உலகெலாம் உணர்ந்து ஒதற்கரியவன் நிலவுலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத்தாடுவான் மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.
பெரிய புராணத்தை அடுத்துத் தோன்றிய சைவ சமயம் பற்றிய பெருங்காப்பியம் கந்த புராணம் ஆகும். முருகப் பெருமான் திரு அவதாரம் செய்தார் என்று கூறுமிடத்து அவனையே “தெரிவு அறிய சோதிப் பிழம்பு அது ஒர் மேனி ஆகி" என்று குறிப்பிடுவதைக் காணலாம்.
அருவமு முருவுமாகி
அகாதியாய்ப்பலவா
யொன்றாய்ப்
பிரமமாய் நின்றசோதிப்
பிழம்பதோர் மேனியாகக்
கருணைகூர் முகங்களாறுங்
கரங்கள்பன்னிரண்டுங்
கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங்
குதித்தனன் உலகமுய்ய
வாக்கு மனம் கடந்து அருவமும், உருவமும் கடந்து அனாதி என்றும் பல என்றும் ஒன்று என்றும் சுட்டப்படுகின்ற சிறப்புடையது பரம்பொருள். இவ்வாறு அதற்கு இலக்கணம் வகுத்தால் மனத்திடைக் குழப்பம் மிஞ்சுவது இயற்கையே. அக்குழப்பத்தைப் போக்க இந்த இயல்புகளை மனத்துள் வாங்க முடியாவிட்டாலும் மனமும், பொறிபுலன்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு வடிவம் இறைவனுக்கு உண்டு. அந்த வடிவம் சோதிப் பிழம்பாகும். சோதிப்பிழம்பாகத் தோன்றியவுடன் அது எங்கிருந்து தோன்றியது, எப்படித் தோன்றியது, அதன் அடிமுடி எங்கே என்று ஆராயப் புக வேண்டா. அறிவு ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது அது என்று கூற வந்த கந்தபுராண ஆசிரியர் கச்சியப்ப முனிவர் சோதி என்ற
11