பக்கம்:அறியப்படாத தமிழகம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

கனிவும் கண்டிப்புமான தம்பி சலபதியின் அணிந்துரை இந்நூல் பெற்ற பெரும்பேறாகும்.

இந்த நூலாக்கத்தில் என்னைப் ‘பணிகொண்ட’ நன்றிக்குரியவர்கள் நிறைய. என் ஆசான் சி.சு. மணி அவர்கள், முனைவர் வெ. வேதாசலம், முனைவர் வே. மாணிக்கம், சுந்தர் காளி.

என் எழுத்துச் சோம்பலுக்கு மருந்தான மாணவ நண்பர்கள் இரா. தமிழ்க்குமரன், அழகு செல்வன், 'முரீஅத்' சடங்கு பற்றிய கள ஆய்வுச் செய்தி அளித்த வ. இரகுமத்துல்லா, 'கறுப்பு' கட்டுரையை வெளியிட்ட 'நாவாவின் ஆராய்ச்சி' இதழ்.

தம்பியர்கள் வி. மாறன், ச. நாகராசன், கு. ஞானசம்பந்தன், அன்பு அச்சகத்தார்.

...கைம்மாறு என்ன, அன்பினைத் தவிர!

25 அக்டோபர் 1997 தொ. பரமசிவன்


அணிந்துரை

தமிழியல் ஆய்வின்
புதிய களங்கள்

முனைவர் தொ. பரமசிவன் அவர்களது ‘அழகர் கோயில்’ நூல் வெளிவந்து பத்தாண்டுகளுக்கு மேலாகின்றன. நூலின் தலைப்பு ஒருவகையில் துரதிருஷ்டவசமானது; அதன் இலக்கு வாசகர்களைத் திசைதிருப்பி விடக்கூடியது. கோயில் ஆய்வுகளுக்கு என்று ஒரு செக்குமாட்டுத் தடம் உண்டு. தல புராணத்திலிருந்து தொடங்கி, சில ஐதீகங்களைப் பட்டியலிட்டு, கோயில் கட்டடத்தின் அமைப்பை விவரிப்பது என்ற சட்டகத்தில் அமைந்துள்ள ஏராளமான கோயில் ஆய்வுகள் அந்தந்தக் கோயிலைப் பற்றி அறியும் நாட்டமுடைய பக்தர்களுக்கு மட்டுமே ஆர்வமூட்டக் கூடியவை.