பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28


அன்றைய நாட்களில் பயிற்சி தந்திட முனைந்தோரும் பரிதாப உணர்வுடனே பாடம் கற்பிக்க முற்பட்டனர். பிறநாட்டில் என்னென்ன கண்டனர் என்ற வியப்பு உணர்ச்சிக்கே முதலிடம்; நம் நாடு ஏதேது அறிந்திருந்தது என்பது பற்றிய கேள்விக்கு ஒதுக்கிடம்!

இந்நிலையில் வளர்ந்தன, பழம்பெரும் பல்கவைக் கழகங்கள்--ஆண்டான் அடிமைகட்கு அன்பு காரணமாக, அறிவு வழங்கிடவும், வேலைக்கு ஏற்ற ஆட்கள் அமைத்திட்டஇடங்கள் என்று அவை கருதப்பட்டன.

அவற்றினிலே பயிற்சி பெற்று, பட்டம் பெற்ற அறிவாளரில் மிகப் பலரும், நடையாலும், உடையாலும், நாட்டத்தாலும், பிறந்த நாட்டில் வாழுகின்ற வேற்று நாட்டு வடிவங்களாகத் தம்மை ஆக்கிக்கொண்டனர். அதிலே பெருமகிழ்வும் கண்டனர். நெடுங்காலம் இந்நிலை! இன்று அஃது பழங்கதை!!

மதுரைப்பல்கலைக் கழகம், அடிமைத்தளை அறுத்து, ஆளுதற்கு உரிமையும் தகுதியும் பெற்றோம் நாம் என்ற முழக்கமிட்டு விழித்தெழுந்து மக்கள் உலா வந்திடும் நாட்களிலே அமைந்துள்ளது.

"ஒளி படைத்த கண்ணினாய் வா! வா! வா!' என்ற பாரதியின் வீர அழைப்புக் கேட்டு, அணி அணியாய் வீரர்கள் திரண்டு வந்தனர்; பிறகு எழுந்தது இந்தப் பல்கலைக்கழகம்.

நாட்டுக்கு விடுதலை கிடைத்திட்டதுமின்றி, மனத்தளைகள் மெல்ல மெல்ல அறுபட்டிடும் நிலையையும் நாம் கண்டோம்; அந்தச் சூழ்நிலையிலே இப்பல்கலைக் கழகம் கண்டோம். சிந்தனை நமது உரிமை என்ற குறிக்கோளுக்கான கோட்டம் இஃது என்பதனை உணர்கின்றோம்.