இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சு. செல்லப்பன், எம்.ஏ., பி.டி., 'குறளகம்’
தனி அலுவலர் சென்னை-1.
தமிழ் வளர்ச்சி இயக்ககம். 24-3-1976
அணிந்துரை
தன்னா சிரியன் தன்னொடு கற்றோன்
தன்மா ணாக்கன் தகுமுறை காரனென்று
இன்னோர் பாயிரம் இயம்புதல்கடனே
.
சிறப்புப் பாயிரம் செய்தற்குரியார் இன்னார் என விதந்து செப்புகிறது இந்த நன்னூல் நூற்பா. என் ஆசிரியர் பேராசிரியர் டாக்டர் ந. சுப்பு ரெட்டியார் அவர்களின் நூலுக்கு அணிந்துரை நல்கும் தகுதிகள் எனக்கில்லையாயினும் நூற்பா தந்த உரிமை ஒன்றே எனக்கு அத்துணிவினைத் தந்தது.
ஆசிரியர் மணிவிழாவினையொட்டி அவருடைய அருமை மைந்தர்கள் இந்நூலைத் தொகுத்து வெளியிடுகின்றனர். பேராசிரியர் டாக்டர் ரெட்டியார் அவர்கள் தம் மைந்தர்களை அவையத்து முந்தியிருக்கச் செய்தவர். மைந்தர்களும் "தந்தை எந் நோற்றார்கொல்’ என்னும் மொழியை மெய்ப்பித்தவர்கள். வள்ளுவர் வாக்கின் வழி ஒழுகிவரும் தந்தையாரையும், மக்களையும், மனையறம் சிறக்க வழிநடத்திடும் திருமதி ரெட்டியாரையும் கொண்ட நல்ல குடும்பத்துடன் நெருங்கிப் பழகி வருபவன் தான். அப் பற்றுணர்வோடு இவ்வுரையைப் பெருமை பொங்க எழுதுகின்றேன்.
மாமயில் ஆடரங்கத்து மன்னி வளர் திருமாலின் அவதாரங்கள் பத்தென்பர். அவனடியாரான என் ஆசிரியரின் கட்டுரைகளும் பத்தாக இந்நூலில் நிலை பெறுகின்றன.