பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம் ♦ 41


பெயருக்குக் கணவன் கொடுத்த தந்தி வாசகத்தின் தலையும் புரியாமல் அந்த இரண்டு பெண்களுமே தவித்துப் போனார்கள்.. குடும்பப் பிரச்னை என்றால் என்ன பிரச்னை? சீதாவுக்கு உடம்புக்கு சுகம் இல்லையா? பி.யூ.ஸி. படிக்கும் அவள் ஏடாகோடமாய் நடந்தருப்பாளோ? சின்ன மைத்துனன் பாஸ்கருக்கு ஏதாவது ஏற்பட்டிருக்குமோ ? விஸ்கியும், அது கிடைக்காத சமயத்தில் சாராயமும் போடும் கணவனின் அண்ணனை போலீஸ் பிடித்திருக்குமோ? மாமனாருக்கு பிரஷ்ஷர் அதிகமாய் இருக்குமோ? மூத்தாளுக்கு ஏதாவது.... மாமியாருக்கு ஏதாவது... பேக்டரியில் ஏதாவது... ஒருவேளை அவருக்கே ஏதாவது... அட கடவுளே ! சிக்கனமின்னா இதுவா சிக்கனம்? சிக்கனம், கஞ்சத்தனமா மாறிடக்கூடாதுன்னு ஏன் புரியல? தந்தியில விவரமா சொன்னால் என்ன ? ‘பாவி மனுஷனுக்கு’ இதுகூட தெரியலையே?

மணிமேகலை அந்த நெருக்கடியிலும் தனக்குள்ளேயே சிரித்தாள். அண்ணியுடன் பத்துநாள் தங்கியதில், அவள் புருஷனுக்குக் கொடுத்த ‘பாவி மனுஷப்’ பட்டத்தைத் தானும், தன் கணவனுக்குத் தன்னையறியாமலே கொடுப்பதை நினைத்து கொஞ்சம் அவமானப்பட்டாள்.

பாமாவும் சந்திரனும் மூட்டை முடிச்சுகளை சீராக்கிக் கொண்டிருந்தார்கள். அண்ணனைக் காணவில்லை. அண்ணிக்காரி, இழவு விழுந்ததுபோல் கால்களை வயிற்றோடு சேர்த்துப் பிடித்துக்கொண்டு முடங்கிக் கிடந்தாள். அப்பா மகளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அந்த ஊர் வழக்கப்படி மணிமேகலை உறவினர்களிடம் விடைபெறுவதற்காகப் புறப்பட்டாள். தெருக்களில் நின்று கொண்டிருந்த ஏழைப் பெண்களிடம் சொல்லிக்