட்டாமல் ஓடிவிடுமல்லவா?
முனி : இது கெடக்குதுங்க; இதுதானா ஒரு பிரமாதம். ஏம்மேலே அந்த வேப்பமரக் கருப்பு வந்து, இந்தப் பெரம்பைக் கையிலே எடுத்தா ஆடாத பிசாசெல்லாம் வந்து ஆடும். எந்த ஏவலா இருந்தாலும் சரி, பில்லி சூனியமா இருந்தாலும் சரி பஞ்சாப் பறந்திடும். இப்பப் பாருங்களேன். கொஞ்ச நேரத்திலே வேடிக்கையை.
பொன் : ஆமாப்பா இதனால் எவ்வளவு செலவு வந்தாலும் சரி, அதைப் பற்றிக் கவலையே இல்லை; எப்படி யாவது அந்தப் பிசாசு ஒழிந்தால் போதும்.
முனி : அதெல்லாம் நான் பார்த்துக்கிறேங்க. நீங்க அம்மாவைக் கூட்டிக்கிட்டு வரச் சொல்லுங்க!