பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48


"சொல்லித் தொலை" என்றாள் வள்ளி,

கிழவி சொல்லத் தொடங்கினாள். உன்னாலே பணம் காசு அனுப்ப முடியாவிட்டால் பரவாயில்லை. நீ இங்கே வந்து சேர்ந்தா போதும் உன்னைக் கண்ணாலே பார்த்தாலே என் கஷ்டம் அத்தனையும் தீர்ந்து போகும். அடுத்த கப்பலுக்கே பொறப்படு."

வள்ளி, கட்டாயப்படுத்திக் கிழவியை முடிக்கச் சொன்னாள்.

கடிதத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினாள் கிழவி வரதன் குடிசைக்கு,

இதுபோல எத்தனை முறை அனுப்பினோம்--எவ்வளவு உருக்கமான கடிதங்கள்--எத்தனை சாமி மீது ஆணையிட்டு எழுதினோம்--ஏனோ அவன் மனம் துளிகூட இரங்கவில்லை இந்தத் தள்ளாத வயதிலே என்னைத் தவிக்க விட்டு விட்டு அக்கரையிலே சுகமாக இருக்க, எப்படித்தான் அவனுக்கு மனம் வந்தததோ--என்றெல்லாம் எண்ணியபடி கிழவி சென்று கொண்டிருந்தாள்.

கடிதங்களைப் படிப்பதேயில்லையா--படித்துப் பார்த்தால், பகையாளியாக இருந்தால்கூடப் பரிதாபம் பிறக்குமே.

சரியாகப் படித்திருக்கமாட்டான்--ஒரு கணம் உருகுவான், மறு கணமே மறந்துவிடுவான்--விளையாட்டுச் சுபாவம்--அல்லது வேலை அவ்வளவு கடினமோ, கடிதம் போடக்கூட கிடைக்காதோ--என்ன மாயமோ, என்று எண்ணிக்கொண்டே சென்றாள்.