இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
36
உரிமைப் பெண்
விட்டான். ஏமாந்த புலியும் மறு கணத்திலே அவன்மேல் மூர்க்கமாகப் பாய்ந்தது. ஆனால் சுந்தரம் முந்திக்கொண்டான். அவன் குறி தவறியது கிடையாது. முதல் குண்டிலேயே பஞ்சுக்காலன் மடங்கி விழுந்தது. அடுத்த குண்டு அதன் உயிரை முற்றும் போக்கிவிட்டது.
சுந்தரத்திற்கு எப்பொழுதுமே ஆந்தை என்றால் ஒரே வெறுப்பு. அதைக் கண்டால் சுடாமல் விடமாட்டான். அதனுடைய விகாரத் தோற்றம், அதன் குரூரமான குரல் இரண்டும் அவனுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் பஞ்சுக்காலன் வேட்டையிலிருந்து அவனுக்கு ஆந்தைகளிடம் மிக்க மதிப்பு உண்டாகிவிட்டது. ஒவ்வோர் உயிர்ப் பிராணியையும் ஒரு நல்ல காரியத்திற்கு இறைவன் உண்டாக்கியிருக்கிறான் என்று அவன் அது முதல் கூறிக்கொண்டிருக்கிறான்.