பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ராஜம் கிருஷ்ணன்

21


விருந்தோம்பல் மேன்மையினால் சுதர்சன முனியின் புகழ் மூவுலகுக்கும் பரவியதாம்!

ஆனால், சாந்திபர்வம் 266ம் அத்தியாயத்தில் சிரகாரி என்பவரின் வரலாறு வருகிறது. சிரகாரியின் தந்தை கோதமர். ஒரு சமயம் அவர் ஏதோ பணி நிமித்தம் வெளியே சென்றிருந்தார். அப்போது இந்திரன் விருந்தினர் வடிவில் ஆசிரமத்துக்கு வருகிறான். சிரகாரியிடம், அவன் அன்னையைத் தாம் அநுபவிக்க விரும்புவதாகத் தெரிவிக்கிறான். விருந்தோம்பல் பண்பாட்டின் மேன்மை கருதி, சிரகாரி அன்னையை விருந்தினருக்கு அளிக்கிறான். (இந்த இடத்தில், பெண், வெறும் சடப்பொருள் போல் கருதப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம்)

கோதமர் ஆசிரமம் திரும்புகிறார். இதைக் கேள்விப் பட்டதும் சினம் ஏறுகிறது. சிரகாரியை விளித்து, அன்னையை உடனே கொன்று விடும்படி பணிக்கிறார். மன அமைதி நாடி வெளியேறுகிறார். தனிமையில் சென்றமர்ந்து ஆற அமர யோசனை செய்கிறார். சிரகாரி விருந்தோம்பல் தருமத்தையன்றோ பாலித்தான்! இதில் ஒரு தவறும் இல்லையே? சினத்தினால் குருடாகி, ஒரு தாய்க் கொலை நிகழ இடமளித்து விட்டாரே?...

வருந்திய முனிவர் விரைந்து ஆசிரமம் திரும்புகிறார். சிரகாரி அன்னையைக் கொலை செய்திருக்க வில்லை. அன்னை நின்ற இடத்திலேயே நிற்க, அவனும் தாயைக் கொல்லத் துணியாமல் நிற்கிறான்.

கோதமர் மனமகிழ்ந்து அகம் குளிர்ந்து இருவரையும் வாழ்த்துகிறார். சிரகாரியின் புகழ் இதனால் ஓங்குகிறது- என்று இந்த வரலாறு கூறுகிறது. இதே மகாபாரதத்தில், வரும் ஒரு வரலாற்றுக்குறிப்பை, ராஹூல் சாங்க்ருத்யாயன் தம் “மானவசமாஜ்” நூலில் (பக்23)இல் குறிப்பிடுகிறார். திருமணம் என்று நெறிப்படாவிட்டாலும், ஓர் ஆணும் ஒரு