பக்கம்:அலைகள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வித்தும் வேரும் O 179


வாங்கிக்கொள்ளாமலே என் ஆத்திரங்களை எத்தனை எத்தனையோ அத்தனைக்கும் வடிகாலாய் அவனை மொத்தி, அவன் வலி மீறிய ரோசத்தில் வீடு கிடுகிடுக்கப் பாட்டு வைத்து, அடுத்த நிமிடமே, கன்னத்தில் கண்ணீர் கறை காயுமுன்னரே, அலமாரியில் தொத்தி ஏறி, மேல் தட்டில் பம்பரம் தேடி, என் 'ப்ளாஸ்கை' இடறி 'ப்ளாஸ்கு’ டுமீல்-

"ஏண்டா பாவி ஏற்கெனவே ஆறாம் வயசு மிலாறாய்ப் போயாச்சு. அத்தோடு வரவா போறவா எல்லார் வாயிலும் புகுந்து புறப்பட்டு தேஞ்சு மாஞ்சு சாகறே? என் வயிறு கொதிக்கறதே சண்டாளா!"

“ஏன் நீ மாத்திரம் அடிக்கல்லியோ! இப்பக்கூட சாப்பிடறிப்போ தண்ணியைக் கொட்டினேன்னு முதுகிலே வெச்சயே!” -

"பாவி! அவள் இடது கை வாகை குழந்தை முதுகிலும் காட்டினாளா? இங்கே வாடி என் செல்வமே-ஐயோ அஞ்சு விரல் கிண்டும் அறுத்துத்தான் எடுக்கணும்போல் எழும்பிப் போச்சே! நானும் என் பிள்ளையும் உன் அம்மாவுக்கு வரவா போற வாடா!"

"இல்லே பாட்டி நீ எங்க பாட்டி அப்பா எங்கப்பா!!’ :

"சொல்லு சொல்லு இன்னொரு தடவை, என் வயிறு குளிரச் சொல்லு! என்னதான் தயிராத் திரிச்சாலும் பேசறது இன்னி ரத்தமா நேற்றைய ரத்தமா? தலைமுறை ரத்தம்னா பேசறது?’’

கழுத்தைக் கட்டிக்கொண்டு, சிறிதும் வெட்கமற்று கன்னங்களில் மாறி மாறி முத்தமிடுகையில், நெஞ்சில் மூச்சு பந்து பந்தாய் அடைக்கிறது.

‘ஏண்டா, இப்போதானே என்கிட்ட அடிதின்னே, ஏன் என்னைக் கட்டிக்கறே?’’

“அடே போப்பா நீ-அது அத்தோடு போச்சு.”

‘'நீ ஏன் என் மேல் பிரியமாயிருக்கே?'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/181&oldid=1290257" இலிருந்து மீள்விக்கப்பட்டது