பனிமலையில், சதா யோக நித்திரையிலேயே விறைத்திருந்த அவ்வுள்ளத்தில், பூவுலகின் ரஸ்மி புகுந்ததும், அது இளகிப் புளகித்தது. நடைவழியிலேயே, அவனது சிருஷ்டியின் சிறப்பு அவனையே பிரமிக்கச் செய்தது. வண்டுகள் தேனைப் பூக்கிண்ணங்களினின்று வாரி வாரிக் குடித்து விட்டு, அவனது காதருகே சென்று, ரீங்காரம் செய்தன. அத்துடன் புட்களின் கானமும் சேர்ந்து இழைந்தது, ஆநிரைகள் அமைதியாய், பச்சைகளை மேய்ந்தன. வேளையின் வெறியில், மான் குட்டிகள் துள்ளி விளையாடின. சர்வம் செளந்தர்யம். ஈதெல்லாம் அவன் செயல். உள்ளம் உவகை பூத்தது. விருப்பு வெறுப்பற்ற அந்த மனத்தின் பரந்தவெளியில், பூமியின் உன்மத்தம் பற்றியதும். எடுத்த காரியம் பிடித்த காரியமாயிற்று.
பொன் வெயில்தான், அவனது மண் ஒட்டில் தன் பொன் கிரணத்தை முதற் பிச்சையாயிட்டது. அந்த மகிமையில் ஒடு பொன்னாய் மாறியதும், அவனுக்குச் சிரிப்பு வந்து விட்டது.
இதோ அக்ரஹாரம்.