பக்கம்:அமைதி, பாரதிதாசன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மேலும் ஊற்றுகிறாள். அவளும் அவனும் சோறு உண்ணத் தலைப்படுகிறார்கள். இடையிடையே இடது கையால் தன் கணவனுக்குச் சாராயம் ஊற்றிக்கொடுக்க அவன் குடித்துத் தலைசாய்கிறான். அழகி தன் கணவனைத் தூக்கி, அடுத்துள்ள ஒரு கட்டிலில் போடுகிறாள். அவன் உயிரற்றவன்போல் ஆகிறான். மனைவி, உண்டு கைகழுவி, அணிமாற்றி அணிந்தும் உடைமாற்றி உடுத்தும், கண்ணாடி பார்த்துத் தலைசீவியும், முகந் திருத்தியும் ஒரு கருநிறமுள்ள மெல்லிய பட்டு உடையால் முக்காடிட்டு மாடியைவிட்டு இறங்குகிறாள். இதையெல்லாம் மாடியின் சன்னலில் ஒன்றிப் பார்த்திருந்த மண்ணாங்கட்டியும் அவள் இறங்குமுன், கீழிறங்கி வீட்டின் கொல்லைப் புறத்தில் ஒருபுறம் ஒளிந்து நிற்கிறான். பெரிய பண்ணையாரின் வீட்டுக் கொல்லைப்புறக் கதவு திறக்கப்படுகிறது. பெரிய பண்ணையிள் மனைவி வெளியே வருகிறாள். அங்கு வந்து நிற்கும் ஒரு வண்டியில் ஏற வண்டி சின்ன பண்ணையை நோக்கிப் போகிறது. மண்ணாங்கட்டியும் தொடர்கிறான்.

சின்ன பண்ணையாரின் வீட்டைத் தாண்டிச் சிறிது தொலைவில் கட்டப்பட்டிருக்கும் ஒரு கோடை விடுதியின் எதிரில் வண்டி நிற்கிறது. அங்கு காத்திருந்த சின்ன பண்ணையாரால் அவ்வழகிய மங்கை அள்ளிக்கொண்டு, போகப்படுகிறாள் விடுதிக்குள்.

23