பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40


சுவரிலே இருக்கும் சித்திரத்தோடு யார் பேசுகிறார்கள்!

ஆனால், கிழவியோ, யார் கிடைத்தாலும் விடுவதில்லை!

பசி--பட்டினி--இதைக் கூறவா? அல்ல. அல்ல யார் போவது. அப்பா ...அடி அம்மா... அலமேலா--ஆண்டியப்பனா--யாரடப்பா--

நான்தான்--என்ன, என்னா--வீட்டுக்குப் போ--வள்ளி இருக்கா தண்ணி கொடுப்பா--

ஆண்டியப்பன் தானா.....டே அப்பா! எனக்குத் தண்ணியும் வேணாம், சோறும் வேணாம், சொக்கி கூழ் கொடுத்தா; போதும். ஒரு கடுதாசி எழுதிக் கொடுடா அப்பா..கோடித்தெரு கோபாலன், 'அக்கரை' போறானாமே, அவனிடம் கொடுத்தனுப்பனும்...வாடா அப்பா-- புண்யாடா உனக்கு... ஒரு நாலு வரி எழுதிக் கொடு

ஆண்டியப்பனுக்குக் கிழவி கூறப்போவது தெரியும். அவன் சென்றுவிட்டான், வேகமாக--வேறே வேலை கிடையாது இந்தப் பைத்தியத்துக்கு என்று முணு முணுத்தபடி,

எதிரிலேயும் பக்கவாட்டங்களிலும் தடவிப் பார்த்துப் பார்த்து, ஒரு உருவமும் கையில் தட்டுபடாததால். கிழவிக்கு அவன் போய்விட்டான் என்பது தெரிந்தது, என்ன அவசரமான வேலையோ பாவம்!--என்ற எண்ணம் கிழவிக்கு... கோபமல்ல!

கோபம் குடிபுக, அந்த மூதாட்டியின் நெஞ்சிலே இடம் ஏது! சோகம் கப்பிக்கொண்டிருந்தது?