பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

4. தொல்பழங்காலம்


அ) தொல்லுயிரி எச்சங்கள் (FOSSILS)

மண்ணில் புதையுண்ட மரம் அல்லது விலங்குகளின் உடல் உறுப்புக்கள் நுண்கிரிமிகளால் (Bacteria) அழிந்தது போக மீதிப்பகுதி நிலத்தடி நீரில் உள்ள மணல் சத்தை (SILICA) உள்வாங்கி மாற்றம் அடைந்து கல்லின் தன்மையைப் பெறுகின்றன. இவற்றைத் “தொல்லுயிரி எச்சங்கள்” என்று கூறுவர்.

பெருந்துறை வட்டம் வெள்ளோட்டில் விலங்கின் (வாய்த்)தாடையின் (காட்டெருது அல்லது காட்டு மாடு) தொல்லுயிரி எச்சம் கிடைத்துள்ளது காங்கயம் வட்டம் சங்கரகவுண்டன் வலசிலும், கொடுமுடி அருகில் இச்சிப்பாளையத்திலும் அது போன்ற விலங்கின் கால் தொடைப்பகுதிகள் கிடைத்துள்ளன. இவை 20 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கருதப்படுகிறது.

காங்கயம் - தாராபுரம் சாலையில் உள்ள ஊதியூர் மலையை அடுத்துள்ள கருக்கம்பாளையத்தில் கற்படிவங்கள் இக்காலத்தைச் சேர்ந்தவை இருந்தன. 1998ஆம் ஆண்டு ஜூன் மாதம் மின்னல் தாக்கியதால் அவை மிக அதிக வெப்பமும் உடனடிக் குளிர்ச்சியும் பெற்று உடைந்து சிதறிக் குழாய் வடிவமாக உருமாறின. கண்ணாடி மெழுகு போல் அவை காணப்படுகின்றன. இரண்டு நாட்கள் அப்பகுதியில் மிகுந்த வெப்பநிலை இருந்ததாம்.

எனவே ஈரோடு மாவட்டப் பகுதி 20 லட்சம் ஆண்டுகட்கு முன்பே உயிரினங்கள் பல வாழ்ந்த பகுதி என்று தெரிகிறது. அதனால் ஈரோடு மாவட்டப் பகுதியின் தொன்மை புலப்படுகிறது.

ஆ) பழங்கற்காலமும் புதிய கற்காலமும்

(கி.மு.10000 - கி.மு. 1000) பழைய கற்காலத்தின் இறுதிக்காலம் முதல் புதிய கற்காலத்தின் தொடக்கத்திலிருந்து ஈரோடு மாவட்டப் பகுதியின் வரலாறு தொடங்குகிறது.