96
உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிபிள்ளை
இஃது, ஆசிரியர் தலைமையில் மாணவர் ஆற்றிய உரைச் சிறப்புப் பற்றியது.
இதேபோல், உரைவேந்தர்பால் தமிழ் பயின்று பின்னர்ச் சென்னைச் சட்டமன்றப் பேரவைத் தலைவராக விளங்கிய புலவர் கா. கோவிந்தன் தலைமையில் (அஃதாவது மாணவர் தலைமையில்) ஆசிரியப் பெருந்தகையாம் உரைவேந்தர் சொற்பொழிவாற்றி யுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சைவ சித்தாந்தக் கழகப் பொன்விழாவின் ‘மொழி மாநாட்’டிற்குக் கோவிந்தன் தலைமைதாங்க, உரைவேந்தர், மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளையின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார்.
1971 பிப்ரவரியில், மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் நடந்த சைவசித்தாந்தக் கழகப் பொன்விழாவின்போது, மாவட்ட ஆட்சித் தலைவர் கி. இலட்சுமிகாந்தன் பாரதி தலைமையில், பேராசிரியர் கா.சு. பிள்ளையின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார் உரைவேந்தர்.
தூத்துக்குடி சைவசித்தாந்த சபை, மிகப் பழமையானது; பெருமை பெற்றது. அதன் 65ஆம் ஆண்டு நிறைவு விழாவுக்குத் தலைமை தாங்கி, நீண்டதோர் உரையாற்றினார் உரைவேந்தர், “சித்தாந்த சைவச் செந்நெறி நிறைக்கும் பெருமக்களே! அந்நெறி வளர்க்கும் தாயர்களே! அன்பர்களே” என்று விளித்து இவராற்றிய சமயச் சொற்பொழிவைக் கேட்டு மிகழ்ந்தவர் பலராவர். இது, சிறு வெளியீடாகவும் அச்சிடப்பட்டுள்ளது.
தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் 12ஆவது மாநில மாநாடு, மதுரை மாநகரில் 9.8.1970இல் நடந்தது. இதன் வரவேற்புக் குழுத்தலைவராக இருந்த, உரைவேந்தர், தமது வரவேற்புரையில், தமிழ்ப் புலவர் குறித்தும், அவர்தம் கடமை குறித்தும், தம்பாற் பயின்று உயர்நிலையிலிருக்கும் மாணவர் குறித்தும் விளக்கமாகப் பேசினார்:
“வெறிதே தமிழ் அறிவிக்கும் தொழிலாளியல்லர் தமிழ்ப் புலவர்; தமிழ் உள்ளத்தை நேரிய உருவுடையதாக்கும் சிந்தனைச் சிற்பிகளாவர்; அவர் கையாளும் பொருள் - சிந்தனை; ஏனையோர் கையாளும் மண்ணும் மரமும் இரும்பும் போல