69
ஈச்சம்பாய்
“அதேதான் சார்”
நிர்வாகக் கிழவர், மீனாவைப் பார்த்தார். பிரகாசமாய் வெளிப்பட்ட அவள் கண்களையும், உள்ளடங்கிய பற்களையும், அச்சம், மடம், நாணம், பேதமை என்பார்களே - அத்தனையும் மொய்த்த அவள் முகத்தையும் பார்த்த அவரது கண்கள், மார்பகத்திற்கு வந்ததும் மூடிக்கொண்டன. ‘சிவ சிவ’ என்று வாயைப் பேச வைத்தன. பின்னர், மனதிற்குள் கஷ்டப்பட்டு, அவளை ஒரு மகளாய் பாவித்துக் கொண்டார். முரளி, சண்முகம் சொன்னதை நம்பாதவர்போல், தனது காதுகளைத் தடவிய படியே, மீனாவைச் சாக்காக வைத்துக்கொண்டு, அதே மீனாவிடம் கேட்டார்.
“இந்த ஆபீஸ்ல எந்தப் பிடிப்பும் இல்லாமல் சம்பளம் வாங்குற முதல் எம்ப்ளாயி நீதான்!”
கொஞ்ச நாளாய், நிர்வாக அதிகாரியிடம் டூ விட்டிருந்த மல்லிகா! ‘டூ’வை டாவு ஆக்க நினைத்தாள். அவளுக்கும் மீனாவே சாக்கு...
“இந்தப் பொண்ணு பிரில்லியண்ட் கேர்ள் சாரி வேலையில கட்டி, அதோட லக்கி கேர்ள்! சர்வீஸ் கமிஷன் பரீட்சையில், எடுத்த எடுப்பிலேயே நல்ல வேலையா வாங்கிட்டாள்! வேலையில் சேர்ந்த மறுவாரமே கல்யாணம்! இப்போ ‘பேகமிஷன்’ சிபாரிகல இவள் சம்பளம் எங்கேயோ போகப் போகுது.”
“குட்.. வெரிகுட்...”
நிர்வாக அதிகாரி, மீனாவைப் பார்க்காமல், மல்லிகாவைப் பார்த்து, “உன்னை மெச்சினேன்” என்பது மாதிரி ‘குட்’ சொன்ன போது, மீனா, நாணங்கலந்த நளினத்துடன், கண்களைத் தூக்கியும், தாழ்த்தியும் விபரம் சொன்னாள்.