108 ★ இல்லம்தோறும் இதயங்கள்
“அண்ணி! ஒங்க தட்டைப் பார்த்திங்களா?”
“அதுக்கென்ன ? நானே அத நல்லாக் கழுவி வைக்கனே!”
“அதுக்குச் சொல்லல அண்ணி. சாப்பிடும்போது, தட்டை கவனிச்சிங்கன்னா தெரியும். ஒரே தட்டுதான், உங்களுக்கு எப்பவும் கிடைக்குது. புரியுதா?”
“புரியுதும்மா! நான் தனித்தட்டு. சாப்பிட்ட தட்டையாவது சரி பண்ணிடலாம். ஆனால் என்னைச் சரி பண்ண முடியாதுன்னு நினைக்காங்க.”
மணிமேகலை விம்மியபோது, இந்திரா கண்ணீர் விட்டாள். இன்னொரு நாள்—அவர்கள் திருவள்ளூர் போய்விட்டு வந்த ‘பொல்லாத’ நாள்.
உபயோகமில்லாத அறையில் படுத்துக் கிடந்த மணிமேகலை நள்ளிரவில் கண் விழித்தாள். குழந்தையைக் காணவில்லை. எங்கே போயிருப்பான்? குழம்பி, தாழ்ப்பாள் போட்டிருந்த வீட்டின் கதவைத் தட்டினாள். ஜெயராஜ்தான் கதவைத் திறந்தான்.
“என்ன விஷயம்?”
“குழந்தய காணும்!”
“காலையில பேசிக்கலாம். போய்த் தூங்கு."
“குழந்தய காலையில தேடலாமுன்னு சொல்றிங்களா?”
“அது ஒன் புத்தி. என்கூட படுத்திருக்கான்."
“ஜன்னல் வழியா பார்த்தேன். காணுமே.”
“உம். இங்கதான் இருக்கான்.”
“என் குழந்த எங்க இருக்கான்னு தெரிஞ்சிக்கது என் உரிமையா இல்லாம இருக்கலாம். ஆனால் கடமையா இல்லாம போயிடுமா?”